பட்டனாரின் பகவத்கீதையில் புராணச்செய்திகள்
ப. விஜி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்.
முன்னுரை
இதிகாசங்களில் ஒன்றான மகாபாரத பீஷ்மபர்வத்தில் 25 முதல் 42 வரையிலான அத்தியாயங்களில் ‘பகவத்கீதை’ எனும் அரிய நூல் இடம் பெற்றிருக்கின்றது. வடமொழியில் வியாசமுனிவரால் எழுதப்பட்ட பகவத்கீதையில் 18 அத்தியாயங்களும் 700 சுலோகங்களும் இடம் பெற்றிருக்கின்றன. எந்தவொரு சிறப்பான படைப்பிலக்கியமும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். அந்தவகையில் 13 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டனார் என்பரால் தமிழில் முதன் முதலில் ‘பகவத்கீதை’ மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலிற்கு இவர் வைத்த பெயர் ‘பரமார்த்த தரிசனம்’. இந்நூலில் விருத்தப்பாவால் ஆன, கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் உட்பட 560 செய்யுள்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்நூல் தமிழில் முதல் மொழிபெயர்ப்பு நூல் என்பதைச் சிறிதும் அடையாளம் காட்டாது மூலநூல் போலவே காட்சியளிக்கின்றது. இதில் உவமைகள், வருணனைகள், புராணச்செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இக்கட்டுரை இந்நூலில் இடம்பெறும் புராணச்செய்திகளை எடுத்துரைப்பதாக அமைகின்றது.
பூதகி வதம்
ஆயர்பாடியிலுள்ள கிருஷ்ணனைக் கொல்வதற்காக, கம்சன் பூதகி எனும் அரக்கியை அனுப்பி வைக்கிறான். அவள் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் கண்ணனைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்கின்றாள். இதையறிந்த கிருஷ்ணனின் நண்பர்கள், இச்செய்தியை நந்தகோபனுக்கு அறிவிக்கின்றனர். நந்தகோபன் ஓலம் கேட்கும் இடம் நோக்கிச் செல்ல, அங்கு பூதகி இறந்து கிடக்கிறாள். கிருஷ்ணனுக்குத் தன்னிடமுள்ள விஷப்பாலை ஊட்ட முனைந்த பூதகியின் இரத்தத்தை உறிஞ்சிக் கொல்கின்றான் கண்ணன் என்னும் செய்தி மாயா விகார அத்தியாயத்தில்,
“பின்னையேர் முறுவலோடும் பேய்முலை யுண்ட பெம்மான்” (மாயா - 23)
என்னும் அடிகளில் விளக்கப்பட்டுள்ளது.
கம்சவதம்
கிருஷ்ணரும் பலராமரும் மல்யுத்தக்களத்தில் யாவரையும் கொன்று, எஞ்சி இருந்தோரை உயிருக்குப் பயந்து ஓடச் செய்தனர். இவர்கள் இருவரையும் ஆயர்பாடியிலுள்ளோர் மகிழ்ச்சியுடன் பாராட்டினர். ஆனால் கம்சனோ இவர்களைக் கண்டு, பொறாமை கொண்டு நீங்கள் மதுராபுரியிலிருந்து வெளியேற வேண்டும். ஆயர்குலச் சிறுவர்களும் விரட்டப்பட்டு, அவர்களின் உடமைகளும் பறிக்கப்பட வேண்டும். நந்தகோப மகாராஜாவை கைது செய்வதோடு, தன் தந்தையாகிய உக்கிரசேனரையும் கொல்ல வேண்டும் என்கின்றான். இதனைக் கேட்ட கிருஷ்ணர் கோபமடைந்து, கம்சனின் கிரீடத்தைத் தள்ளி, மல்யுத்த மேடைக்கு அழைத்து வந்து அடிக்க, அடிதாங்கா கம்சன் இறக்கிறான் எனும் செய்தி, விபூதி அத்தியாயத்தில்,
“கலைவல னவற்றோ டென்றான் கஞ்ச னாருயிர் போய்த்துஞ்ச
வலைகடல் வளரா தேபோந் தாயர்பால் வளர்ந்த பெம்மான்” (விபூதி-26)
என்னும் வரிகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
கண்ணன் தூது செல்லல்
பாண்டவர்களுக்குரிய இந்திரப்பிரஸ்தம் எனும் இராஜ்யத்தை துரியோதனன் தரமறுக்கிறான். அமைதியான முறையில் அந்நாட்டை பாண்டவர்களுக்கு வாங்கித் தரும் பொருட்டு, கண்ணன், துரியோதனிடம் தூது செல்கின்றான். கண்ணன் அஸ்தினாபுரத்திலுள்ள விதுரன் மாளிகைக்குத் தங்குவதற்காகச் செல்ல, விதுரனோ தான் புண்ணியம் தேடிக்கொள்ளும் பொருட்டு, கண்ணனை உபசரித்துப் பல பணிவிடைகள் செய்து விருந்தளிக்கிறான் எனும் செய்தி பிரவஞ்ச அத்தியாயாத்தில்,
“வெண்ணை யோவிது ரனிட்ட விருந்தையோவேலை சூழ்ந்த
மண்ணை யேரிண்டு முன்னாள் வரும்பசி தீர்த்த மாயோன்” ( 15 -25)
எனும் வரிகள் எடுத்துரைக்கின்றன.
