இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

தமிழர் அனைவரும் இசைத்த ‘பறை’ - பகுதி 2

முனைவர் சு. மாதவன்


1.2 ‘பறை’ யெனும் பெயரில்லாப் பறைகளும் பயன்படு தளங்களும்

வேளாண் பறைகளாக இயங்கும் ‘பறை’ எனும் பெயரில்லாப் பறைகளில்...

* தழல், தட்டை, குளிர், தண்ணுமை ஆகியவை கிளிகளைப் பறவைகளை விரட்டப் பயன்பட்டுள்ளன.
* தண்ணுமை, முழவு, பணை ஆகியன அறுவடைக்குரிய பறைகளாகப் பயனளித்துள்ளன.
* புதுநீர் வருகை அறிவிக்க, வெள்ளத்தைத் தடுக்க - முழவு
* நெற்குவியலைப் பாதுகாக்க - துடி

புறப்பறைகளாக முழக்கப்படும் பறையெனும் பெயரில்லாப் பறைகளில்...

* ஆறலைக் கள்வர் இசைக்கும் - தண்ணுமை
* அரண் அழிக்க - துடி, முரசு
* போர்ப் பாசறையில் - பணை
* போர் வீரர;களுக்குப் பூ அளிக்க - தண்ணுமை
* சமாதானத்திற்கு - பணை
* நடுகல் வழிபாட்டிற்கு - முரசு, கிணை
* இழப்பிற்கு - மண்முழா, நெய்தல் (சாப்பறை)

அகப்பறைகளாக இசைக்கப்படும் பறையெனும் பெயரில்லாப் பறைகளில் …

* போர்க்கள ஆரவார ஒலி போன்ற அலர் ஒலி - துடி
* முரசு அதிர்வதுபோல் சேரிப்பெண்டிரின் அம்பல் ஒலி - முரசு
* மணவிழாக்களின் மெருகூட்ட - மணமுரசு

கலைப்பறைகளாக இசைக்கப்படும் பறை எனும் பெயரில்லாப் பறைகளில்...

* பாணர்கைப் பறைகளாக - ஆகுளி, பதலை, பணை, கிணை, தட்டை, தடாரி, தண்ணுமை, முழவு, முரசு.
* விறலிக்கான பின்னணியாக - முழவு, துடி
* கூத்தர்களின் கலைக்கு - தண்ணுமை (குரவை)

ஒலிகளின் பொதுப்பெயராய் வழங்கப்படும் பறை எனும் பெயரில்லா பறைச் சொற்களில் ...

* தேரை மற்றும் ஆந்தையின் ஒலிபோல் - ஆகுளி, தட்டை, துடி, மகுளி
* அருவி ஓசை - தடாரி, தண்ணுமை, முழவு
* இடி, மழை, காற்று, ஆற்றுநீர் ஒலிபோல - முழவு, முரசு, பணை
* மேகத்தின் ஒலி - தண்ணுமை

இதுவரை ஆராய்ந்த எல்லாவகைப் பறைகளிலும் இடம் பெற்றுள்ள பறையெனும் பெயரில்லாப் பறைகள், வேட்டைப் பறையாக இடம் பெறவில்லை என்பது ஆராய்தற்குரியது. இதிலிருந்து, ‘பறை’ எனும் பெயருடன் உள்ள பறைகள்தாம் வேட்டைச் சமூகத்தின் ஆதிப் பறைகளாகும்; மனித சமூகத்தின் ஆதிப் பறைகளும் ஆகும். பிறவெல்லாம், வேளாண் சமூகத்தில் தோன்றியவை என்பது தெளிவு.



