சிலப்பதிகாரத்தில் வேடர்கள்
முனைவர் சு. விமல்ராஜ்
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
அ.வ.அ. கல்லூரி (தன்.), மன்னன்பந்தல், மயிலாடுதுறை.
முன்னுரை
சிலப்பதிகாரம் தென்னிந்தியாவின் வரலாற்றுப் பெட்டகம் எனின் பொருந்தும். காலங்காலமாய் சிலம்பின் உள்ளுக்குள் கட்டமைத்திருக்கும் நிகழ்வுகளின் மீதான ஆய்வுகள் நிகழ்ந்த வண்ணமிருக்கிறது. அவ்விலக்கியத்தின் கதை மாந்தர்கள் உண்மைத்தன்மையுடையவர்களா என்னும் கேள்வி, ஆய்வாளர்களைத் தேடுதலுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறது. நிகழ்வுகள் மீதான உண்மைத்தன்மையின் தேடல் தொடர்கிறது. சிலம்பு கி.மு அல்லது கி.பி.யின் கதை என்றவாறு ஆய்வுகள் தொடர்கின்றன. நிலமும் மனித வாழ்வும் குறித்த பல்வேறு புரிதல்களை மானிடர்களுக்கு உணர்த்தி நிற்கும் ஒரு பேரிலக்கியம் சிலப்பதிகாரம் என்றால் அது மிகையில்லை. இராமாயன மகாபாரதக் கதைகளைப் போல் சிலம்பும் மக்கள் மத்தியில் பன்னெடுங்காலம் செவிவழிக்கதையாகப் புழங்கிக் கொண்டிருந்திருக்கிறது. இப்படைப்பின் வழி மண்ணையும் மக்களையும் ஆழமாக உணர்ந்தறியமுடியும் என்பது திண்ணம். ஐந்து நில மக்கள் வாழ்வை இது சங்கத்தமிழ் இலக்கியம் போன்று ஆங்காங்கே பதிவு செய்திருக்கின்றது. அவற்றுள் வேடுவர்களை சிலம்பு எவ்வாறு எடுத்துக்காட்டியிருக்கிறது என்பது குறித்து அறிய இக்கட்டுரை பயணம் செல்கிறது.
பாலை நிலம்
திணையின் நிலையைச் சுட்டும் வகையில் நான்கு திணையின் இடத்தில் நின்று ஐந்தாம் நிலத்திணையாகிய பாலையினை நிலையானது இல்லை என்னும் அதன் கருத்தியலைப் பதிவு செய்வது சிலப்பதிகாரம். இதனை,
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”
(சிலம்பு. காடுகாண் காதை.கோடையில் வரலாமா.5-6)
என்ற செய்யுள் வழியேப் பதிவு செய்கிறார் இளங்கோவடிகள். நிலையான திணையாகப் பாலை இல்லை என்பதால் தொல்காப்பியரும் ஐந்தாம் திணையாக (நிலம்) பாலையை சுட்டாது விட்டார். உரிப்பொருளுக்கு பாலையை முறையேப் பதிவு செய்கிறார். பாலை நிலத்து வேடர்களின் வாழ்க்கையை இளங்கோ வேட்டுவரியில் படம் பிடித்திருக்கிறார். அற்றை நாள் வாழ்வும் வெம்மையும், வேடுவர்களின் வேட்டையும் மண்ணும், மரமும் செடியும் கொடியும், பறவையும் விலங்கும் முற்றிலும் ஆவணமாய் அடைத்து வைக்கப்பட்ட இலக்கியமாக இது விளங்குகிறது. மழை வளம் இல்லாத பாலை நிலத்தில், பாலை வெளிகள் கடுங்கதிர்களால் கொடிய வெம்மை உடையனவாயிருந்தன. முள் வேலிகள் சூழ்ந்து காவல் செய்யப்பெற்ற மன்றங்களில் வேடர்கள் கூட்டமாய் வாழ்ந்திருந்தனர். இச்செய்தியை,
”இடுமுள் வேலிஎயினர் கூட் டுண்ணும்
நடுவூர் ... ... ... ... ...
வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன
மறக்குடி தாயத்து வழிவளம் சுரவாது
அறக்குடி போல் அவிந்தடங்கினர் எயினரும்”
(சிலம்பு.வே.வ.10-15)
என்ற செய்யுளடிகள் வழி அறியமுடிகின்றது. வேடர்களின் கூடிவாழும் கூட்டுணர்ச்சியும், வேட்டையில் பெற்ற உணவைக் கூடி ஒருங்கேப் பங்கிட்டு உண்ணும் தன்மையும், வேட்டையுணர்வு அவர்களை வலிமையுடையவர்களாக வைத்திருக்கும் பொருத்தப்பாடும் மறக்குடி அறக்குடி என்று இளங்கோ எடுத்தாண்ட சொல்லாட்சியில் புரிந்துகொள்ள முடிகின்றது. வேடர்களின் வீடுகள் தனித்தனியேக் குடிசைகள் அமைக்கப்பெற்று இருந்ததை,
“கயமலர் உண்கண்ணாய்! காணாய் நின் ஐயர்
அயலூர் அலற எறிந்தநல் ஆனிரைகள்
நயனில் மொழியின் நரைமுது தாடி
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன”
(சிலம்பு.வே.வ.கொடை.9-12)
என்ற பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன. வேடர்களின் வில்லாற்றலுக்குச் சான்றாக,
“வழங்குவில் தடக்கை மறக்குடி... ... ... ”
(சிலம்பு.வே.வ.6)
என்னும் வேட்டுவவரிப்பாடல் விரைந்து செலுத்துகின்ற வில்லையும், அதற்குண்டான வலிமையான கைகளையும் உடையவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
மக்கட்பெயர்
இந்நிலத்து மக்கள் பெயருள் வேடர்களுக்கு மறவர், எயினர், எயிற்றியர்,வேடர், கானவர் என்னும் பெயர்களை இளங்கோ எடுத்தாண்டுள்ளார். இப்பெயர் திணையிடத்துச் (நிலம்) சுட்டப்பெறும் சங்க காலத்தை ஒத்தப் பெயர்களாக காணப்படுகின்றன. சிலம்பு சங்க நிகழ்வா அல்லது அதற்கும் முந்தையதா என்னும் ஆய்வும், அது செவிவழிச்செய்தியாக மக்களிடத்தில் புழங்கி எப்போது அது படைப்பாக உருப்பெற்றது என்ற வகையிலெல்லாம் ஆய்வுகள் நிகழ்ந்த வண்ணமிருக்கிறது. மக்கட்பெயருள் இவற்றை வைத்தெண்ணும்பொழுது மரபை ஒட்டி ஒழுகி வந்ததை அது புலப்படுத்துகிறது. இப்பெயர்கள்,
“வழங்குவில் தடக்கை மறக்குடி” (சிலம்பு.வே.வ.6)
“கானவர்” (சிலம்பு.வே.வ.9, கொடை.7)
“வல்வில் எயினர்” (சிலம்பு.வே.வ.13)
“எயினர்” (சிலம்பு.வே.வ.20, கொடை.12, பலிக்கொடை.6,12)
“எய்வில் எயினர்” (சிலம்பு.வே.வ.குலச்சிறப்பு.8)
“வேய்வில் எயினர்” (சிலம்பு.வே.வ.குலச்சிறப்பு.12)
“எயினர்கள்” (சிலம்பு.வே.வ.அவிப்பலி.8)
“வல்வில் எயின்” (சிலம்பு.வே.வ.பலிக்கொடை.2)
“பெருவிறல் எயின்” (சிலம்பு.வே.வ.அவிப்பலி.7)
“எயிற்றியர்” (சிலம்பு.வே.வ.கொற்றவைகோலம்.20, கொடை.12)
“இளமா எயிற்றி” (சிலம்பு.வே.வ.கொடை.1)
“விற்றொழில் வேடர்” (சிலம்பு.வே.வ.குலச்சிறப்பு.4)
என்னும் பாடல் வரிகள் வழியாக வேடர்களின் பல்வேறு பெயர்கள் வெளிப்படுகின்றன. இளங்கோவடிகள் மரபுப்பெயர்களை ஆங்காங்கேச் சுட்டிச்சென்றுள்ளார்.
