தலைவி - தோழி உறவு
முனைவா் ஜெ. புவனேஸ்வரி

குடும்பத் தொடர்பு உடையவர்களிடையே உள்ள உறவுகளில் தலைவி, தோழி உறவே நெருங்கிய உறவாகச் சங்க இலக்கியங்களில் பேசப்படுகிறது. அதனை,
* மதியுடம் படுதல்
* குறை நயத்தல்
* ஆற்றுவித்தல்
* அறத்தொடு நிற்றல்
* தோழி - தலைவி தொடர்பு நெருக்கம்
* எம் எனத் தலைவியையும் உடம்படுத்திக் கூறுதல்
* தலைவியின் செயலைத் தன் செயலாகக் கூறுதல்
என்னும் ஏழு பிரிவுகளில் வகைப்படுத்தி ஆராயலாம்.
சங்க இலக்கியங்களில் தலைவி கூற்றை விடத் துணைப் பாத்திரமாகிய தோழியின் கூற்றே மிகுதியாக உள்ளது.
‘சங்க இலக்கியத்து 882 களவுப்பாடல்கள் உள. இவற்றுள் 40 பாடல்களே இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் என்ற மூன்று வகைக்கும் உரியன. எஞ்சிய 842 பாடல்கள் தோழியிற்புணர்ச்சி என்னும் ஒரு வகைக்கே உரியன. இதனால் தோழி இன்றிக் காதலர்களின் களவொழுக்கம் நீளாது என்பதும், ஐந்திணை இலக்கியப் படைப்புக்குத் தோழி என்னும் பாத்திரம் இன்றியமையாதது என்பதும், தோழியிற் புணர்ச்சிக்குரிய துறைகளே புலவர்களின் நெஞ்சைக் கவர்ந்தன என்பதும் பெறப்படுகிறது’ (1)
என்னும் டாக்டர் வ. சுப. மாணிக்கனாரின் கூற்று இங்கு நினையத்தகும்.
களவு ஒழுக்கத்தில் தோழியின் பங்கு மிகவும் இன்றியமையாதது. தோழிக்கும் தலைவிக்கும் உள்ள உறவில் நெருக்கமான அன்புநிலை, ஒருவரை ஒருவர் அழைக்கும் நிலையில் அவர்களிடையே உள்ள உறவு நெருக்கம், தோழி தன்னைத் தலைவியாகவே வைத்துக் கூறும் சந்தர்ப்பங்கள், இன்ப துன்பங்களில் இருவரும் பங்கேற்கும் நிலை ஆகியன பற்றி இங்கு ஆராயப்படுகின்றது.
இன்ப துன்பங்களைச் சேர்ந்து அனுபவிப்பவரே உறவினர். தோழி, தலைவியிடம் கொண்ட உறவு காளான் விதையின்றி முளைக்கும் போலி உறவு அன்று. தலைவிக்கும் அவளுக்கும் உற்ற உறவு நீருக்கும் மீனுக்கும் உள்ள உறவு போன்றது. மீன் நீரை விட்டு வந்ததும் நீர் தன் போக்கில் போய்க் கொண்டிருக்கும். ஆனால் மீன் நீரின்றி இறந்து விடும். அதனால்தான் ஹோம் என்ற ஆங்கிலப் பேரறிஞர் நண்பனுக்காகச் சாவது எளிது. ஆனால் அத்தகைய நண்பனைக் காணல் அரிது என்றார்.
மதியுடம் படுதல்
களவியலின் முதற்கட்டத்திலேயே தோழியின் நுண்ணறிவு செயல்படுவதை இப்பகுதி காட்டுகிறது. தோழியின் செயல் இன்னும் தொடங்கவில்லை. இருவரின் உள்ளமும் பொருந்தியுள்ளதா? இருவரும் பொருத்தமானவரா? தலைவனின் அன்பு நிலையாக இருக்குமா? என்றெல்லாம் தோழி ஆராய்வதையே இத்தொடக்கம் காட்டுகிறது.
ஆனால், தலைவன் குறையுடையவனாகவோ, களவு நாடகம் தொடராமல் நிற்பதாகவோ இலக்கியம் கூறவில்லை.
