பவணந்தி முனிவரால் இயற்றப்பட்ட நன்னூலுக்குப் பலர் உரையெழுதியுள்ளனர். மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர், ஆண்டிப்புலவர், கூழங்கைத் தம்பிரான், ஆறுமுக நாவலர், இராமாநுசக் கவிராயர், வேதகிரி முதலியார், திருத்தணிகை விசாகப் பொருமாளையர், கா. கோபாலாச்சாரியார், பவானந்தம் பிள்ளை, வை.மு. சடகோபராமானுசாச்சாரியார், கோ. இராமலிங்கத் தம்பிரான், கா. நமச்சிவாய முதலியார், பொன்னம்பலம் இராமகுருநாதன் முதலியவர்களால் உரை கண்ட நூல் நன்னூல் ஆகும். இவ்வுரைகள் மாணவர்களுக்கு ஏற்பச் சுருக்கியும் விரிவுபடுத்தியும் எளிமைப்படுத்தியும் தரப்பட்டுள்ளன.
இக்கட்டுரையில் ஈழத்துத் தமிழறிஞர், அகராதியியலாளர், வரலாற்றாய்வாளர், இலக்கணவியலாளர், பதிப்பாளர் என்று பல தளங்களில் இயங்கிய ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையின் நன்னூல் உரைத்திறத்தைக் காண முற்படலாம்.
இவர் 16.04.1858 இல் ஆறுமுகம் பிள்ளையின் மகனாய் இலங்கையில் உள்ள மணிப்பாய் என்னும் ஊரில் பிறந்தார். அன்னாரது பள்ளிப்படிப்பு மணிப்பாயில் செயல்பட்ட பீட்டர் பெரிசீவல் பள்ளியில் அமைந்தது. இவர் ஜூப்ளி பிரஸ் என்ற நிறுவனத்தைச் சென்னையில் 1885 இல் தொடங்கினார். இதன்வழி பல நூல்கள் அச்சிடப்பட்டன. காளிதாசரின் வாழ்க்கை வரலாற்றை 1886 இல் வெளியிட்டார். யாழ்ப்பாணத்தில் நாவலர் கோட்டம், நாவலர் அச்சகம் ஆகியவற்றை நிறுவிய பெருமை இவரையே சாரும்.
பாரத சருக்கம், இலங்கை வரலாறு (1912), தென்மொழி வரலாறு ஆகிய நூல்களை நன்னூல் இலகுபேதம் (1904) ஆகிய நூல்களை எழுதினார். இவைதவிர 1902 இல் அபிதான கோசத்தையும் வெளியிட்டுள்ளார். 59 ஆண்டுகள் வாழ்ந்த இவர் 03.11.1917 அன்று இம்மண்ணுலகை விட்டு நீங்கினார்.
ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையின் உரையியல்பைப் பின்வருமாறு பிரித்துக் கொள்ளலாம். அவையாவன;
1. வினா எழுப்பி விடை கூறுந்திறன்
2. நூலாசிரியர் கருத்தைக் கூறி, தன் கருத்தை நிலைநாட்டல்
3. நூலாசிரியர் பயன்படுத்திய உத்திகளைக் குறிப்பிடல்
4. இயலைத் தொடர்புபடுத்துதல்
5. சூத்திரப் பொருளை விரித்துப் பேசுதல்
6. உரையாசிரியர்களைப் பின்பற்றுதல்
7. தன் கருத்தை விளக்குதல்
8. வாசகரிடம் முடிபை ஒப்படைத்தல்
9. சூத்திரத்தைப் பிரித்துக் கூறுதலும், பொருள் விளக்கம் தருதலும்
10. பிறர் கருத்தை மறுத்துத் தன் கருத்தைக் குறிப்பிடுதல்
11. சொற்பொருள் விளக்கம் தருதல்
12. மொழியியல் சிந்தனை
நன்னூல் உரையாசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படுபவர் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை. இவரது உரைத்திறம் வினா எழுப்பி விடை கூறும் தன்மையை உடையதாக அமைந்துள்ளது. இது கற்றல் - கற்பித்தல் நிலையில் பயனுள்ளதாக அமைந்துள்ளது எனில் மிகையன்று.
நன்னூல் 109 ஆவது சூத்திரம் மயக்கம் பற்றிக் கூறுகின்றது. அவரது உரை வருமாறு:
மயக்கம் என்பது கூட்டம்.
இடைநிலை மயக்கம் எத்தனை வகைப்படும்?
உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம், உயிh;மெய் மயக்கம் என மூவகைப்படும்.
