சங்க இலக்கியங்களில் நீர் சேமிப்பு
மு. நிர்மலாராணி
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகம், காந்திகிராமம். திண்டுக்கல்-624302.
முன்னுரை
சங்க காலத்தில் வாழ்ந்த நம் தமிழ் மக்கள் நீரின் இன்றியமையாமையை உணர்ந்து அவற்றைச் சேமித்து வந்துள்ளனர். திருவள்ளுவரும்
“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு” (1)
என்று நீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். அவ்வாறு சிறப்பு வாய்ந்த நீரினை நம் சங்கமக்கள் எவ்வாறு சேமித்து வந்துள்ளனர் என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நீர் சேமிப்பு
இன்றைய காலகட்டத்தில் வாழ்கின்ற மக்கள் தங்களின் தேவைகளுக்காகவும், பொருளாதாரத்ததை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் மரங்களை வெட்டி அழிக்கின்றனர். இதனால் மழை வளம் குன்றிப் போய் பருவநிலை மாற்றத்திற்கு உள்ளாகின்றன. அதனால் வேளாண்மைத் தொழில் கேள்விக்குறி ஆகிவிட்டது. உழவர்கள் தற்கொலைச் சிகரங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். இச்சூழலில் இன்றைய அரசாங்கம் நீரினைச் சேமிக்கப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இவற்றை நம் பண்டைத் தமிழ் மக்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தியுள்ளனர்என்பதை;
“வையை உடைந்த மடையடைத்தக் கண்ணும்
பின்னு மலிரும் பிசிர் போல வின்னும்” (2)
“ஆறு குளம் நிறைக்குற போல அல்குலும்” (3)
“ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க” (4)
என்னும் பாடல் அடிகள் சங்க கால மக்கள் மடை, கால்வாய், குளம், கேணி உள்ளிட்டவை மூலம் நீரினைச் சேமித்து வந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றன. இது பருவநிலை தப்பி வறட்சியான வாழ்க்கை உருவாகக் கூடும் என்ற முன்னெச்சரிக்கை சங்ககால மக்களிடம் இருந்துள்ளதையும் அவர்கள் பருவநிலையை நன்கு உணர்ந்து நீரினைச் சேமித்துள்ளனர் என்பதையும் மெய்ப்பித்துள்ளது.
நீர்நிலைப் பாதுகாப்பு
நீர்நிலைகளில் கரை அழியாமல் இருப்பதற்குப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். நீர்நிலைகளின் கரையழியாமல் இருக்க வேழக் கரும்பு என்றும் கொறுக்கச்சி என்றும் கூறப்படும் புல்லினை வளர்ப்பர். கொறுக்கந்தட்டு என்பதும் இதுவே. இது இக்காலத்து வழங்கும் பெயராகும். கரைக்கு வலிமை தருவது இது. புல்வகைகளில் இதுவும் ஒன்று. இதன் பூ வெண்மை நிறம் கொண்டது. கரும்புப் பூவின் வடிவு கொண்டது. இதன் பூவின் தோற்றம் குதிரையின் தலைமயிரையும் உயரப்பரக்கும் குருகையும் போல விளங்கும். இது துளையுடையது. இதன் தண்டில் துளை இருந்தமையால் உழவர் மகளிர் அஞ்சனம் இட்டு வைப்பர். மூங்கிலைப் போல் இவை வீடுகட்டி வரிச்சற்பிடித்தற்குப் பயன்படும். நீராடுபவர்க்கு இது புணையாய் அமைக்கப்படுவது உண்டு என்பதை;
“பரியுடை நன்மான் பொங்குளை அன்ன
வடகரை வேழம்” (5)
இப்பாடல் அடிகள் உணர்த்துகின்றன.
நீர்த்தேக்கப் பராமரிப்பு முறை
நீர்த்தேக்கங்களை அமைத்ததோடு மட்டுமல்லாமல் அந்நீர் நிலைகளிலுள்ள நீரை இரவு பகலென்று பாராது அதனை ஒழுங்குபடுத்தும் பணியிலும் காவலர்கள் இருந்தனர் என்பதைச் சங்கப் பாடல்கள் கூறுகின்றன.
நீர் வரவு அதிகமானாலோ அல்லது அதிகக் கசிவு ஏற்பட்டாலோ, காவலர்கள் அதனை ஊர் மக்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்துவர் என்றும், இதனைச் சரிப்படுத்தும் வகையாக ஊர்மக்கள் மணல் பைகளைக் கொண்டு கரையின் உயரத்தை உயர்த்துவர் என்றும் பரிபாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.
