புறப்பொருள் வெண்பாமாலை கூறும் போர் முறைகள்
முனைவர் அரங்க. மணிமாறன்
முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, செங்கம் - 606 701
முன்னுரை
முன்னை பழமைக்கும் பழமையாய் பின்னை புதுமைக்கும் புதுமையாய் இலகுகிறது தமிழ்மொழி. காலந்தோறும் வளரும் புதுமைகளுக்குத் தக்க தன்னைப் புதுப்பித்துக் கொண்டு இளமை குன்றா இயல்பினதாய் விளங்குகின்றது.
காலந்தோறும் மலரும் இலக்கியங்களும், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களும், நிகண்டுகளும் வெளிநாட்டார் இலக்கணம் ஆராய்ச்சி முதலிய நூல்களின் வளத்தோடு வாழும் செம்மொழியாய் வளம் சேர்க்கிறது.
அத்தகு தமிழ்மொழி ஐந்திலக்கண வளத்தோடு அசையா கோட்டையாக நின்று நிலைக்கிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தது மட்டுமின்றி வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துள்ளனர் தமிழர்.
அகப்பொருள் காதல் வாழ்விற்கும்,- புறப்பொருள் போர் நாகரிக பண்பாட்டு வாழ்க்கை முறைக்கும் இலக்கணம் வகுக்கின்றன.
தொல்காப்பியத்தின் வழிநூலாய்த் தோன்றிய புறப்பொருள் வெண்பா மாலை ஐயனாரிதனார் என்பவரால் வெட்சி முதல் பெருந்திணை ஈறாய் பன்னிரு படலமாய் விரித்துரைக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்படும் போர்முறைகளை ஆய்வதாய் இக்கட்டுரை அமைகிறது.
விரிச்சி (நற்சொல்) கேட்டல்
பகைநாட்டின் மீது போர்தொடுப்பதற்கு முன் போர்செயல் வெற்றி பெறுமா? என நற்சொல் கேட்டனர்.
‘வேண்டிய பொருளின் விளைவுநன் கறிதற்கு
ஈண்டிருன் மாலைச் சொல் ஓர்ந்தன்று’ (1)
இன்றும் நம் செயல்கள் வெற்றி பெறுமா என நாம் சகுனம் பார்த்தல், குறிக்கேட்டல், பல்லியின் (கௌலி) ஒலி திசையறிதல் ஆகிய முறைகளைக் கையாள்வதோடு இதனை ஒப்பிடலாம்.
மாலை நேரத்தில் ஊரின்புறத்தே திருக்கோவிலில் பலரும் கூடி நற்சொல் கேட்டு நிற்க வேட்டுவச்சி குடம் நிறைய கள் கொண்டுவா என்கிறாள். இது அவர்களுக்கு நல்நிமித்தமாக காதில் விழுகிறது. போரில் வென்றால் கள் குடித்து மகிழ்வது வழக்கம். அதுவே நற்சொல்லாகக் கேட்கின்றனர். சில நேரங்களில் எதிர்மறை சகுனம் ஏற்படினும் அதனை பொய்யாக்கும்படி வெற்றி பெறுதலும் உண்டு. (பிள்ளைப்பெயர்ச்சி)
ஒற்றாடல் (வேய்)
ஐந்தாம் படையாகிய ஒற்றர்படையே ஒரு நாட்டின் முக்கியப் படையாக அமைகிறது.
‘கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று’ (2)
என்று ஒற்றாடலின் முறைகளை திருவள்ளுவர் விளக்குகிறார்.
பகைநாட்டிற்குள் உயிரைப் பணயம் வைத்து அந்நாட்டின் எல்லை, வழிகள், அரண்அமைப்பு, படைபெருக்கம், படை நிலைகள், சுருக்க வழிகள் ஆகியவற்றை அறிந்து வருவர். பகைவரிடம் அகப்படின் கொலை செய்யப்படுவர். சிலப்பதிகாரத்தில் கோவலன் பகை நாட்டின் ஒற்றனெனக் கருதிக் கொலை செய்யப்படுகிறான். போரின் வெற்றியின் பின் ஒற்றாய்ந்தவர்க்கு அதிகப் பரிசிலைத் தருவதும் இதன் காரணமாகவே ஆகும்.
