முதுமொழிகாஞ்சி காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்
சு. சௌமியா
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
பல்கலைக் கழகக் கல்லூரி, பாளையம், திருவனந்தபுரம்- 34
முன்னுரை
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று முதுமொழிகாஞ்சி என்னும் நீதி நூல் ஆகும். இந்நூல் ஒற்றை அடியினால் உலக நீதிகளை எடுத்துரைக்கின்றது. இதன் யாப்பினைக் குறள் வெண்செந்துறை சார்ந்தது என்பர் இலக்கண ஆசிரியர்கள். இந்நூலில் அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருளும் விரவிக் காணப்படுகின்றன.
முதுமொழி என்றால் பழமொழி என்று பொருள். காஞ்சி என்றால் அது திணையையும் குறிக்கலாம். அது மகளிர் அணியும் ஒரு வகை அணியையும் குறிக்கலாம். காஞ்சித்திணை தொல்காப்பியர் காலத்தில் நிலையாமை பற்றி வந்த புறத்திணையாகும். தொல்காப்பியத்தின் பிற்கால எல்லையில் தோன்றிய இந்நூலும் நிலையாமையை உரைப்பதாகக் கொண்டு அறம் உரைத்துள்ளது. காஞ்சி என்றால் பெண்கள் இடையில் அணியும் ஒரு வகை அணிகலனாகும். பல மணிகள் கோர்த்து அவ்வணிகலன் செய்யப்படுவதைப் போல இந்நூலும் நூறுமணிகளைக் கோர்த்துப் பாடப்பட்டதாகும். இதனை இயற்றியவர் மதுரைக் கூடலூர்க்கிழார் என்பவராவார்.
வாழ்வியல் அறங்களை உரைக்கும் முதுமொழிக்காஞ்சி எளிமையான சொற்களால் உயர்வான இரு அறங்களை ஒற்றை அடியில் காட்டி ஒரு அறத்தை விட மற்ற அறம் மேம்பட்டது என்ற அமைப்பில் இருப்பதுடன் அறங்களின் பெருமைகளையும் எடுத்துகாட்டுகின்றன.
இவ்வகையில் பல்வகை அறங்களை எடுத்துக் கூறும் நூலாக முதுமொழிகாஞ்சியை கூறலாம். இந்நூல் உருவான காலகட்டத்தில் தேவையான வாழ்வியல் அறங்களை எடுத்தியம்பியுள்ளது எனினும் இந்த அறங்கள் இன்றையக் காலக்கட்டத்திற்குப் பொருந்துவனவாக உள்ளன என்பது குறிப்பிடதக்கதாகும். இன்றைய வாழ்வின் பல சிக்கல்களுக்கு முதுமொழிக்காஞ்சியின் அறநெறிகள் விடை பகர்கின்றது.
வாழ்க்கையை நெறிபட வாழ வேண்டும் அத்தகைய வாழ்க்கையே சிறப்பான வாழ்க்கையெனக் கொள்ளலாம். மனித வாழ்வியலை இல்லறம், துறவறம் என இருவகையாகப் பிரிக்கலாம். இல்லறவாதிகளுக்கும் துறவிகளுக்கும் தனித்தனியாக வாழும் முறைகளை இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. இந்நூலில் இல்லற வாழ்வு சிறக்க நன்னெறிகளைத் தொகுத்து மதுரைக் கூடலூர்க்கிழார் உரைக்கின்றார். தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்வது மனித வாழ்வின் வெற்றியாகும். துறவறநெறிகள் இவ்விலக்கியத்தில் தவநெறிகளாகக் காட்டப்பெற்றுள்ளன.
“ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையோன்
செத்தாருள் வைக்கப்படும்” (குறள் 214)
என்று வள்ளுவர் ஒத்து வாழும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை என்கிறார். அப்படி ஒத்திசைந்து வாழாதவர்கள் இறந்தவர்கள் என்று குறிப்பிடுகிறார். எனவே வாழ்க்கை என்பது தானும் பழியில்லாமல் வாழ்ந்து தன்னைச் சார்ந்தவர்களையும் வளர்த்துத் தன் சமுதாயத்தையும் வளர்க்கும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகக் கருதப்படும். அதற்கான நெறிகள் பற்பலநூல்களில் சொல்லப்பெற்றுள்ளன. முதுமொழிக்காஞ்சியில் கூறப்பட்ட வாழ்வியல் சிந்தனைகளை இக்கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.
முதுமொழிக்காஞ்சியில் வாழ்வியல் சிந்தனைகள்
“வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்” (தண்டாபத்து, 5)
என்று வாழ்க்கைக்கு இலக்கணம் வகுக்கின்றது முதுமொழிக்காஞ்சி. இதற்கு உரையாசிரியர்கள் சூழ்ச்சி என்பதற்கு ஆராய்ச்சி என்று பொருள் எழுதுகிறார்கள். வாழ்வில் செல்வாக்கு வேண்டுபவன் தன் செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும் என்பதுதான் இவ்வடிக்குச் சொல்லப் பெற்ற பொருளாகும். சூழ்ச்சி என்பதற்குக் கழகத்தமிழ் அகராதி உபாயம். தந்திரம் என்றும் சில பொருள்களைத் தருகிறது (ப. 483). தண்டான் என்பதற்கு நீங்கான் என்பது அவ்வகராதி தரும் பொருளாகும். இவ்விரு சொற்களையும் இணைத்துப் பொருள் கொள்வதானால் வாழ்வில் வெற்றி பெற எண்ணுபவன் தன் செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும் என்று பொருள் கொள்ளலாம்.
“வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று” என்று வாழாமல் வருந்திதான் சேர்த்து வைத்தப் பொருளைச் செலவழிக்காமல் வருந்தி வாழும் வாழ்க்கை வாழ்க்கையாகாது. எனவே திருப்தி மிக்க வாழ்க்கை என்பது தானும் வாழ்ந்து, தனக்கு உரியவர்களும் வாழத் தன் பொருளைச் செலவழிப்பது என்பதுதான்.
இவ்வாறு வாழ்க்கை பற்றிய நேரடி வரையறைகள் முதுமொழிக் காஞ்சியில் இடம் பெற்றுள்ளன. இவ்வகையில் முதுமொழிக்காஞ்சி மனித வாழ்வியலுக்கு வழிகாட்டும் நூல் என்பதில் சந்தேகமில்லை. முதுமொழிக்காஞ்சியின் வாழ்வியல் சிந்தனைகளைத் தனி மனித வாழ்வியல் சிந்தனைகளைச் சமுதாய வாழ்வியல் பற்றிய சிந்தனைகள் என்று பகுத்துக் காணமுடிகிறது.
தனிமனித வாழ்வியல் சிந்தனைகள்
தனிமனித வாழ்வியல் சிந்தனைகள் என்ற நிலையில் தனிமனிதனின் குடிப்பிறப்பு, கல்வி, அறிவுடைமை, நாண் உடைமை, வாய்மை, ஆளுமை, ஆராய்ச்சி, சொல்வன்மை, நோயற்றவாழ்வு, மூப்பு, பிறர் துயரத்திற்கு அஞ்சல், தவம் போன்றன முதுமொழிக்காஞ்சியில் காட்டப்பெற்றுள்ளது.
குடிபிறப்பு பற்றிய சிந்தனைகள்
மனிதன் குடிபிறப்பினால் மேன்மை பெறுவதுண்டு.
“பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப’ (அறிவுப் பத்து-1)
என்று ஒரு மனிதனின் மனத்தில் உள்ள ஈரத்தன்மையை, அருள் தன்மையை வைத்து அவனின் குடிப்பிறப்பின் மேன்மையை அறிந்து கொள்ளலாம் என்று முடிக்கிறார் ஆசிரியர்.
“சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப” (அறிவு பத்து 6)
என்ற பாடல் ஒருவனின் குடிப்பிறப்பினை அவனின் பெருமிதச் செயல்கள் காட்டி நிற்கும் என்ற பொருளுரைக்கிறது. தனிமனித அடையாளமாக அவனின் குடிப்பிறப்பு விளங்கினாலும் அது வெளிப்படுவது அவரவர் செயல்களால் என்ற இந்நூலின் கருத்து இன்றைக்கும் பொருந்துவனவாக உள்ளது.
கல்விச் சிந்தனைகள்
கல்வி என்பது மனிதனுக்குக் கிடைக்கக் கூடிய அழியாத மிகப் பெருஞ் செல்வம் ஆகும். இதனை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் அறிவும் வளமும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. கல்வி என்பதை வாழ்வின் மேன்மைக்கு உதவும் கருவியாக இந்நூலின் ஆசிரியர் கண்டுள்ளார்.
நல்ல குலத்தில் பிறப்பதைக் காட்டிலும் சிறப்பானது கல்வியாகிய மேன்மையைப் பெற்றிருப்பது என்று முன் சொன்ன குடிப்பிறப்பினையும் கல்விச் சிறப்பு மேம்படுத்தும் என்றுக் குறிக்கிறது முதுமொழிகாஞ்சி.
“குலன் உடைமையின் கற்பு சிறந்தன்று” (சிறந்த பத்து 7)
என்று குலத்தின் சிறப்பை விடக் கல்விச் சிறப்பு ஒரு மனிதனுக்கு உயர்வைத் தரும் என்கிறார் ஆசிரியர். கற்பதை விடச் சிறந்தது கற்பாரை வழிபடுதல் என்கிறது மற்றொரு செய்யுள் (சிறந்த பத்து 8) கற்றவன் ஒருவனின் தரத்தைத் திறத்தை அவனின் அறிவு வெளிப்பாடு வெளிகாட்டிவிடும்.
“கற்றது உடைமை காட்சியின் அறிப”(அறிவு பத்து 6)
இதன் வழியாகக் கல்வியால் மேம்பாடு என்பது தெரிய வருகிறது.
“நேராமல் கற்றது கல்வி அன்று” (அல்ல பத்து 6)
என்ற பாடல் கல்வி கற்பித்த ஆசிரியருக்குக் கைப்பொருள் கொடுக்க வேண்டும் என்ற நன்முறையைக் காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் கல்வி வேண்டுபவன் ஆசிரியரை வழிபட வேண்டும் என்றும் இந்நூல் கூறுகிறது.
“கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்” (தண்டா பத்து 4)
என்ற நிலையில் வழிபாடு இயற்றிக் கைப்பொருள் கொடுத்துக் கல்வியைப் பெற வேண்டும். எனவே கல்வி என்பது மனிதருக்கு மிகச் சிறந்த ஒரு கருவியாகும் அதனால்தான் அதனைப் பணிந்து ஒருவரிடமிருந்து கற்கவேண்டும் என இந்நூல் கூறுகிறது. மேலும் கற்பதை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதை
“மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை” (சிறந்த பத்து 3)
பாடலடியால் அறியலாம்.
தனிமனித ஒழுக்கம் பற்றிய சிந்தனைகள்
தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்தாக வேண்டும். அது அவன் உயிருக்கும் உடலுக்கும் நல்லது.
“ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை” (சிறந்த பத்து 1)
என்ற பாடலடிகள் ஒழுக்கத்தைக் கல்வியினும் மேலானதாகக் காட்டுகிறது. சிறியவர்கள் அறியாதவர்கள் ஒழுக்கம் மீறினால் அதனால் அவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆனால் சான்றாண்மை வேண்டுவோர் ஒழுக்கம் மீறக்கூடாது. அவ்வாறு சான்றோர் மீறினால் அதனால் அவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். இதனையே,
“சிறந்த ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்” (பழியா பத்து 10)
என்று முதுமொழிகாஞ்சி உரைக்கிறது.
வாய்மை பற்றிய சிந்தனைகள்
வள்ளுவரால் பெரிதும் வலியுறுத்தப்படும் வாய்மை என்பதை இந்நூலாசிரியரும் வலியுறுத்துகின்றார்.