1.3 உலகநாடுகளில் பறை

மனிதகுல வரலாற்றில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இசைக்கருவி அல்லது இசைக்கருவிகளில் தோற்கருவி ‘பறை’ என அறிஞர்களால் சுட்டப்படுகிறது. ஆங்கிலத்தில் ‘Draus’ என அறியப்படும் ‘பறைகள்’ புதிய கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் (கி.மு 5500 - 2350) சீன நாட்டில் உடும்புத் தோலில் உருவாக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது (இணைய தளப்பதிவு, பார்வை: ‘Drums’). மேலும், அவை சடங்குகளிலும் சண்டைகளிலும் பயன்கொள்ளப்பட்டதாகவும் அப்பதிவு தெரிவிக்கிறது. பறையைக் கண்டுபிடிப்பதற்கான மனிதகுலத்தின் முதல் நடவடிக்கைகளாகக் கைதட்டுதல், நெஞ்சிடித்தல், பாதங்களில் திறந்த கைகளால் அடித்தல் போன்றவை அமைந்திருந்திருக்கின்றன. இவற்றில் வரும் ஓசையின் இசைமை, அதிர்மை, இனிமை ஆகியவற்றை அறிந்த மனிதன், தோலில் கையால் அறைந்தால் இனிய ஒலி/வலிய ஒலி கிடைக்கிறது என்பதை அறிந்ததன் பயனாகத்தான் ‘பறை’ எனும் இசைக்கருவியைக் கண்டுபிடித்திருக்கிறான் எனலாம்.

இவற்றுக்கும் முன்பாக, கற்களின் அல்லது கற்பாறைகளின், மரக் கிளைகளின், உலர்ந்த இலைகளின் ஓசைகளினின்று இசை கண்டறியப்பட்டுப் பின்னர் மனிதன் தானே அவற்றை மோதி, உராய்ந்து, அடித்து இசைக்கக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

ஆப்பிரிக்கக் காடுகளில் - ‘கலைபலோபோன்’

இந்தோனேஷியாவில் - ‘கம்பாங்க்’ ‘முரவ’

வங்கதேசத்தில் - ‘கோல்’

எகிப்தில் - ‘நிம்பிட்டு’

இலங்கையில் - ‘தம்மிதெம்மா’

ஈசாப் கதைகளில் - கூஜா அல்லது ஹிந்ராஹி

நைஜீரியாவில் - ‘இகோலா’

மத்திய ஆப்பிரிக்காவில் - ‘லோங்க் குண்டோ’

இந்தப் பறைகளின் பெயர்கள் சைத்தன்ய தேவ, மு.வளர்மதி ஆகியோரின் நூல்களிலிருந்து திரட்டப்பட்டவை. இவை பெரும்பாலும் வேட்டைச் சமூகத்திலும், வேளாண் சமூகத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிகிறது. குறிப்பாக, மத்திய ஆப்பிரிக்கக் காடுகளில் வாழும் ‘தும்பா மக்களின் பறைமொழி’ என்ற கட்டுரையை எழுதியுள்ள ரோஜர் டி கிளார்க் என்பவர், பறையானது செய்திப் பரிமாற்றம் செய்துகொள்ளப் பயன்படுவதுதால் பேசும்பறை என்றழைப்பது குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார் (வளர்மதி., மு. 2009 : 97-102). இதுபோல் உலகநாடுகள் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகளைத் திரட்டித் தமிழ் இலக்கியப் பின்புலத்தைப் புரிந்துகொள்ள முயலலாம்.



1.4 இந்தியாவில் பறை

மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஒவ்வொரு நாட்டிலும் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப நிகழ்ந்துள்ளன. இந்தியாவிலும் அவ்வாறே நிகழ்ந்துள்ளது. அவற்றைக் கீழ்வருமாறு அட்டவணைப்படுத்தலாம்:

மாநிலம் பறையின் பெயர் பயன்பாடு
கேரளா துடிப்பறை, முரி, சுத்தமத்தளம், இக்கா, செண்டை திருடர்களைப் பிடிக்க
ராஜஸ்தான் நிஸ்ஸான், கேரோ, பாபுஜிக் மாதே போர் முரசாக
அஸ்ஸாம் கர்ரம் நடனங்களுக்குப் பின்னணியாக
மகாராஷ்டிரம் டோல், ஹாலிகே, குமட் நடனங்களுக்குப் பின்னணியாக
மத்தியப்பிரதேசம் கடோலா நடனத்திற்கு
ஆந்திரா ரோன்ஸா, டோல், தம்மோட்டா, புத்ர சடங்கிற்கு
ஒரிசா செங்கு, சட்சடி நடனத்திற்கு
கர்நாடகா தம்மட்டே, ஹாலிகே, கும்மடே நடனத்திற்கு
மணிப்பூர் புங் - - - - -
காஷ்மீர் தும்பத் நாரி - - - - -

இந்தப் பட்டியலும் மேலே கண்ட நூல்களை அடிப்படையாகக் கொண்டது.