வேடர்களின் தொழில்
வேடர்களுக்கு வேட்டையாடுவது முதன்மைத் தொழில். வேட்டையில் பெற்ற உணவை பகிர்ந்து உண்டனர். மழை வளம் நிறைந்த மருத நிலங்களில் வாழும் உழவர்கள் கலைப்பை கொண்டு ஏர் ஓட்டி, பயிரை விளைவித்து வாழ்வர். மழை வளம் இல்லாத பாலை வெளியில் வாழுகின்ற வேடுவர்கள், வில்லைக் கலப்பையாகப் பயன்படுத்தி உணவை ஈட்டுவர். கானவரின் தொழிலுக்கு வில் முதன்மையான கருவி. விற்றொழில் வேடர் என்றெல்லாம் அழைக்கப் பெற்றமை வில்லேந்தி விலங்கை வேட்டையாடியும், தேனெடுத்தும் வழிப்பறியிலும் உணவை சமைத்துக்கொண்டமை வெளிப்படுகிறது.
“மறங்கொல் வயப்புலி வாய்பிளந்து” (சிலம்பு.வே.வ.கொற்றவை கோலம்.7)
“ஆறெறி பறை” (சிலம்பு.வே.வ.கொற்றவை கோலம்.20)
“இட்டுத்தலை எண்ணும்” (சிலம்பு.வே.வ.கொற்றவை கோலம்.1)
என்றெல்லாம் மறவர்களின் வேட்டையும் வீரமும் பதிவு செய்யப்பெற்றுள்ளது.
உணவு
வேடர்கள் வேட்டையில் பெற்ற விலங்கினங்களைச் சோறாக்கி உண்டனர். இந்நாளில் பிரியாணி என்னும் உணவு அந்நாள் புலால் உணவே. ஊனைச் சோற்றில் புழுக்கி உண்ணுதல். அவரை, துவரை முதலியவற்றின் அவியலையும் இவர்கள் விரும்பி உண்டனர். இச்செய்தியை,
“புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்” (சிலம்பு.வே.வ.கொற்றவ கோலம்.18)
வேடுவர்கள் கள்ளை விரும்பி உண்டனர். வேட்டுவக்குல பெண்கள் கள்ளை தெருக்களில் விற்றனர் என்ற செய்தியும் பெறப்படுகிறது. அவ்வாறு கள் விற்கும் பெண்களைக் கள்விலையாட்டி என்று அழைத்தனர். இதனை,
“கள்விலை யாட்டி மறுப்
பொறா மறவன் கைவில் ஏந்திப்... ...” (சிலம்பு.வே.வ.வெட்சிப்புறநடை.1)
“கள்விலை யாட்டி நல் வேய்தெரி கானவன்” (சிலம்பு.வே.வ.கொடை.7)
“மட்டுஉண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின்” (சிலம்பு.வே.வ.18)
என்ற வரிகள் மூலம் மறவர்கள் கள் உண்ணும் நிகழ்வு, எயிற்றியர் கள் விற்கும் செய்தி, வேடர்கள் வேட்டை என்னும் நிகழ்வுகளைச் சிலப்பதிகாரம் பதிவு செய்திருக்கிறது.
