பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் கொள்கை
செ. ராஜேஷ் கண்ணா
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்.

தொன்மை வாய்ந்த உலக இலக்கியங்களுள் சங்க இலக்கியங்கள் பழமையும் தனித்தன்மையும் கொண்டவை. பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்துச் சங்க இலக்கியங்கள் என முடிசூட்டினர். இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தவை என்பதனை இலக்கியங்கள் கொண்டும், அகழாய்வுகள் கொண்டும் நிறுவப்பட்டுள்ளன. அகழாய்வில் அண்மையில் கிடைத்த புல்லிமான் கோம்பை கல்வெட்டு மேலும் வலு சேர்ப்பதாய் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இவ்விலக்கியங்கள் அவை தோன்றிய காலத்திற்குப் பிறகு பல்வேறு அரசர்களின் உதவியோடு தொகுக்கப்பட்டன. இத்தகைய தொகுப்பு முயற்சியில் ஈடுபட்ட காலங்களில் பழந்தமிழ் இலக்கியங்களோடு சில இடைச்செருகலும் ஏற்பட்டது. அவ்வகையில் எட்டுத்தொகை நூல்களின் முதலில் இடம் பெற்றுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்கள், சங்க நூல்கள் தொகுக்கப்பட்ட காலங்களில் சேர்க்கப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது. பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துப் பாடல்களில் சமயப்பொறை வேண்டிப் பல கடவுள் கொள்கைகளைப் பாடியுள்ளார். இம்மரபு தனக்கு முன் பாடிய புலவர்களின் கருத்தாகவே அமைந்துள்ளது. சங்ககாலப் பிற்பகுதியில் வாழ்ந்த பெருந்தேவனார் சங்ககாலப் புலவர்களின் தன்மையையொத்த பாடல்களைப் பாடி கடவுள் வாழ்த்தாகச் சேர்த்துள்ளார். பழம் புராணச் செய்திகளை கையாண்டுள்ள பெருந்தேவனார் சிவன் குறித்த செய்திகளில் முரண்படுகிறார். தனக்கு முன்பு பாடப்பட்டப் புலவர்களின் கருத்துக்களையும் உவமைகளையும் அப்படியே கையாள்கிறார். இவற்றின் புரிதல்களில் உள்ள சில சிக்கல்களை இனம் காண முயல்கிறது இக்கட்டுரை.
பெருந்தேவனார்
சங்க காலம் முதல் இடைக்காலம் வரை பெருந்தேவனார் எனும் பெயருடைய பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். பாரதம் பாடிய பெருந்தேவனார் எட்டுத்தொகை நூல்களில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானுநூறு ஆகிய ஐந்து நூல்களுக்கும் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். அடைமொழி இல்லாத பெருந்தேவனார் எனும் புலவர் நற்றிணையில் குறிஞ்சி திணைப்பாடலையும் (83), அகநானூற்றில் பாலைத்திணைப்பாடலையும் (51) பாடியுள்ளார். “பெருந்தேவனார் என்று சங்க நூல்களில் மற்றொருவர் காணப்படுகின்றார். அவரின் இவர் வேறானவர் என்பதை அடைமொழியால் அறியலாம்” (1) என்ற கூற்று இருவேறானவர்கள் என்பதைப் புலப்படுத்துகிறது. திருவள்ளுவமாலையில் முப்பதாம் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் எனும் பெயரிலான புலவர் இயற்றியுள்ளதாக கருதப்படுகிறது. “திருவள்ளுவமாலை ஒரு போலி நூல். ஒருவரே பலர் பெயரில் எழுதி உருவாக்கப்பட்ட நூல்” (2) என்று தமிழறிஞர் மு. அருணாச்சலம் கூறுவதன் மூலம் இந்நூலில் உள்ள பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
தொல்காப்பியப் பொருளதிகார உரையான நச்சினார்க்கினியத்திலும், யாப்பருங்கல விருத்தியுரையிலும் பெருந்தேவனார் பாடிய தனிப்பாடல்கள் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளது. “நச்சினார்க்கினியமும், யாப்பருங்கல விருத்தியும் காட்டும் பெருந்தேவனார் கி.பி நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகலாம் என்பார் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை” (3) என்று ஐங்குறுநூற்றின் பாடினோர் பகுதியில் சுட்டப்படுகிறது. மூன்றாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் அதாவது கி.பி ஒன்பதாம் நூற்றாண்டுகளில் பாரத வெண்பா என்ற நூலை பாட்டும் உரையும் கலந்த நடையில் பெருந்தேவனார் இயற்றியுள்ளார். இந்நூலினை இயற்றியப் பெருந்தேவனார் “ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்” (4) என்பர் மு. அருணாச்சலம். தமிழின் முதல் ஐந்திலக்கண நூலான வீரசோழியத்திற்கும் பெருந்தேவனார் எனும் பெயரிலான புலவர் உரை வகுத்துள்ளார். வீரசோழியத்தின் காலம் கி.பி பதினோராம் நூற்றாண்டு ஆகும். பெருந்தேவனார் பதினோராம் நூற்றாண்டுக்குப் பிறகே இந்நூலிற்கு உரை வகுத்திருக்க வேண்டும்.