“வரைச்சிறை உடைந்ததை வையை வையைத்
திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை அறைக எனும்
உரைச்சிறைப் பறைஎழ, ஊர் ஒலித்தன்று” (6)
ஏரி, குளம், நீர்த்தொட்டிகள் போன்ற நீர்த்தேக்கங்கள் நாளடைவில் பழுதடையும் பொழுது, அதன் கரைகளை உயர்த்துதல், நீர்க் கசிவுகளைச் சீர்படுத்துதல் என்றும், நீர்த் தேக்கங்களிலுள்ள நீர், வறட்சிமிக்க காலகட்டத்தில் அவற்றிலுள்ள பாசி, பழைய நீர் ஆகியவற்றை அப்புறப்படுத்திப் புதிய நீரை நிரப்புதல் ஆகியவையும் பராமரிப்புப் பணியாகும்.
நீர் நிலைகள்
மழை நீரைச் சேமித்து வைப்பதற்காக நீர்நிலைகளை அமைப்பது என்பது முக்கியமான ஒன்றாகும். இவற்றை நம் பழந்தமிழர்
“உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோரீண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே
வித்திவா னோக்கும் புன்புலங் கண்ணகன்
வைப்பிற் றாயினு நண்ணி யாளும்
இறைவன் றாட்டுத வாதே யதனால்
அடுபோர்ச் செழிய விகழாது வல்லே
நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம விவட்டட் டோரே
தள்ளா தோரிவட் டள்ளா தோரே” (7)
நீர் இல்லா நிலத்தில் நீர்நிலையுண்டு பண்ணுதல், ஆறு, ஏரி, குளம் முதலியவற்றால் நீர் வருவாயின்றி மழை வருவாயொன்றையே நோக்கிப் புன்செய் நிலங்கள் இருக்கின்றது என்று கூறுகின்றனர். மேலும் நிலனெளி மருங்கில் நெடிய நீண்ட கரையெடுத்து நீரைத்தேக்கி வேண்டுமளவிற் பயன்படுமாறு கட்டி வைக்கின்றனர் என்பதையும் இப்புறநானூற்றுப் பாடல் வரிகள் சுட்டிக் காட்டியுள்ளதை அறிய முடிகிறது. மேலும்;
“நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
துறுநீர்க் கடம்பின் துணையோர் கோதை” (8)
சிறுபாணாற்று அடிகள் மக்களால் ஆக்கப்படாமல் இயற்கையாய் அமைந்த நீர்நிலை இருந்துள்ளதை விளக்குகிறது.
மனித உணர்வுகளைப் போன்றே விலங்குகளுக்கும்; உள்ள உணர்வைக் காட்டகத்தே களிறு துடிபோலும் அடியையுடைய யானைக் கன்றுகள் இழிந்து தாயும் தந்தையும் உண்ண வேண்டும் என்று கருதாது கலங்கிய சிறிய நீரை, முதலில் தன் பிடிக்கு ஊட்டிப் பின்பு தான் உண்ணும் என்ற செய்தியை
“துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
புரிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முறைத்தனரே” (9)
இப்பாடல் அடிகள் எடுத்துக்காட்டுகிறது.
பயிர்த்தொழிலுக்கு நிலத்தை அடுத்து நீர்வளம் மிக முக்கியமான ஒன்றாகிறது. ஒரு நாட்டின் வளம் அந்நாட்டின் நீர்வளத்தைக் கொண்டே அமைகிறது. அதனால் பண்டைக் காலந்தொட்டே மக்கள் பயிர்த்தொழிலுக்குக் குறைவிலா நீர்வளம் தேவை என்பதை உணர்ந்திருந்தனர் என்பதை;
“நீரின் றமையா வுலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி” (10)
இப்பாடல் அடிகள் உணர்த்துகின்றது. மேலும் அருவிநீரும் சுனைநீரும் பயிர்த்தொழிலுக்குப் பயன்பட்டன என்பதை;
“அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர் கால்யாப்ப” (11)
என்ற பாடல் அடியின் மூலம் அகன்ற வாய்க்கால் அமைக்கப்பட்டிருந்ததை அறிய முடிகிறது.
மழையினால் கிடைக்கும் நீரினையும், அருவிகளில் இருந்து கிடைக்கும் நீரினையும், சுனையில் சேமித்துப் பின் அகன்ற வாய்க்கால்களின் மூலம் நீர் பாய்ச்சியுள்ளனர் என்பதையும் விளக்கி நிற்கின்றன.