இந்தியா முழுவதும் பறைகள் பலவகையினவாக; பல பயன்பாட்டுத் தளங்களுக்கு உரியனவாக விளங்குகின்றன. பெரும்பாலும் பழங்குடிச் சமூகத்தினரிடையே இன்றும் புழக்கத்திலுள்ள பறைகள் சிலவும் உள்ளன.



1.4.1 இந்தியாவில் பறை இசைத்த இசைக்கும் பல்வேறு சாதியினர்

1. ‘ஆவோ நாகர்’ எனும் பழங்குடியினர் ஸொங்காங் அல்லது டொங்டேன் எனும் பறையை இசைக்கின்றனர்.

2. மத்தியப்பிரதேசத்தில் ‘அபுஜ்ம ரியாங்’ எனும் சாதியினரால் கடோலா எனும் பறை நடனத்திற்காக இசைக்கப்படுகிறது.

3. ஆந்திராவில் ‘ரெட்டி’ சாதியினர் பறை செய்வதை ஒரு சடங்காகவே நிகழ்த்துகிறார்கள். டோல் என்ற பறையை நடனத்திற்கான பின்னணியாக இசைக்கின்றனர்.

4. ஆந்திராவில் ‘ஒரோவான்’ சாதியைச் சேர்ந்தோர் நகேரா அல்லது குஞ்ச் எனும் பறையைப் பயன்படுத்துகின்றனர்.

5. ஆந்திராவில் ‘பம்பலர்’ எனும் சாதியினர் பம்பை எனும் ஒருவகைப் பறை இசைக்கின்றனர்.

6. வடஇந்தியாவில் குரங்காட்டிகளான ‘மதாரி’ எனும் சாதியினர் மதாரி எனும் பறையைப் பயன்படுத்துகின்றனர்.

7. தென்னிந்தியாவில் குரங்காட்டிகள் புட்டுபுடுகெ அல்லது குடுகுடுப்பை எனும் பறையை வாசிக்கின்றனர்.

8. ‘ஸந்தால்’ எனும் சாதியினர் தம்ஸா எனும் உலோகப்பறை, டும்டா என்ற தம்பட்டத்தை இசைக்கின்றனர்.

9. கேரளாவில் செண்டை, துடி, இடக்கா ஆகிய பறைவகைகளான இசைக்கின்றனர்.

10. மகராஷ்டிராவில் மலைவாழ் மக்களின் நடனங்களுக்குப் பின்னணியாக டோல் எனும் பறையை முழக்குகின்றனர்.

‘டங்கர்’ எனும் மக்களினத்தவரும் இந்தப் பறையை இசைக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள சுமார் 427 பழங்குடி மக்கள் பிரிவுகளில் 63 விழுக்காட்டினர் பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில் வாழ்கின்றனர். இவர்களனைவரின் ஆடல், பாடல், வழிபாடு, செய்தித் தொடர்பு அனைத்திலும் பறை பயன்பாட்டில் இருந்து வருகிறது.