“வண்மையில் சிறந்தன்று வாய்மை உடைமை” (சிறப்புப் பத்து, 4)
என்ற பாடல் வள்ளல் தன்மையை விடச் சிறந்தது வாய்மை என்று உரைக்கிறது. தனிமனிதனின் வாய்மை என்பது அவனின் பாதுகாப்பிற்கு சிறந்தது. அவனைச் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பினைத் தரும். எனவே வாய்மையும் மரபைக் காக்க முதுமொழிக்காஞ்சி மனிதர்களை வேண்டுகின்றது.
நாணுடைமை பற்றிய சிந்தனைகள்
பழி வாராது வாழ்வதே வெற்றி மிக்க வாழ்க்கையாகும். அவ்வாறு பழி வந்தால் அதற்கு நாணுவது மனிதப்பண்பாகும்.
“நலனுடைமையின் நாணுச் சிறந்தன்று” (சிறந்த பத்து 6)
என்ற இந்நூலின் கவித் தொடர் மனிதர்கள் அழகாய் இருப்பதை விட மேலானது நாணத்துடன் இருப்பது என்கிறது. நாணமில்லாத வாழ்வு என்பது நாணத்தை விட்டுப் பசிக்காக இழிவானச் செயல்களைச் செய்வதற்குச் சமம். அவ்வாறு உண்பதால் பசியும் அடங்காது. பழியும் விலகாது.
“நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது”(துவ்வா பத்து 3)
என்று மேற்சுட்டிய கருத்தைக் கவிதையாக ஆக்கி நிற்கிறது முதுமொழிகாஞ்சி.
சொல்வன்மை பற்றிய சிந்தனைகள்
தனிமனிதன் தன் கருத்தை எவர்க்கும் பயப்படாது உரைக்கும் ஆண்மை பெற்றிருக்க வேண்டும் என்கிறது. மேலும்,
“சொல் சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப”
என்ற இந்தப் பாடலடி சொல் சோர்வு ஏற்பட்டால் அனைத்திலும் சோர்வு ஏற்பட்டுவிடும் என்கிறது.
தனிமனித ஆளுமை குறித்த சிந்தனைகள்
“ஏற்றம் உடைமை எதிர்கோளின் அறிப” (அறிவு பத்து 5)
என்ற பாடலடிகள் எதிரே வர உள்ளதை அறிந்து அதற்கேற்ப தனிமனிதன் செயல்பட்டால் ஏற்றம் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது. ஆராய்ச்சி மனநிலையுடன் தனிமனிதர்கள் செயல்பட வேண்டும் என்கிறது இப்பாடல்.
பிறர் வருத்தத்திற்கு அஞ்சுதல்
மற்றவர் கண்ணில் நீர் வழிந்தால் தன் நெஞ்சில் உதிரம் சொட்டும் நிலை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்க வேண்டும். அதுவே மனிதநேய நிலையாகும்.
“காதலின் சிறந்தன்று கண்ணஞ்சப்படுதல்” (சிறந்த பத்து- 2)
என்று இதனைக் குறிக்கின்றது முதுமொழிகாஞ்சி. ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துவதை விட ஒருவருக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கண்டு அதற்காக வருந்துவதே மேலானது என்கிறது முதுமொழிக்காஞ்சி.
நோயற்ற வாழ்வு
மனித குலம் நோயற்று நீண்ட காலம் வாழ வேண்டும். நோயுற்றால் அது செல்வத்தை, நிம்மதியை அழித்துவிடும். அளவு மிகுந்த உண்டி உண்போருக்கு நோய் உறுதி என்கிறது முதுமொழிகாஞ்சி.
