சங்க இலக்கியங்களில் வெறியாட்டுக் குறிப்புகள்
கார்த்திகேஸ் பொன்னையா,
கிங்ஸ்டன் பால் தம்புராஜ்,
முனீஸ்வரன் குமார்
சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா.
ஆய்வுச் சுருக்கம்
தமிழர்களின் தொன்மைக் கலாச்சாரங்களில் வெறியாட்டுக் கலாச்சாரம் குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கிய அகப்பாடல்கள் பலவற்றில் வெறியாட்டுக் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. களவு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த தலைவி தலைவனின் பிரிவைத் தாங்காத காரணத்தால் உள்ளத்தாலும் உடலாலும் வேறுபட்டு மெலிவதனால், அவளுக்கு அணங்கு போன்ற தீய சக்தியினால் பாதிப்புண்டானதாக அவளது தாய் நினைத்து மகளை அத்துன்பத்திலிருந்து விடுவிக்க வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்வாள். வெறியாட்டு வேலனால் நடத்தப்படும் ஒரு வகை அமைதிபடுத்துதல் வழிப்பாடாகும். முருகன் மக்கள் குறைகளைத் தீர்க்க வேலன் மீது எழுந்தருளி அவர்களுக்கு நன்மை பயப்பவனாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. வெறியாட்டுக் களம், அதன் சடங்கு போன்றவையும் இப்பாடல்களில் அதிகம் கூறப்பட்டுள்ளன. அதேவேளையில், வெறியாட்டு நடத்தும் வேலனின் போலித்தன்மைகளைக் கடிந்தும் சங்க இலக்கியப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
முன்னுரை
சங்க இலக்கியக் காலம் தமிழர் பண்பாட்டு வரலாற்றில் மிகவும் தொன்மைப் பொருந்திய காலமாக விளங்குகிறது. பல பரிணாமங்களைக் கடந்து வந்த தமிழர்களின் வரலாறு சங்கக் காலப் பகுதியில்தான் இலக்கியமாக உருவெடுத்துள்ளது. அக்காலத் தமிழர்களின் பண்பாட்டு நடைமுறைகளைத் துல்லியமாக விவரிக்கும் காலக் கண்ணாடியாகச் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. அதன் அடிப்படையில் சங்கத் தமிழர்களின் வாழ்வியலைச் சங்க நூல்களிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.
சங்கக் காலம் கி.மு 500 முதல் கி.பி 100 வரை என டாக்டர் மு.வரதராசன் குறிக்கின்றார் (வரதராசன், 2001) . இந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை அறிய இலக்கியங்கள், கல்வெட்டுகள், அயல் நாட்டார் குறிப்புகள், அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த அரும் பொருட்கள், காசுகள் போன்ற சான்றாதாரங்களில் இருந்து தெளிவாக அறிய முடியும். அவற்றுள் சங்க இலக்கியங்களான எட்டுத் தொகையும் பத்துப் பாட்டுமே அன்றைய தமிழர்களின் வாழ்க்கை முறைகளை அறிய முக்கியப் பங்காற்றுகின்றன (இறையரசன், 1993) .
தமிழர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்துள்ளனர். இருந்த போதிலும் அவர்கள் இறை நம்பிக்கையிலிருந்து சற்றும் பிறழாதவர்களாகவே வாழ்ந்துள்ளனர். சங்கப் பாடல்களில் கூறப்படும் இறை சார்ந்த பாடல்களே இதற்குச் சான்று பகர்கின்றனர் (தமிழண்ணல், 2009) . திருமாலும் முருகனும் சங்கப் பாடல்களில் அதிகம் போற்றப்படுகின்றனர். “ஆயர் வாக்கில் தெய்வமால் காட்டிற்று” என்று கலித்தொகையும் (கலி:107:32) “மறுபிறப்பறுக்கும் மாசில் சேவடி” என்று பரிபாடலும் (பரி:13:79) திருமால் குறித்துப் பாடுகிறது. இதனிடையே சங்க இலக்கியங்கலில் முருகனைப் பற்றிய பாடல்களே அதிகம் இடம்பெற்றுத் தனிக் கவனத்தை ஈர்க்கின்றன. குறிஞ்சிப் பாட்டுப் “பிறங்கு மலை மீமிசைச் கடவுள் (குறிஞ்சி:208-209) என்றும், அகநானூறு “காடு கெழு நெடுவேள் (அகம்:5) என்றும் திருமுருகாற்றுப்படை “மார்பில் கடம்பம் பூமாலையும் தலையில் காந்தளும் சூடுவான்” என்றும் முருகன் குறித்துப் பாடுகிறது. சங்கக் கால மக்கள் மத்தியில் முருகச் சிந்தனை நிரம்பி இருந்ததற்கு இதுப்போன்ற பாடல்களே ஆதாரமாகத் திகழ்கின்றன.
