புறநானூற்றில் பஞ்சபூதங்கள்
முனைவர் இரா. ஜீவாராணி
உதவிப் பேராசிரியர்,
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி.
முன்னுரை
உலகமானது ஐம்பூதங்களால் ஆனது. ஐம்பூதங்கள் என்பதை வடமொழியில் பஞ்சபூதங்கள் என்று குறிப்பிடுவர். ஐம்பூதங்களின் சேர்க்கையைப் பிரபஞ்சம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இவற்றில் சமநிலை இருப்பின் உலகம் வளமானதாகவும், நலமானதாகவும் இருக்கும். மனிதன் இயற்கைக்கு மாறாகச் செயல்படும்போது, ஐம்பூதங்களும் மாற்றத்திற்கும் பதிப்பிற்கும் உள்ளாகின்றன. இப்பிரபஞ்சத்தை அண்டம் என்பர். இவ்வண்டத்தில் உள்ளதே நிலம், நீர், காற்று, நெருப்பு(தீ), ஆகாயம்(வானம்) என்ற ஐம்பூதங்களாகும்.
பூதம் - விளக்கம்
பூதம் என்னும் தமிழ்ச்சொல் பூ, பூத்தல் என்னும் வேர்ச்சொல்லை அடியாகக் கொண்டு தோன்றியது. “பூத்தலும் பயத்தலும் உண்டாதற் பொருள” என்று திவாகர நிகண்டு கூறுகிறது. தமிழ்சசொல் அகராதி “ஆல், இறந்தகாலம், உயிர், ஐம்பூதம், ஐவகை யாகத்துள் ஒன்று, ஒரு தந்திரம், கமுகு, கூந்தற்பனை, சங்கு, சடாமாஞ்சில், சுத்தம், தருப்பை, நரகம்” முதலான பொருள்களைத் தருகிறது.
ஐம்பூதங்கள் குறித்துத் தொல்காப்பியர் கருத்து
"ஐம்பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வானம் இவை அனைத்தும் கலந்து மயங்கி நிற்றலே உலகம் ஆகும்" என்று தொல்காப்பியர் சுட்டுகின்றார். இதனை,
“நிலம் நீர் தீ வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” (1)
என்ற நூற்பா உணர்த்துகிறது. இதில், ‘ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்’ என்ற சொல்லாட்சியில் ‘கலந்த’ என்ற சொல் ஒன்று மற்றொன்றொடு கலந்து நிற்றலைக் குறிக்கும். ‘கலந்த மயக்கம்’ என்ற சொல் ஒன்று மற்றொன்றொடு கலந்து மயங்கி நிற்பதாகக் கூறுகின்றார். அதாவது வேதிவினை புரிவது ஆகும். இவற்றுள் நேர்வினை, எதிர்வினை ஆகிய இருபாற்பட்ட பொருண்மையும் அடங்கியிருப்பது நோக்கத்தக்கது.
"ஞாயிறு திங்கள் சொல் என வருஉம்…” (2)
"மழையென் கிளவி வளியியல் நிலையும்” (3)
"வெயிலென் கிளவி மழையியல் நிலையும்” (4)
"வளியென வருஉம் பூதக்கிளவியும்
அவ்வியல் நிலையல் செல்விதென்ப” (5)
என்று தொல்காப்பியர் நீர், நெருப்பு, காற்று பற்றிக் கூறியுள்ளார்.
புறநானூற்றில் பஞ்சபூதங்கள்
உலகம் என்பது பஞ்சபூதங்களால் ஆனது என்பதனை,
“மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதை வருஉ வளியும்
வளித்தலைஇய தீயும்
தீ முரணிய நீருமென்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல” (6)
என்ற பாடல் அடிகளின் வாயிலாக, மண் திணிந்த நிலம், நிலம் ஏந்தியிருக்கும் ஆகாயம், ஆகாயத்தின் வழி வரும் காற்று, காற்றில் கலந்து வரும் தீ, தீயின் முரணிய நீர் ஆகிய பஞ்சபூதங்கள் கலந்தது உலகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகாயம்
ஆகாயம் மற்ற நான்கு பூதங்களான காற்று, தீ, நீர் மற்றும் நிலம் ஆகியவைகள் தோன்றக் காரணமாக உள்ளது. ஆகாயம் எனும் பூதத்தை யாராலும் தொட முடியாது பார்க்கவும் முடியாது. ஆகாயத்தை எவராலும் தொட முடியாது, குளிர், வெப்பம், உலர்தல், மணம் போன்ற குணங்கள் அற்றது. ஆகாயம் என்பது வெற்றிடம் ஆகும்.
புறநானூற்றில் நீரின் விசையைக் கணித்து அதனை உவமையாக்கி விதியின் போக்கை உணர்த்துகிறார் கணியன் பூங்குன்றனார்.
“வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப்படூஉம் புணைபோல” (7)
இப்பாடலில் வானிலிருந்து மழை பெய்து பெருகியோடும் பெரிய ஆற்றில் நீர் வழியே செல்லும் தெப்பம் போல உயிர்கள் ஊழ்வினைப்படி அவற்றுக்கு ஏற்ற நிலையை அடையும் என்ற கருத்தைக் கூறுவதற்கு இரண்டு பூதங்களை உவமையாக்கியுள்ளார் பூங்குன்றனார்.
காற்று
‘ஆகாயம்’ எனும் பூதத்தின் ஒரு பகுதியிலிருந்து ‘காற்று (வாயு)’ எனும் பூதம், ‘தொடு உணர்வு’எனும் குணத்துடனும், ஆகாயத்தின் சொந்த குணமாக ஒலி எனும் குணத்துடனும் தோன்றியது. எனவே காற்று தன் சொந்த குணமான தொடு உணர்வுடன், ஆகாயத்தின் ஒலி எனும் குணத்துடன் இரண்டு குணங்கள் கொண்டுள்ளது. காற்று எனும் பூதத்தின் இயல்பு ஒரு பொருளை உலர்த்தும் சக்தி படைத்தது.
கடல், காற்று, ஆகாயம் என்ற மூன்று பூதங்களைப் பற்றிப் புறநானூறு கூறுகிறது. இதனை,
“இரு முந்நீர் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய காயமும் என்றாங்கு
அவை அளந்து அறியினும்” (8)
என்ற பாடல் அடிகளின் வாயிலாக, அளக்க முடியாத பண்புகளுக்குக் கடல், காற்று, ஆகாயம் என்ற மூன்றினையும் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.
காற்றால் ஏற்படும் ஒலி பற்றிய குறிப்பொன்றினை ஔவையார்,
“பொதுவில் தூங்கு விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின்” (9)
எனப் புறநானூற்றில் பொதுவிடத்தில் தொங்குகின்ற முழவினிடத்துக் காற்று மோதி ஓசை எழுப்புதலைக் குறிப்பிடுகிறார்.
“அடுபோர்ச் செழிய அகழாது இகழாது வல்லே.
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்” (10)
என்ற பாடல் அடிகளின் வாயிலாக மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமையாகும் என்பதனை அறிந்து கொள்ள முடிகிறது.
நெருப்பு
காற்று எனும் பூதத்தின் ஒரு பகுதியிலிருந்து ‘தீ’ எனும் பூதம் ‘உருவம்’ (ரூபம்) எனும் குணத்துடன் தோன்றியது. அத்துடன் ஆகாயம் மற்றும் காற்றின் குணங்களான ஒலி மற்றும் தொடு உணர்வு குணங்களுடன் தன் சொந்த குணமான உருவம் எனும் குணத்துடன் ’தீ’ எனும் பூதம் மூன்று குணங்கள் கொண்டுள்ளது.
கோவூர் கிழார் என்னும் புலவர், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனின் கொடைத்திறத்தைப் பாராட்டுவதற்காக நீரினை உவமையாகக் கூறியுள்ளார்.
“தைத்திங்கள் தண்கயம் போலக்
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்
அடுதீ அல்லது சுடுதீ அறியாது
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்” (11)
என்ற பாடல் அடிகளில் அடுப்புத் தீ மட்டும் காணும் அவ்வூரில் பகைவரால் சூடப்படும் தீ கிடையாது என்று நெருப்புப் பூதம் பயன்பட்டு வந்துள்ளது.
நிலத்தின் நீர்வளம் பற்றிக் கபிலர் குறிப்பிட்டுள்ளார். இதனை,
“பயில் இருஞ் சிலம்பிற் கலைபாய்ந்து உகளவும்
கலையும் கொள்ளா வாகப் பலவும்
காலம் அன்றியும் பரம்பயம் பகரும்
யாணர் அராஅ வியன்மலை அற்றே” (12)
என்ற பாடல் அடிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
நீர்
தீ எனும் பூதத்தின் ஒரு பகுதியிலிருந்து திரவ நிலையில் உள்ள ‘நீர்’ எனும் பூதம் ’சுவை’ எனும் குணத்துடன் உண்டானது. அத்துடன் ஆகாயம், காற்று, தீ எனும் பூதங்களின் குணங்களான ஒலி, தொடு உணர்வு மற்றும் உருவம் (ரூபம்) எனும் மூன்று குணங்களுடன் தன் சொந்தக் குணமான சுவை எனும் குணத்துடன் நான்கு குணங்களுடன் நீர் எனும் பூதம் விளங்குகிறது.
