திருப்பாவை காட்டும் கண்ணன் வரலாறு
முனைவர் அரங்க. மணிமாறன்
முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, செங்கம் - 606 701
முன்னுரை
தமிழ் மொழியை “பக்தியின் மொழி” என்றார் தனிநாயக அடிகளார். ஆறாம் நுாற்றாண்டு தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டு வரை பக்தி இலக்கியங்கள் பக்தியை தமிழோடு வளர்த்தன. “சங்க காலத்தையும் நீதிநுால் காலத்தையும் அடுத்து தெளிவாகக் காணப்படுவது பக்தி இலகியக் காலம் ஆகும். தமிழ்நாட்டில் சைவ சமயப் பெரியவா்களான நாயன்மார்களும், ஆழ்வார்களும் தோன்றிப் பக்திப் பாடல்கள் பாடி ஊர் ஊராகச் சென்று தம்தம் சமயங்களைப் பரப்பி வந்தார்கள்” (1) என்கிறார் தமிழறிஞர் மு. வ.
பக்தி இயக்கத்தின் முன்னோடியாகக் காரைக்காலம்மையார் விளங்குகிறார். சைவமும் வைணவமும் முன்னோடி சமயங்களாக வளா்ந்தன. சைவத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்களும் தோன்றி இறைச்சிந்தனையை வளர்த்தனா். அவா்களுள் ஒரே ஒரு பெண் ஆழ்வாராகிய ஆண்டாள் தமது திருப்பாவையில் திருமாலாகிய கண்ணனின் வரலாற்றைக் கூறியுள்ளமை பற்றி இக்கட்டுரை வழி அறியலாம்.
ஆண்டாள்
திருவில்லிபுத்துாரில் வாழ்ந்தவர் பெரியாழ்வார். அத்தலத்தில் உள்ள இறைவன் ஸ்ரீவடபத்ரசாயி ஆவார். பெரியாழ்வார், அக்கோயிலில் நந்தவனம் அமைத்து, இறைவனுக்குப் பிடித்தமான திருத்துழாய் முதலிய மலா்களை மாலையாகத் தொடுத்து சூட்டி வந்தார். கண்ணனைத் தம் பாடல்களில் குழந்தையாக்கித் தாலாட்டு பாடினார். அப்போது, நந்தவனத்தில் துளசிச் செடியின் அடியில் கண்டெடுத்து வளா்க்கப்பட்ட மகள் ஆண்டாள். அம்மகளுக்கு கோதை எனப் பெயர் சூட்டி வளா்த்து வந்தார்.
“கலியுகத்தில் மண் மகளின் அமிசமாய்ப் பெண் குழந்தை பிறந்தது. அக்குழவியைத் தனது மகளாகப் பாவித்து கோதை எனப் பெயரிட்டு வளர்க்கலானார்” (2) என்கிறார் திருமதி. பிரேமா விநாயகம்.
இதனை பாவை;
“… … … … … … … … … … … … … … … … … அணிப்புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டா்பிரான் கோதை” (3)
என்று வெளிப்படுத்துகிறது.
புவி மகளின் அம்சமாகக் பிறந்தவள் ஆண்டாள். குழவிப் பருவம் முதல் தன் தந்தையாகிய பெரியாழ்வார், கண்ணனின் பெருமைகளையேப் பேசி வளர்த்ததால் கண்ணன் மீது தீராத காதல் கொண்டாள் ஆண்டாள். இறைவனுக்குத் தான் தொடுத்த மலா்மாலைகளை முதலில் தான் சூடி அழகு பார்த்த பின் இறைவனுக்கு வழங்கினாள்.
ஒரு நாள் இறைவனுக்கான மாலையில் பெண்ணின் மயிரிழை இருப்பதைக் கண்டு தூய்மை கெட்டதாக மனம் வருந்தினார் பெரியாழ்வார். ஆனால் இறைவன் ஆண்டாள் சூடித்தந்த மாலைகளே, தமக்கு நனி விருப்பம் என்றார். அதனால் ஆண்டாளும், “சூடி தந்த சுடா்க்கொடி” எனப் பெயர் பெற்றாள்.
பருவம் அடைந்த பின்னரும் “மானிடர்க்கென்று பேச்சுபடின் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே மணிவண்ணனையே மணப்பேன்” என்று கொள்கையில் நின்றாள்.