குறிஞ்சிக்கு உரிய தெய்வம் முருகன். ‘குறிஞ்சி’ என்பது மலையும் மலைசார்ந்த இடமும். அங்கே வாழும் மக்கள் கானவர்கள். அவர்களுடைய குல தெய்வமாக முருகன் விளங்குகிறான் (புலியூர்க் கேசிகன், 2013) . முருக வழிப்பாட்டில் அவற்றோடு தொடர்புடைய சடங்குகளும் நம்பிக்கைகளும் மிக முக்கியமானவை. அவற்றுள் வெறியாட்டு என்பது முருக வழிப்பாட்டோடு பிரிக்க முடியாத ஒரு முக்கியச் சடங்காகிறது. வெறியாட்டு என்பது வெறிக்கொண்டு ஆடுதல் என்று பொது விளக்கம் காண்கிறது. இது சங்க இலக்கியக் கூறான அகத்திணை மரபில் இடம்பெறுகிறது. வேலன் எனும் தொழில் முறை கலைஞனால் பெரும்பாலான வெறியாட்டுகள் நிகழ்ந்துள்ளன. மக்கள் முருகனை வேண்டி நடத்தும் எல்லா வெறியாடு களங்களிலும், வெறியாடும் வேலன்மீது அருள் கொண்டு வந்து எழுந்தருளி ஆடியவனாக அருள்பவன் முருகனே என்ற அசைக்க முடியாத நம்பிக்கை சங்க கால மக்களுக்கு உண்டு (புலியூர்க் கேசிகன், 2013) . அவன் மக்கள் குறைகளைத் தீர்க்க வேலன் மீது எழுந்தருளி அவர்களுக்கு நன்மை பயப்பவனாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ‘முருகனை அழைத்து அவன் புகழைப் பாடிக்கொண்டு வரும்போதே அவன் ஒரு வகையான மருளுக்குள்ளாகிறான். முருகு அவன் தாங்கி ஆவேசித்ததாகக் கருதப்படுகின்றது. அந்நிலையில் அவன் வேலைக் கையில் தாங்கி மருளோடு ஆடுகின்றான். இஃது ஓர் சாந்தி வழிபாடாகத் தோன்றுகிறது,’ எனப் பேராசிரியர் பாண்டுரங்கன் தனது கட்டுரையில் குறிப்பிடுகின்றார் (பாண்டுரங்கன், 2011) .
வெறியாட்டுக்கான காரணங்கள்
களவு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த தலைவி, தலைவன் பிரிவைத் தாங்காத காரணத்தால் உள்ளத்தாலும் உடலாலும் வேறுபட்டு மெலிவது சங்க பாடல்களில் அதிகமாகவே குறிக்கப்பட்டுள்ளது. தன் மகள் அணங்கு போன்ற தீய சக்தியினால் பாதிக்கப்பட்டதாக நினைத்து அத்தாய் அச்சக்திகளிடமிருந்து மகளை விடுவிக்க ஆவன செய்ய வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்வாள். மகள் காதல் வயப்பட்டதாலும் இன்னும் சில காரணங்களினாலும் உடல் மெலிந்து காணப்படுகிறாள். ஆனால், தலைவியின் தாயோ அவளுக்குத் தீய சக்திகளினால் துன்பம் ஏற்பட்டுள்ளதாக முடிவு செய்கிறாள். அதேவேளையில், மகளின் உடல் மெலிவு தெய்வக் குற்றத்தால் உண்டாயிருக்கும் எனவும் அவள் கருதுகிறாள் (தமிழண்ணல், 2009) . இன்றும் தெய்வக் குற்றம் ஏற்பட்டுவிடும் என்ற ஐய உணர்வு நம்மிடத்தே உள்ளதை இங்ஙனம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, அதன் விளைவாக வேலனை அழைத்து வெறியாட்டு நடத்துவதே மகளின் நோய்க்கு மருந்தாக அமையும் என்ற நோக்கில் அக்காலத்தில் பெரும்பாலான வெறியாட்டுக்கள் நடத்தப்பட்டுள்ளன. வெறியாட்டுகளை முன் நின்று நடத்தி முடிப்பவன் வேலன் என்று அழைக்கப்பட்டான். வேலன் முருக வழிபாடான வெறியை எவ்வாறு நிகழ்த்த வேண்டும் என்று நன்கு அறிந்தவன்.