1.5 பறைவகைத் தோற்கருவிகளை இன்றும் பயன்படுத்தும் சாதியினர்

பறைவகையின் பெயர் இசைக்கப்படும் சூழல் இசைக்கும் சாதியினர்
பஞ்சமுக வாத்தியம் (சங்க காலத்து ‘குடமுழவம்’) வழிபாடு ‘பாரசைவர்கள்’ எனும் இசைவாணர்
மகுடம் (தொண்டகப் பறை) வழிபாடு கணியான் கலைஞர்கள்
சுத்த மத்தளம் (முழவு) வழிபாடு பாரசைவ முட்டுக்காரர்
தக்கை (துடி) வழிபாடு - - - - -
தவண்டை (உடுக்கையின் தொடர்ச்சி) வழிபாடு - - - - -
கொடுகொட்டி வழிபாடு ஆதியன் எனப்படும் பூம்பூம்மாட்டுக்காரர்கள்
உடல் (துடி) வழிபாடு - - - - -
பேரிமத்தளம் (முழவு, முரசு) வழிபாடு - - - - -
பவுனி வாழ்க்கை வட்டச் சடங்குகள் அருந்ததியர்
மண்மேவும் (மண்முழா) வழிபாடு அருந்ததியர்
அரைச்சட்டி, உருட்டி வழிபாடு (மண்மேளத் தோடு இணைந்து இசைக்கப்படுபவன்) அருந்ததியர்
சன்னை வழிபாடு - - - - -
பெருமுரசு சிறுமுரசு வழிபாடு - - - - -
நகரா வழிபாடு - - - - -
தக்கை வழிபாடு - - - - -
தவண்டை வழிபாடு - - - - -

(நீலகண்டன். வெ. எழுதியுள்ள நூலிலிருந்து தொகுப்பட்ட அட்டவணைப் பட்டியல்)



1.0.0 தொகுப்புரையாக

இன்னும் இன்னும் கூர்மையான நோக்குடன் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய ஆய்வுப் பொருண்மையாகப் பறை விளங்குகிறது. இந்தச் சிறிய கட்டுரையின் வழியாகக் கண்டறியப்பட்ட முடிவுகளாக பின்வருவனவற்றைத் தொகுக்கலாம்:

* தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் தோற்கருவிகளின் எண்ணிக்கை சுமார் 86. இவற்றுள், பறைவகையைச் சேர்ந்தவையாகச் சுமாஎ 43 இசைக்கருவிகளை அடையாளப்படுத்த முடிகிறது. இவ்வாறு, தோற்கருவிகளில் சமபங்கு (இரண்டில் ஒரு பங்கு) அளவில் பறைவகை இசைக்கருவிகள் இடம்பெற்றிருப்பதே தமிழஎ வாழ்வில் பறை வகித்த இன்றியமையாத் தன்மையை எடுத்துரைக்கிறது.

* ஐந்து திணைகளுக்கும் உரிய கருப்பொருளில் ஒன்றாகப் பறை இடம் பெற்றிருந்தமையானது எல்லோருக்குமான - எல்லாத்தொழில் சார்ந்ததுமான - பயன்படு கருவியாக இருந்துள்ளதைத் தெளிவுபடுத்துகிறது.

* புற வாழ்வில் குறிப்பாகப் போர் நடவடிக்கைகளில் வரும் பல திணைகளிலும் பறை பயன்படு கருவியாக இருந்துள்ளது. இன்றுங்கூட, இராணுவம், போலீஸ் ஆகியவற்றில் பறையின் நவீன வடிவமான ‘டிரம்ஸ்’ இசைக்கப்பட்டு வருவது எண்ணத்தக்கது.

* பம்பை, தொண்டகச் சிறுபறை, தழல், தண்ணும்மை, துடி, பதலை ஆகிய பறைகள் வேட்டைப் பறைகளாக இயங்கியுள்ளன.

* அரிப்பறை, எல்லரி சல்லரி தட்டை, தடாரி, மத்தரி, கிணை ஆகிய பறைகள் வேளாண் பறைகளாக விளங்கியுள்ளன.

* முழவு, முரசு, பணை, பெருந்துடி, தண்ணும்மை, கிணை ஆகிய பறைகள் போர்ப்பறைகளாக முழங்கியுள்ளன.

* அகவாழ்வின் மெல்லிய காதல் உணர்வுகளை அந்தக் கணத்தின் எண்ண உணர்வுகளை வெளியிடவும், மீட்டு இசைக்கவும் வல்லதாகப் பறை திகழ்கிறது.

