பாலைக்கலியில் காதல் உணர்வுகள்
ஆ. மனோகரன்
முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
முன்னுரை
எட்டுத்தொகை என்று எல்லோராலும் மதிக்கப்பட்ட தொகைநூல்களுள் கலித்தொகையும் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்களுள் எந்த நூலைப் படித்தாலும் காண்பது என்னவெனில், உள்ளதை உள்ளவாறு கூறும் புலவரின் உண்மை நிலையேயாகும். அவை எல்லாவற்றிலும் அனைவராலும் ஒருங்கே புகழப்படும் பெருமையுள்ள நூல் கலித்தொகையாகும். இந்நூல் ‘கற்றறிந்தார் போற்றும் கலி ’ என்னும் சிறப்பினைப் பெற்றுள்ளது தமிழுக்குக் கிடைத்த பெரும் பேறு எனலாம். அகப்பொருளைப் பற்றிப் பாடுவதால் கலித்தொகையைக் காதலர் தம் அகத்தொகை எனவும் சிறப்பித்துக் கூறலாம். மேலும், இந்நூலைக் கலி, கலிப்பா, கலிப்பாட்டு, குறுங்கலி, கற்றறிந்தார் ஏத்தும் கலி, கல்விவலார் கண்டகலி என்றெல்லாம் கூறுவர். இக்கலித்தொகையில் கடவுள்வாழ்த்து 1 பாடலும், பாலைக்கலியில் 35 பாடல்களும், குறிஞ்சிக்கலியில் 29 பாடல்களும், மருதக்கலியில் 35 பாடல்களும், முல்லைக்கலியில் 17 பாடல்களும், நெய்தல்கலியில் 33 பாடல்களுமாக மொத்தம் 150 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் பாலைக்கலியில் சுட்டப்பெறும் பழந்தமிழரின் காதல் உணர்வுகளை இக்கட்டுரை வாயிலாக அறியலாம்.
பாலைக்கலி
பாலைத்திணை அல்லது பாலை ஒழுக்கத்தினைப் பற்றிப் பாடுவது பாலைக்கலியாகும். மேலும், கலித்தொகையில் முதல் பகுதியாக விளங்குவதும் பாலைக்கலியாகும். இதனைப் பாடியவர் சேர மரபினரான பெருங்கடுங்கோ ஆவர். இவர் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ எனவும் அழைக்கப்படுவர். இவர் பாலைத் திணையைப் பலவாறாகச் சிறப்பித்துப் பாடும் ஆற்றலுடையவர். பாலைத்திணை ஒன்றை மட்டுமே பாடியதனால் பாலைப் பாடியவர் என்று அடைமொழி பெறப்பட்டார். பிறர்கூறாத, காணாத சில உவமைகளை மிக அழகாகக் கூறும் திறனுடையவர். இவர் பாடியனவாக நற்றினையில் 10 பாடல்களும், குறுந்தொகையில் 10 பாடல்களும், அகநானூற்றில் 11 பாடல்களும், புறநானூற்றில் 1 பாடலும், கலித்தொகையிலுள்ள பாலைக்கலியில் 35 பாடல்களும் ஆக 67 பாடல்கள் இவர் பாடினதாகும்.
வைப்புமுறை
கலித்தொகையில் திணைகளைத் தொகுத்தவர் நல்லந்துவனார். இவர் வைப்பு முறையில் பாலைக்கலியை முதன்மையாக வைப்பதற்குப் பொருத்தமான காரணமாக, உரையாசிரியர் நச்சினார்க்கினியர் “முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலெனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே” என்புழிச் சொல்லாத முறைமையாற் சொல்லவும் படுமென்றலின் கலித்தொகையைப் பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தலென இம்முறையைக் கோத்தார் நல்லந்துவனார் எனலாம்” (பொ.வே.சோமசுந்தரனார், கலித்தொகை, ப.6, ஆண்டு-1970) என்பர்.