வேலன் முருகனை உபாசனை செய்பவன். தலைவியின் துயருக்குக் காரணம் முருகனே என்று கூறி நம்பச் செய்து அவனுக்குப் பூசை செய்து வேண்டினாலன்றி நோய் தீராது என்று கூறுவதையே வழக்கமாகக் கொண்டவன். தலைவியின் அன்னையின் அறியாமையை அவன் நன்கு பயன்படுத்திக் கொள்பவன்.
"இஃதுஎவன் கொல்லோ தோழி! மெய் பரந்து
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையின் தான் வருத்துறீஇ நம் வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு வெறி என
வேலன் உரைக்கும் என்ப: ஆகலின்..." (நற்றிணை : 273)
என்று நற்றிணையில், ‘தோழி! இஃது ஏன் நடக்கிறது? அவன் என்னை மணந்துகொள்ளவில்லையே என்று நான் வருந்துகிறேன். என் வருத்தத்தை என்னிடம் கேட்டு அறிந்துகொள்ளாத என் தாய் என் வருத்தத்தைக் கண்டு தான் துன்புற்று, வேலனை வினவ, அவன் “வெறி” என்று கூறுகிறான். இஃது ஏன் நடக்கிறது?’ எனப் பொருள்பட பாடப்பட்டுள்ளது. ‘வேலன் தலைவிக்குத் தெய்வக் குற்றமே அவளது மாறுதலுக்குக் காரணமாக உள்ளது’ எனப் பதில் கூறுவதாக இப்பாடல் பொருள் குறிக்கிறது. மணமாகாத கன்னிப் பெண்களைச் சூர், அணங்கு போன்ற துர்சக்திகள் தீண்டித் துன்புறுத்துவதாகப் பழந்தமிழ் மக்கள் நம்பிய பொழுதிலும் அப்பெண்களை முருகனும் தீண்டி அணங்குறுத்துவான் என்று நம்பிக்கை வைத்துள்ளது இங்ஙனம் குறிக்கத்தக்கது.
தொடர்ந்து,
"சூர் உறை வெற்பன் மார்புறத் தணிதல்
அறிந்தனள் அல்லல் அன்னை : வார்கோல்
செறிந்து இலங்கு எல்வளை நெகிழ்ந்தமை - நோக்கிக்
கையுறு நெஞ்சினள் வினவலில் முதுவாய்ப்
பொய்வல் பெண்டிர் பிரப்பு உணவு இரீஇ
முருகன் ஆர் அணங்கு என்றலின்" (அகநானூறு : 98 : 5-10)
என்ற அகநானூற்றுப் பாடலும் வெறியாடலுக்கான காரணத்தை விளக்குகிறது. ‘எனக்கு நேர்ந்துள்ள இந்தத் துன்பம் அவனது மார்பினைப் பெற்றால் அன்றித் தணியாது. இஃது அன்னைக்குத் தெரியவில்லை. அவளோ வெறியாட்டு நடத்த முனைகிறாள். நீண்ட கோலை (வார்கோல்) வளைத்துக் கட்டிச் செய்து, என் தோளிலே செறிவாகக் கிடந்த வளையல் நெகிழ்ந்து நழுவுவதைத் தாய் பார்த்துவிட்டாள். என்ன செய்வதென்று தெரியாமல், குறி சொல்லும் முதுவாய்ப் பெண்களைக் கேட்டாள். அவர்கள் தன் கையில் வைத்திருக்கும் பிரம்பால் என்னைத் தட்டிப் பார்த்து, “முருகன் பிடித்து ஆட்டுகிறான்” என்றனர்’. இவ்வாறாக, மகளின் நலனைக் காக்கும் பொருட்டே தாய் வெறியாட்டுக்கு ஆயத்தம் செய்வதாக இப்பாடல் குறிக்கின்றன.