மழைக்கு ஓர்கடவுளைக் படைத்தது வைதீகம். மழை என்பது இயற்கையின் கொடை அதனைப் பெறும்போது பாதுகாத்து வைத்துக்கொள்ள மனிதர்களான நாம் முயற்சிசெய்ய வேண்டும். திட்டமிட வேண்டும். சங்ககாலப் புலவரான குடபுலவியனார்,
“நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்” (13)
என்ற பாடல் அடிகளின் வாயிலாக, உணவு உற்பத்திற்கு உயர் தேவையாக இருப்பது தண்ணீர். அந்தத் தண்ணீரைப் பாதுகாப்பது மன்னனின் கடமை என்று புலவர் அறிவுறுத்துவதனை அறிந்து கொள்ள முடிகிறது.
உலக வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக நீர் விளங்குகிறது. நீர் உணவாகவும், உணவிற்கு அடிப்படையாகவும், உணவு தயாரிப்பதற்கும், அனைத்திற்கும் இன்றியமையாத ஒன்றாகவும் விளங்குகின்றது. அதனால் இந்நீரை, ‘அமிழ்தம்’என்று குறிப்பிடுவர். இதனை,
“நீரினும் இனிய சாயல்
பாரிவேள் பாற்படினை செலினே” (14)
என்ற பாடல் அடிகளின் வாயிலாக வேள் பாரி நீரினும் மிக இனிமை உடையவன் எனப் பாராடட நீர்ப் பூதத்தைப் பயன்படுத்தியுள்ளார் கபிலர் என்பதனை அறிந்து கொள்ள முடிகிறது.
நிலம்
நீர் எனும் பூதத்திலிருந்து ’நிலம்’ எனும் பூதம் ’வாசனை’ எனும் குணத்துடன் தோன்றியது. அத்துடன் ஆகாயம், காற்று, தீ, நீர் எனும் நான்கு பூதங்களின் குணங்களான ஒலி, தொடு உணர்வு, உருவம் (ரூபம்), சுவை எனும் நான்கு குணங்களுடன் இதன் சொந்தக் குணமான வாசனை எனும் குணத்துடன் ஐந்து குணங்களைக் கொண்டது மண் (பிருதிவி) எனும் பூதம்.
ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர், சோழன் குளமுற்றத்துஞ்சிய கிள்ளி வளவனைப் பாராட்டும் போது,
“செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும்
வெண் திங்களுள் வெயில் வேண்டினும்
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்” (15)
என்று கூறுகிறார். இப்பாடலில் சோழ நாட்டின் வளத்தினை, நிலம், நீர் ஆகியவற்றினைக் கொண்டு விளக்குகின்றார்.
“இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏம்ம காவலர்
இடுதிரை மணலினும் பலரே சுடுபிண……” (16)
இப்பாடலை ஐயாதிச் சிறுவெண் தேரையார் என்ற புலவர் பாடியுள்ளார். அதாவது, கடல் என்பது நீர்ப் பூதத்தையும், மணல் என்பது நிலப் பூதத்தையும் குறிக்கிறது.
“எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே” (17)
என்ற ஒளவையார் பாடலில் நிலத்தின் இயல்பு கூறப்பட்டுள்ளது.
தொகுப்புரை
* மண் திணிந்த நிலம், நிலம் ஏந்தியிருக்கும் ஆகாயம், ஆகாயத்தின் வழி வரும் காற்று, காற்றில் கலந்து வரும் தீ, தீயின் முரணிய நீர் ஆகிய பஞ்சபூதங்கள் கலந்தது உலகம்.
* வானிலிருந்து மழை பெய்து பெருகியோடும் பெரிய ஆற்றில் நீர் வழியே செல்லும் தெப்பம் போல உயிர்கள் ஊழ்வினைப்படி அவற்றுக்கு ஏற்ற நிலையை அடையும்.
* பொதுவிடத்தில் தொங்குகின்ற முழவினிடத்துக் காற்று மோதி ஓசை எழுப்பும்.
* மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை.
* உணவு உற்பத்திற்கு உயர் தேவையாக இருப்பது தண்ணீர். அந்தத் தண்ணீரைப் பாதுகாப்பது மன்னனின் கடமை.
அடிக்குறிப்புகள்
1. தொல்காப்பியம், நூ. 635
2. தொல்காப்பியம், நூ. 541
3. தொல்காப்பியம், நூ. 287
4. தொல்காப்பியம், நூ. 377
5. தொல்காப்பியம், நூ. 242
6. புறநானூறு 2 : 1-6
7. புறநானூறு 192 : 7-9
8. புறநானூறு 20 : 1-5
9. புறநானூறு 89:8-9
10. புறநானூறு 18: 27-28
11. புறநானூறு 70 : 6-10
12. புறநானூறு 116 : 11-14
13. புறநானூறு – 18
14. புறநானூறு 105 : 7-8
15. புறநானூறு.38 : 7-9)
16. புறநானூறு 363 : 1-4
17. புறநானூறு 187 : 3-4
துணைநூற்பட்டியல்
1. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை – 1.
2. துரைச்சாமிப்பிள்ளை, ஒளவை.சு (உ.ஆ.), புறநானூறு, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.