ஐவகை நிலங்களில் பாலைத்திணை ஒன்று மட்டுமே மற்ற நான்கு திணைகளிலும் பொதுவாகக் காணப்படுகிறது. பாலை எந்நிலத்திலும் ஏற்படலாம். இது வறட்சியைச் சுட்டும் குறியீடாகவும் விளங்குகிறது. இதற்கென்று தனி நிலம் இல்லாமையாலும், பிரிதல் நிகழ்ச்சி மிகுதியும் காணப்படுவதாலும், புறநிகழ்ச்சி விரிவாகச் சொல்லப்படுவதாலும் பாலையை நல்லந்துவனார் முதன்மையாக வைத்திருக்கலாம் எனக் கருத முடிகிறது.
நிலமும் காதலுணர்வுகளும்
நிலமும் அந்நிலத்தில் வாழும் மக்களின் காதல் உணர்வுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்று உறுதியாகக் கூறலாம். அந்தந்த நிலத்துக்குரிய வாழ்க்கை முறை அந்தந்த நிலத்தின் தன்மையை மற்றும் காலத்தை ஒட்டியே அமைகிறது. காதல் என்பது உயிரின் உடைமையாகும். காதலர்கள் எந்நிலத்திலும் எப்பொழுதும் காதலர்களே ஆவர். அவர்கள் அமைத்துக் கொள்ளும் சந்திப்பு முறைகள், காதல் குறிப்புகள், அடைகின்ற உணர்வின் தன்மைகள் இவைதாம் இடத்திற்கேற்றார் போல் மாறுபடுகிறது.
பாலை நிலம்
மலையும் காடும் வெப்பத்தால் தன் தன்மை இழந்து மயங்கிய பகுதியே பாலை நிலமாகின்றது. எனவே, இதனைத் தனி நிலமாகக் கருதாமல் நிலங்கள் நால்வகையாகவே கொள்ளப்படுகின்றன. குறிஞ்சியும் முல்லையும் மயங்கிய இடமே பாலையாகக் கருதப்பட்டது. இதனை,
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற்றிந்து
நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்துப்
பாலையென்ப தோர்படிவங் கொள்ளும்”
என்னும் சிலப்பதிகார அடிகள் வலியுறுத்துவனவாக அமைகின்றன.
காதல் இன்பம்
தலைவன், தலைவி ஆகிய இருவர் உறவினுடைய அன்பின் ஆழமான வெளிப்பாடு பிரிவின் போதுதான் அதிகமாக வெளிப்பட்டு நிற்கும். அவ்வகையில், பொருள் வயிற்நோக்கில் பிரிந்து செல்லும் தலைவனிடம் இணைந்து வாழ்வதே இல்லறத்தின் தனிச்சிறப்பாகும் என்பதனை,
“ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதரோ
சென்ற இளமைதரற்கு” (பா.கலி. 18 : 5-12)
இத்தகைய இனிமை தரும் இன்பத்திற்கு மேம்பட்டதாக எந்த இன்பமும் இல்லை. வறுமையின் காரணத்தால் சரியாக அரை ஆடையையே அணிந்தாலும், மனம் ஒன்றி இருவரும் இணைந்து வாழும் வாழ்க்கையே உண்மையான வாழ்க்கை. மேலும், இளமையானது சென்று விட்டால் மீண்டும் அதைப் பெற்று வாழ்வது என்பது இயலாத செயலாகும் எனத் தோழி அறிவுறுத்துகிறாள்.
உயர்வான இன்பம்
தலைவன் பொருள் ஈட்டி வரத் தலைவியைப் பிரிந்து செல்ல எண்ணுகிறான். தலைவியோ நீ செல்லும் பாலை வழியில் உனக்குத் துணையாக நானும் வருவேன் என்றும், உம்மைப் பிரிந்து வாழ்தலை விடப் பாலைநிலம் தரும் துன்பம் பெரிதல்ல என்றும், ஆதலால் உன்னுடன் வருவதே எனக்கு உயர்வான இன்பம் என்கிறாள். இதனை,
“மரையாமரல் கவரமாரி வறப்ப
வரை ஓங்கு அருஞ்சுரத்து ஆரிடைச் செல்வோர்
சுரைஅம்பு மூழ்கச் சுருங்கி புரையோர் தம்
உண்ணீர் வறப்பப்புலர் வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறா அத்தடுமிற்று அருந்துயரம்
கண்ணீர் மறைக்கும் கடுமையகா டென்றால்
என்நீர் அறியாதீர் போல இவை கூறல்?