ஆடை அணிகலன்கள்
வேடர்கள் தாங்கள் வேட்டையாடிக் கொன்ற யானை மற்றும் புலியின் தோல்களை ஆடையாக அணிந்திருந்தனர், குமரிக்கு ஆடை அணிகலன் சூட்டும் நிகழ்வில் மறவர்களின் உடையணி முறையை அறிந்து கொள்ள முடிகிறது. இதனை,
“வரியும் புள்ளியும் மயங்கு வான்புறத்து.
உரிவை மேகலை உடீஇப் பரிவோடு” (சிலம்பு.வே.வ.கொற்றவை கோலம்.10-11)
என்ற பாடல் வழியும் கொற்றவையின் ஆடையினைச் சுட்டுமிடத்தில்,
“ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரிஉடுத்து” (சிலம்பு.வே.வ.தாயே.நிற்பாய்.1)
என்றும் சொல்லி நிற்பது வேடர்களின் ஆதிநாள் ஆடை எது என்பதை அடையாளப்படுத்திக் காட்டுகிறது. மேலும், அணிகலனாகக் காட்டும் நிலையில்,
“சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றிக்
குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி,
இளைசூழ் படப்பை இழுக்கிய ஏனத்து
வளைவெண் கோடு பறித்து மற்றது
முளைவெண் திங்கள் என்னச் சாத்தி
மறம்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற
மாலை வெண்பல் தாலிநிரை பூட்டி” (சிலம்பு.வே.வ.கொற்றவை கோலம்.2-9)
என்ற செய்யுள் வரிகளின் வழியாக இளங்கோவடிகள் புலப்படுத்துகிறார். ஆதிநாள் முதற்கொண்டு மனிதனின் ஆடையும் அணிகலனும் மாற்றமும் ஏற்றமும் பெறுவதற்கு முன்பிருந்த நிலைப்பாட்டை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. நாகரிக மனிதனின் ஆடை நவீன வடிவத்திற்கு வருவதற்கு முன்னர், இயற்கையில் கிடைத்தவற்றை அவன் தனக்கான ஒன்றாக மாற்றிக் கொண்டது புலப்படுகிறது.
கடவுள்
வேடுவர்களின் கடவுள் கொற்றவை. இவளைப் போர்க்கடவுள் என்றும் சுட்டுவர். ஆறலைத்துண்ணும் தம் தொழில் வளம் பெருகத் தங்கள் குலத் தெய்வமாகிய கொற்றவையை வணங்கும் பழக்கம் உடையவர்களாக வேடர்கள் உள்ளனர். கொற்றவைக்கு உயிர்ப்பலி கொடுக்காத நிலையில், தங்களுக்கு வேட்டைப்பலன் கிட்டாதென நம்பினர். இதனை,
”நடுஊர் மன்றத்து அடிபெயர்த்து ஆடிக்
கல்என் பேர்ஊர்க் கணநிரை சிறந்தன
வல்வில் எயினர் மன்று பாழ்பட்டன
மறக்குடித் தாயத்து வழி வளம் சுரவாது
அறக்குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும்
கலையமர் செல்வி கடன் உணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போள் அல்லள்” (சிலம்பு.வே.வ.11-17)
என்ற செய்யுள் வரிகள் வேடுவர்களின் நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. கொற்றவைக்குத் தங்கள் தொழிலின் வளர்ச்சிக்காகத் தங்கள் தலையை அறுத்து பலியாகக் கொடுக்கும் தன்மை உடையவர்கள் இத்தகு வேடர்கள். இச்செய்தியை,
“இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது
சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியை” (சிலம்பு.வே.வ.கொற்றவை கோலம்.1-2)
“மிடறுஉகு குருதி கொள் விறல்தரு விலையே
... ... ... ... ... ... ... ... ...