* தொழில்சார் பறைகளின் உருவாக்கங்களில் இருந்து கலைசார் பறை பரிணாம வளர்ச்சி பெற்றது. தொழிலோடு இயைந்திருந்த பறை, ஓய்வுநேரத்தில் மீண்டும் இசைக்கப்படும் போது, மேலும் செவ்விய தன்மையைப் பெறுகிறது. இத்தகைய செவ்வியக் கலைக்கூறுகளைக் கண்டறிந்து வளர்த்துக் கொண்ட கலைத்திறன் மிக்க கலைஞர்கள் கலையையே வாழ்வாகக் கொண்டதால் உருவான பறையைக் கலைப்பறை எனலாம்.

* தொழில், கலை என எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருந்த பறையொலி ஏதேனும் வேறோர் ஒலி கேட்கும்போது அதுவாகவே உணரப்பட்டது. இதனால் ஒலிகளின் பொதுப்பெயராகவோ ‘பறை’ என்னும் சொல் சங்க இலக்கியம் முழுவதும் இடமபெற்றுள்ளமை வியக்கத்தக்க செய்தியாகும்.

* சங்க இலக்கியங்களில் 19 தோற்கருவிகளைப் பற்றி குறிப்புகள் காணக் கிடைக்கின்றன (கலைவாணி., இரா. 2011 : 207). இவை அனைத்தும் பறையிலிருந்து தோன்றிய புதிய வகைக் கருவிகள் ஆகும். ஆனால், ‘பறை’ யையும் ‘சிறுபறை’யையும் ‘தட்டைப்பறை’ யையும் தவிர்த்து, பிற தோற்கருவிகளுக்குரிய பெயர்களில் முன்னொட்டாகவோ பின்னொட்டாகவோ ‘பறை’ என்னும் சொல் இடம் பெறவில்லை. இதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டியவை. ஒருவேளை, வன்மையான அதிர்விசையை, அதிர்வொலியைத் தருவதை மட்டும் ‘பறை’ என அழைத்திருப்பார்களோ சங்கத் தமிழர்கள்?

* தோற்கருவிகளிலேயே ‘பறை’ என்ற கருவிச்சொல் மட்டும்தான் கருவியின் அறைதலொத்த அதிர்வொலியை வெளிப்படுத்துகிறது எனலாம். ‘பறை’ எனும் சொல்லைச் சொல்லும் போதே நாக்கு மேலண்ணத்திலும் கீழண்ணத்திலும் உரசி நாக்கு அதிர்ந்தாடி இசைப்பதை நுண்ணிதின் உணரலாம். இதை இன்று ‘தப்பு’ எனச் சொல்லும் வழக்கு காய்ச்சாமல் இசைத்த போது வந்த ‘தப்பு...தப்பு...’ என்ற ஓசையின் பெயராக இருக்கலாம். எனவே, ‘பறை’யைத் தவறியும் ‘தப்பு’ எனச் சொல்வது தப்பு.

* ‘பறை’ என்ற முன்னொட்டோ பின்னொட்டோ இல்லாத தோற்கருவிகளை இசைத்தவர்கள், ஒலித்தவர்கள், அடித்தவர்கள் ஒரே சாதியினராகத் தொழில் அடிப்படையிலும் கூட இருந்திருந்தால் எல்லாத் தோற்கருவிகளுமே ‘பறை’யின் வெவ்வேறு வடிவங்கள் எனும் போது எல்லோரையுமே ஒரே சொல்லால் ‘பறையன்’ என்றே அழைத் திருக்கலாமே! ஆனால், அவ்வாறு அழைக்காமல் துடி - துடியன், கிணை - கிணைவன், முழவு - முழவன் எனவும் பாணன், விறலி, பாடினி எனவும் இன்னும் வேறு பல மாதிரியும் அழைத்தது எதனால் என ஆராயப்பட வேண்டியுள்ளது.

* இவ்வளவு முறை ‘பறை’ என்னும் தோற்கருவி சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கும் போது அதை இசைத்தவன் பெயர், கருவி இசைத்தலோடு இணைத்து எங்கும் பதிவாகவில்லை. ஒரே ஒரு பாடலில், ஒரே ஒரு இடத்தில் அதுவும் ஓர் ஊரின் தொல்குடிகளைப் பற்றிய குறிப்பில் ‘பறையன்’ என்னும் சொல் பதிவாகியுள்ளது.