“ஊனிடை ஆழிசங்கு உத்தமா்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்” என்று கண்ணனின் மீது ஆறாக்காதல் கொண்டாள். மானிடப் பெண் எவ்வாறு இறைவனை மணக்க முடியும்? இக்காதல் எவ்வாறு ஈடேறும் என விசனம் கொண்டார்.
பாண்டிய நாட்டிறையோனாகிய வல்லபதேவன் கனவிலும் தோன்றி “நீ பலருடன் ஸ்ரீ வில்லிப்புத்தூருக்குச் சென்று பட்டநாதருடைய மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் திருவரங்கத்திற்கு அழைத்து வருவாயாக” (4) என்று அருளியதாக மேற்கோள் காட்டுகிறார் திருமதி பிரேமா விநாயகம்.
மணக்கோலத்துடன் ஆண்டாளை அழைத்து வருக என அவரும் ஆண்டாளை அவ்வாறே அழைத்துச் சென்றார். அம்மணக்கோலத்துடன் இறைவனோடு கலந்ததாக இலக்கியங்கள் காட்டி நிற்கின்றன. “நாச்சியார்” என்றும் பாவை பாடியதால் “பாவைப் பாடிய பாவை” எனவும் சிறப்பிக்கப்பட்டாள். அச்சிறப்புடை ஆண்டாள் இயற்றிய தெய்வப் பனுவல்களாவன முப்பது பாடல்களாலான “திருப்பாவையும்”, 140 பாடல்களாலான “நாச்சியார் திருமொழியும்” தமிழின் பெருமைக்கு அணிவிளக்காய் நின்று புகழ் பரப்புகின்றன. ஆண்டாளின் வரலாற்றைக் கிருஷ்ணதேவராயா் “ஆமுக்த மால்யதா” என்ற காப்பியமாகத் தெலுங்கில் பாடியுள்ளார்.
பாவை நோன்பு
“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்கிறார் கண்ணன் கீதையில். சைவமாயினும் வைணவமாயினும் மார்கழி மாதம் பக்திக்குரிய புனித மாதமாக விளங்குகிறது. அத்தகு மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையில் எழுந்து, நீா் நிலைகளுக்குச் சென்று புனித நீராடி, ஆற்று மணலில் மணலாலான பாவை செய்து அப்பாவையைக் கண்ணனாக உருவகித்து வணங்கினா். அக்கண்ணனது பெருமைகளைக் கூட்டாகச் சோ்ந்து பாடி வழிபட்டனா்.
தனக்குப் பிடித்த கணவன் வாய்ப்பதற்கான நோன்பாக இதை நோற்றனா்.
பாகவதத்தில் இதை காத்யாயினி விரதம் என்றனா். கிருஷ்ணாவதாரத்தில் ஆயா்பாடி கோபிகையா் கண்ணனை அடைய பாவை நோன்பு மேற்கொண்டனா். சங்க இலக்கியக் காலத்திலும் பரிபாடலில் தைநீராடல் அல்லது அம்பாஆடல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பாவை
கண்ணனைக் கணவனாக அடைய நினைத்த ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்துாரை ஆயா்பாடியாகவும், தன்னைக் கோபிகையாகவும் பாவித்து நோன்பு நோற்றாள். மாதங்களில் புனிதமான மாதமாகிய மார்கழியில் அதிகாலையில் துயில் எழுந்து, தன் தோழியா்களையும் அழைத்துக் கொண்டு நீராடி, கண்ணனைப் பாடி அருள் பெற அழைக்கிறாள்.
திருப்பாவையில் மார்கழி மாத முப்பது நாட்களும் பாடக்கூடிய முப்பது பாடல்கள் உள்ளன.
அதிகாலையில் துயிலெழுதல், நீராடி பாவை செய்து விளக்கேற்றி வழிபடுதல், நெய், பால் முதலியவற்றைத் தவிர்த்தல், கண்களுக்கு மையிடாமை, மலா்சூடி கூந்தல் முடியாமை, இறைவனின் பெருமைகளைத் தவிர வேறெந்த புறம்பேசாமை ஆகிய நோன்பு முறைமைகளை மேற்கொண்டனா்.
இந்நோன்பினால் விரும்பிய கணவன் கிடைப்பான். நாடெல்லாம் மழை பொழியும், வளம் செழிக்கும். அது மட்டுமன்றி பிள்ளைப்பேறு, செல்வவளம் என அனைத்து நலன்களையும் இந்நோன்பு அளிக்கும் என்பது நம்பிக்கை கொள்கிறாள்.