தலைவியைப் பூரணமாக இயல்பு நிலைக்கு இட்டுச் செல்வதையே வெறியாட்டின் முக்கிய நோக்காகத் திகழ்ந்திருந்தது. வெறியாட்டின் மூலம், முருகன் பெண்ணைப் பிடித்திருக்கும் நோயை விலக செய்வான் என்ற பெரிய நம்பிக்கை சங்கக் கால மக்களிடம் மிகுதியாக இருந்தது. தன் மகள் முருகனால் தீண்டப்பட்டாள் என்று முடிவு செய்து முருகனுக்குச் சாந்தி செய்யும் எண்ணத்தோடே வேலன் அழைக்கப்படுகிறான். அவ்வகையில் இது வேலனுக்கான சாந்தி பூஜையாகவே திகழ்கிறது.
சங்கப் பாடல்களில் சுட்டுகின்ற முருகன் வழிப்பாட்டின் பெரும் பகுதி வெறியாடல் நிகழ்ச்சியாகவே அமைந்ததுள்ளது.
"களவு அலராயினும் காமம் மெய்ப்படுப்பினும்
அளவு மிகத் தோன்றினும் தலைப்பெய்து காணினும்
கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும்
ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்" (தொல். களவியல் சூத்திரம் 117)
என்று தொல்காப்பியமும் வெறியாட்டுக்கான பின்புலத்தைத் கூறுகிறது. தலைவியின் களவு காதலினால் ஏற்படும் உடல் வேறுபாடுகளை முருகனால் வந்தது என்று குறி கூறுபவள் மூலமாகவும் வேலன் மூலமாகவும் அறிந்து வெறியாட்டை மேற்கொள்ளுவர் என்பதைத் தொல்காப்பியம் தெளிவாகக் கூறுகின்றது.
வெறியாட்டுக் களமும் சடங்கும்
தலைவியின் நோய்க்கு முருகனே காரணம் என்ற எண்ணத்துடன் தாய் வெறியாட்டு நிகழ்த்துவதற்குத் தயாராகும் பூர்வாங்க நிகழ்வு பெரிய கூறல் எனப்படும். அதாவது, இது தெய்வத்தால் வந்தது எனக் கூறுதல் ஆகும் (பாண்டுரங்கன், 2011). அதனைத் தொடர்ந்து, வெறியாட்டின் அடுத்த நிகழ்வாகக் களத்தைத் தயார் செய்தல் எனும் தயார் நிலை நிகழ்வு நடைபெறும். பெரும்பாலும், புது மணலே வெறியாடுவதற்குரிய களமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சில பாடல்களில் வெண்மணல் பரவ பெற்ற வீட்டு முற்றமும் வெறியயர் களமாக விளங்கியுள்ளதாகப் பாடப்பட்டுள்ளது.
வெறியாட்டுக் களத்தை வேலனே அமைக்கின்றான்.
"எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் கள்ந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியந்துறை
நேரிறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோ டுற்ற சூளே" (குறுந்தொகை : 53)
எனும் குறுந்தொகை பாடலில் வேலனின் வெறியாட்டுக் களம் குறிக்கப்படுகிறது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள பாடலில் பரந்து தங்கிய வெள்ளை மணற்பரப்பில் வேலனால் அமைக்கப்பட்ட வெறியாட்டெடுக்கும் இடந்தோறும் செந்நெல்லில் வெள்ளை பொரி சிதறினாற் போன்ற தோற்றத்தைத் தரும் மணல் மேடுகள் பொருந்திய எம்முடைய ஊரில் தலைவன் தனக்குச் செய்து கொடுத்த சத்தியம் துன்பத்தைத் தருவதாகத் தலைவி பாடுகிறாள். வேலனால் வெறியாட்டுக் களம் அமைக்கப்படுவதை இப்பாடல் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
வெறியாடலுக்கு என அமைக்கப்பட்ட களத்தில் வேலனுக்கு மாலை அணிவித்துப் பல இசை கருவிகளை ஒலிக்குமாறு பாடி பலி கொடுக்கப்படும். பலியிட்ட குருதியைத் தினைமாவில் கலந்து வைத்து முருகனை அங்கு வரவழைப்பர். இச்சடங்கு நள்ளிரவில் நடைப்பெறும். தினை, அரிசி முதலியவற்றைப் பல பகுதிகளாகக் கூடையிலோ முறத்திலோ பலியாக இட்டு வைக்கப்பட்டிருந்தது.