மேற்காணும் செய்திகள் யாவும் சங்ககாலம் முதற்கொண்டு பெருந்தேவனார் என்னும் பெயரிலான பல புலவர்கள் வாழ்ந்து தமிழ்த் தொண்டாற்றியுள்ளனர் என்பதை உணர்த்துகின்றன. பின்னாளில் வந்த பாரத வெண்பாவை இயற்றிய பெருந்தேவனார் பெரும்புகழ் அடைந்ததன் காரணமாக முற்காலங்களில் பெருந்தேவனார் என்று அறியப்பட்டவர். பிற்காலத்தில் அடைமொழியோடு பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைத்திருக்க வேண்டும். “நூல்களைத் தொகை செய்த சான்றோரும், அதற்குத் துணைபுரிந்த மன்னர்களும் வாழ்ந்த காலமே பெருந்தேவனார் காலமும் என்று முடிவு செய்ய வேண்டியுள்ளது” (5) என்று தட்சிணாமூர்த்தி அவர்கள் கூறுவது, பாரதம் பாடிய பெருந்தேவனார் எட்டுத்தொகை நூல்களுக்கு அவை தொகுக்கப்பட்ட காலங்களில் கடவுள் வாழ்த்துக்களைப் பாடிச் சேர்த்துள்ளார் என்பதைக் காட்டுகிறது.
பல கடவுள் கொள்கை
பல கடவுள்களை ஒருங்கே வைத்துப் பாடும் முறை சங்க இலக்கியங்களில் இருந்து காணப்படுகிறது. இக்கொள்கையைப் பின்பற்றி பின்னாளில் கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந்தேவனார், மூன்று கடவுள்களைப் பாடித் தமது சமயப் பொறையுணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
“ஏற்ற வலள் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோறும்
கடல் வளர் புரிவளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பானைக் கொடியோனும்
மண்ணறு திருமேனி புரையும் மேனி,
விண் உயர் புட்கொடி, விறல் வெய்யோனும்”
(புறம்.56.1-6)
என்பது நக்கீரனார் பாடல். பாண்டியன் நன்மாறனை கூற்றுவன், பலதேவன், திருமால், முருகவேள் முதலான கடவுள்களுடன் ஒப்புமைப்படுத்தி பாடியுள்ளார். சமயப் பூசல்கள் இல்லாத சங்க காலத்தில் நக்கீரனார் பொதுமை உணர்வோடு பாடியுள்ளார். காவிரிப்பூம்பட்டினத்துப் புலவரான காரிக்கண்ணாரும் இரு கடவுள்களை வைத்துப் பாடல் புனைந்துள்ளார்.
“நீர் நிற உருவின் நேமியோனும் என்று
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி”
(புறம்.58.15-17)
என்பது அப்பாடல். சோழன் திருமாவளவனையும், பாண்டியன் பெருவழுதியையும் ஒருங்கு வைத்துப் பலராமனுடனும், கண்ண பெருமானுடனும் ஒப்பிட்டுப் பாடியுள்ளார்.
