குறுந்தொகை சாகுந்தலம் உவமை
முனைவர் செ. ரவிசங்கர்
உதவிப்பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21
முன்னுரை
இலக்கியப் பரப்பில் ஒரு பொருளின் சிறப்பினை ஏற்கனவே சிறப்புப் பெற்ற ஒன்றோடு உவமை ஒப்புமைப்படுத்திப் பார்ப்பதை போன்று வடமொழியில் எழுதப்பெற்ற சாகுந்தலத்திலும் தமிழ் மொழியில் மிகச் சிறந்த அகநூலாகக் கருதப்படும் குறுந்தொகையிலும் ஒரே மாதிரியான உவமை அமைந்திருப்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
சாகுந்தலம்
உலக மகா கவிஞர்களில் தலைச்சிறந்தவராகக் கருதப்படுபவர் காளிதாசர். காளிதாசர் வடமொழியில் வழங்கிய சிறந்த நாடகக் காப்பியமாகத் திகழ்வது சாகுந்தலம் என்னும் மகா காவியம் ஆகும். காளிதாசர் படைத்த சாகுந்தல நாடகத்திற்கு இணையான நாடகம் உலகில் இல்லை எனலாம். ‘சாகுந்தலம்’ என்பது இந்திய இதிகாசங்களில் ஒன்றான பாரதத்தில் வரும் ஒரு பாத்திரமாகும். பாரத ‘சகுந்தலோபாக்கியானத்தை’ அபிஞான சாகுந்தலமாக ஆக்கித் தந்தவராகக் காளிதாசர் விளங்குகிறார். மனித மனத்தின் நுட்பமான உணர்ச்சிகளையும், நாடக நிகழ்ச்சிகளின் சிறப்பினையும், நாடக மாந்தர்களிடையே அமைந்து கிடக்கின்ற மனித உறவுகளையும் வெளிப்படுத்துகிற விதமாக சாகுந்தலம் அமைந்துள்ளது.
குறுந்தொகை
சங்க நூல்களில் அகத்திணை பற்றிய பாடல்களே மிகுதியாகக் காணப்படுவதால் இவ்வுலக வாழ்வில் பண்டைத் தமிழர்கள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக அறியலாம். சங்க அகநூல்களில் குறுந்தொகை பல்வகையானும் மேம்பட்டு விளங்குகிறது. நான்கடி சிற்றெல்லையும் எட்டடி பேரெல்லையையும் கொண்டுள்ள குறுந்தொகை’ உரையாசிரிய்களால் மிகுதியான அளவில் மேற்கோள்கள் காட்டியிருப்பது இதன் சிறப்பு எனலாம்.
“வருணனை குறைந்தும், உணர்வு மிகுந்தும் விளங்கும் குறுந்தொகைப் பாடல்கள் அகத்திணையின் உயிரோட்டத்தைக் காட்ட வல்லது” என்று பேரா. வ. சுப. மாணிக்கனார் தன்னுடைய தமிழ்க்காதல் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளது குறுந்தொகையின் சிறப்பினை உணர்த்துவதாக அமைந்துள்ளது எனலாம். குறுந்தொகையில் பல்வேறு உவமைகள் விரவிக் காணப்படுகின்றன. சாகுந்தலம் - குறுந்தொகையில் அஃறிணைப் பொருட்களான கொடி, வண்டு, நிலவு, யானை, நெஞ்சம், தேர் எருமை, மான், சூரியன், மரங்கள், கடல், நாரை, முத்து, சோலை போன்றவைகள் பல சேர்ந்து உவமைகளாக எடுத்தாளப்பட்டுள்ளன. அவ்வகையில் சாகுந்தலம் குறுந்தொகையில் உள்ள இலக்கியப் புனைவு, உவமைகளை வெளிக்கொணர உதவும் ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.
கொடி
கொடி என்பது சங்க அக இலக்கியங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்ற சொல் ஆகும். கொடி என்ற சொல்லைப் புலவர்கள் கூற முற்படும் போது பெண்களின் இடையை வர்ணிப்பதற்கு அதிகம் பயன்படுத்துகின்றதை கூறலாம். கொடி போன்ற ‘இடை’ என்பதை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.