சகடாசுர வதம்
குழந்தை கிருஷ்ணனின் முதல் பிறந்த நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குழந்தை தூங்குவது போல இருந்ததால் பாலூட்ட மறந்த யசோதை அவனை ஒரு சகடவண்டிக்கு அருகிலுள்ள தொட்டிலில் கிடத்தினாள். மேளவாத்தியங்களின் ஒலியால் குழந்தை பசியால் அழுதது கேட்கவில்லை. யசோதையோ அனைவரையும் வரவேற்கும் பணியில் ஈடுபட்டிருந்தாள். பசியால் குழந்தை காலை உதைத்து அழுதபோது, அதனது கால் அவ்வண்டியின் சக்கரத்தில்பட்டு அவ்வண்டி பல துண்டாகியது. அந்தச்சகடமானது கிருஷ்ணனைக் கொல்ல வந்த ஒரு அரக்கன் ஆகும். அவ்வேளையில் அரக்கன் இறந்துவிட, யசோதையோ கிருஷ்ணனுக்குக் கொடிய தேவதைகளால் தீங்கு ஏற்படாமலிருக்கும் வண்ணம், வேத மந்திரங்களை ஓதும்படி அங்குள்ளோரிடம் கேட்டுக் கொள்கின்றாள் எனும் செய்தி விசுவரூப அத்தியாயத்தில்,
“சுருளார்கின் றதுழாய் முடியாய்ச் சொல்லு மனமுந் தொடர்வரியா
யருளார் சகடமிற வுதைத்தா யுயிர்கட் கெல்லா முள்ளுயிரே” (விசுவ-1)
என்னும் வரிகளில் விளக்கப்பட்டுள்ளது.
கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தல் மற்றும் நக்னசித்தியை மணத்தல்
ஆயர்கள் இந்திரனுக்காக ஏற்பாடு செய்திருந்த யாகத்தை, கிருஷ்ணன் நிறுத்தினான். இதனை அறிந்த இந்திரன் பிரபஞ்சத்தை அழிப்பதான ‘ஸாங்வர்த்தக’ மேகத்தை ‘விருந்தாவனம்’ முழுவதும் படரும்படி கட்டளை இட்டுத், தானும் பெரும்புயல் புடைசூழ ஆயத்தமாகின்றான். மேகங்கள் இடியையும், மின்னலையும், கொடிய மழையையும் ஏற்படுத்த, அங்குள்ள மக்களும், மாக்களும் துன்பத்திற்குள்ளாயினர். விருந்தாவனம் முழுவதும் நீரால் நிரம்பியதைக் கண்ட மக்கள், கிருஷ்ணனை நோக்கி வழிபட, கிருஷ்ணனோ அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு, கோவர்த்தன மலையைத் தன் ஒரு கையால் குடைபோலத் தூக்கி நிறுத்தி அனைவரையும் பாதுகாத்தான். அதோடு அயோத்தியிலிருந்து கோசல நாட்டை ஆட்சி செய்த நக்னசித்துவின் மகள் நக்னசித்தியை. ஏழு அடங்காக் காளைகளை ஏறுதழுவல் மூலம் வென்று ஆறாவதாக இவளைக் கரம்பிடிக்கிறான் எனும் செய்தி விசுவரூப அத்தியாயத்தில்,
“ஏறுமல்லும் வென்றுகுன் றெடுத்த வண்ண மெண்ணியே
கூறுமல்ல தீர வும்பர் கூறுகின்ற கொண்டலே
வேறுமல்லை யொன்று மல்லை மெய்மைகூ றுமப்பொரு
ளாறுமல்லை என்று நானறிந் திலேனென் மாயனே” (விசுவ - 43)
என்ற செய்யுள் விளக்குகின்றது.
அமுதமெழக் கடைந்தவன்
சிவனுடைய கழுத்திலுள்ள வாசுகிப் பாம்பினை, பாற்கடலைக்கடைய மத்தாக இருக்க வேண்டுமென தேவர்களும், அசுரர்களும் வேண்டினார்கள். பாற்கடலைக் கடைவதற்கு மேருமலையை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் அமைத்து, அரக்கர்கள் ஒருபுறமும், தேவர்கள் ஒருபுறமும் நின்று கடைந்தார்கள் எனும் குறிப்பு விசுவரூப அத்தியாயத்தில்,
“ஒருநாக நடாவொரு நாகமளா வுயரோதங்
கரநாண்மல ராலமுதா யெழவே கடைவோனே” (விசுவ- 33)
என்னும் பாடலில் இடம்பெறுகின்றது.