(கலைவாணி.,இரா. 2011:67). அவ்வாறாயின், எல்லாத் தோற்கருவிகளையும் பறையின் வகைகள் என வகைப்படுத்துவது போல், இந்தப் பறை வகைகள் வாசித்த எல்லோருக்குமான பொதுப்பெயராகப் ‘பறையன்’ என்பது வழங்கப்பட்டிருக்கக் கூடுமோ என எண்ண வேண்டியுள்ளது.

* வேட்டை, வேளாண்மை, போர், அகவாழ்வு, கலை வாழ்வு என சமூக வாழ்வின் எல்லாப் படிநிலைகளிலும் எல்லாப் பயன்நிலைகளிலும் பறை இடம் பெற்றிருந்ததால்தான் ஒலிகளின் பொதுப்பெயராகவே ‘பறை’ எனும் சொல் குறியீட்டடிப்படையில் இடம்பெற்றுள்ளது என்பதும் நோக்கத்தக்கது.

* உலக அளவிலும், இந்திய அளவிலும், தமிழக அளவிலும் பறைகளைப் பல சாதியினரும் இனக்குழுவினரும் தொழில்வகையினரும் கலை வகையினரும் பயன்படுத்தியுள்ளனர் என்பது உறுதியாகிறது.

* இன்றும் பயன்படுத்தப்பட்டு (அழிந்து) வரும் பறைவகைத் தோற்கருவிகளுள் 16 பெயர்களிலும் ‘பறை’ என்ற முன்னொட்டோ, பின்னொட்டோ இடம்பெறவில்லை என்பதும் அவற்றைப் பல சாதியினரும் இசைத்து வருகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

* வேட்டைக்கென - இனக்குழுச் சமூக வாழ்க்கைத் தேவைக்கென - பறை பயன்பட்டு வந்த காலம் வரை ‘பறை’ என்ற கருவி எல்லோருக்கும் உரியதாக விளங்கியுள்ளது. வேளாண் சமூக மறுமலர்ச்சிக்குப் பிறகு வேளாண் தொழில்கள் பயன்படு கருவியாகப் பல்வேறு தோல்கருவிகள் தோன்றிக் கொண்டிருந்த காலத்தில் வேலைப்பிரிவினையின் பொருட்டுப் பல்வேறு தொழிற்குழுக்கள் உருவாகி, வர்ணாசிரம தர்மம் வந்ததும் அவை சாதிகளாகிப் போனதால் பறை தவிர்த்த பிற தோற்கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்தியோர் ‘பறை’ என்னும் சொல்லை அந்தக் கருவிகளின் முன்னொட்டாகவோ பின்னொட்டாகவோ சுட்டவில்லை. அவ்வாறு சுட்டினால், சமூகத் தாழ்வையும் இழிவையும் சுமக்க நேரும் என அஞ்சியிருக்கலாம்.



* இவை அழிந்து வருவதற்கு வழிபாட்டுப் பயன்பாட்டில் இருந்து வந்தமையே காரணம் என்பது புலனாகிறது. ஆனால் ‘பறை’ என்ற நேரடிப் பறைக்கருவி இன்றும் கலைக் கருவியாகவும் பயன்பாட்டுக் கருவியாகவும் அதிர்வலையின் உச்சநிலைக்குரியதாகவும் உணர்வுகளை எழுப்பும் இசை ஈர்ப்புக் கருவியாகவும் இருப்பதாலேயே நிலைத்து நீடித்துப் புகழ் பெற்று வருகிறது என்பதும் தெளிவாகிறது.