உடனிலை மெய்ம்மயக்கமாவது யாது?
தம்மொடு தாமே மயங்கும் மயக்கம்
வேற்றுநிலை மெய்ம்மயக்கமாவது யாது?
தம்மொடு பிறவே மயங்கும் மயக்கம்
உயிர்மெய் மயக்கம் எப்படி வரும்?
நியதியின்றி வேண்டியவாறே மயங்கும்
இவர் நூலாசிரியரின் கருத்தை விளக்கித் தன் கருத்தை நிலைநாட்டுகின்றார்.
“நின்ற நெறியே உயிர்மெய் முதலீறே”
(நன்.108)
என்ற நூற்பாவிற்கு, “ஒரு மொழியின் கண்ணே எவ்வெழுத்து முதலிலும் கடையிலும் ஒலிக்குமோ அவ்வெழுத்தே அதற்கு முதலும் ஈறுமாம் என்பது கருத்து” என்று கூறி, “மெய்ம்முதன் மொழியென்றும் உயிரீற்று மொழியென்றும் வழங்குவதல்லது உயிர்மெய் முதலென்றும் உயிர்மெய் ஈறென்றும் வழங்குதலில்லை” என்கின்றார்.
3. நூலாசிரியர் பயன்படுத்திய உத்திகளைக் குறிப்பிடல்
“யரழ முன்னர் மொழிமுதன் மெய்வரும்” (நன்.115) என்ற நூற்பாவின் உரையில் நூலாசிரியர் பயன்படுத்திய உத்தியைக் குறிப்பிடுகின்றார்.
“யகரத்தின் முன்னர் யகரம் மயங்குதல் உடனிலை மயக்கமாதலின் அதனை வேற்றுநிலை மெய்ம்மயக்கச் சிறப்பு விதி கூறுஞ் சூத்திரங்களு ளொன்றாகிய இச்சூத்திரத்திற் கூறியது யாது பற்றி? என வினாவெழுப்பி, அதற்கு விடை கூறுமுகமாக,
“அதனை ஒழித்து ஏனைய கொள்ளுதல் ஏற்புழிக்கோடல் என்னும் உத்தியாதலின் அது பற்றியாம்” என்கின்றார்.
இவ்வுத்தி முறையை, நன்னூல் - 333 ஆவது சூத்திர உரையில் காணலாம்.
“இச்சூத்திரம் முன்னிலைப் பன்மை முற்றுக் கூறிய வழியே கூறாது, இங்கே கூறப்பட்டது ஒன்றின முடித்தறன்னின முடித்தல் என்னுமுத்தியால்” என்றும்,
நன்னூல் - 337 ஆம் சூத்திரத்தில், “உரையிற் கோடலென்னு முத்தியால், “நான்மறையறங்க ளோங்க நற்றவம் கேள்வி மல்க, “மக்கட் பதடி யெனல்”, “மனத்துக்கண் மாசிலனாதல்” என அ, அல், தல் என்பனவும் வியங்கோள் விகுதிகளாய் வருமெனக் கொள்க” என்றும், நன்னூல் - 338 ஆம் சூத்திர உரையில், “மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் மொழியாததனையு முட்டின்று முடித்தலென்னு முத்தியால், வேண்டும், தரும், படும் என்னும் சொற்களும் ஐம்பான் மூவிடத்துக்கும் பொதுவாமெனக் கொள்க. இம்மூன்றும் ஒருபொருட் சொற்களாய்த் தொழிற்பெயராய்த் தேற்றப் பொருள்பட்டே நிற்கும்” என்றும் நூலாசிரியர் பயன்படுத்திய உத்தியைக் குறிப்பிடுகின்றார்.
4. இயலைத் தொடர்புபடுத்துதல்
நன்னூல் - 126 ஆம் சூத்திரம் புறநடை பற்றியது. அச்சூத்திரம் வருமாறு;
“மொழியாய்த் தொடரினு முன்னனைத் தெழுத்தே” என்னும் சூத்திரத்தில் பின்வரும் இயலைத் தொடர்புபடுத்துகின்றார்.
“இச்சூத்திரத்திலே மொழியாய்த் தொடரினும் என்றமையான் எழுத்தாலாகும் பதங்களினது இலக்கணத்தை எடுத்துக் கூறும் பதவியலுக்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது” என்கின்றார்.
5. சூத்திரப் பொருளை விரித்துப் பேசுதல்
உம்மையிடைச் சொல் பற்றி ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை குறிப்பிடுகையில்,
“எச்சவும்மை எத்தனை வகைப்படும்? எச்சவும்மை இறந்தது தழீஇய வெச்சமும், எதிரது தழீஇய வெச்சமும்.