‘வெம்முனைநிலை யுணர்த்தியோர்க்குத்
தம்மினுமிகச் சிறப்பீந்தன்று’. (3)
என இதனைப் புறப்பொருள் வெண்பா மாலை விளக்குகிறது.
ஆநிரைக் கவர்தல்
ஒரு நாட்டின் மீது போர் செய்ய விரும்பும் அரசன் தன் படைகளை அனுப்பிப் பகை நாட்டின் பசுக்கூட்டங்களை (ஆநிரை) யாரும் அறியாதவாறு கவர்ந்து வரச் செய்வான்.
‘வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும்
சென்றி கன்முனை ஆதந்தன்று’ (4)
பசுக்கள் அந்நாட்டின் செல்வங்கள் ஆகும். இதன் காரணமாகவே திருவள்ளுவரும்
‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்ற யவை’ (5) என்கிறார்.
மாடு ஒரு நாட்டின் செல்வம் மட்டுமன்று. மானத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. தனக்குத் தெரியாமல் தன் நாட்டின் பசுக்களைக் கவர்ந்தது போருக்கான அறைகூவலாகவும் அமைகிறது. இதனால் வெகுண்டு போருக்கெழுகின்றனர். எனவே ஆநிரைக் கவர்தல் போரின் தொடக்கமாக அமைகிறது.
படைக்கருவிகளை வழங்குதல்
அரசன் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, தூசிப்படை, கிடுகுப்படை ஆகியவற்றிற்கு அவரவர் கையாள் திறனுக்கேற்ற படைக்கருவிகளை வழங்குவது படைவழக்கு எனும் துறையில் விளக்கப்பட்டுள்ளது.
‘முத்தவிர் பூண் மறவேந்தன்
ஒத்தவர்க்கு படைவழங்கின்று’ (6)
என்று இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.
வஞ்சினம் கூறுதல்
படைக்கருவிகளை அரசனிடமிருந்து பெற்ற படைவீரர்கள் தன் போர் ஆற்றலையும், நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும், பகைவரை அழித்து சிதறச் செய்யும் திட்டங்களையும், அவ்வாறு பகைவரை வெல்லாவிட்டால் தான் அடையும் இழிநிலையினையும் எடுத்துக் கூறி வீரமொழி பகர்தல் ‘வஞ்சினம் கூறல், நெடுமொழிக்கூறல்’ என வழங்கப்படுகிறது.
‘இன்று பகலோன் இறவாமுன்னர் ஒன்னாரை
வென்று களங்கொள்ளா வேலுயர்ப்பின் - என்றும்
அரணவியப் பாயும் அடையார்முன் நிற்பேன்
முரணவிய முன்முன் மொழிந்து’ (7)
இன்று மாலைக்குள் பகைவரை வெல்வேன். அன்றி அவர்க்கு அடிமையாவேன் என்கிறான்.
தலையாணங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பகைவரை வெல்லாவிடில் மாங்குடி மருதன் முதலிய புலவர் பெருமக்கள் பாடும் தகுதியை இழக்கக் கடவேனாக என்கிறான். (8)
பூச்சூடல்
போர் செயலின் ஒவ்வொரு நிகழ்விற்கேற்பவும் அதனை உணர்த்தும் வகையில் வெவ்வேறு பூக்களைச் சூடுவர்.
வெட்சிப்பூ சூடுதல் ஆநிரைக் கவர்தலைக் குறிக்கிறது. ஆநிரை மீட்கக் கரந்தைப் பூ, பகைவர் மேல் படையெடுக்க வஞ்சிப்பூ, பகைவரைத் தடுக்க காஞ்சி மதில் காக்க நொச்சிப்பூ, அதிரப் போர் செய்யும்போது தும்பைப்பூ, வெற்றி பெற்றோர் வாகைப்பூவையும் அடையாளமாகச் சூடுகின்றனர்.
பூசையிடுதல்
போர் செயல் வெற்றி பெறப் போர்க்குரிய தெய்வமாகிய காளிக்குப் பலியும் பூசையும் செய்து வழிபடுகின்றனர்.