நிணன் உகு குருதி கொள் நிகர் அடு விலையே” (சிலம்பு.வே.வ.அவிப்பலி.17-18)
என்றெல்லாம் இளங்கோவடிகளால் சுட்டிக்காட்டப் பெற்றுள்ளது. ஐயை கோட்டம் என்பது கொற்றவையின் கோயில். அங்கு வேட்டுவ முதுமகளுக்கு கொற்றவைக் கோல அலங்காரம் செய்து வண்ணமும் சுண்ணமும், தண்ணறுஞ் சாந்தமும் புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் மேவிய விரையும் படைத்து பறை இசைக்க கொம்பு முழங்க கொற்றவையை வணங்குவர் (சிலம்பு.வே.வ.கொற்றவை கோலம்.17-22)
நுண்கலை
வேடர்கள் துடி, யாழ், பறை முதலிய இசைக்கருவிகளை இசைக்கும் திறன் படைத்தவர்களாக இருந்தனர். பறை இசை வழிப்போக்கர்களைத் துன்புறுத்தும் பொழுதும் இசைத்தனர். சின்னம் என்னும் இசைக்கருவியை ஊதுவர். கொம்பு, குழிகுழல், மணி ஆகியனவும் வேடர்களின் இசைக்கருவிகளாக இருந்தமை சிலம்பில் பதிவு செய்யப்பெற்றுள்ளது. இத்தகையச் செய்தியினை,
“ஆறெறி பறையும் சூறைச் சின்னமும்
கோடும் குழலும் பீடுகெழு மணியும்
கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் நிறீஇ” (சிலம்பு.வே.வ.கொற்றவை கோலம்.21-23)
என்ற பாடல் வரிகள் எடுத்துக் காட்டுகின்றன. இங்கு இவர்கள் மட்டுமல்லாது துடியனும் பாணனும், இவர்களோடு சேர்ந்து இசைத்தமையும் உணரத்தக்கது.
“கொல்லன் துடியன் கொளைபுணர்
சீர் வல்ல நல்லியாழ்ப் பாணர்
தம் முன்றில் நிறைந்தன! “ (சிலம்பு.வே.வ.கொடை.3-4)
அமைதியாய் இருக்கும் ஊருக்குள் அச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம் துடியை இசைத்துப் பொருள்களை கவரும் வழக்கம் உள்ளவர் வேடர்கள்.
“துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு கண்ணில் எயினர்” (சிலம்பு.வே.வ.பலிக்கொடை.6-7)
என்ற செய்தி இளங்கோவடிகள் பலவாறும் பதிவு செய்துள்ளார்.
முடிவுரை
சிலப்பதிகாரத்தின் ஒரு சிறு பகுதியாக (காதை) வேட்டுவரி இருந்த பொழுதினும், அது ஐந்து நில மக்களுள் ஒரு சாரர் வாழ்வை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறது. அவர்களின் வாழ்வியலைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. முதற்பொருளும் கருப்பொருளும் வேடர்களின் வாழ்க்கையைப் புரிந்துணர்வுக்கான கருத்தியலாக பிரதிபலிக்கும் வண்ணம் இளங்கோவடிகள் எடுத்தாண்டுள்ளார். கடவுள் முதற்கொண்டு நம்பிக்கைகள் வரையிலும் புரிந்து கொள்ள முடிகிறது. காதைகளின் பலவிடங்களில் ஆசிரியர் மரபுசார் மக்கள் வாழ்வைப் பதிவு செய்ய முற்படுகிறார். அவ்வாறே வேட்டுவவரியில் வேடர்களின் வாழ்வியல் இடம் பெற்றுள்ளது. வேளாண் மக்களாய் பரிணமிக்கும் முன்பு மனிதன் வேட்டை மனிதனாய் இருந்தான். சிலம்பு காட்டும் வேடர்கள் விலங்கை வேட்டையாடுதல் மட்டுமன்றி வழிப்பறி செய்தனர். ஊருக்குள் சென்று மக்களை அச்சுறுத்திக் கொள்ளையடித்தனர்.
துணை நூல்
சிலப்பதிகாரம், புலியூர்க்கேசிகன் (உ.ஆ.), பாரி நிலையம், சென்னை. மு.ப.சூன்.1958.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.