சாகுந்தலம் - குறுந்தொகையில் ‘கொடி’ பற்றிய புனைவு வெவ்வேறு பொருளில் காணப்படுகின்றது.
“துலங்குகின்ற பொற்கொடியைப் போன்ற பெண்கள்
உறும் வலிமைக் கேற்றவாறாய்க் குடத்தை ஏந்தி
உள்ளார்கள் … … … ” (சாகுந் 1 : 40)
என்பதில் பெண்களை வர்ணிப்பதையும்
“கொற்றவன் என் அரண்மனையின் மாடத்தின் மேல்
குளிர்ந்தொளிரும் கொடிகளினை” (சாகுந்1 : 41)
என்ற வரிகளில் அரண்மனை மாடத்தின் மேல் படரும் கொடிகளினையும்
“… … … குடத்தை ஏந்தி
பொற்கொடி போல் சகுந்தலையும்” (சாகுந் 1 : 42)
என்பதில் சகுந்தலையை கூறவும் ‘கொடி என்ற சொல்லை பயன்படுத்தியதை சாகுந்தலம் மூலம் அறியலாம். மேலும்
“நெடிய அந்த மாமரத்தின் பக்கம் … நீயும்
நின்றிருக்கும் பேர் அழகை நினைத்துப் பார்த்தால்
நினைப்பதற்கும் அரிதான … … பொருத்தமான
பொன் ஒளிரும் கொடியொன்று … … மரத்தின் பக்கம்
பொருத்தி மிகத் தழுவுதல் போல் உள்ளதாலே” (சாகுந் 1:57)
என்ற பாடலில் சகுந்தலையை தோழிகள் கொடி என்று கூறும் பாங்கு புலப்படுகிறது.
“துறுகல் அல்லது மானை மாக்கொடி
துஞ்சுகளிறு இவரும் குன்ற நாடன்” (குறுந் : 36)
என்ற பாடலில் பொற்றைக் கல்லின் பக்கத்தில் உள்ளதாகிய ‘மானை’ என்னும் பெருங்கொடி படர்ந்துள்ள குன்றின் தலைவன் என்னும் பொருளையும்
“இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவிசேர் மருங்கில் பூத்த முல்லை” (குறுந் : 220)
இதில் ஆண்மான் மேய்ந்தமையால் குறைபட்ட நுனியையுடைய கதிர் நீங்கிய தாள் சேர்ந்த மலர்ந்த முல்லைக்கொடி என்றும்
“மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின்” (குறுந் : 243)
என்ற வரியில் மானின் குளம்பினைப் போலப் பிளவுபட்ட இலைகளையுடைய ‘அடும்பங் கொடி’ என்றும்
“ஆடு அரை புதையக் கோடை இட்ட
அடும்பு … … … …” (குறுந் : 248)
என்பதில் கடற்கரை சோலைமிடத்தேயுள்ள அசைகின்ற அடியிடம் புதையும்படி மேல்காற்றுக் கொண்டு வந்து போட்ட “அடும்பங்கொடி” என்றும் கூறுவதிலிருந்து குறுந்தொகையில் பல்வேறு விதமான கொடிகள் பல பொருளில் இடத்திற்கேற்றவாறு அமைந்திருப்பதாகக் கொள்ளலாம்.
வண்டு
அஃறிணைப் பொருளில் வரும் வண்டு தமிழ் இலக்கியங்களில் இடங்களுக்கேற்றவாறு பல்வேறு விதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தலைவனுக்குத் தூதனுப்புவதற்கு வண்டினைத் தலைவி தூதனுப்பும் பொருட்களில் ஒன்றாகப் பயன்படுத்தியதை இலக்கியங்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன.
சாகுந்தலை - குறுந்தொகையில் வண்டு பெண்களின் விழிகளும், துன்பத்திற்குரிய ஒன்றாகவும் பொருள் பொதிந்து அமைந்துள்ளது.