நீதி இலக்கியக் காலத்திலும் இப்பல தெய்வக் கொள்கை பின்பற்றப்பட்டு வந்துள்ளது. ஐந்திணை ஐம்பதின் ஆசிரியரான மாறன் பொறையனார் மூன்று கடவுள்களை ஒருங்கே வைத்துக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். திருமால், முருகன், சிவன் ஆகிய முப்பெரும் கடவுள்களையும் ஒரே பாடலில் பாடித் தனது சமயப் பொறையை வெளிப்படுத்தியுள்ளார். இந்நூலின் காலம் கி.பி நான்காம் நூற்றாண்டு ஆகும். அதே போல இன்னா நாற்பதின் ஆசிரியர் பூதஞ்சேந்தனாரும், இனியவை நாற்பதின் ஆசிரியர் கபிலரும் பல கடவுள்களை வாழ்த்திக் கடவுள் வாழ்த்துக்களைப் பாடியுள்ளனர். பூதஞ்சேந்தனார் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரையும், கபிலர் சிவன், பலராமன், மாயோன், முருகன் ஆகிய நால்வரையும் பாடியுள்ளனர். இந்நூல்களின் காலம் கி.பி 4, 5 ஆம் நூற்றாண்டு என்பர். மேற்குறித்தோர்களின் கடவுள் பொதுமை உணர்வானது சமயப் பூசல்கள் இல்லாத காலங்களில் உருவானது. பின்னாட்களில் ஏற்பட்ட சமய மறுமலர்ச்சியின் காரணமாகப் பூசல்கள் தோன்ற ஆரம்பித்தன. இச்சமயப் பூசல்கள் தோன்றிய காலங்களில் அல்லது அதன் பின்னாளில் வாழ்ந்த பெருந்தேவனார் மேற்கண்ட சங்கப் புலவர்களின் அடியையொட்டி மூன்று கடவுள்களை வைத்துப் பாடியுள்ளார். இதனை ஆழ்ந்து நோக்கின் சங்ககாலப் புலவர்களின் அடியையொற்றி அவர்களைப் போலவேப் பாடிச் சங்க காலப் புலவராகவே தன்னை இனம் காட்டிக்கொள்ள முயன்றார் என்று கருத இடமளிக்கிறது. கால வெள்ளோட்டத்தில் பாரதம் பாடிய பெருந்தேவனாரே எட்டுத்தொகை பாடல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடினார் என்ற கருத்து பரவலாக்கம் பெற்றது.
சிவன் வழிபாடு
சங்க கால மக்களிடையே மாயோன், சேயோன், வேந்தன், வருணன் முதலான தெய்வங்களும், கொற்றவை வழிபாடும், பிற சிறுதெய்வ பெருந்தெய்வ வழிபாடுகளும் சிறப்புற்று இருந்தது எனலாம். பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியமும்,
“மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புன லுலகமும்
வருணன் மேய பெருமண லுலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்;
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” (தொல்.பொருள்.5)
என்று நானிலத்திற்குரிய தெய்வங்களையே வரையறுத்துக் கூறியுள்ளது. சிவன் வழிபாடு சங்ககால மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெறவில்லை. “சிவன் ஒரு நிலத்துக்கேனும் உரிய தெய்வமாகக் கருதப்படாதது கவனிக்கத்தக்கது. சங்க நூல்களில் மிகச் சில இடங்களிலேயே சிவனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் ஓரிடத்திலேனும் ஒரு நிலத்திற்குரிய தெய்வமாகக் கூறப்படவில்லை” (6) என்று சு. வித்தியானந்தன் கூறியுள்ளார். சங்கப் புலவர் பெருமக்களால் அதிகமாகப் பாடப்படாத