கிருஷ்ணாவதாரம்
வசுதேவர்க்கும், தேவகிக்கும் திருமணம் முடிந்ததும் தன் தேரில் அழைத்துச் செல்கின்றான் கம்சன். அப்போது அசரீரி ஒன்று தேவகியின் எட்டாவது குழந்தையால் உனக்கு ஆபத்து என்று கூற, அதைக்கேட்ட கம்சன் அவளைக் கொல்ல முற்படுகின்றான். வசுதேவரோ எங்களுக்குப் பிறக்கும் அத்தனைக் குழந்தைகளையும் கொடுத்து விடுகிறோம் எனக் கூற கம்சன் சம்மதிக்கிறான். நாரதரோ தேவகியின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளில் எது விஷ்ணுவின் அவதாரம் எனக் கண்டறிவது கடினம் எனக்கூற கம்சன், வசுதேவரையும், தேவகியையும் சிறைவைக்கிறான். கிருஷ்ணருக்கு இருக்கும் மாயசக்தியால் பலராமரை தேவகியின் வயிற்றிலும், யசோதையின் வயிற்றில் மாயையையும் கருவாக உருவெடுக்க வைத்துப், பின் பலராமரை ரோகிணியின் வயிற்றுக்கு மாறச் செய்கிறார். கிருஷ்ணரோ தேவகியின் வயிற்றில் கருவாகி, கையில் சங்கு சக்கரம், தாமரை, கதாயுதத்துடன் மகாவிஷ்ணுவாக அவதரித்தார் என்பது குணவிகார அத்தியாயத்தில்,
“றீதிலா வுலகந் தன்னுள்ளே யுதிப்பத் தேவகி திருவயிற் றுதித்தான்” (குண-25)
என்ற வரிகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ஆலிலையில் கண்ணன்
இக்கோலம் தன்னுடைய பக்தரான மார்க்கண்டேய முனிவருக்கு வில்லிப்புத்தூரில் காட்சி தந்த கோலமாகும். பிரளயக் காலத்தில் அனைத்துத் தேவர்களையும், உயிர்களையும், அண்டங்களையும் வயிற்றுள் சுமந்து, கண்ணன் குழந்தையாக இருப்பதை அவர் கண்டதாக நம்பப்படுகிறது. இச்செய்தி குணா அத்தியாயத்தில்,
“சுளியா நின்றபெரு வெள்ளத்திடையே பண்டுதுயில் கொண்டான்”(குணா-23)
என்னும் வரிகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மச்சாவதாரம்
மச்சாவதாரமே பகவான் விஷ்ணு எடுத்த முதல் அவதாரம். சத்தியவிரதன் என்ற மன்னன் விஷ்ணுவின் பக்தன். உண்மையின் நிலைக்களனாக விளங்கியவன். இவன் ஒருநாள் நதியில் அர்க்கியம் கொடுக்க கையில் நீர் எடுத்தபோது, அதில் ஒரு மீன் இருக்கிறது. மன்னா தன்னை நீரில் மீண்டும் விட்டால் என்னைப் பிற உயிர்கள் கொன்றுவிடும் எனக்கூற, அம்மீனைத் தன் கமண்டலத்தில் விடுகிறான். மீன் கமண்டலம் அளவு உயருகின்றது. பின் கங்காளத்தில் விட, கங்காளம் முழுமையும் வளருகின்றது. பின் ஏரியின் அளவு வளருகின்றது. மன்னன் கடலில் விட முடிவுசெய்தான். அப்போது அந்த மீன் தான் நாராயணன் என்றும், இன்னும் பதினைந்து நாட்களில் ஏற்படப்போகும் பிரளயத்தில், நீ ஒரு பெரிய ஓடத்தில் ஒவ்வொரு உயிருக்குமான விதைகளையும், சப்தரிஷிகளையும் ஏற்றிச்செல். அவ்வோடம் பிரளய காலத்தில் மூழ்காமல் இருக்க நான் உங்களைக் காப்பாற்றுவேன் எனக்கூறும் நிகழ்வு தேவர் பூசை அத்தியாயத்தில்,
“சேலா யுலகமுறு புன்னோர் செலுவின் புரையே செலுத்தினோன்” (3-26)
என்னும் வரிகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட கண்ணனின் லீலைகளும், அவதாரங்களும் நூலின் இடையிடையே ஆசிரியரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தொகுப்புரை
மகாபாரதம், அரிவம்சம், பாகவத புராணம், விஷ்ணு புராணம் போன்ற நூல்களில் கண்ணனின் லீலைகள், அவதாரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் தமிழில் பகவத்கீதைக்கான முதல் மொழிபெயர்ப்பான இந்நூலிலும் ஆசிரியர் மேற்க்கண்டக் கருத்துக்களை உட்படுத்தி இருப்பது சிறப்பிற்குரியன.
துணைநூற்கள்
1. பகவத்கீதை விருத்தம் - கோ. சேதுராமன்
2. பகவத்கீதை - 8000 ( சுவடி)
3. www. Tamil Krishna.org
(துணை நூற்கள் பட்டியலில் ஆசிரியர், நூலின் பெயர், வெளியிட்ட பதிப்பகம், ஊர், பதிப்பு மற்றும் ஆண்டு எனும் வரிசையில் அமைத்தால் நன்றாக இருக்கும் - ஆசிரியர்)
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.