குறுந்தொகைப் பாடல்களில் உளவியல் சார் மொழிபு உத்திகள்
முனைவர் து. ராஜம்மாள்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
முன்னுரை
தமிழிலக்கிய ஆய்வுக்களம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. சங்க இலக்கியம் பண்டைய தமிழ் நாகரிகம், மொழிச் சிறப்பு முதலானவற்றை அறிய விரும்புவோருக்குச் சான்றாகவும், செய்தி ஊற்றாகவும் அமைகிறது. இவ்விலக்கியம் சமுதாயத்தை வெளிப்படுத்தும் படிமக் கலங்கள் என்று கே.ஆர். நீலகண்டசாஸ்திரி, க. கைலாசபதி, கார்த்திகேசு சிவதம்பி போன்ற அறிஞர்கள் கருதுவர். இப்பின்புலத்திலேயே தமிழ் இலக்கியத் திறனாய்வுக் கோட்பாட்டை மேலை நாட்டறிஞர்தம் வரவு உணர்த்தியது. இருபதாம் நூற்றாண்டில் இலக்கியக் கொள்கைகள், கோட்பாடுகள் என்ற புதுவகைச் சிந்தனைகள் தோன்றின. தமிழாராய்ச்சி வளர்ச்சியில் தமிழியல் ஆய்வுகள் இருபத்தியோராம் நூற்றாண்டில் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வருகிறது. அத்தகைய பரிமாணங்களில் ஒன்று தான் “உளவியல் சார் மொழிபு உத்திகள்”. இதனைக் குறுந்தொகையில் குடவாயிற்கீரத்தனார் பாடல்களைக் கொண்டு ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
உளவியல்
மனித மனமே இலக்கியத்தின் வற்றாத ஊற்றுக் கண் அகத்திணைப் பாடல்கள் அனைத்துமே உள்ளத்து உணர்வுகளின் மொழி வெளிப்பாடுகளேயாகும். பேராசிரியர் ரெனிவெலாக்கின் கூற்றுப்படி இலக்கிய உளவியலை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
* படைப்பாளி உளவியல்
* படைப்பாக்க உளவியல்
* இலக்கிய உளவியல்
* அவையினர் உளவியல்
படைப்பாக்க உளவியலென்பது, ஒரு படைப்பாளியின் உளவியலுக்கும் அவனது படைப்பின் உருவாக்கத்திற்குமிடையே உள்ள வேறுபாட்டினை அறிய முற்படுவதாகும். எது ஒருவனைப் படைப்பாளி ஆக்குகிறது. அவனுக்கு அகத்தெழுச்சி (inspiration) எவ்வாறு உண்டாகிறது என்ற கேள்விகள் உளவியல் சார்ந்தவையாகும்.
உளவியலும் மொழியியலும்
உளச் செயல்பாட்டின் முப்பெரும் களங்களாவன னை உள்ளுணர்ச்சித் துடிப்புகளின் உலைக்களன், Ego புற உலகின் தொடர்பினால் செப்பனிடப்பட்ட (id)ன் கூறாகும். நனவு மனம் அமுக்கம் மற்றும் உயர்வழிப்படுத்தல் ஆகிய இரண்டும் ஈகோவின் தற்காப்பு முறை, The Super Ego சமூக அபத்தங்களுக்கேற்ப “இட்” மீது அகத் தணிக்கையைப் பயன்படுத்தும் மனக்களம்.
நனவிலியின் இயல்பு தான் சொல்லாடல்களின் இலக்கண வரம்பு ஆகும். நனவிலி “மொழி” போன்ற கட்டமைப்பு கொண்டது. (unonscious is structural like the language) நனவிலி என்று ஒன்று பிறந்தவுடனேயே வேட்கைகள் அதில் அமுக்கப்படுகின்றன. அவை உருவகங்களாகப் பதிவாகின்றன. உருவகத் தன்மையோடு (Metaphorical nature) உருவக மொழியாக (Metaphorical language) இச்சொல்லாடல்கள் அமைகின்றன.