சிவபெருமானை முன்வைத்து மூன்று நூல்களுக்கு பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து பாடியிருப்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக நூற்றெழுபத்தைந்து புலவர்களால் பாடப்பட்ட நற்றிணையில் ஒருவர் கூட சிவபெருமானைப் பற்றிப் பாடவில்லை. “பத்துப்பாட்டில் நான்கு இடங்களில் சிவனைப் பற்றிய குறிப்புகளைக் காண்கின்றோம். இந்த நான்கு இடங்களிற் கூட ‘சிவன்’ என்ற பெயர் வழங்கப்படவில்லை” (7) என்பார் சு. வித்தியானந்தன். சைவ வைணவ சமயங்களின் எழுச்சிக் காலமான கி.பி ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகே சிவ வழிபாடு முக்கியத்துவம் பெற்றது. “ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் சைவ நாயன்மாரும், வைணவ ஆழ்வாரும் தொடங்கிய சமய மறுமலர்ச்சியின் பயனாகவே சிவன் சிறப்புற்ற தெய்வமாகத் திகழ்ந்தான்” (8) என்ற சு. வித்தியானந்தன் கூற்று மேற்கண்ட கூற்றை மெய்ப்பிப்பதாய் உள்ளது. சமய மறுமலர்ச்சிக் காலக்கட்டத்தை ஒட்டி வாழ்ந்த பாரதம் பாடிய பெருந்தேவனார் சங்க நூல்களில் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இல்லாதது கண்டு பாடிச் சேர்த்துள்ளார் என்று கருத இடமளிக்கிறது. இவர் இயற்றிய பாரத வெண்பாவின் காலமும் பக்தி இலக்கியக் காலத்திற்குப் பிற்பட்ட காலமான கி.பி எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டே ஆகும்.
கருத்தியல் நெறி
பாரதம் பாடிய பெருந்தேவனார் சங்கப் புலவர்களின் கருத்தியல்களைப் பின்பற்றியே கடவுள் வாழ்த்தைப் பாடியுள்ளார். வர்ணனை முறையிலும், உவமை செய்வதிலும், சங்கப் புலவர்களின் நெறியையே பின்பற்றியுள்ளார். இவருடைய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் ‘போலச் செய்தல் அல்லது பின்பற்றுதல்’ எனும் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
“மூவகை உலகும் முகிழ்த்தன முறையே” (ஐங்.கட.வாழ்.3)
என்ற வரிக்கு “பரம்பொருளிலிருந்து வானும், அதனினின்றும் காற்றும், அதனினின்றும் தீயும், அதனினின்றும் நீரும், அதனினின்றும் மண்ணும் என முறைப்படத் தோன்றின” (9) என்று தட்சணாமூர்த்தி அவர்கள், தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியரின் கருத்தமைவையொற்றி விளக்கம் தந்துள்ளார். பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடிய இவ்ஐம்பூத வர்ணிப்பு மதுரைக்காஞ்சியின் அடியொட்டியதாக உள்ளது கவனிக்கத்தக்கது.
“நீரு நிலனுந் தீயும் வளியு
மாக விசும்போ டைந்துட னியற்றிய
மழுவா ணெடியோன்” (மதுரை.கா.458-455)
என்பது மதுரைக்காஞ்சிப் பாடல். சிவன் பற்றி வர்ணித்த மாங்குடி மருதனார் ஐம்பூதங்களும் சிவபெருமானால் உருவாக்கப்பட்டது என்கிறாட். இவ்வர்ணிப்பைப் பெருந்தேவனார் அப்படியேக் கையாண்டுள்ளார் என்றே கூற வேண்டும்.