இயற்கைப் புணர்ச்சியில் தலைவியைக் கூடி இன்புற்ற தலைவன் தோழியின் துணை இல்லாமல் அவளை நெருங்குதல் அரிது என்பதை உணர்கிறான். எனவே, தோழியிடம் சென்று நயவுரைகள் கூறி அவளது உள்ளத்தை நிறையச் செய்து தனக்குத் தலைவியை உடன்படுத்தித் தருமாறு வேண்டுகிறான்.
தலைவி அவனோடு களவுப் புணர்ச்சியில் ஈடுபட்டு விட்டாள் என்பதைத் தோழி நன்றாக உணர்கிறாள்.
தலைவியின் உள்ளத்தை அவள் அறிந்து கொண்ட நிலையைக் குறிப்பால் அக இலக்கியம் உணர்த்துகிறது.
தன் பெண்மையினாலும் நாணத்தாலும் தான் காதல் கொண்ட நிலையைத் தன் உயிர் போன்ற தோழியிடமும் தலைவியால் வெளிப்படையாகக் கூற இயலவில்லை.
தலைவியின் பண்புகளை நன்குணர்ந்த தோழியும் அவளிடம் வெளிப்படையாகக் கேட்க முடியவில்லை.
இந்நிலையில் தோழி செயல்பட்ட திறமையை,
‘பிறை தொழுவாம் எனவும் கணை குறித்த புண் கூர் யானை கண்டனென் எனவும், தன் பெருமைக்குப் பொருந்தாத சிறு சொற்களைக் கூறிக் குறையுற்று நின்றான் ஒருவன். அவனை நீயும் காண வேண்டும் எனவும், அவன் என்னைச் சார்ந்து நின்று குறை வேண்டவும் நான் மறுத்து வந்தேன் எனவும் மெய்யும் பொய்யும் விரவியும் பிறவாற்றானும் கூறுவன பல்வேறு கவர்பொருளாம்’ (2)
என்று நச்சினார்க்கினியர் சிறப்புற விளக்குவர்.
குறை நயத்தல்
தலைவனது தகுதியைத் தோழி ஆராய்ந்து அறிகின்றாள். அவன் தலைவிக்கு ஏற்றவன் என்பதை அறிந்து அவன் தலைவியை நெருங்க அனுமதிக்கிறாள். தலைவியைக் கூடுவதற்குத் தோழியின் உதவியை வேண்டுகிறான். தலைவனுக்காகத் தோழி சென்று தலைவியை வேண்டுகிறாள். தலைவி, எளிதில் இடங்கொடுக்காமல் மறுக்கிறாள்.
கெஞ்ச வேண்டிய தலைவி மிஞ்சுவதும், மிஞ்ச வேண்டிய தோழி கெஞ்சுவதுமாக இக்கட்டம் அமைகிறது.
தலைவன் தலைவி களவு வாழ்வில் தோழியின் செயல்திறன் இத்துறையில் தான் தொடங்குகிறது. தலைவி தன் களவை நேராகக் கூறித் தோழியின் உதவியை வேண்டவில்லை. மாறாக மறைக்கிறான். தலைவியின் காதலை வெளிப்படையாகவே தலைவியிடம் எடுத்துரைக்கிறாள். தலைவன் தந்த தழையாடையை ஏற்க வேண்டுகிறாள். அவனுடைய பண்புடைமை, அன்புடைமை ஆகியவற்றைக் கூறித் தலைவியை இணங்கச் செய்கிறாள்.
ஆற்றுவித்தல்
தலைவன் வரைவிடை வைத்துப் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து செல்வான். அவனைக் காணாமையால் தலைவி பெரிதும் பிரிவுத் துயரால் வருந்துவாள்.
‘மனத்தில் உயர்ந்த குறிக்கோளும், செயலூக்கமும், தலைமைப் பண்புகளும் ஆளுமையும் வளர்ச்சியடையும் காலகட்டத்தில் இருவருக்கும் பிரிவு என்பது இன்னாதாகி விடுகின்றது’ (3)
என்று தெ. கலியாண சுந்தரம் கூறியுள்ளார். அப்போதெல்லாம் தோழி தான் தலைவிக்கு மனம் பொருந்தும் படியான சொற்களைக் கூறி ஆறுதல் அடையச் செய்வாள்.