"மாண் தலைக் கொடியொடு மண்ணி அமைவர
நெய்யோடு ஐயவி அப்பி, ஐது உரைத்து
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டு உடன் உடீஇச்
செந்நூல் யாத்து, வெண்பொரி சிதறி,
மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெண் அரிசி
சில்பலிச் செய்து, பல் பிரப்பு இரீஇ
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்து
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணைஅற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பில் நல்நகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்து குறிஞ்சி பாடி
இமிழ்இசை அருவியொடு இன்இயம் கறங்க
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினைப் பரப்பி குறமகள்
முருகுஇயம் நிறுத்து முரணினர் உட்க
முருகுஆற்றுப்படுத்த உருகெழு வியல்நகர்... " (திருமுருகாற்றுப்படை : பழமுதிர்ச்சோலை : 227-244)
என்று திருமுருகாற்றுப்படை வெறியாட்டுக்கான தயார் நிலையைக் குறிக்கின்றது. “சிறப்பான முதன்மை பொருந்திய கோழிக் கொடியைப் பொருத்தமாக நிறுத்தி, நெய்யுடன் வெண்மையான சிறுகடுகினைக் கலந்து கோயிலின் வாசலில் அப்பி, முருகனின் பெயரை மென்மையாக உரைத்து, இரு கைகளையும் கூப்பி வணங்கி, வளம்பொருந்திய செழுமையான மலர்களைத் தூவி, வெவ்வேறு நிறமுடைய இரு ஆடைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அணிந்து, கையில் சிவப்பு நூல் காப்பு நூலாகக் கட்டப்பெற்று, வெண்மையான பொரியைத் தூவி, வலிமை வாய்ந்த ஆட்டுக் கிடாயின் இரத்தம் கலந்த தூய வெண்மையான பிரப்பு அரிசியைப் பலி அமுதாகப் பல இடங்களில் வைத்து, சிறு பசுமஞ்சளையும் நல்ல நறுமணப் பொருள்களையும் பல இடங்களில் தூவித் தெளித்து, செவ்வலரி (oleander / nerium oduram) மலரால் ஆகிய மாலையைச் சீராக நறுக்கி கோயிலைச் சுற்றித் தொங்கவிட்டு, செறிவான மலைப் பக்கங்களிலுள்ள ஊர்வாசிகள் அனைவரும் முருகனை வாழ்த்திப் பாடுகின்றனர்; மணப்புகையை எடுத்து ஆராதனை செய்கின்றனர்; குறிஞ்சிப் பண்ணில் இயற்றப் பெற்ற பாடல்களைப் பாடுகின்றனர்; மலைமீதிருந்து விழும் அருவியின் ஓசைக்கேற்ப இசைக் கருவிகள் ஒலித்திடுகின்றனர்; பல்வேறு வடிவமுடைய அழகான பூக்களைத் தூவுகின்றனர்; காண்பவர்களுக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் இரத்ததோடு கலந்த தினை அரிசியைப் பரப்பி வைத்துள்ளனர்; முருகனுக்கு விருப்பமான குறிஞ்சி யாழ், துடி, தொண்டகம், சிறுபறை போன்ற இசைக் கருவிகளைக் குறமகள் இயக்குகிறாள். மாறுபட்ட உள்ளம் உடையவர்களும் அஞ்சுமாறு அந்தச் சூழ்நிலை அமைகிறது; இவ்வாறு முருகன்பால் வழிப்படுத்துகின்ற அழகு பொருந்திய அகன்ற ஊரில் கோயில் வழிபாடு அமைகிறது. வேலன் ஈச்ச இலையால் வடிகட்டிய கள்ளைக் குடிப்பான்.” இவ்வாறு முருகனோடு தொடர்புடைய வெறியாட்டுப் பற்றி நக்கீரர் குறிக்கின்றார்.