உடல் வர்ணிப்பு
சங்ககால மக்களிடையே லிங்க வழிபாடு என்பதே பிரசித்தி பெற்றதாக இருந்தது. அருவுருவ நிலையில் இருந்து உருவம் கொடுக்கும் முயற்சி பின்னாட்களில் உருவாக்கப்பட்டதாகும். சங்க காலத்தில் சிவன் பற்றிய குறிப்புக்கள் சில கிடைத்திருந்தாலும் முழு உடல் வர்ணிப்பு என்பது அறவே இல்லை. ஆனால் முருக வழிபாட்டில் முருகனின் முழுத் தோற்றமும் கலித்தொகை, திருமுருகாற்றுப்படை ஆகிய நூல்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. முழு உடல் வர்ணிப்பு இல்லாத சிவபெருமானுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் முழு உடல் வர்ணிப்பு செய்துள்ளது கவனத்திற்குரியதாக உள்ளது. குறிப்பாக,
“இலங்கு பிறை அன்ன விலங்கு வால்வை எயிற்று” (அகம்.கட.வாழ்.9)
என்று சிவனின் பல்லைப் பிறைசந்திரனோடு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். பல்லைப் பிறையோடு ஒப்பிட்டுக் கூறுவது புதுமையாக உள்ளது. இது முழு உடல் வர்ணிப்பு என்ற அடிப்படையிலேயே கையாளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே சிவனுக்குச் சங்க காலத்தில் முழு உடல் வர்ணிப்பு இல்லையாயினும், பின்னாளில் கடவுள் வாழ்த்துப் பாடிய இவர் இவ்வமைப்பை தர முயன்றுள்ளார். ஐங்குறுநூற்றின் பாடல் அடிகள் பெரும்பாலும் நான்கு அடிகளைக் கொண்டதாகவே உள்ளது. இந்நூலைத் தொகுத்த காலக்கட்டத்தில் அடியெல்லை மூன்று சிறுமை எனவும், ஆறு பெருமை எனவும் வரையறுத்தனர். இக்காலக்கட்டத்தில் வாழ்ந்த பெருந்தேவனார் மூன்று அடிகளில் கடவுள் வாழ்த்து பாடியுள்ளார். மேற்கண்ட எல்லையை மனதில் கொண்டே இப்பாடலினைப் பாடியுள்ளார் என்பதை உணர முடிகிறது.
முடிவாக...
சங்க காலத்தில் பெருந்தேவனார் என்னும் பெயரில் அமைந்த புலவரின் பெயரோடு பாரதம் பாடிய பெருந்தேவனார் தன்னையும் இனம் காட்டிக்கொள்ள முயன்றுள்ளார் அல்லது பிற்காலத்தில் வந்தவர்கள் இனம் காட்டியுள்ளனர். சங்க கால வழக்கிலும், சங்கம் மருவிய கால வழக்கிலும் இருந்த பல கடவுள்களைப் பாடும் மரபுகளை ஒட்டி ‘போலச்செய்தல்’ என்னும் அடிப்படையிலேயே கடவுள் வாழ்த்தைப் பாடிச் சேர்த்துள்ளார். தான் வாழ்ந்த காலத்தில் கடவுள் வழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்த சூழலைப் பயன்படுத்தியே கடவுள் வாழ்த்தைப் பாடினார். சிவ வழிபாடு என்பது சங்ககால மக்களிடையே அருகியே காணப்பட இவர் மூன்று நூல்களில் சிவபெருமானைப் பற்றிப் பாடியிருப்பது கவனத்துக்குரியதாகும். அதற்கு முன்னதாக லிங்க வழிபாடு என்பது பெருவழக்காக இருந்தது. கருத்தியல் நெறி சார்ந்தும், உவமை செய்வதிலும் தனக்கு முன் வாழ்ந்த சங்கப்புலவர்களின் அடியொற்றியதாகவே காணப்படுகிறது. யாப்பு முறைகளில் அடிவரையறைகளைப் பின்னால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்கேற்பவே வரையறை செய்து பாடியுள்ளார்.
அடிக்குறிப்புகள்
1. நற்றிணை மூலமும் உரையும் (உ.வே.சா பதிப்பு)., பாடலாசிரியர் வரலாறு, ப.XC
2. அருணாச்சலம். மு., தமிழ் இலக்கிய வரலாறு (15ஆம் நூற்றாண்டு), ப.85
3. தட்சிணாமூர்த்தி.அ., ஐங்குறுநூறு மூலமும் உரையும் (உரையாசிரியர்), ப.Xlv
4. அருணாச்சலம்.மு., தமிழ் இலக்கிய வரலாறு (11ஆம் நூற்றாண்டு), ப.19.
5. தட்சிணாமூர்த்தி. அ., ஐங்குறுநூறு மூலமும் உரையும் (உரையாசிரியர்), ப.Xlv
6. வித்தியானந்தன். சு., தமிழர் சால்பு, ப.85
7. மேலது, ப.94
8. மேலது, ப.94
9. தட்சிணாமூர்த்தி. அ., ஐங்குறுநூறு மூலமும் உரையும் (உரையாசிரியர்), ப.3

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.