தலைவியின் துன்பக் கண்ணீரைத் துடைக்கும் கரம் தோழியுடையதாகத் தான் இருக்கும். இதனை,
‘கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்’ (4)
என்ற தொடரால் புலப்படுத்துவர் தொல்காப்பியர்.
களவை விட கற்பில் தோழி ஆற்றுவிக்கும் பாடல்களே சங்க இலக்கியங்களில் மிகுதியாக உள்ளன. தலைவி கூற்றாக வரும் 559 பாடல்களில் ஏறத்தாழ 380 பாடல்கள் தலைவி தோழியிடம் தன் ஆற்றாமையைக் கூறி வருந்தும் பாடல்களாக உள்ளன. இதனால் தோழிக்கும் தலைவிக்கும் உள்ள உறவு நெருக்கம் புலப்படும்.
தலைவி தன் துன்பத்தைக் கூறும் ஒரே பாத்திரமாகவும் அவள் துன்பத்தை நீக்கும் ஒரே பாத்திரமாகத் தோழியும் அமைகின்றனர். அவளுடன் சிறுவயதிலிருந்தே ஒன்றாக உண்டு ஒன்றாக உடுத்து ஒன்றாக வளர்ந்து வந்த தோழியைத் தவிர வேறு யாரால் தலைவியை ஆற்றுவிக்க முடியும்? வேறு யாராலும் தலைவியின் உள்ளத் துன்பத்தை அறிய இயலாது. அதனால் ஆற்றுவிக்கும் பொறுப்பு முழுவதையும் தோழியே ஏற்க வேண்டியதாகிறது. தோழி தன் அறிவுத்திறன் முழுவதையும் பயன்படுத்தித் தலைவியை ஆறுதல் பெறச் செய்வதைச் சங்கப் பாடல்களில் காண முடிகிறது.
களவில் தலைவன் வரைவு நீட்டித்த விடத்தும், வரைவிடை வைத்தும் பொருள் வயிற் பிரிந்த விடத்தும், அலர் தோன்றியவிடத்தும், வெறியாடல் நிகழுமிடத்தும் தோழி தலைவியை ஆற்ற வேண்டியுள்ளது.
கற்பில் தலைவி தலைவனின் செலவுக் குறிப்பறிந்து ஆற்றாவிடத்தும், பொருள்வயிற் பிரிந்த விடத்தும், சுரத்தின் வெம்மையைக் கருதி இடைநின்று மீள்வாரே எனத் தலைவி கவன்றவிடத்தும் தோழி ஆற்றுவிக்கின்றாள். பரத்தையிடமிருந்து தலைவன் திரும்பி வந்து வாயில் வேண்டிய சமையத்திலும் அவன் பரத்தமை ஒழுக்கமுடையவன் அல்லன் என்று கூறித் தலைவியைத் தெளிவிப்பவளும் தோழி தான்.
‘கார்முந்துமுன் எனது தேர்முந்தும்’ என்று உறுதிமொழி கூறிப் பிரிந்து சென்ற தலைவன் வருவதற்குத் தாமதமான விடத்தும், இளவேனில் பருவம் கண்டு தலைவி வருந்திய போதும், தூதுவிடக் கருதிய விடத்தும் காட்டின் அருமையை நினைந்து தெய்வம் பராவிய பொழுதும் தலைவியின் மனம் நிம்மதி அடைய ஆறுதல் கூறுபவள் தோழிதான்.
அறத்தொடு நிற்றல்
அகப்பொருள் இலக்கியத்துறையில் ஒரு திருப்புமுனையாக அமைவது அறத்தொடு நிற்றல் என்னும் துறை. சங்க இலக்கியத்தில் இத்துறை களவைக் கற்பாக மாற்றும் முதன்மை வாய்ந்தது.
‘களவையும் காந்தர்வத்தையும் இனங்கண்டு அறியக் கூடிய துறை ஒன்று களவியல் பகுதிக்கு உரியதாய் உள்ளது. அந்தத் துறைதான் அறத்தொடு நிற்றல்’ (5)
என்பர் ம. ரா. போ. குருசாமி.