முருகன் துதி
வெறியாட்டின்போது முருகனை வாழ்த்தியும் போற்றியும் வழிப்பாடு நிகழ்த்துவதில் அன்று கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
"ஐது அமை பாணி இரீஇ கைபெயரா
செல்வன் பெரும் பெயர் ஏத்தி" (அகநானூறு : 98 : 17-18)
என்ற பாடல் வரிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இன்றைய நிலையிலும் இதுபோன்ற வாழ்த்துப் பாடல்களையும் அழைத்தல் பாடல்களையும் நம்மால் காணமுடிகிறது. காவடி எடுப்பவர்களிடத்தில் மருள் வேண்டி அழைத்தல் பாடல்களைத் தைப்பூசத் திருவிழாவின் போது கண்கூடாகக் காண முடியும். அந்த அழைப்புக்கு, இசைக்கு ஓர் ஈர்ப்பு இருந்து அஃது அங்குள்ள சூழலை மாறுபட காரணமாகும் என்ற சிந்தனை பண்டை நாட்களில் இருந்தே உருவெடுத்துள்ளது இங்ஙனம் அறியதக்கது.
மருந்தாகா வெறியாட்டு
சங்க காலத்தில் வெறியாட்டுச் சடங்கு தலைவி உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு முருகனே காரணம் என எண்ணும் தாயின் காரணமாக நடத்தப்பட்டாலும், அம்மாற்றங்கள் காதல் நோயால் ஆனதே என்பதைத் தலைவியும் தோழியும் தலைவனும் நன்குணர்ந்திருந்தனர். இருந்த போதிலும் அதனை வெளியே சொல்ல முடியா நிலையில் அவர்கள் இருந்துள்ளனர்.
"மறிக்குர லறுத்துத் தினைப் பிரப் பிரீ இச்
செல்லாற்றுக் கவலைப் பல்லியங் கறங்கந்
தோற்றமல்லது நோய்க்கு மருந்தாக
வேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
பேஎய்க் கொளீ இய ளிவனெனப் படுதல்
நோதக் கன்றே தோழி மால் வரை
மழை விளை யாடு நாடனைப்
பிழையே மாகிய நாமிதற் படவே "
(குறுந்தொகை : 263)
எனும் குறுந்தொகை பாடல் தலைவியின் நோய்க்கான உண்மைத் தன்மையை உணராமல் தாய், இச்சடங்கினையும், வெறியாட்டையும் நிகழ்த்த முற்படுவதைத் தலைவியே விரும்பவில்லை என்று கூறுகிறது. “தோழி, பெரிய மலையினிடத்து மேகம் விளையாடுகின்ற நாட்டுத் தலைவனுடன் பிழையாமல் களவொழுக்கத்தில் நான் ஈடுபடுகிறேன். என் காமநோய்க்கு மருந்தாகக்கூடியவர் அவர் மாத்திரமே. ஆனால், என் தாயோ, ஆட்டின் கழுத்தை அறுத்து, தினை உடைய பிரம்பை வைத்து, ஓடுகின்ற ஆற்றின் கரையிலே பல்வகையான இசைக்கருவிகளை ஒலிக்க வைத்துத் தமது காம நோய்க்குப் பரிகாரம் ஆகாத வேறு பெருந்தெய்வங்களை வைத்து ‘இவள் பேயால் பீடிக்கப்பட்டுள்ளாள்’ என்று வெறியாட்டு நிகழ்த்துவது வருந்தச் செய்கிறது,” எனத் தலைவி தோழியிடம் வெறியாட்டுச் செய்திகளைக் கூறுகிறாள்.
நற்றிணையிலும் அவ்வாறு ஒரு தாய், தன் மகளின் மெலிவிற்கு முருகனே காரணம் என அறியாமையினால் வேலனை அழைத்து வெறியாடல் நடத்தினாள். வேலனும் வந்து களம் அமைத்துத் தொடங்கினான். அந்நேரம் அவனைக் கண்ட தோழி உண்மையுரைத்து அறத்தோடு நிற்றல் வேண்டி, முருகனே! என் தலைவியின் மெலிவு தலைவனால் வந்ததே ஒழிய நின்னால் அல்ல. இவ்வுண்மையை நீ அறிவாய். உண்மை இவ்வாறிருக்க வேலன் அழைத்தான் என்று நீ வருவாயானால் கடவுளாயினும் அறியாமையுடையவனே என்றாள். அப்பாடல்,
"மார்புதர வந்த படர்மலி அருநோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே"
(நற்றிணை : 34)
கடிதலுக்கு ஆளாகும் வெறியாட்டு
வெறியாட்டு, நோய் தீர்க்க பயன்படும் மருந்தாக விளங்கிய சூழலில், அது பயனற்ற ஒன்று என்ற எண்ணமும் அன்று உருவாகியிருந்தது என்பதும் சங்கப் பாடல்களில் காண முடிகின்றது.