மனித மனம் சொல்வதையெல்லாம் மொழியைக் கொண்டு சொல்ல வைத்தார்கள் (to make the language speak what the mind speaks) சங்க இலக்கியங்களில் காணப்படும் தனிக் கூற்றுகளும், உள்ளுறையும், இறைச்சியும் நனவிலியின் உருவகத் தன்மையை வெளிப்படுத்தப் பயன்பட்ட உளவியல் சார் மொழிபு உத்திகளாகும்.
* ஒற்றைபரிமாணப் பார்வை (அ) ஒற்றை நனவு உத்தி
* பல்பரிமாணப் பார்வை
* இறை பரிமாணப் பார்வை
* நனவோடை உத்தி
* நேர் அகத் தனிப் பேச்சு
* அயல் அகத் தனிப் பேச்சு
* உரையாடல்
போன்றவை மொழிபு உத்திகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறுந்தொகையில் குடவாயிற்கீரத்தனார் மூன்று பாடல்களைப் படைத்துள்ளார். அம்மூன்றும் பாலைத் திணையைக் காட்சிப் படுத்துவதாக அமைந்துள்ளது.
இறைச்சி
பொருள் வயிற் பிரிந்த தலைமகனை நினைத்த தலைமகள் தோழிக்குத் தன் ஆற்றாமையைக் கூறுகின்றாள். அவ்வாற்றாமையை உரைக்கும் போது தலைவன் சென்ற பாலை நில நிகழ்வுகளை நுண்ணிதாக “இறைச்சி” என்னும் மொழிபு உத்தியால் எடுத்துரைக்கின்றார். அதனை,
“கானயானை தோனயந் துண்ட
பொரிதாள் ஓமைவளி பொரு நெடுஞ்சினை
அலங்கல் உலவையேறி ஒய்யெனப்
புலம்புதரு குரல புறவுப் பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச்” (குறுந்.79)
என்ற பாடலில் தலைவன் சென்ற பாலை வழியில் கடுமையான வெம்மை காரணமாகக் காட்டில் வாழும் யானை ஓமை மரத்தின் பட்டைகளை உரித்து உண்ணும். அம்மரத்தின் பெரிய கிளையில் பெண்புறாக்கள் தனிமையும் வருத்தமும் தோற்றுவிக்கும் குரல் உடையனவாய் ஆண் புறாக்களை அழைக்கும். அவ்வகையான குடிகளையுடைய கண்ணே தலைவன் தங்கிவிட்டாரோ எனக் கூறி தலைவி வருந்துகின்றாள். இங்கே தலைவியின் தனிமை உணர்வினை பெண் புறாவின் உணர்வோடு ஒப்பிட்டுக் கூறுகின்றார். அப்பெண்புறாவினைக் காணும் தலைவன் தலைவியை எண்ணி விரைந்து வருவானெனப் புலவர் கூறுவது புறவெளியில் தலைவியின் பிரிவு கூறிப் பின் அகவெளியில் அன்பினைப் படைக்கின்றார். இறைச்சிப் பொருளாக பெண்புறாவின் அலறலோடு தலைவியின் புலம்பலை ஒப்புமை செய்கின்றார்.