அறம் என்பது கற்பு. அறத்தொடு நிற்றல் என்பது ‘கற்பைத் தன்னிலையினின்றும் தவறாமல் நிலைநிறுத்துதல்’ என்று பொருள்படும்.
‘அறம் என்பது தக்கது. தக்கதனைச் சொல்லி நிற்றல் தோழிக்கும் உரித்து என்றவாறு. அல்லதூஉம் பெண்டிர்க்கு அறம் என்பது கற்பு. கற்பின் தலைநிற்றல் என்பது’ (6)
என்பர் இறையனார், களவியல் உரைகாரர்.
‘அறம் எனப்படுவது பல பண்புகளையும் தழுவிய பொதுச்செயல் என்றாலும் ஈண்டு பெண்ணுக்குரிய முதல் பண்பான கற்பையே குறிக்கும். கற்பென்னும் கடைப்பிடியில் நின்று களவொழுக்கத்தைப் பெற்றோர்க்கு வெளிப்படுத்துதல் என்பது இத்துறையின் பொருளாகும். பெற்றோர்க்கு அறிவித்தல் என்பது இத்துறையின் பொருளாகும். பெற்றோர்க்கு அறிவித்தல் என்பது தோழியின் நோக்கம் அன்று. தலைவி ஏற்கனவே கற்பு நெறிப்பட்டு விட்டாள் என்பதை முதன்மையாக வெளிப்படுத்துவதே அவள் நோக்கம்’ (7)
என்பர் வ. சுப. மாணிக்கனார்.
‘தன் மனத்தால் விரும்பியவனை மணம் செய்து கொள்வதே அறவழியில் நிற்றலாகும். விபரம் அறியாத பெற்றோர் வேறு எவனுக்கும் திருமணம் பேசி விடாமல் தடுத்து, தலைவியின் காதல் உண்மையை அறிவித்து, முதலில் சினங்கொண்டாலும் பிறகு பெற்றோர்களையும் ஒப்புக் கொள்ள வைத்து, மனத்தால் ஏற்றுக் கொள்ள வாழ்வியல் அறத்தில் நிற்றலால் - நிற்க வழி செய்தலால் தான் இது அறத்தொடு நிற்றல் எனப்பட்டது’ (8)
என விளக்கம் தருவர் தமிழண்ணல்.
களவு வாழ்க்கையை மேற்கொண்ட தலைவனும் தலைவியும் திருமணம் என்னும் பந்தத்தால் இணைவதற்குக் காரணமான நிகழ்வே அறத்தொடு நிற்றல் என்பதாகும்.
தோழி - தலைவி தொடர்பு நெருக்கம்
இளம்பருவந்தொட்டே தலைவியும் தோழியும் ஈருடல் - ஓருயிர் எனப் பழகி வந்தனர். அதனால் தான் தனிநிலைக் காதலிலும் பொதுநிலையாகப் பேசிக் கொள்கின்றனர். அவர்கள் தலைவனுடன் கொண்டிருக்கும் உறவைப் பிறர் ஐயுறும் அளவுக்கு அவர்களின் தொடர்பு நெருக்கம் அமைந்துள்ளது.
தோழி, தலைவிக்கே உரிய காதலனாகிய தலைவனை நம் காதலர் என்றே குறிப்பிடுகிறாள்.
தலைவியின் நலனைத் தனக்கும் உரியதாக்கிப் பேசுகிறாள். தலைவியின் உயிரையும் நம் உயிர் என்று கூறுகிறாள். இடங்களைக் குறிப்பிடும் போதும் நம் என்ற தொடர்பின் நெருக்கம் வெளிப்படுத்தப்படுகிறது. தோழி நம் என்ற சொல்லால் இருவரின் உள்ளப் பிரிவின்மையைச் சுட்டுதலுண்டு. அத்தகையப் பாடல்கள் தலைவி கூற்றா, தோழி கூற்றா என்ற என்ற ஐயத்தை விளைவிக்கின்றன.
தலைவியும் பேசும் போது சில இடங்களில் தோழியை உளப்படுத்தியே தன் நெருக்கத்தை வெளியிடுகிறாள். தனக்கே உரிய காதலனைத் தோழிக்கும் உரிமைப்படுத்தி,
‘இனிய செய்த நங்காதலர்
இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே’ (9)
என்று பேசுகிறாள். தொழில், பண்பு போன்றவற்றிலும் இந்நெருக்கம் காண முடிகிறது.
