பெரியாழ்வார் தனது மனம், சொல், சக்தி ஆகியவற்றை எப்பொழுதும் இறைவனைப் பற்றிக் கேட்பதிலும், பாடுவதிலும் ஈடுபத்திக் கொண்டவர். தமது ஐம்புலன்களையும் திருமாலின் பணிக்காகவே பயன்படுத்தியவர். இவ்விடத்தில் பக்தி எட்டு வகைகளாகப் பரிணமிக்கும் விதத்தைக் கூறுவது ஏற்புடையதாகும்.
எண் வகை பக்தி
* இறையடியார்கள் பக்கம் அன்பு செலுத்துதல்
* இறைவனை ஆராதிப்பதில் உகப்படைதல்
* தானே இறைவனை ஆராதித்தல்
* இறைவனிடம் ஆடம்பரமின்றி இருத்தல்
* இறைவனைப் பற்றிய கதைகளைக் கேட்குமிடத்தில் பத்தி கொள்ளுதல்
* பக்தியின் காரியமான குரல் தழுதழுத்தல் கண்ணீர் சொரிதல் மயிர்க்கூச்செறிதல் போன்றவை
* எப்பொழுதும் இறைவனை நினைத்தல்
* இறைவனிடமிருந்து வேறு பலன்களை எதிர்பாரதிருத்தல்
மேற்கூறிய பக்தி வகைகள் தாரளமாக பன்னிரு ஆழ்வார்களின் மனநிலையோடு பொருந்த வருவதைக் காண இயலும். இவற்றில் பெரியாழ்வாரிடம் காணலாகும் மனநிலையினை மட்டும் இங்கு காணலாம்.
தானே இறைவனை ஆராதித்தல்
அடியவர்கள் எப்பொழுதும் இறைவனுக்கு செய்ய வேண்டிய பூசனைத் தொடர்பான நிகழ்வுகளைத் தானே செய்வதில் மிகுந்த விருப்பம் உடையவர்களாக இருப்பர். அவ்வகையில் பெருமாளுக்கு தொண்டு செய்யும் குடும்பத்தில் பிறந்த பெரியாழ்வார் தன் வாழ்நாளினை இறைவனுக்காகவே செலவிட நினைத்தார். அதன் எச்சமாகவே தானே ஒரு நந்தவனம் அமைத்து பல நறுமணம் மிகுந்த மலர்களால் பெருமாளுக்கு விருப்பமான மாலையைத் தொடுப்பதே தனது பணியாக செயலாற்றி வந்தார்.
தனது நந்தவனத்திலே துளசி, தாமரை, செங்கழுநீர், நீலோற்பலம், மல்லிகை, முல்லை, மாதவி முதலிய பூக்களை நிறைந்து பொலியும்படி செய்தார். தினமும் தானே நந்தவனத்திற்குச் சென்று பரமனுக்குரிய மலர்களைக் கொய்து மாலை கட்டி பணி செய்வதே தனது வாழ்வின் பயனாக விரும்பி செய்தவர் பெரியாழ்வார் ஆவார்.
பக்திமையால் உடலில் உண்டாகும் உடல் வேறுபாடுகள்
இறைவனைக் காணும் பொழுது இறைவன் புகழ் பாடும் பொழுது அவனைப் பற்றிய கதைகளைக் கேட்கும் பொழுது அடியவர்கள் மனதில் எழும் உணர்வுகள் உடலில் வெளிப்படும். ஆனந்தக்கண்ணீரும், மயிர்க்கூச்செறிவதும், குரல் தழுதழுப்பதும் போன்ற உடலியற் மாற்றங்கள் உண்டாகும். பின்வரும் பாசுரத்தில் இறைவனைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிய உடனே தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கூறுகிறார்.
“வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்து அதன்மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாங் கொலென் றாசையினாலே
உள்ளஞ்சோர உகந்தெதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள்
துள்ளம்சோரத் தயிலணைகொள்ளேன்,சொல்லாய் யானுன்னைத் தத்துறு மாறே”. (நாலாயிர திவ்ய பிரபந்தம் - 439)
இதில் பெரியாழ்வார் இறைவனின் அழகைக் காணலாம் என்று ஆசைப்பட்ட பொழுதினிலே அவர் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துரைத்துள்ளார். “உடல் மயிர் கூச்செறிந்தது, வாயில் பேச்சில்லை, புத்தி தடுமாறுகிறது. கண்கள் நீரைச் சொரிகின்றன! உறக்கம் முற்றிலும் தொலைந்தது.” என்று கூறுவதில் பெரியாழ்வாரின் உள்ள உடல் உணர்வுகளைப் புரிய இயலுகின்றது.