எதிர்மறையும்மைக்கும் எச்சவும்மைக்கும் வேற்றுமை யாது? எதிர்மறையும்மை எச்சத்தின்பாற் படுமாயினும் பிறிதொரு பொருளைத் தழுவாது ஒரு பொருளின வினையை மீறுத்தலின் அதனின் வேறாம்.
சிறப்பும்மை எத்தனை? உயர்வு சிறப்பும்மை இழிவு சிறப்பும்மை என இரண்டு” என்று சூத்திரத்தின் பொருளை விரிவாக வினா - விடை முறையில் தருகின்றார்.
6. உரையாசிரியர்களைப் பின்பற்றுதல்
“விழைவே கால மொழியிசை தில்லே” (நன்.430) என்னும் நூற்பாவிற்கு முன்னைய உரையாசிரியர்களான மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர், கூழங்கைத் தம்பிரான், விசாகப் பெருமாள் ஐயர் ஆகியோர் தரும் சான்றுகளையே இவர் காட்டுகின்றார். ஆனால், இச்சான்றுகளைப் பிற உரையாசிரியர்கள் இடம் சுட்டி விளக்கியுள்ளனர். இவர் அங்ஙனம் சுட்டவில்லை.
1. “வார்ந்தி லங்குவை யெயிற்றுச் சின்மொழி - யரிவையைப் பெறுகதில் லம்ம யானே” இங்கே அரிவையைப் பெறுதல் ஆசையை யுணர்த்தலால் விழைவு.
2. “பெற்றாங் கறிகதில் லம்மவிவ் வூரே” இங்கே பெற்றகாலத்தறிக எனக் காலத்தையுணர்த்தலாற் காலம்.
3. “வருகதில் லம்மவெஞ் சேரிசேர” இங்கே வந்தால் ஒன்று செய்வேன் என்னும் ஒழிந்த சொற்பொருளை யுணர்த்தலால் ஒழியிசை.
7. தன் கருத்தை விளக்குதல்
நன்னூல் - 97 ஆவது சூத்திரம் எழுத்துக்களின் வடிவம் பற்றிக் கூறுவதாகும். இதில் எழுத்துக்களின் இன்றைய வரிவடிவம் பற்றிப் பேசுகின்றார் முத்துத்தம்பிப் பிள்ளை.
“தனிமெய்கள் மற்றைய உயிர்களோடு கூடுமிடத்து மேலும் கீழும் விலங்கு பெற்றுங், கோடு பெற்றும், புள்ளி பெற்றும், புள்ளியும் கோடுமுடன் பெற்று முருவந்திரியும். கி, கூ முதலியன கீழ் விலங்கு பெற்றன. கெ, கே முதலியன கோடு பெற்றன. கா, ஙா முதலியன புள்ளி பெற்றன. அருகே பெற்ற புள்ளியைப் பிற்காலத்தார் காலாக வெழுதினர். மகரத்திலு மிரண்டு புள்ளியள் உட்பெறு புள்ளியை வளைத்தெழுதினர். கொ, கோ, ஙொ, ஙோ முதலியன புள்ளியுங் கோடுமுடன் பெற்றன” என்றும், அவ்வெழுத்துக்கான பண்டைய வடிவத்தையும் புதிய வடிவத்தையும் குறிப்பிடுகின்றார் உரையாசிரியர்.
“ககர எகரத்தினது பண்டை வடிவு - கை
ககர எகரத்தினது புதிய வடிவு - கெ
ககர ஏகாரத்தினது பண்டை வடிவு - 1க
ககர ஏகாரத்தினது புதிய வடிவு - கே
கா, ஙா முதலியவற்றின் பண்டை வடிவு - க0, ங0 இவையே புள்ளி பெற்றன வெனப்பட்டன. இப்புள்ளியைப் பிற்காலத்தார் - ர் - இப்படிக் காலாக்கினர்.
ககர ஒகரத்தினது பண்டை வடிவு - கை0
ககர ஒகரத்தினது புதிய வடிவு - கொ
ககர ஓகரத்தினது பண்டை வடிவு - 1க0
ககர ஓகரத்தினது புதிய வடிவு - கோ
இவையே புள்ளியுங் கோடுங் உடன் பெற்றனவாம்” என்கின்றார்.
நன்னூல் - 436 ஆம் சூத்திர உரையிலும் பிள்ளையவர்கள் தம்முடைய கருத்தை நிலைநாட்டுகின்றார்.