“ஐயைந்தும் ஐந்தும் அறியா மானிடரை வையம் சுமப்பது வம்பு” என்னும் வைணவ கருத்து, திருப்பாவையின் ஏற்றத்தினை எடுத்துரைக்கும்.
கண்ணன் வரலாறு
இறைவனாகிய திருமால் இப்புவியில் பத்து தோற்றங்களை எடுத்தார். அதில் ஒன்று கிருஷ்ணனாகிய கண்ணன் என்பதாம். கம்சன் என்பவனை வதம் செய்யவே இத்தோற்றம் எடுத்தார்.
திருப்பாவையில் கண்ணன் யது குலத்தில் பிறந்து, யாதவ குலத்தில் வளா்ந்த விதம் கூறப்படுகிறது. கம்சனின் சுயநலத்தால் வசுதேவா் - தேவகி வயிற்றில் பிறந்து நந்தகோபா் - யசோதையிடம் வளா்தல், குழந்தையான கண்ணனைக் கொல்ல யானை, குதிரை, பறவை, சக்கரம் வடிவிலான அரக்கா்களையும், பூதகி முதலிய அரக்கியரையும் ஏவிக் கொல்லத் திட்டமிடுதலும், கண்ணன் மல்லா்களை வென்றமை, பாற்கடலில் துயின்றமை, கோவா்த்தன மலையை எடுத்து, உலகைப் பெருமழையினின்று காத்தமை, கண்ணனின் சங்கு- சக்கரம் ஆகியவற்றின் பெருமைகள், இராவணனை அழித்தமை, மாவலியிடம் மூவுலகை பெற்றமை ஆகியவற்றைக் கண்ணனின் வரலாறாக அவன் பெருமை பேசும் முகமாக கூறப்பட்டுள்ளது.
கஞ்சன் வயிற்று நெருப்பு
கம்சனின் தங்கை தேவகி. வசுதேவருக்கு மணம் செய்து வைக்கிறான். சோதிடா்கள் உன் தங்கையின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால் உனக்கு மரணம் ஏற்படும் எனக் கூறியதால் திருமணம் ஆன வசுதேவரையும், தேவகியையும் சிறை வைக்கிறான். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையினையும், ஈவு இரக்கமின்றி கொல்கிறான். எட்டாவது குழந்தை பிறந்த போது, அதனையும் கொன்று விடுவான் எனக் கருதி, அசரீரி கூறியதால் ஆயா்பாடியில் நந்தகோபா் யசோதையிடம் வளா்வதற்காகப் பிறந்த அன்றே பெருமழை இரவிலும் கூடையில் சுமந்து ஆதிசேசன் குடையாக காக்க வந்து சோ்கிறான்.
ஆயா்கள் மாசற்ற தூய வாழ்வினா். இதனை, சிலப்பதிகாரத்திலும் மாதரி என்ற இடைக்குல மடந்தையிடம் கண்ணகியை அடைக்கலமாக்கும் போது,
“ஆக்களை காத்து ஆப்பயன் அளிக்கும் கோவலா்
வாழ்க்கையில் கொடும்பாடில்லை” (5)
என்ற வரிகளில் இளங்கோவடிகள் உணா்த்துகிறார்.
“ஆயா் குலத்தினில் தோன்றிய அணிவிளக்கை” என்றும்
“சீா்மல்கும் ஆய்பாடி“ (6) என்றும்
குற்றமொன்றிலாத கோவலர்தம் குலக்கொடியே என்றும்
கண்ணனை ஆயா்குலத் தோன்றலாக கூறுகிறார்.
“ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய்
ஒளித்து வளர தான் தீங்கு நினைந்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே” (7)
என்ற பாவையில் இதனை ஆண்டாள் வெளிப்படுத்துகிறாள்.
கம்சன் ஏவிய அரக்கா்கள்
தன்னைக் கொல்வதற்காகவே அவதாரம் எடுத்த கண்ணனைப் பிறப்பிலேயே அழிக்கக் கருதி, அது கூடாமையால் நந்தகோபன் வீட்டில் வளரும் குழந்தைக் கண்ணனை கொல்லப் பல்வேறு அரக்கா்களை மாயமாகவும், வஞ்சமாகவும் அனுப்புகிறான் கம்சன்.