‘நீடோளான் வென்றிகொள்கென நிறைமண்டை வலனுயரிக்
கூடாரை புறங்காணுங் கொற்றவை நிலையுரைத்தன்று’(9)
கலிங்கத்துப் பரணியில் காளியின் செயல்கள் விரிந்துரைக்கப்பட்டுள்ளன. போரில் வென்ற பிறகு வேலனோடு வெறியாட்டு நிகழ்த்துவதும் உண்டு.
படையெழுச்சி
போருக்குரிய நாள் குறித்த பின்னர் ஒரு நல்ல நாளில் அரச சின்னமான குடையும் போருக்குரிய கருவியான வாள்படையும் புறவீடு விடப்படுகிறது.
‘பெய்தாமஞ் சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ்பாடக்
கொய்தார் மன்னவன் குடைநாட் கொண்டன்று’.(குடைநிலை)
‘செற்றார் மேல் செலவமர்ந்து
கொற்ற வாள் நாள் கொண்டன்று’ (10) (வாள் நிலை)
போர்புரிதல்
பழந்தமிழர் அறத்தோடு கூடிய போர்முறைகளையேக் கையாண்டனர். பழந்தமிழரின் ஈரம் செறிந்த வீரம் மறம் எனப்பட்டது.
தனக்கு நிகரான போர்த்திறனும் படைக்கலப் பயிற்சியும் பெற்றவர்களோடு மட்டுமே போரிடுவர்.
ஆவும், பார்ப்பனரும், பெண்களையும், பிணியுடையவரும், ஈமக்கடனிருக்க புதல்வர் பெறாதவரும் யாம் போரிட இருக்கிறோம். நீங்கள் பாதுகாப்பான பொது மன்றங்களுக்குச் செல்லுங்கள் என்று முரசறைந்து தெரிவித்த பின்னரே ஒத்த வலிமையுடையரோடு போரிடுவர். (புறநானூறு பாடல் 9-நெட்டிம்மையார்)
‘வெட்சியாரைக் கண்ணுற்று வளைஇ
உட்குவரத் தாக்கி உளர்செருப் புரிந்தன்று’ (11)
என்று போர் புரிதலை விளக்குகிறார். போரில் படைவிட்டவர், புறமுதுகிட்டவர், தனி நின்றவர் ஆகியோரைத் தாக்குதலில்லை. தான் தோற்கும் நிலையறிந்து புண் கிழித்து மாய்தலும் உண்டு. கணவனை அழித்த வேலால் அவன் மனைவியும் மாய்தல் உண்டு (ஆஞ்சிக்காஞ்சி)
விழுப்புண் பெறுதல்
‘மண்ணொடு புகழ் நிறீஇப்
புண்ணொடு தான் வந்தன்று’ (12)
போரில் பகைவரோடு பொருது மார்பிலும் தோளிலும் முகத்திலும் ஏற்படும் புண்ணை விழுப்புண் என்கிறோம்.
விசயாலயச் சோழன் தொண்ணூற்றாறு விழுப்புண்களைப் பெற்றவன் என்பதை மூவருலாவில் ஒட்டக்கூத்தர்
‘சீறும் செருவில் திருமார்பில்
தொண்ணூறும் ஆறும் படுதழும்பின் ஆகத்தோன்’ (13) என்று பாடுகிறார்.
தீயிட்டு எரித்தல்
பகை நாட்டைப் போரிட்டு வென்று அந்நாட்டைத் தீயிட்டு எரிக்கின்றனர். பகைவரின் வளத்தை முற்றிலும் அழிக்கும் செயலாகும்.
‘நேராதார் வளநாட்டை
கூரெரி கொளீஇயன்று’ (14)
அந்நாட்டின் செல்வங்களை முழுவதும் கொள்ளையடித்தலும் உண்டு.
‘களமர் கதிர்மணி காலேகம் செம்பொன்
வளமனை பாழாக வாரி’ (15) கொள்ளையடிக்கின்றனர்.
தாம் போரிட்டழித்த நாடு கெடும்படி கழுதை ஏறு பூட்டி வெள்வரகு கொள் விதைப்பர்.
‘எண்ணார் பல்லெழில் கழுதையே ழுவித்து
உண்ணா வரகொடு கொள்வித் தின்று’ (16)
இவ்வாறு பல வகையினும் தாம் போரிட்டு அழித்த நாட்டைச் சீர் கெடும்படி செய்தனர்.