"பெய்ம் மணல் வரைப்பிற் கழங்குபடுத்து அன்னைக்கு
முருகென மொழியும் வேலன்
வாழிய இலங்கும் அருவிச்
சூர்மலை நாடனை அறியா தேனே " (ஐங்குறுநூறு : 248)
என்று ஐங்குறுநூறு குறிக்கிறது. செம்மறியாட்டுக்காகவும் கள்ளுக்காகவும் மாத்திரமே வேலன் வெறியாடுகிறான் என்று முதுப்பெண்டிர் வேலனைப் பழிக்கின்றனர். தலைவியின் தாயின் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்பவனாகவே பல இடங்களில் வேலன் குறிப்பிடப்படுகின்றான். உண்மையை உணர்ந்த போதிலும் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இறை பெயரால் பொய்மை செய்யும் வேலனை அச்செயலை உணர்ந்தவர்கள் தூற்றுகின்றனர். அதிலும் தூற்றுபவர்கள் முதுப்பெண்டிர் எனக் குறிக்கப்படுதல் மூலம் அவர்கள் வாழ்க்கை அனுபவம் பெற்றவர்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இளம் பெண்ணுக்கு உண்டான நோய் இன்னவென்ற அறியும் ஆற்றல் கொண்டவர்கள் இவர்கள் வேலனைப் பழிப்பது முறையே. தாயானவள் தன் மகளின் நோய் என்பதால் ஆழச் சிந்திக்கும் தன்மையிலிருந்து விலகி மன ஓட்டத்திற்கு ஆட்பட்டுவிட்டமையால் அவளால் மற்ற முதுப்பெண்டிர்கள் போல யோசிக்க முடியவில்லை எனத் தோன்றுகிறது.
முடிவுரை
கோயில்களிலே இன்று முருகனுக்கு எவரும் உயிர்பலியிட்டுப் போற்றுவதில்லை. இத்தகு பலியிடாத மரபு பிற்காலத்தில்தான் வந்திருக்கின்றது. பண்டைய நாளிலே முருகனுக்கும் பிற தெய்வங்களுக்கு இடுவதுபோல பலியிட்டே போற்றி வந்தனர் என்பதனை நாம் சங்க இலக்கியப் பாடல்களில் இருந்து காணமுடிகின்றது. இன்று பலியிடும் மரபு சிறு தெய்வங்களுக்காகச் செய்யப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் முருகனோடு தொடர்புடைய வெறியாட்டு இன்றும் உருமாறி நடந்துதான் வருகிறது. முருகனுக்கே உரிய தைப்பூச விழாவில் பக்தர்கள் சாமியாடுவது தமிழர்களின் இரத்தத்தில் பதிந்த வெறியாட்டின் மாற்று உருவம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
மேற்கோள் நூல்கள்
1. இறையரசன். பா, தமிழர் நாகரிக வரலாறு, பூம்புகார் பதிப்பகம், சென்னை. (1993)
2. குழந்தை, சங்க இலக்கியச் செல்வம், சாரதா பதிப்பகம், சென்னை. (2008)
3. சிங்காரவேலு சச்சிதானந்தம், திருமுருகாற்றுப்படை, மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர். (2011)
4. செல்லப்பன். சு, இலக்கியச் சிந்தனைகள், பாரதி பதிப்பகம், சென்னை. (2004)
5. தமிழண்ணல், சங்க மரபு, சிந்தாமணிப் பதிப்பகம், மதுரை. (2009)
6. தனஞ்செயன். ஆ, சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை. (2010)
7. பாண்டுரங்கன். அ, சங்க இலக்கியங்களில் வெறியாடல், (இணையக் கட்டுரை : www.keetru.com ) (2011)
8. புலியூர் கேசிகன், திருமுருகாற்றுப்படை, சாரதா பதிப்பகம், சென்னை. (2013)
9. மாதையன். பெ, சங்க இலக்கியத்தில் குடும்பம். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை. (2010)
10. வரதராசன். மு, தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அக்காதெமி, புதுதில்லி. (2001).

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.