பலன் எதிர்பாராத உள்ளம்
பெருமாளிடம் மாளா அன்பு கொண்டிருந்த பெரியாழ்வார் இறைவனிடம் அருளையும், திருவடிப்பேறினையும் மட்டுமே வேண்டி வணங்குகிறார். ஏனெனில் பக்தியின் பயன் பக்தியாகவே இருக்க வேண்டும் என்ற உள்ளம் உடையவராக, பலன் எதிர்பாராத உள்ளம் உடையவராகத் திகழ்கின்றார் பெரியாழ்வார். இதனை,
“நண்ணி நானுன்னை நாடொறு மேத்தும்
நன்மை யேயருள் செய்யெம் பிரானே” (நாலாயிரதிவ்யப் பிரபந்தம்-440)
என்ற வரிகளில் அறியலாம். இவ்வுலகின் முதல்வனே, அரிய பெருமையைக் கொண்டவனே நான் என்றும் உன்னை பூஜிக்கும் உயர்குணத்தை மட்டும் எனக்கு அளிக்க வேண்டும் எம்பிரானே என்று வேண்டி வணங்கும் பக்திமையுடன் பெரியாழ்வார் திகழ்கின்றார்.
பெரியாழ்வாரின் உள்ளத்து உணர்வுகள்
மனித மனிதில் இயல்பாக எழும் காமம், குரோதம், பயம், நட்பு, உறவு, இன்ப, துன்ப உணர்வுகளை விழிப்புடன் அடக்கி அதனை இறைவனிடம் செலுத்தும் நபரே மோட்ச நிலையை அடைய இயலும் என்று கூறுவர். அதனைப் போன்றே பெரியாழ்வாரும் தனது உள்ளத்தில் எழும் பக்தி, பயம், பிரியம், காமம் போன்ற உணர்வுகளைத் திருமாலிடம் பதிவு செய்துள்ளார்.
ஆநிரைகளை மேய்த்து மீண்டு வரும் கண்ணனைக் கண்டு கன்னியர்கள் காமமுற்றுப் பாடுவதாகப் பாசுரங்களை அமைத்துள்ளார்.
“குன்று எடுது ஆநிரை காத்த பிரான் கோவலனாய்க் குழலூதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத்தன் தோழரோடு கலந்துடன் வருவானைத் தெருவில்கண்டு
என்றும் இவனையொப்பாரை நங்காய்! கண்டறியேன, ஏடி!வந்து காணானய்
ஒன்றும் நில்லாவளை,கழன்றுதுகில் ஏந்திள முலையுமென் வசமல்லவே.” (நாலாயிர திவ்யப் பிரபந்தம்-257)
என்ற பாசுரம், கண்ணனைக் கண்டதும் கை வளை நெகிழ்கின்றது, இடுப்பில் உள்ள ஆடை நெகிழும் வண்ணம் உடல் இளைத்துவிட்டது, மார்பு துடிக்கின்றது தோழி! இவனைப் போன்ற அழகனை இதுவரையிலும் கண்டதே இல்லை! நீயும் வந்து அவன் அழகை காண வருவாயாக என்று மங்கையின் கூற்றாகக் காணப்படுகின்றது. இப்பாசுரத்தில் வரும் கன்னிப் பெண் பெரியாழ்வாரே. கண்ணன் மீது கொண்ட காம உணர்வினை, அன்பினை ஒரு கன்னியாகவே தன்னை பாவித்து வெளிப்படுத்தியுள்ளார்.
தன்னுள் பெருமாளை நிரப்புதல்
பெரியாழ்வாரின் “சென்னியோங்கு” என்று துவங்கும் பத்து பாசுரங்களும் பெரியாழ்வார் திருமொழிக்கு முத்தாய்ப்புப் பாசுரம் போல் உள்ளன. இதில் பெரியாழ்வார் தன்னுள் பெருமாளை நிரப்பிக் கொள்கிறார்.
“கடல் கடைந்து அமுதம் கொண்டு
கலசத்தை நிறைத்தாற் போல்
உடல் உருகி வாய்திறந்து
மடுத்துன்னை நிறைத்துக் கொண்டேன்” (நாலாயிர திவ்யப் பிரபந்தம்-466)
எளிமையான சொற்களால் திருமால் மீது கொண்டுள்ள அலாதியான அன்பின் மிகுதியை பதிவு செய்துள்ளார். அத்துடன் விசிஷ்டாத்வைதத்தின் ஆழமான தத்துவங்களை தனது பாசுரங்களில் மிக எளிமையாக நவின்றுள்ள பாங்கும் சிறப்பிற்குரியது.
“பொன்னைக் கொண்டு உரைகல்மீதே நிறமெழ உரைத்தாற்போல்
உன்னைக் கொண்டு என் நாவகம்பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்
என்னப்பா இருடீகேசா என்னுயிர்க் காவலனே” (நாலாயிர திவ்யப் பிரபந்தம்-467)
இங்கு, தங்கத்தின் உண்மை நிலையை உரைக்கும் உரைகல் போல் உன்னை என் நாக்கின் மேல் மாற்று குறையாமல் தேய்த்துக் கொண்டேன் என்று திருமாலை நோக்கி பெரியாழ்வார் பாடுகிறார். உன்னை எனக்குள் வைத்தேன் அது மட்டுமின்றி என்னையும் உனக்குள் இட்டேன் என்று வைணவ மையக் கருத்தினை கோடிட்டுக் காட்டிச் செல்கின்றார். இவ்விடத்தில் திருமழிசையாழ்வாரின் பாசுர அடி நினைவில் நிற்பதை மறுக்க இயலாது.