“பெயர்த்து சென்று சுற்றுகின்ற கரிய வண்டே
யார் பெற்றார் உன்னைப் போல் உயர்ந்த பேற்றை
சீர்மிகுந்த குளிர்நிலவில் … … தேங்கி நின்ற
சிறு கருப்பு வெளியேறி … … வண்டாய் மாறி” (சாகுந் 1:67)
என்பதில் துஷ்யந்தனுக்கு கிடைக்காதது வண்டுக்கு கிட்டியதாகவும்
“அயல் இருந்தும் அவ்விழியாம் வண்டி ரண்டை” (சாகுந் 1:69)
என்ற வரியில் ‘வண்டு’ விழிகளுக்கு உவமையாகவும்
“… … ... பொல்லா வண்டு” ((சாகுந் 1:71)
என்பதில் தீங்கினைத் தருகின்ற வண்டாகவும் இடம் பெறுவதைக் காணலாம். குறுந்தொகையில்
“வண்டுபடு மலரின் சாஅய்த்
தமியென் மன்ற அளியென் யானே”(குறுந் : 30)
என்ற பாடலில் வண்டுகள் விழுந்து உழக்கிய குவளை மலரைப் போல மெலிவுற்று நிலைகுலைந்த தலைவியையும்
“சிலம்புடன் கமழும் அலங்குலைக் காந்தள்
நறுந்தாது ஊதும் குறுஞ்சிறைத் தும்பி” (குறுந் : 239)
என்பதில் மனம் வீசுகின்ற, அசைகின்ற கொத்துகளையுடைய காந்தட்பூவின் மகரந்தத்தை ஊதுகின்ற தும்பி என்னும் வண்டு தலைவனின் மலைவளத்தை சிறப்பிக்கப்பெறும் பொருளிலும் அமைந்துள்ளது.
முத்து
நவமணிகளில் ஒனறாகக் காணப்படும் ‘முத்து’ பல சிறப்பினைப் பெறுகிறது. பற்களுக்கு உவமையாக முத்துப் போன்ற பற்கள் என்று கூறுவதைக் காணலாம்.
சாகுந்தலம் - குநற்தொகையில் ‘முத்து’ பெறுகின்ற பாங்கினை பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்
“தவக்குடிலாம் சிப்பியிலே … … ஒளி முத்தன்ன
பெண் மகளை … … அழகெல்லாம் தலைமேல் கொள்ளப்
பேராசைப் படும்படியாய் … … இருக்கும் பெண்ணை”
என்று சகுந்தலையின் அழகை வர்ணிக்க முத்தை உவமையாகக் கூறுவதைச் சாகுந்தலத்தில் காண முடிகிறது.
“அம்ம வாழி தோழி காதலர்
நூல் அறு முத்தின் தண்சிதர் உறைப்ப” (குறுந் : 104)
என்ற பாடலில் முத்துவடத்திலிருந்து உதிர்கின்ற முத்துக்களைப் போலப் பிரிந்து சென்ற தலைவனைக் கூறும் விதமாகப் பொருள் அமைந்துள்ளது.
பிரிவுத்துயர்
இலக்கியங்களில் காணலாகும் தலைவன், தலைவிக்கு பிரிவுத்துயர் என்னும் துன்பம் நிகழ்வதைப் பாடல்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
“வரும் பெரிய ஆற்றுவெள்ளம் … … இடையில் ஆற்றுள்
வாழ்கின்ற சிறு குன்றால் தடுக்கப் பட்டு
பிரிவது போல் என் மனமும் பிரிதல் கண்டேன்” (சாகுந் 2:86)
என்று துஷ்யந்தன் ஆற்று வெள்ளத்தில் வரும் நீரானது சிறு குன்றால் தடுக்கப்படுவது போன்று பிரிந்து வந்ததாகவும் கூறுவதும்,
“பிரிவெண்ணும் துயர்தானும் இடியைப் போல
பெருந் துன்பம் தர வீழும்” (சாகுந் 4:108)
என்பதில் பிரிவினை இடிக்கு உவமையாக கூறுவதையும் சாகுந்தலையில் காண முடிகிறது.
“கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்ஆன் தீம்பால் நிலத்துஉக் காஅங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇய வேண்டும்
திதலை அல்குல்என் மாமைக் கவினே” (குறுந் : 27)
என்று தலைவனின் பிரிவினால் தலைவியின் அழகு குறைவதாகத் தலைவி கூறுவதாகவும்,
“இருபேர் ஆண்மை செய்த பூசல்
நல்அராக் கதுவி யாங்கு என்
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே” (குறுந் - 43)
என்ற பாடலில் துன்பத்தையுடைய நெஞ்சு நல்ல பாம்பு கவ்வித் தீண்டியதால் ஏற்படும் வருத்தம் போல, தலைவனுடைய பிரிவு இருப்பதாக கூறுவதும், குறுந்தொகையின் மூலம் அறிய முடிகிறது.
காமத் தீ
அக இலக்கியங்களில் சிறப்பிடம் பெறுவன காதலும், காமமும் ஆகும். இதில் காமத்தினைப் பற்றிக் காளிதாசரின் சாகுந்தலத்திலும், குறுந்தொகையிலும் பல்வேறு குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
“… … … … காமன் அம்பு
போழ்ந்ததனால் … … காமத் தீ வெப்பத்தாலே
புதுமலர் தான் வாடிற் றேயோ” (சாகுந் 3 : 21)
என்று காமத்தீயினால் வாடிய துஷ்யந்தன் சகுந்தலையைக் கூறுவதாகவும்
“… … … மழைக்காலத்தில்
புகுகின்ற வெள்ளத்தால் மதகை மீறி
வரும் வெள்ளம் போல் வந்து பிடித்தல் ஆமோ?
வளர்காமம் முறைமையினை நலித்தல் நன்றோ?
பெருங்காமம் என் மனத்தில் ஊறுமேனும்” (சாகுந் 2 : 77)
என்ற பாடலிலும்
“கவர்ச்சி மிக்க கண்ணாடி … … ஆவிபட்டுக்
கண்காட்சித் திறம் குறைந்து போனாள் போல
சிவந்த மலர் நின்மேனி உறுப்பெல் லாமும்
சீர்குலைந்து மெலிகிறது” (சாகுந் 3 : 28)
என்று சகுந்தலையை கூறுமிடத்தும் காமத் தீயின் கொடுமையை சாகுந்தலம் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.
“சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்
உயர்தவச் சிறிது காமமோ பெரிது” (குறுந் -18)
என்ற பாடலில் மரத்தினது சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்கியது போல உயிரை மிகச் சிறிதாகவும் காமநோயினை மிகப் பெரியதாகவும் கூறுவதைக் காணலாம்.
“தீம்புன னெரிதர வீய்ந்துக் காஅங்குத்
தாங்கு மளவைத் தாங்கி
காமம் நெரிதரக் கைநில் லாதே” (குறுந் - 149)
என்ற பாடலில் காமம் மென்மேலும் நெருக்குதலால் தன்னிடம் நில்லாது போய்விடும் என்றும்
“வான்தோய் வற்றே காமம்
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே” (குறுந் - 102)
என்ற கவிதையில் காமநோய் என்னை வருந்தச் செய்து வானத்தைச் சென்று தோய்வது போன்ற பெருக்கமுடையது என்று தலைவி கூறுவதாகப் பொருள் கொள்ளலாம். இவ்வாறு குறுதொகை காமத்தினைப் பற்றிக் கூறுவதைக் காணலாம்.
முடிவுரை
வடமொழியில் சிறப்பு பெற்று விளங்கிய சாகுந்தலத்தில் இடம் பெற்றுள்ள உவமைகள் தமிழ் அகஇலக்கியங்களில் சிறப்பு பெற்று விளங்குகின்ற குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள உவமைகள் இரண்டும் இலக்கிய நயத்தை வெளிப்படுத்துகின்றனவாக அமைகின்றன. இலக்கியப்புனைவு என்பது எல்லா மொழிகளிலும் உவமையினால் சிறப்பு பெறுகின்றன என்பதைக் காணமுடிகின்றது. சங்க இலக்கியம் நாடகத்தன்மையுடையன என்னும் அடிப்படையில் சாகுந்தல நாடகத்தை ஒப்பிட்டு இக்கட்டுரை அமைந்துள்ளது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.