மகள் வேண்டி போர்
‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு’ (17) என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
நாட்டை வளப்படுத்தவும், வறியவர்க்கு ஈயவும், வேண்டிய பொருளுக்காகப் போரிடுதலும் உண்டு. பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகப் போரிடுதலும் உண்டு. மகட்பால் காஞ்சி துறை அத்தகையது.
ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் வீரமுண்டு என்பது மூதின்முல்லை.
எதிர்த்து போர்செய்ய முடியாதவர்கள் திறை தந்து நாட்டினைப் பாதுகாத்தலும் உண்டு.
வெற்றிக் கொண்டாட்டம்
போரில் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் கறி உணவும் மொந்தை நிறைந்த கள்ளும் உண்டு மகிழ்ந்தனர் (உண்டாட்டு). புலவர்க்கும் தன்னை நாடி வந்த இரவலர்க்கும் வாரி வழங்கினர். துடி இசைத்த துடியர்க்கு மிகு பொருள் வழங்குதல் உண்டு.
‘நீடவும் குறுகவும் நிவப்பவும் தூக்கி
பாடிய புலவர்க்குப் பரிசில் நீட்டின்று’ (18)
நடுகல்
நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பதற்கான போரில் வீழ்ந்துபட்ட வீரர்களுக்கு யாழைக் கொண்டு இசைத்துப் பாடும் பாணர் கையறவு பாடுதல் உண்டு.
‘வெருவரு வாளமர் விளிந்தோற் கண்டு
கருவி மாக்கள் கையற வுரைத்தன்று’ (19)
‘மண்மகுளத் துடிகறங்க
விண்மேயாற்குக் கற்கொண்டன்று’ (20)
போரில் மாண்ட வீரர்களுக்கு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் சிறந்த கல்கொணர்ந்து, புனித நீராட்டி, அவரது பிணத்தைப் புதைத்த இடத்தில் நடுகல் நட்டு அவரது போர்த்திறத்தையும் புகழினையும் போற்றி நினைவு கூறுவர். இந்நடுகல் வழிபாடு பின்னர் கடவுள் வழிபாடாக மாறியுள்ளது.
இவ்வாறு சங்ககாலப் போர் முறை நிகழ்வுகள் புறப்பொருள் வெண்பா மாலையில் விவரிக்கப்பட்டமை அறிய முடிகிறது.
அடிக்குறிப்புகள்
1. புறப்பொருள் வெண்பா மாலை-(விரிச்சி துறை) ப.8 திருநெல்வேலி தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்புக்கழகம் -சென்னை-18- பதிப்பு 2004.
2. திருக்குறள்-ஒற்றாடல் குறள்-585-ப.119-தென்றல் நிலையம்-சிதம்பரம்-8வது பதிப்பு-2006.
3. மேலது புற. வெ.மாலை புலனறிச்சிறப்பு-ப.21.
4. மேற்குறித்த நூல் வெட்சி ப.5.
5. திருக்குறள்-கல்வி குறள்-400-ப.81.
6. புற.வெ.மாலை-படைவழக்கு ப.69.
7. மேலது வஞ்சினக் காஞ்சி ப.74.
8. தமிழ் இலக்கிய வரலாறு-டாக்டர் மு.வரதராசனார்-ப.44 புது தில்லி சாகித்திய அக்காதெமி வெளியீடு-1999.
9 . புற.வெ.மாலை-கொற்றவை நிலை ப.44
10. மேலது குடை நிலை-வாள்நிலை பக்-42 -43.
11. மேலது போர் மலைதல் ப.29
12. மேலது புண்ணொடு வருதல் ப.30.
13. மூவருலா-ஒட்டக்கூத்தர்
14. புற.வெ.மாலை உழபுல வஞ்சி ப.53.
15. மேலது மழபுல வஞ்சி ப.54.
16. மேலது உழுது வித்திடுதல் ப.122
17. திருக்குறள் இறைமாட்சி-குறள் 385 ப.79.
18. புற.வெ.மாலை கொடைவஞ்சி ப.54.
19. மேலது கையறு நிலை ப.35.
20. மேலது கற்கோள் நிலை ப.244.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.