மேலும் நீர் அதிகமான பகுதிகளில் மீன்கள் உலவும், நீர் நிறைந்த குளங்களில் குவளையும், தாமரையும் மலர்ந்து விளங்கும் நீர்வளம் வாய்ந்த ஊரின் சிறப்பினை;
“கீழ்நீரான் மீன் வழங்குந்து
மீநீராற் கண்ணன்ன மலர் பூக்குந்து
கழிசுற்றிய விளை கழனி
அரிப்பறையாற் புள்ளோப் புற்று” (12)
புறநானூற்றுப் பாடல் அடிகள் எடுத்தியம்பியுள்ளதை அறியமுடிகிறது.
நீர்நிலைத் தேக்கங்கள்
வெள்ளப் பெருக்கால் பெருகிவரும் ஆற்று நீரின் விசையைக் கட்டுப்படுத்தித் தேக்கி வைக்கும் நிலையில் கல்லால் ஆன அணையைக் கட்டினர் என்ற செய்தியைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் காணலாம்.
“வருவிசைப் புனலைக் கற்சிறைபோல”
(13)
பகைவன் தன்னைத் தாக்க வந்த போது தலைவனிடம் காணப்பட்ட உறுதியானது, கற்களால் கட்டப்பட்ட அணையானது பொங்கி வரும் வெள்ள நீரைத் தாங்கி நின்றது போல் என்று குறிப்பிடுவதன் வாயிலாக அக்காலத்திலேயே இவ்வகையான நீர்த்தேக்க முறையைச் சங்கத் தமிழர்கள் கையாண்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
புறநானூற்றில் தேக்கமான இடங்களில் நீரைச் சேகரிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளனர்.
“நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே”
(14)
நம் தாய்த் திருநாட்டில் ஓடி வரும் ஆறுகளில் காவிரி ஆறானது தன் பெயரிலேயே அகண்ட காவிரி என்று பெயர் கொண்டுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மண்டலத்தை ஆண்டு வந்த கரிகாலச்சோழன் காலத்தில் 3,00,000 கன அடிக்கும் மேலாகப் பெருகி வந்த காவிரியின் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அதனை விவசாய நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுத்தலாம் என்று எண்ணி, கல்லால் ஆன அணையைக் கட்டினான்.
“இந்த அணையின் பரந்து விரிந்த நிலையைக் கண்டு ஈர்க்கப்பட்ட இங்கிலாந்து நாட்டுப் பொறியாளர் (Sir Arthur Cotton) என்பவர் இதற்குப் பெரிய அணைக்கட்டு (Grand Anicut) என்று பெயரிட்டார். அன்று முதல் இதனைக் கல்லணை என்றும் வழங்கலாயினர்”
(15)
இச்செய்தியானது பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே, நீரைத் தேக்கிப் பாசனத்திற்குப் பயன்படுத்த எண்ணினர் சங்கத் தமிழர் என்பதற்குச் சான்றாகும்.
வேளாண்மையைப் பெருக்க அணையைக் கட்டி நீரைத் தேக்கி வைக்கலாம் என்று அறிந்து பல நீர் நிலைத்தேக்கங்களை ஏற்படுத்தினர். மழை நீரானது பயன் இல்லாது பெருக்கெடுத்து ஓடுவதை அறிந்து பழந்தமிழர்கள் அதனை வாரி, மதகு, மடை, மடு, கால்வாய், அணை மூலம் தேக்கி வைத்துப் பயன்படுத்துவதை அறிந்திருந்தனர் என்பதை
“ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்”
(16)
பளிங்கு போன்ற தெளிவாக நீரையுடைய பொய்கை பற்றி;
“மலர்தாய பொழில் நண்ணி மணி நீர் கயம் நிற்ப”
(17)
இப்பாடல் அடிகளின் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.
“வறுமை கூரிய மண்நீர்ச் சிறுகுளத்
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்”
(18)
என்னும் பாடல் அடிகள் பல்வேறு நீர்த்தேக்கங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. மேலும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நீரினைப் பெறவேண்டி ஆற்றின் குறுக்கே அணைகட்டிப் பயன்படுத்தினர். அத்தகைய அணை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை;
“சிறை அழிப் புதுப்புனல் ஆடுகம்”
(19)
என்ற பாடலடிகள் சுட்டிக் காட்டுகின்றன.