தோழி தன்னைத் தலைவியாகக் கூறல்
தோழி, தன்னைத் தலைவியாகப் பாவித்து மற்றவர்களிடம் பேசுமிடமும் உண்டு. இந்நிலையில் மூன்று கூறுகள் காணப்படுகின்றன.
1. தலைவியின் உறுப்பு நலனைத் தன்னுடையதாக்கிக் கூறுதல்
2. தலைவியுடன் தன்னையும் எம் என்று உடம்படுத்திக் கூறுதல்
3. தலைவியின் செயலைத் தன் செயலாகக் கூறுதல்
தலைவியின் உறுப்பு நலனைத் தன்னுடையதாக்கிக் கூறுதல்
தலைவியின் வருத்தம், மேனி நலன் வாடுதல், காம மிகுதி, பசலை படர்தல் ஆகியவற்றைத் தனதாக்கிக் கூறுகிறாள் தோழி. இவ்வமைப்பு குறிஞ்சித் திணையில் தலைவனிடம் இற்செறிப்புணர்த்தி வரைவு கடாவும் நிலையில் மிகுதியாகக் காணப்படுகிறது.
தாய் முதலிய பிறர் தம் களவை அறியாமலிருப்பதற்கான உத்தி என இதனைக் கருதலாம்.
தலைவியுடன் தன்னையும் எம் என்று உடம்படுத்திக் கூறுதல்
தோழிக்கும் தலைவிக்கும் உள்ள உறவு நெருக்கத்தின் காரணமாக இருவரும் தமக்குள் நம் என்று கூறிக் கொள்வது போல தோழி, மற்றவர்களுடன் பேசும் போது, உரிமையோடு தலைவியையும் உளப்படுத்தி எம் எனக் கூறுகிறாள்.
‘எழுமினோ எழுமின் எம் கொழுநற் காக்கம்
ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளுர்,
புலர் உடன் கழித்த ஒள்வாள் மலையனது’ (10)
என்ற பாடலில் இச்சொல்லாட்சியைக் காணலாம். இங்கு தோழி தன்னைத் தலைவியுடன் ஒன்றுபடுத்திக் கூறுகிறாள். இதையும் இலக்கணமாக்கியுள்ளார் தொல்காப்பியர்.
தலைவியின் செயலைத் தன் செயலாகக் கூறுதல்
தலைவன் தலைவியிடம் நிகழ்த்திய நிகழ்ச்சிகளைத் தோழி தன்னிடத்து நிகழ்த்தியதாகப் படைத்துக் கூறுதல் இப்பகுதியில் அமையும்.
இவ்வாறு பண்பில்லாத செய்தி கூறலைத் தோழி அறமெனக் கருதுகிறாள். பெரும்பாலும் குறைநயத்தலில் தோழி தலைவியிடம் கூறும் கூற்றில்தான் இப்பண்பில் செய்தி இடம் பெறுகிறது. பண்பே கொள்கலமான தோழி பண்பற்ற இச்செயலைத் தன்னுரிமையாக்கிக் கூறுவது ஏதோ ஒரு காரணம் பற்றியாதல் வேண்டும் எனக் கருதலாம்.
தலைவியின் உள்ளத்தை அறிய தோழி கையாளும் உத்தி இது என்பர்.
சான்றெண் விளக்கம்
1. வ. சுப. மாணிக்கம், தமிழ்க்காதல், பக். 55, 56
2. தொல். சூ. 114, நச்சினார்க்கினியர் உரை
3. தெ. கலியாண சுந்தரம், சங்க அகப்பாடல்களில் உணர்வுப் போராட்டம் , ப. 15
4. தொல். பொருள். கள. சூ.20
5. ம. ரா. போ. குருசாமி, சங்க காலம், ப. 109
6. நக்கீரர், இறையனார் களவியல் உரை, ப. 141
7. வ. சுப. மாணிக்கம், தமிழ்க்காதல், ப. 79
8. தமிழண்ணல், குறிஞ்சிப்பாட்டு, ப. 45
9. குறுந். 202
10. நற். 170 : 5 - 7
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.