உருவகம்
தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் வயிற் சென்றது கண்டு தோழி ஆற்றுவிக்கின்றாள். ஆனால் தலைவி தன் நிலையைக் கூறும்போது வெண்மணற்பரப்பில் தழைத்த பசிய அடியையும் கருக்கினையும் உடைய திரண்ட பனையினது உச்சியின் கண்ணே உள்ள வெள்ளிய மடலிலே வைத்த வெள்ளிய பூவினைச் சூடிக் கொண்டு மலைகள் பொருந்திய காட்டிடத்தே நந்தலைவர் சென்று விட்டார். அதனை,
“வெண்மணற் பொதுளிய பைங்கால் நருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோட்டு
அத்த வேம்பின் அமலை வான்பூச்
சுரிஆர் உளைத்தலை பொலியச் சூடிக்
குன்று தலை மணந்த கானம்” (குறுந்-281)
என்ற பாடலில் குறிஞ்சி திரிந்த பாலை நிலத்தினை உருவகம் செய்கின்றார். “குன்று தலை மணந்த கானம்” என்ற வரி இதனை புலப்படுத்துகின்றது. தலைவியின் மனநிலையை புலவர் காட்சிப்படுத்துகின்றார். இரு பெண்களின் உரையாடலில் தலைவியின் மனநிலை குன்று தலை மணந்த கானம்போல தலைவனைப் பிரிந்து வெம்மையாகத் தோன்றுகின்றதென்றே தன் உத்தியின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
உவமை
தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது. தோழி தலைவியை நோக்கி நம் தலைவர் நின்னைத் தம்முடன் அழைத்துச் செல்லுதற்குடம்பட்டார். இனி அவரோடே வாகை நெற்றைக் கோடைக் காற்று அழைத்து ஒலிக்கும் பாலை நிலத்தில் செல்வோமாக என்றாள். அதனை,
“அந்த வாகை அமலை வால் நெற்று
அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக்
கோடை தூக்கும் கானம்
செல்வாம் தோழி நல்கினர் நமரே” (குறுந்-369)
என்ற பாடலில் நெற்றைக் கோடை தூக்கும் என்றது தலைவனின் கருத்திற்கு உடன்பட்டு தலைவி தலைவனுடன் உடன்போக்குச் செல்லுதலைக் குறிக்கும். இங்கே வாகை நெற்றுக்கு, பல்வேறு பொருட்கள் உவமை செய்யப் படுகின்றது. தலைவியின் காலிலுள்ள சிலம்பொலி, வாகை நெற்றொலி, தலைவியின் மனநிலை, காற்றின் வேகமென பல்வேறான நிலையில் வினை, மெய், உரு உவமையைப் புலப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. பண்டைய பண்பாட்டுத் தன்மையும் வெளிப்படுத்துகின்றது. ‘சிலம்பு கழிதல்’ திருமணமான பின்பு பெண் சிலம்பு அணிவதில்லை என்ற மரபையும் குறிப்பாக உணர்த்துகின்றது.
குடவாயிற் கீரத்தனாரின் பாடல்கள் அகத்திணை மாந்தர்களின் மாட்சியை விளக்குகின்றன. சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டும் திறம் படைத்தது. உணர்ச்சியும் அறிவும் காட்டும் வகையுடையன முதல் கருஉரிப் பொருள்களின் நுணுக்கமும் நாட்டவல்லன உரிப் பொருளுக்கு ஏற்ப இயற்கையை வடித்துக் காட்டும் தன்மையுடையன. நில, கால, இயற்கை அறிவு மக்கள் வாழ்க்கையை உணர்ந்து உணர்த்தும் அறிவு. இவர் தம் பாடலில் அறிய முடிகிறது. ஆசையின் மீதேறிய மொழி மனமாகச் செயற்படுகிறது.
முடிவுரை
உணர்வுப் பூர்வமாகவும் மொழிபு உத்திகளான இறைச்சி, உவமை, உருவகம், உரையாடல் போன்றவை உளவியலோடு இணைந்தவை. இதனை குடவாயிற் கீரத்தனார் தம் பாடலில் படைத்துள்ளார். இவ்வுத்திகளே படைப்பிற்கு வெளியே நிற்கும் வாசகனுக்கு படைப்பாளியோடும், கதை மாந்தரோடும் பயணிக்க உதவுகிறது. குடவாயிற்கீரத்தனார் சிக்கலான உளவியல் சூழல்களையும் மிக நுணுக்கமாகச் சித்தரித்துள்ளார்.
பார்வை நூல்கள்
1. பொ. வே. சோமசுந்தரனார்(உ.ஆ), குறுந்தொகை
2. ஆஸ்டின் வாரன் ரெனிவெல்லாக் தமிழில் குளோற சுந்தரமதி, இலக்கியக் கொள்கை
3. அமிர்தகௌரி, சங்க இலக்கியத்தில் உரையாடல்
குறிப்பு:கட்டுரையாசிரியர் பார்வை நூல்களில் நூலாசிரியர், நூலின் பெயர் ஆகியவற்றை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார். பதிப்பகம், ஊர், பதிப்பு, ஆண்டு போன்றவைகளையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும். ஆசிரியர்
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.