பெருகி வரும் நீரின் விசையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றெண்ணியே சங்கத் தமிழர்கள் குளங்களை அமைப்பதிலும், அணையைக் கட்டுவதிலும் ஈடுபட்டுள்ளனர். இதனைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றில், நீரின் விசையைக் கட்டுப்படுத்தக் குளங்களின் கரை, எட்டாம் பிறையைப் போல் அமைக்கப்பட்டிருந்தது என்பதை,
“அறையும் பொறையும் மணந்த தலைய
எண் நாள் திங்கள் அனைய கொடுங்கரைத்
தெள்நீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ”
(20)
புறநானூற்றுப் பாடல் அடிகள் குறிப்பிடுகின்றன.
அணைகள் அமைப்பதில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் சிறந்த தொழில்நுட்பத்தைக் கையாண்டுள்ளனர் என்பதைக் கரிகாற்சோழன் கட்டிய கல்லணையின் சிறப்பே மாபெரும் சான்றாகும். அதிலும், கற்களாலும், களிமண்ணாலுமான 1080 அடி நீளமும், 40.60 அடி அகலமும், 15.18 அடி ஆழமும் என்ற விகிதத்தில் அணை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுகள் பலவாயினும் இன்றளவும் பெரிதாய் பழுது என்று ஏதுவும் ஏற்படவில்லை என்பது இவர்கள் கையாண்டுள்ள தொழில்நுட்பத்தினைப் புலப்படுத்துவதாக இருக்கிறது.
அணைகட்டும் முறைகளில் “கற்சிறை” எனப்படுவது அணையின் இருபக்கக் கரையிலும் வரும் மிகுதியான நீர் வடிந்து அருகே உள்ள ஏரி, குளங்களில் நிரம்பும்படியாக அமைக்கப்பட்டுள்ள தொழில் நுட்பத்தை அன்றே பயன்படுத்தியுள்ளனர் என்பதை அகநானூற்று அடிகள் புலப்படுத்துகின்றன.
“வருத்திக் கொண்ட வல்லாய்க் கொடுஞ்சிறை
மீது ஆழி, கடு நீர் “நோக்கி”
(21)
நீர் நிலைகளைக் காவல் செய்தல்
சங்ககாலத்தில் வாழ்ந்த நம் பழந்தமிழ் மக்கள் நீர்நிலைகளைக் காவல் காத்துள்ளனர் என்பதை;
“தொழின்மழை பொழிந்த பானாள் கங்குல்
எறிதிரைத் திவலை தூறும் சிறு கோட்டுப்
பெருங்குளக் காவலன் போல” (22)
இப்பாடல் அடிகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
முடிவுரை
சங்ககாலத்தில் நீரைச் சேமித்து அவற்றைத் தகுந்த முறையில் பாதுகாத்து வந்தனர் நம் சங்கத்தமிழர் என்பதை இக்கட்டுரையின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
அடிக்குறிப்புகள்
1.குறள். 20
2. பரி : 6
3. அகம்: 11
4. குறுந்: 399
5. ஐங்: 13:1-2
6. பரி: 6:22-25
7. புறம்:18:21-30
8. சிறுபாண்: 68-69
9. கலி: 11:8-9
10. நற்: 1:6-7
11. நற்: 5:2
12. புறம்: 396:1-4
13. தொல்: புறம்: 65
14. புறம்: 18: 28-30
15. சங்க இலக்கியத்தில் பழந்தமிழரின் சூழல்காப்புணர்வு: பக் - 120
16. கலி: 35-5
17. கலி: 35-5
18. அகம்:121:5-6
19. ஐங்: 78
20. புறம்: 118-1-3
21. அகம்: 346-9-10
22. அகம்: 252
உதவிய நூல்கள்
1. திருக்குறள், நர்மதா பதிப்பகம், சென்னை.
2. சோம சுந்தரனார். போ.வே, பரிபாடல், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 18.
3. வேங்கடசாமி நாட்டார் ந.மு, வேங்கடாசலம் பிள்ளை. ரா, அகநானூறு, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.
4. சோம சுந்தரனார் போ.வே, குறுந்தொகை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 18. (2007)
5. சோம சுந்தரனார் போ.வே, ஐங்குறுநூறு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 18. (1961)
6. துரைசாமிப்பிள்ளை. ஔவை. சு, புறநானூறு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 18. (1947)
7. சிறுபாணாற்றுப்படை
8. நச்சினார்க்கினியர், கலித்தொகை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 18. (1943)
9. நாராயணசாமி ஐயர். அ, நற்றிணை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 18 (1952)
10. சுப்பிரமணியன் ச. வே, தொல்காப்பியம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 108 (1998)
11. சந்திரசேகரன். இரா, சங்க இலக்கியத்தில் பழந்தமிழரின் சூழல் காப்புணர்வு, ஹனி கோல்டு பதிப்பகம், கோயம்புத்தூர்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.