“உண்டி மெய்யோர்க்கு உறுபிணி எளிது” (எளிய பத்து 7)
என்ற பாடலடியால் இதனை அறியலாம். நேயுற்றவன் எவ்வளவு இன்பம் பெற்றாலும் அதில் அவன் இன்பம் அடைய இயலாது. எனவே நோய் வராமல் காக்க வேண்டும் என்கிறது இந்நூல்,
“பிணிகிடந்தான் பெற்ற இன்பம் நல்கூர்ந்தன்று” (நல்கூர்ந்த பத்து 4)
என்னும் பாடலடி உணர்த்துகிறது. மேலும்,
“இளமையின் சிறந்தன்று மெய்ப்பிணி இன்மை” (சிறந்த பத்து 5)
என்ற பாடலடி பிணியில்லாமல் வாழ்வது என்பது இளமையானவர்கள் வாழும் வாழ்வை விடச் சிறந்தாக அமையும் என்ற கருத்தினை உணர்த்துகிறது.
தனிமனிதன் தவிர்க்க வேண்டிய பொய்கள்
“பெருங்சசீரான் தன் வெகுளியின்மை பொய்” (பொய்ப்பத்து-2)
என்ற பாடலடி பெருஞ்செல்வனிடத்தில் கோபம் இருக்கும். அது இல்லை என்பது பொய்யாகும். ஆயினும் பெருஞ்செல்வன் வெகுளாமல் இருப்பது நல்லது என்கிறது முதுமொழிகாஞ்சி.
“கள்ளுண்போர் சோர்வின்மை பொய்” (பாடல் எண் 3)
கள்ளுண்பவர்கள் சோர்வில்லாமல் இருப்பது பொய். இதன் வழியாகக் கள்ளுண்ணாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது முதுமொழிகாஞ்சி.
“காலம் அறியாதோன் கையுறல் பொய்” (பாடல் எண் 4)
செயலாற்ற வேண்டிய காலத்தை அறியாமல் ஒரு செயலைச் செய்தால் அது வெற்றி பெறாது. ஆகவே காலம் அறிந்துச் செயல்பட வேண்டும் என்கிறது இந்நூல்,
“மேல்வரவு அறியாதோன் தற்காத்தல் பொய்” (பாடல் எண் 5)
என்ற பாடலில் எதிரில் நடக்க இருப்பதை எண்ணித் தனிமனிதன் செயல்பட வேண்டும் என்ற கருத்தினை மறைமுகமாக விளக்கி நிற்கின்றது.
“உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல்” (பாடல் 6)
என்ற கவிதையில் சோம்பல் உடையவன் வெற்றி பெற இயலாது எனத் தெரிவிக்கப் பெற்றுள்ளது. இவ்வாறு பல நிலைகளில் தனிமனிதன் விளக்கம் பெற மேன்மை பெற பல அரிய கருத்துகளை அள்ளி வழங்ககின்றது முதுமொழிக்காஞ்சி.
முடிவுரை
முதுமொழிக்காஞ்சி என்ற நீதி நூல் நல்லறங்களைக் காட்டும் நூறு பாவடிகளைக் கொண்ட சிறுநூல் ஆகும். இதனை இயற்றியவர் மதுரைக் கூடலூர்க்கிழார் ஆவார். இந்நூலில் வாழ்வியல் குறித்தான பல நல்லறக் கருத்துகள் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. இவ்வாழ்வியல் கருத்துகளைத் தனி மனித வாழ்வியல் கருத்துகள், குடும்ப வாழ்வியல் கருத்துகள், சமுதாய வாழ்வியல் கருத்துகள் என்று வகைப்படுத்த முடிகின்றது. இந்த முத்தரப்பும் முன்னேறப் பல அரிய கருத்துகளை முதுமொழிக்காஞ்சி வழங்கியுள்ளது.
தனிமனித வாழ்வியலில் தனிமனிதனுக்குக் குடிப்பிறப்பால் வரும் பெருமை, கல்வியால் வரும் சிறப்பு, தனிமனித ஆளுமையால் பெறும் பெருமை, ஒழுக்கம், வாய்மை, நாணுடைமை, கண்ணோட்டம், சொல்வன்மை ஆகிய பண்புகளால் மேம்பாடு அடையும் போக்கு ஆகியன காட்டப்பெற்றுள்ளன.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.