* தற்காலத்தில் அழிந்து வரும் இசைக்கருவிகளான பல கருவிகள் வழிபாட்டிடத்தில் வாசிக்கப்படுவனவாய் உள்ளன. பிராமண வைதீக தெய்வக் கோயில்களில் இசைக்கப்படும் கலைக்கருவிகள் பல சாதியினராலும் வாசிக்கப்படுவதால் ‘பறை’ என்ற முன்னொட்டையோ, பின்னொட்டையோ சேர்த்துக்கொள்ள விரும்பாமல் இருந்திருப்பர் என எண்ணவும் இடமுள்ளது.

* இந்தக் கட்டுரையாளரால் வகைப்படுத்தப்பட்டுள்ள பறை வகைகளில் ‘பறை’ எனும் பெயரில்லாப் பறைகள் வேட்டைப் பறைகளாக இடம் பெறவில்லை.

* இன்றும் வயற்காடுகளில் கிளிகளை விரட்டத் தட்டு, தகரம், பாலிதீன் தாள்களில் வலித்துக் கட்டப்பட்ட உடைந்த பானைகளின் வாய்ப்பறை ஆகியவற்றை எல்லோரும் பயன்படுத்தி வருவது கண்கூடு.

* இந்தியாவில் உள்ள சுமார் 427 பழங்குடி மக்கள் பிரிவுகளில் 63 விழுக்காட்டினர் பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில் வாழ்கின்றனர். இவர்களனைவரின் ஆடல், பாடல், வழிபாடு, செய்தித் தொடர்பு அனைத்திலும் பறை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

* ‘பறை’ எனும் முன்னொட்டோ, பின்னொட்டோ இல்லாத பறை வகை இசைக் கருவிகள் வழிபாடு, அரிதான சடங்குகள் என்ற நிலைகளில் புழக்கத்தில் இருந்ததால் காப்பாரின்றி அழிந்து வருகின்றன. ஆனால், ‘பறை’ இன்று வரை வாழ்க்கை வட்டச் சடங்குகளுக்கான பயன்படும் இசைக் கருவியாக இருந்தது, கலைத்தொழில்கள் கலைக்கருவியாகப் பொதுவெளிகளில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பயன்பட்ட நூல்கள்

1. ஆளவந்தார்., ஆர். தமிழர் தோற்கருவிகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அடையாறு, சென்னை-600 020, மு.ப.1981.

2. கலைவாணி., இரா. தமிழ்வேலு., சங்க இலக்கியத்தில் இசை, ஏழிசைப் பதிப்பகம், 15/88, நியாசு குடியிருப்பு, பட்டமங்கலம் ஆராயத் தெரு, கேணிக்கரை, மயிலாடுதுறை - 609 001, மு.ப.2005.

3. சைதன்ய தேவ. பி. (தமிழில்) பார்த்தசாரதி., டி.எஸ். இந்திய நாடும் மக்களும் - இசைக் கருவிகள், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, எ-5, கிரீன் பார்க், புதுதில்லி - 110 016, மு.ப.1993.

4. நீலகண்டன். வெ. வாழ்விழந்துவரும் கிராமிய இசைக் கருவிகள், ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிகேசன் லிட்., 17/1, 3வது, அவென்யூ, அசோக் நகர், சென்னை - 600 083, மு.ப.2011.

5. வளர்மதி. மு. பறை - தமிழர் கலை வரலாற்றின் முகம், அம்ருதா பதிப்பகம், 5, 5-ஆவது தெரு, எஸ்.எஸ். அவென்யு, சக்திநகர், போரூர், சென்னை-600 116, மு.ப.2009.

6. ஜோதிராணி., க.அ. சங்க இலக்கியத்தில் சமூக ஆய்வுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 600 113, மு.ப.2011.

7.தொல்காப்பியம் - பொருளதிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை -14, மு.ப.2005.

8. சங்க இலக்கியங்கள் (எட்டுத்தொகை - தனித்தனி நூல்களாக, பத்துப்பாட்டு ஒரே நூலாக) திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட்., 522, டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18, மறுஅச்சு 2007.

9. Index des mots dela literature tamoule ancienne, (e-d) Vol.III. Institute Francais D’indologie, Pondichery, F.P.1970.

10. "drum" essay in Wikipeida.

(பறை ஒலி நிறைவு)


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p134a.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License