நீன்நிர அல்ல நெடுந்த காய் எம்மையும்
அன்பு அறச்சூழாதே ஆற்றிடை நும்மொடு
துன்பம் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு?” (பா.கலி.5 : 4-6 )
என்ற பாடல் வரிகளில், மாந்தனின் உடலுக்குள் உள்ள நீர் ( குருதி ) வற்றிப் போவதால் நா வறண்டு போகும். அவ்வேளையில் தண்ணீர் கிடைக்காது தடுமாற்றமடைகின்ற நாவிற்குப் பாலை வழி நடப்போரின் கண்ணீர் விழுந்து அந்நாவின் வறட்சியைப் போக்கும் என்னும் உயரிய வருணனையைப் பாலைக்கலியில் காணலாம். தலைவி தன் உயிர்படும் துன்பத்தை விடவும் தன் உள்ளம்படும் துன்பத்தைப் பெரிதெனக் கருதியே அவனுடன் செல்லத் துடிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அன்பின் வெளிப்பாடு
தலைவியின் வருத்தமான நிலையினையும், தலைவன் தலைவி மீது கொண்ட அன்பினையும் வெளிப்படுத்தும் விதமாகவும் பாலைக்கலியில் செய்திகள் இடம் பெற்றுள்ளன. இதனை,
“எல்வினை எம்மொடுநீ வரின் யாழநின்
மெல்இயல் மேவந்த சீறடி தாமரை
அல்லி சேர் ஆய்இதழ் அரக்குத் தோய்ந்தவை போல
கல்உறின் அவ்வடிகறுக்குந அல்லவோ?” (பா.கலி.13 : 10-13 )
தலைவன் பொருள் தேடச் செல்லும் போது தலைவியும் உடன் வருவதாகக் கூறுகிறாள். அதற்குத் தலைவன் தாமரைப்பூவின் அல்லியைப் போன்ற அழகிய இதழ்களை உடைய உன் பாதங்களைக் கற்கள் தீண்டும் போது இங்குலிகம் போன்று கறுத்துவிடும் என்று அன்பின் மிகுதியினால் தலைவன் இரக்கப்படுகிறான்.
அஃறிணை உயிர்களின் காதலுணர்வு
நெருப்பு போன்ற வெம்மையால் அடி பொறுக்கும் அளவின்றிக் காடுகள் கடியனவாய் இருக்கின்றன. அத்தகைய காட்டிடத்தே, துடி போன்ற அடியுடையயானைக் கன்றுகள் தம் தந்தையும் தாயும் உண்ண வேண்டுமென்று கருதி நிற்கின்றன. ஆனால் களிறு தான் உண்ணாது தன் பிடியை முதலில் உண்ணச் செய்து பின்பு தான் உண்ணும் எனச் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
“துடியடிக்கயந்தலை கலங்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின்உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே” (பா.கலி.10: 8-9)
அ.:றிணை உயிர்களுக்கும் காதல் உணர்வுகள் இருப்பதை இப்பாடலடிகளால் நன்கு அறிய முடிகிறது.
பிணையைக் கொண்டு அன்பை வெளிப்படுத்துதல்
தலைவன் பிரிய நேரும் சூழலில் தலைவி வருந்துகிறாள். தலைவி தன்னையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என தலைவனிடம் கூறும் போது அதற்கான காரணத்தையும் கூறுகிறாள்.
“அணைஅரும் வெம்மைய காடு? எனக் கூறுவீர்!