“ஆங்கவென்னு மிடைச்சொல் அகரவீறு குறைந்து நின்றது. இரட்டுற மொழிதலால் ஆங்கென்னுஞ் சொல் ஆங்க வென்னுஞ் சொல்லையும் ஆங்க என்னுஞ் சொல்லையும் குறித்து நின்றது எனினும் பொருந்தும்”
8. வாசகரிடம் முடிபை ஒப்படைத்தல்
இவர் வாசகரிடம் சில நூற்பாக்களின் முடிபை ஒப்படைத்து விடுகின்றார். இதனை நன்.440 ஆம் சூத்திர உரையில் காணலாம்.
“மேற்சொல்லப்பட்டனவன்றிச் சொல்லப்படாதன பலவுள. அவற்றை இடைச்சொற்குக் கூறிய விலக்கணங் கொண்டாராய்ந்துணர்க” என்று கூறி வாசகரிடம் பொறுப்பினை விட்டு விடுகின்றார். இவருடைய கருத்தினின்று காணுகையில், இன்றைய வழக்கில் இடைச்சொற்கள் இடம்பெற்றுள்ளன. அதனைக் கண்டு அறிந்து கொள்ள வேண்டும் எனத் தெளியலாம்.
9. சூத்திரத்தைப் பிரித்துக் கூறுதலும் பொருள் விளக்கம் தருதலும்
இவருடைய உரைச் சிறப்பே சூத்திரத்தைப் பிரித்துக் கூறி, அதற்கு உரைநயம் காண்பதே ஆகும். சான்றாக,
“உயிர் உயிர் அல்லது ஆம் பொருட்குணம் பண்பே” (நன்.442)
சில நேரங்களில் சூத்திரத்தின் பொருளை விரிவாக விளக்கிச் செல்கின்றார்.
“துய்த்தல் - உண்ணல், துஞ்சல் - உறங்கல், தொழுதல் - பணிதல், அணிதல் - அலங்கரித்தல், உய்த்தல் - செலுத்துதல் என்னும் ஐந்தும், ஆதி - இவை போல்வன பிறவும், உடல் உயிர்த் தொழிற்குணம் - உடம்போடு கூடிய உயிரினுடைய தொழிற்குணங்களாம் என்றவாறு”
10. பிறர் கருத்தை மறுத்துத் தன் கருத்தைக் குறிப்பிடுதல்
இவரது உரையில் சில இடங்களில் பிறருடைய கருத்தை மறுத்துத் தன் கருத்தை நிலைநாட்டுகின்றார். இதனை நன்.353 ஆவது நூற்பாவில் காணலாம்.
“உருபும் வினையு மெதிர்மறுத் துரைப்பினுந் திரியா தத்தமீற்றுருபி னென்ப” எனப்பாடபேதங் கொண்டு “தத்தம் ஈற்றினின்றும் அவ்வவ் வுருபினின்றும் வேறுபடா என்று சொல்லுவர் புலவர்” எனப் பொருள் கூறுவாருமுளர். அது பொருந்தாதென்க.
இச்சூத்திரக் கருத்துத்தான் யாது?
இச்சூத்திரக் கருத்து யாதெனின், குடத்தை வனையான், வாளால் எறியான் என்றவழி அவ்வினைகள் நிகழாமையின் குடமும் வாளும் முறையே செயப்படு பொருளுங் கருவியு மாகாவாயினும் எதிர்மறை வினையும் விதி வினையோ டொப்புமை யுடையதாதலின் ஆண்டு வந்த உருபுகளும் செயப்படுபொருள் முதலியவற்றின் மேல் வந்தனவாகவே கொள்ளப்படல் வேண்டுமென வழுவமைத்தவாறும், “செய்த, செய்கின்ற” எனவும் “செய்து, செய்பு” எனவும் விதி வாய்பாடு பற்றியன்றிச் செய்யாத, செய்யாது என எதிர்மறை வாய்பாடு பற்றியுங் கூறாமையான் அவையும் அவ்வெச்சப் பொருண்மையிற் றிரியாது பெயரும் வினையுங் கொள்ளுமென முற்கூறாதொழிந்ததை ஈண்டுக் கூறியவாறுமாவென்க” இவ்வாறு உரையாசிரியர் நயமாகத் தம்முடைய கருத்தை நிலைநாட்டுகின்றார்.