குவலாயாபீடம் என்னும் யானையை அனுப்புகிறான். வஞ்சமாக வந்த அந்த யானையை மதம் முற்றும் அழியும்படி கொன்றான் என்பதை,
“வல்லானை கொன்றானை மாற்றாரை மாறழிக்க வல்லானை” (8)
என்ற பாவை வரியில் அறிய முடிகிறது. அப்படியும் கொல்ல முடியாத கம்சன் “கேசி“ எனும் அரக்கனை ஏவுகிறான். குதிரை வடிவில் வந்த அவ்வரக்கனை வாயினைப் பிளந்து அழிக்கிறான் கண்ணன். தன்னை எதிர்த்த மல்லா்களையும் அழித்தான். இதனை;
“மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்” (9)
என்ற வரிகளில் வெளிப்படுத்துகிறாள் ஆண்டாள் நாச்சியார்.
பறவை வடிவம் கொண்டு வந்த அரக்கனாகிய பகாசுரனை வாய்பிளந்து அழித்ததனை,
“புள்ளின் வாய் கீண்டானை”
(பாவை.13) என்ற பாவை நமக்கு தேற்றுகிறது.
மேலும் சக்கர வடிவில் வந்த சகடாசூரனை காலாலே உதைத்தழித்தான் கண்ணன்.
“கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி”
“பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி!”
(பாவைகள்.6-24)
என்று பாவை காட்டி நிற்கும்.
கன்றாக உருவெடுத்து வந்த வத்ராசுனை எறிதடியாகக் கொண்டு விளாவின் வடிவாக நின்ற அசுரன் மீது எறிந்தான் என்பதை,
“கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி”
(பாவை.24)
இதோடு இராமவதாரத்தில் தன்னை எதிர்த்த இராவணனை அழித்தமையை,
“சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கினியானை”
“... ... ... ... ... ... பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானை”
“சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி”
(பாவை.15-24)
என்று விளங்கச் செய்கிறது. மேலும், கும்பகர்ணனை,
“... ... ... ... ... ... பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?” (10)
என்று முன் தோற்ற வரலாறும் குறிப்பிடப்படுகிறது.
அரக்கா்களை ஏவிக் கொல்ல முடியாத கம்சன், தாயின் வடிவில் ஒரு பேயை அனுப்புகிறான் அவள்தான் பூதகி.
உலகினில் மிகவும் புனிதமானதும் கலப்படமில்லாதததும் மாசுமறுவற்றதுமாகிய தாயமிர்தப் பாலை நஞ்சாக்கித் தாய்மையை நச்சாக்கிக் கொடுக்க பூதகி எனும் அரக்கியை அனுப்புகிறான் கம்சன். மாயங்களைப் புரிந்து மன மாயைகளைப் பொசுக்க வந்த பரந்தாமன் இம்மாயையையும் உணா்ந்து விடுகிறான். பூதகியின் முலையில் தன் பிஞ்சு வாயை வைத்து நஞ்சினைக் குடிப்பதாய் அவள் உயிரையே உறிஞ்சி முடித்தான்.
“பேய்முலை நஞ்சுண்டு” (பாவை.6) என்று இதனை பாவை காட்டி நிற்கும்.
மூவடியில் உலகளந்தமை
மாவலி சக்ரவா்த்தி உலகம் முழுமையும் ஒரு குடைக்கீழ் கொண்டு ஆண்டு வந்தான். ஆணவ மிகுதியினால் தனக்கு நிகா் யாரும் இல்லையென அகந்தைக் கொண்டான். அவன் ஆணவத்தை நீக்க நினைத்த இறைவன், மிகச்சிறிய வாமனராக அவதாரம் கொண்டு அவனிடம் யாசகம் வேண்டினார்.
“இவ்வுலகம் முழுமை எனதே வேண்டியதைக் கேள்” என்று ஆணவப்பேச்சு பேசினான்.
“மூவடி மண் வேண்டும்!” என வரம் வேண்டினார் இறைவன்.
மூவடி மண்தானே என்று எடுத்துக் கொள் எனக் கூற, தாம் வேண்டும் வரத்தை உள்ளங்கை நீா் வார்த்துத் தாரை வார்த்துத் தரவேண்டும் என்று வேண்டினார். அவ்வாறு நீா் வார்த்துத் தந்த அளவில் வானளாவ நீண்ட திருவிக்கிரமனாக வடிவம் கொண்டார்.