கணைகழி கல்லாதகல் பிறங்கு ஆர்இடை
பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர்ப்
பிணையும் காணிரோ? பிரியுமோ, அவையே?” (பா.கலி.20: 20-23)
நீங்கள் செல்லும் அவ்விடத்திலுள்ள காடு அரிய வெம்மை உடையது எனக் கூறினீர். எய்த கணைகள் மேற்செல்லாதவாறு பெரிய கற்களின் நெருக்கத்தை உடைய அரிய வழி என்று கூறுனீர். அந்த வழியில் கலைமானின் பின்னால் பிணைமான் பிரியாமல் திரிவதைக் காணவில்லையோ? ஆதலின், எம்மையும் உடன் அழைத்துச் செல்வீராக என்று தலைவி கூறுகிறாள்.
பிரிவுச் சூழலைத் தவிர்த்தல்
கலித்தொகையில் பாலைக்கலியில் தலைவன் பிரிந்து செல்லும் சூழலைத் தலைவிக்காகத் தவிர்த்து விடுவதைக் காணமுடிகிறது. பாலைக்கலியில் பொருள் தேடுவதற்காகத் தலைவன் பிரிந்து சென்றால் அதனைத் தாங்காமல் தலைவி இறந்து விடுவாளோ என்கிற அச்சத்தினால் தலைவி மீது இரக்கம் காட்டிப் பயணத்தைத் தவிர்த்து விடுகிறான். இதனை,
“சென்னவையரவத்துமிணைவள் நீநீப்பிற
தன்நலம் கடைகொளப்படுதலின் - மற்றுஇவள்
இன்உயிர் தருதலும் ஆற்றமோ
முன்னிய தோத்து முயன்ற செய்பொருளே” (பா.கலி.7: 18-21)
தலைவியின் உயிர் மீது கொண்ட இரக்கத்தின் காரணமாகவும், அன்பின் காரணமாகவும், மனிதனின் தனித்தன்மையை அடையாளப்படுத்தும் விதமாகவும் தலைவன் தலைவியை விட்டுப் பிரியவில்லை. இப்பாடலை மனிதநேயம் மிக்க பாடலாகவும் கூறலாம்.
நிறைவுரை
கலித்தொகையில் பாலைக்கலி முதன்மை பெறுவதற்குப் பாலைக்கலிப் பாடல்களின் கருத்து வளர்ச்சியே காரணமாக அமைகின்றது. பாலைக்கலி முழுவதும் துன்பமன்று. ‘பிரிவானோ’ என்று அஞ்சும்நிலை கொண்டது. பெரும்பாலும் அஞ்சும் போதுதான் அன்பின் திறன் நன்கு புலப்படும். எந்தப் புலவரும் துன்பத்தைப் பற்றிச் சொல்லும் போதுதான், தான் மனிதத் தத்துவத்தை அறிந்துள்ள முறையை நன்கு உணர்த்த முடியும். எனவேதான் பாலை கலிப்பாடல்கள் மற்ற கலிப்பாடல்களை விடச் சுவையும், பயனும் நிரம்பியவையாக நிற்கின்றன. வாழ்வியல் உண்மைகளையும், அறநெறிக் கருத்துக்களையும், காதல் உணர்வுகளையும் ஆழமாகப் பெற்றுக் காட்சியளிக்கின்றன. பிரிவுத் துன்பத்தையும் இனிய இலக்கியமாகச் சுவைக்க முடியும் என்பதற்குப் பாலைக்கலியே தகுந்த சான்றாக அமைகின்றது.
துணை நின்ற நூல்கள்
1. பொ. வே. சோமசுந்தரனார், கலித்தொகை, கழகவெளியீடு, சென்னை, 1970.
2. முனைவர்அ, விசுவநாதன், கலித்தொகை (மூலமும்உரையும்), NCBH, சென்னை.
3. முனைவர் மணிமாறன் சுப்பிரமணியம், கலித்தொகை, கலைஞன் பதிப்பகம், சென்னை.
4. இரா.ஜெகதீசன், கலித்தொகை ஆய்வுக்கோவை, விழிச்சுடர் பதிப்பகம், சென்னை.
5. தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழிலக்கிய வரலாறு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.