11. சொற்பொருள் விளக்கம் தருதல்
உரையாசிரியர்களுக்கிடையே காணப்படும் சொற்பொருள் விளக்கம் பற்றி பெ. மாதையன் கூறுகையில், “கடினச் சொற்களாகிப் போய்விட்ட பழஞ்சொற்களின் பொருளை விளக்கும் வகையில், எழுந்த உரைகளின் பொதுப்போக்கு சொற்பொருள் விளக்கம் என்பதுதான். இதை எல்லா உரையாசிரியர்களும் முறையாகவே செய்துள்ளனர்” (பெ.மாதையன், 2014: 90) என்கின்றார். அந்த வகையில் இவரது உரையில் சொற்பொருள் விளக்கம் தருதல் இரண்டு நிலைகளில் அமைகின்றன. ஒன்று, சூத்திரத்திற்குப் பொருள் விளக்கம் தருதல். மற்றொன்று, சான்றுக்குப் பொருள் விளக்கம் தருதல் என்பன.
நன்னூல் 431 ஆம் சூத்திர உரையில் தரும் சான்றில் சில சொற்களுக்குப் பொருள் விளக்கம் (உரை) தருகின்றார்.
“சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே”. இங்கே இப்பொழுது அவன் இறந்ததனால் எமக்குக் கொடுத்தல் கழிந்தது என்னும் பொருளைத் தருதலாற் கழிவு. சிறியகட் பெறினே - சிற்றிளவினதாகிய தேனைப் பெற்றால், எமக்கீயும் - எங்களுக்குத் தருவன், மன்னே - அது கழிந்தது. இது இறந்து கிடந்த வள்ளலாகிய அதிகமானைக் கண்டு ஔவை பாடிய பாட்டின் முதலடி” என்று உரையெழுதுகின்றார். (கள் என்பதற்குத் தேன் என்று உரை கண்டது இவரது உரைத்திறன்)
சிலவிடத்து, ஓரெழுத்து ஒரு மொழியை விளக்குகின்றாh;. சான்றாக, நன்.107 ஆம் நூற்பாவைக் குறிப்பிடலாம்.
“நொ - துன்பப்பட்டு, கௌ - வாயாற் பற்று, வௌ - கொள்ளையிடு”
12. மொழியியல் சிந்தனை
ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையின் மொழியியல் சிந்தனையைச் சந்தியகரம் பற்றிக் கூறும் நூற்பாவின் (நன்.124) உரையில் காணலாம்.
“... ... ... ... ... ஐ ஔ சந்தியகரம் ஐகாரமும் ஔகாரமும் கூடிப்பிறப்பன வாதலின் சந்தியகர மெனப்பட்டன. (சந்தி - கூட்டம், அக்கரம் - எழுத்து) எழுத்துக்களினது கூறுகளை ஆராயுமிடத்துச் சந்தியக்கரங் கொள்வதன்றி மொழியாக்கத்துக்கண் அவை கொள்ளப்படா. கொள்ளப்படுமாயின் காடு என்பது “க் ஆ ட் உ” என வழங்குதலும் முறையாமன்றோ”
நிறைவுரை
இக்கட்டுரையின் நிறைவாக,
உரையாசிரியர்கள் வழக்கமாகத் தரும் உரையிலிருந்து வேறுபட்டுப் புதுப்பொருளைத் தருவது ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையின் உரைத்திறனாக அமைந்துள்ளது. இவர் பிற உரைக்காரர்களை மறுத்துக் கூறும் பகுதிகள் மிகச் சிலவே உள்ளன. வினாவெழுப்பி அதற்கான விடையைக் கூறும் தன்மையை உடையதாகவும் தன் கருத்தை விளக்கிக் கூறுவதாகவும் இவர்தம் உரை அமைந்துள்ளது. வினா - விடை அமைப்பில் உரை எழுதுவதே இவரது உரையியல்பாகும் என்பதை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது.
துணைநின்ற நூல்கள்
1. கண்ணன்,இரா., நன்னூல் உரைவளம் (தொகுதி - 4), எழுத்தியல் - 2, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2010.
2. கண்ணன்,இரா., நன்னூல் உரைவளம் (தொகுதி - 9), எழுத்ததிகாரம், உருபு புணரியல், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2010.
3. கண்ணன்,இரா., நன்னூல் உரைவளம் (தொகுதி - 13), சொல்லதிகாரம், பொதுவியல் - 1, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2010.
4. கண்ணன்,இரா., நன்னூல் உரைவளம் (தொகுதி - 12), சொல்லதிகாரம், வினையியல், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2010.
5. கண்ணன்,இரா., நன்னூல் உரைவளம் (தொகுதி-16), இடைச்சொல்லியல், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2010.
6. கண்ணன்,இரா., நன்னூல் உரைவளம் (தொகுதி-17), உரிச்சொல்லியல், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2010.
7. மாதையன்,பெ., உரையியல், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2014.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.