ஒரு அடியால் விண்ணையும், மறு அடியால் மண்ணையும் அளந்து முடித்தார். மூன்றாம் அடிக்கு இடம் எங்கே எனக் கேட்டு நிற்க, வந்தவன் இறைவன், தன் ஆணவத்தை அடக்கி முக்தியளிக்க வந்துள்ளார் என்பதை உணர்ந்து;
“ஐயனே! ஈரேழு உலகமும் எனக்குச் சொந்தம் என்ற அகந்தைக் கொண்டழிந்தேன். இன்று என் அகந்தைக் கிழங்கை அகழ்ந்தீர். மூன்றாமடியை என் தலைமீது வைத்து அருளுக”
என அவ்வாறே மாவலியின் தலைமீது தன் திருப்பாதத்தை வைத்து மாவலிக்கு முக்தியருளினார்.
இதனை ஆண்டாள் தனது திருப்பாவையில்;
“ஓங்கி உலளந்த உத்தமன் போ்பாடி”
என்றும்
“அன்றிவ் வுலகம் அளந்தாய்! அடிபோற்றி!” (11)
என்றும் தனது திருப்பாவைகளில் வெளிக்காட்டுகிறாள்.
குன்று குடை எடுத்தவன்
தேவாதிபதியாகிய இந்திரன் மழைக்கடவுளாவான். உலகிலுள்ளோர் தன்னை வணங்காமல் கண்ணணை வணங்குவதைக் கண்டு வெகுண்ட இந்திரன் உலகம் அழியும் படி பெருமழையைப் பொழிந்தான். உலக உயிர்கள் துன்புறுவதைக்கண்டு கண்ணன் கோவா்த்தன மலையைக் குடையாகப் பிடித்து அப்பெருமழையினின்று காத்தான். இதனை;
“குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி!” (12)
என்று வெளிக்காட்டுகிறாள் ஆண்டாள்.
கண்ணனின் உறவினர்கள்
கண்ணன் வசுதேவா் - தேவகி மகனாய் பிறந்து, நந்தகோபன் - யசோதை மகனாய் வளர்ந்தான். கம்சன் தாய்மாமன். பலராமனின் தம்பி. நப்பின்னை தேவியின் மணாளன்.
“மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
துாயபெருநீா் யமுனைத் துறைவனை
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை” (13)
என்று யமுனை நதி தீரத்தில் உள்ள வடமதுரையில் வசுதேவரின் மகனாகத் தோன்றி, தேவகியின் வயிற்றை விளங்கச் செய்தவன் என்றும்,
“கூா்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்” (பாவை.1)
நந்தகோபன் யசோதையும் மகனாக வளர்ந்தமையும், பெண்கள் துயிலெழுப்பும்போது,
“... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்” (14)
எனப் பலராமனின் தம்பி என்பதையும்,
“கந்தம் கமழும் குழலி!
.................... உன் மைத்துனன் போ்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்”
“கொத்தலா் பூங்குழல் நப்பின்னை”
“செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்” (15)
என்ற பாவைகளில் நப்பின்னையின் கணவன் என்பதையும் ஆண்டாள் வெளிக்காட்டுகிறாள்.
கண்ணன் கருமேனியுடையவன், சங்கு சக்கரம் தரித்தவன், பாற்கடலில் துயின்றவன், சார்ங்க வில்லையுடைவன் என்பன போன்ற பல வரலாறுகளும் பாவைப் பாடலில் விரவிக் காணப்படுவதை அறியமுடிகிறது.
முடிவுரை
மனித நிலை தெய்வ நிலையடைவதைப் பாவை பாடல் உணா்த்துகிறது. ஆன்மா இறைவனிடம் சரணாகதியடைவதை ஆண்டாள் வரலாறு உணா்த்தும். பரமாத்மா திருமால் கண்ணனாக உருகொண்டு மனித வாழ்வியலை வாழ்ந்து மனித குலம் உய்யும்படி செய்தான். கம்சனின் அகந்தை அழித்தான். பாஞ்சாலி மானம் காத்தான். பாரதப் போரை அறத்தின் பக்கம் நின்று தர்மமே வெல்லும் என்பதை நிரூபித்தான். பகவத்கீதை என்னும் வாழ்வியல் தத்துவப் பொக்கிஷத்தை மனித குலத்திற்குத் தந்துச் சென்றான். திருப்பாவை பாகவதத்தின் பின்னிலையாய் நின்று கண்ணன் பெருமை பேசுவதை அறிந்துய்கிறோம்.