“நான் உன்னையன்றி இலேன் கண்டாய் நாரணனே
நீ என்னையன்றி இலை”
(நாலாயிர திவ்யப் பிரபந்தம்-2388)
ஆக நாராயணன் நமக்குள் இருக்கிறான், நாமும் நராரயணனுக்குள் இருக்கிறோம் என்ற எண்ணம் நம்முள் மேலோங்குகின்றது.
பெரியாழ்வாரின் பிரபத்தி நெறி
பொதுவாக பக்தி நெறியினை மூன்று பிரிவுகளாக வேறுபடுத்திக் காட்டும் மரபு உண்டு. அவை,
* பரபக்தி (எம்பெருமானை நேரில் காண வேண்டும் என்ற ஆவல்)
* பரஞானம் (மேன்மேலும் இறைவனை இடையறாது அநுபவிக்க வேண்டும் என்று ஆவல்)
* பரமபக்தி (இறைவனின் அநுபவம் பெறாவிடில் நீரை விட்டுப் பிரிந்த மீன் போல் மூச்சு அடங்கம் படி இருத்தல்)
மேற்கூறிய பக்திநெறியை எல்லோராலும் பின்பற்ற இயலாது. ஆகவே உயர்ந்தோர், தாழ்ந்தோர், கற்றோர், கல்லாதவர் என்ற வேறுபாடு இன்றி எல்லோராலும் மேற்கொள்ளக்கூடிய நெறி ஒன்றினைக் கண்டனர் மெய்விளக்கம் பெற்ற மேலோர். அதுவே பிரபத்தி நெறியாகும் (சரணாகதி). இத்தகைய நெறி பற்றி வேதாந்த தேசிகர் பின்வருமாறு சிறப்பித்துக் கூறியுள்ளார்.
“அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகும்
நொந்தவ ரேமுதலாக நுடங்கி அனன்னியராய்
வந்தடை யும் வகை” (தேசிகப் பிரபந்தம் -56)
சரணாகதி, பரசமர்ப்பணம், உபயாநுஷ்டானம் என்ற பல்வேறு பெயர்களால் பிரபத்தி வழங்கப்படுகின்றது.மேலும் இப் பிரபத்தி நெறி ஆறு உறுப்புகளை உள்ளடக்கியது என்று கூறுவா்.
* சாத்துவிக உணர்வில் இறைசித்தத்தைப் பின்பற்றல் (அனுகூல்ய சங்கற்பம்)
* இறைச் சித்தத்திற்கு வேறானவற்றைத் துறத்தல் (பிராதிகூல்ய வா்சனம்)
* இறைவன் காப்பான் என்ற உறுதி (ரஷ்ஸ் திதிவிஸ்வாச)
* இறையருளையே வீடு வேற்றுக்கு நம்பியிருத்தல் (கோபத்ரத்வ வர்ணம்)
* தன்னையே நிவேதனமாக்கல்(ஆத்ம நிக்க்ஷேபம்)
* தன்னால் ஆகாமையை வெளிப்படுத்தல்(கார்ப்பண்யம்)
மேற்கூறிய பிரபத்தி வகைகளில் பெரியாழ்வாரிடம் இறைச்சித்தத்திற்கு வேறானவற்றறைத் துறத்தல் என்ற மன நிலையில் அமைந்த பாசுரம் பின் வருமாறு காணப்படுகின்றது.
“தோட்டம் இல்ல்வள் ஆத்தொழுஓடை துடவை யும் கிணறும் இவை யெல்லாம்
வாட்டமின்றியுன் பொன்னடிக் கீழே விளைப்ப கம்வகுத் துக்கொண்டிருந்தேன்
நாட்டு மானிடத் தோடெனெக் காது நச்சு வார் பலர் கேழலொன்றாகி
போட்டு மண்கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழக் கொம்பொசித் தானே” (நாலாயிர திவ்யப் பிரபந்தம்- 437)
இவ்வுலகில் உள்ள உயிர்கள் யாவும் மாயைகளிலிருந்து விடுபட்டு இறைவனாகிய தன்னை வந்து அடைய வேண்டும் என்றே விரும்புவான். அவ்வாறே பெரியாழ்வாரும் அம்மாயையிலிருந்து விடுபட வேண்டும் என்றும், இறைவனுடைய திருவடி நிழலையே தோட்டம், மனைவி, பசுக்கள், தொழுவம், குளம், விளைநிலம், கிணறு ஆகிய எல்லாப் பொருள்களுமாகப் பாவனை செய்து கொண்டு பெருமாளை தனது நெஞ்சினில் நிலைநிறுத்தி வழிபடுகின்றார்.
திருமாலின் திருப்பாதங்களேச் சரணம், தஞ்சம் என்று அடைந்த பெரியாழ்வாரின் பாசுரங்கள் யாவுமே பக்தியின் பொற்கலசம். அவர் தம் பக்திமை நெறியினைப் பின்பற்றினால் மறு பிறவியில் துன்பம் இல்லை என்பது உறுதியே ஆகும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.