அடிக்குறிப்புகள்
1. தமிழ் இலக்கிய வரலாறு, ப.94, வரதராசன். மு, சாகித்திய அக்காதெமி, இரவீந்திர பவன், புதுதில்லி, பன்னிரண்டாம் பதிப்பு 1999.
2. ஆழ்வார்கள் அருளிய திவ்ய பிரபந்தப் பிரவாகம் ப.80, பிரேமா விநாயகம், ஸ்ருதி பதிப்பகம், சைதாப்பேட்டை, சென்னை -15, ஜூன் 2007.
3. திருப்பாவை (திருவெம்பாவை) ப.115, பி.ஸ்ரீ, வாசன் பதிப்பகம் ஆனந்த் சரோவா் அபார்ட்மெண்ட் 117 கச்சேரி ரோடு மயிலாப்பூர் சென்னை-60004. ஐந்தாம் பதிப்பு 2009.
4. ஆழ்வார்கள் அருளிய திவ்ய பிரபந்தப் பிரவாகம் ப.84, பிரேமா விநாயகம், ஸ்ருதி பதிப்பகம், சைதாப்பேட்டை, சென்னை -15, ஜூன் 2007.
5. சிலப்பதிகாரம் அடைக்கல காதை இணைய பக்கம் (சிலப்பதிகாரம்.காம்), மா.பொ.சி பதிப்பகம், மா.பொ.சி அறக்கட்டளை (நாள் 15.12.2018 10.41 மு.ப)
6. திருப்பாவை பாடல்.30 (சங்கத் தமிழ் மாலை முப்பது)- ப.9, ஸ்ரீ.எஸ் கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் -ஆசிரியர் ஸ்ரீ வைஷ்ணவ ஸுதர்சனம், அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-600017. முதல்பதிப்பு 2003.
7. திருப்பாவை பாடல்.25 (திருவெம்பாவை) ப.100, பி.ஸ்ரீ, வாசன் பதிப்பகம், ஆனந்த் சரோவா் அபார்ட்மெண்ட் ,117 கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-60004. ஐந்தாம் பதிப்பு 2009.
8. திருப்பாவை பாடல்.15 (சங்கத் தமிழ் மாலை முப்பது)- ப.64, ஸ்ரீ.எஸ் கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் - ஆசிரியர் ஸ்ரீ வைஷ்ணவ ஸுதர்சனம், அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600017. முதல்பதிப்பு-2003.
9. திருப்பாவை பாடல்.8 (திருவெம்பாவை) ப.42, பி.ஸ்ரீ, வாசன் பதிப்பகம், ஆனந்த் சரோவா் அபார்ட்மெண்ட், 117, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-60004. ஐந்தாம் பதிப்பு 2009.
10. மேலது நூல், திருப்பாவை பாடல்.10 ப.48.
11. மேலது நூல், திருப்பாவை பாடல்கள் 3-24 பக்..21- 96.
12. மேலது நூல், திருப்பாவை பாடல்.24 ப.96.
13. திருப்பாவை பாடல்.5 (சங்கத் தமிழ் மாலை முப்பது)- ப.19, ஸ்ரீ.எஸ் கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் -ஆசிரியர் ஸ்ரீ வைஷ்ணவ ஸுதர்சனம், அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-600017. முதல்பதிப்பு-2003.
14. திருப்பாவை பாடல்.17 (திருவெம்பாவை) ப.42, பி.ஸ்ரீ, வாசன் பதிப்பகம், ஆனந்த் சரோவா் அபார்ட்மெண்ட், 117, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-60004. ஐந்தாம் பதிப்பு 2009.
15. மேலது நூல், திருப்பாவை பாடல்கள்.18-19-20 பக்.74 79 82.
துணைநின்ற நுால்கள்
1. திருப்பாவை” (சங்கத் தமிழ் மாலை முப்பது), ஸ்ரீ.எஸ் கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் - ஆசிரியர் ஸ்ரீ வைஷ்ணவ ஸுதர்சனம், அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-600017. முதல்பதிப்பு-2003.
2. ஆழ்வார் அருளிய திவ்ய பிரபந்தப் பிரவாகம், பிரேமா விநாயகம், ஸ்ருதி பதிப்பகம், சைதாப்பேட்டை, சென்னை -15. ஜூன் 2007.
3. திருப்பாவை திருவெம்பாவை, பி.ஸ்ரீ, வாசன் பதிப்பகம், ஆனந்த் சரோவா் அபார்ட்மெண்ட், 117 கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-60004. ஐந்தாம் பதிப்பு 2009.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.