ஔவையார் பாடல்களில் அதியமான் வீரம்
முனைவர் சி.சேதுராமன்
தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி), புதுக்கோட்டை.
படைத்திறம், கொடைத்திறம் இரண்டும் நம் நாட்டுச் செல்வங்கள். பேராண்மையும் ஊராண்மையும் உடையவர் மேலோர். அவரே புகழத்தக்கவர். வீரமும் ஈரமும் அற்றவர் கீழோர். அன்னாரைப் பாடுதல் கவிதைக்கு இழுக்கு. நாவிற்கு அழுக்கு (1) என்பது தமிழர்தம் கொள்கையாகும். புலமையுகத்தில் ஔயைாருக்குத் தனிப்பெருமை உண்டு. ‘ஔவை வாக்கு தெய்வ வாக்கு’ என்பது பழமொழி. ஆண்மையாளரை வாயார வியந்து பாடுவது இவரது இயல்பு. அதியமான் வீரத்தலைவன். கடையெழு வள்ளல்களுள் ஒருவன். போரில் பொலிபவன். ஔவையின் பாட்டுடைத்தலைவன். ஔவையார் தாம் பாடிய புறநானூற்றுப் பாடல்களில் அதியமானின் வீரம், வெற்றி குறித்து தெளிவுற எடுத்துரைத்துள்ளார்.
அதியமானின் நாடும் நகரும்
அதியமான் தகடூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தான். குதிரைமலை அதியன் நாட்டுக்குச் சிறந்த மலை. இவனை அதியமான் நெடுமானஞ்சி, அதியன், அஞ்சி, எழினி எனப் பலவாறாக வழங்குவர்(2). இவனுக்கு நெடுமிடல் என்ற பெரும் உண்டு. அவன் மகன் அதியமான பொகுட்டெழினி ஆவான்.
அதியமானின் அரச மரபு
அதியமானும் சேரமானும் ஒரே குடும்பத்தினர் என்பர் அறிஞர். அதியமானைப் பற்றிப் பேசும் உ.வே.சா. ‘சேரமானுடைய உறவினன். பமைாலை உடையவன். வெட்சிப் பூவையும் வேங்கைப் பூவையும் அணிவோன். அரசரெழுவர்க்குரிய ஏழிலாஞ்சனையும் நாடும் அரச உரிமையும் உடையோன்’’ என்று கூறுவர். (3)
குதிரை மலையினையும் கூரிய வேலினையும் கூவிளங் கண்ணியினையும், வளைந்த ஆரத்தையும் உடையவன் அதியமான் எழினி என்றும் இவனை அறிஞர் குறிப்பிடுவர்.
அறிஞர் பூவராகம் பிள்ளை, அதியமான் நெடுமானஞ்சி குறுநில மன்னர் குழுவிற் சேர்ந்து எண்ணப் பட்டிருத்தலால் இவன் சேரமரபினனாய் இருத்தல் இயலாது. அக்காலப் புலவர்கள் தமிழ் மூவேந்தர்களைக் கூறுமிடங்களில் அவர்களை வேந்தன் என்ற சொல்லால் கூறுகின்றனர். குறுநில மன்னர்களைக் கூறுமிடங்களில் அவர்களை வேந்தன் என்ற சொல்லால் கூறுகின்றிலர்.
இம்முறை புறநானூற்றுப் பாக்களில் பெரும்பாலும் தவறாமல் ஆளப்பட்டுள்ளது. அதியமானைப் பற்றிய பாடல்களில் ‘வேந்தன்’ என்ற சொல்லால் இவன் குறிப்பிடப்படாமையைக் காணலாம். மழவர் பெருமகன், அதியர் கோமான் என்று கூறப்படுதலால் ‘மழவர்’ என்ற ஓரினத்தாருள் ‘அதியர் குடி’ என்ற ஒரு குடியிற் பிறந்தவன் என்று கொள்ளுதலே பொருத்தமாகும். வேறு எக்காரணத்தாலோ இவன் பனம்பூ மாலை பெற்றிருந்தனன் எனக் கூறி அதியமான் சேரர்களுக்கு உறவினன் எனும் கூற்றை மறுப்பாரும் உளர் (4).
எனினும் சேரர்க்குரிய பனம்பூ மாலை இவனுக்கும் கூறப்பட்டிருத்தலால் இவனும் சேரனும் உறவினர்கள் என்ற டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளையின் கூற்று (5) மேலும் சிந்தனைக்குரியதாக அமைகின்றது.
அதியனின் தோளாண்மை
அதியமான் பெருவலஞன். அவனுடைய போர்த்திறத்தையும், தோள்வலிமையையும் பறைசாற்றுவனவாக ஔவையார் பாடல்கள் புறநானூற்றில் அமைந்துள்ளன. நாளொன்றுக்கு எண்தேர் செய்யும் தச்சன் ஒரு மாதம் கூடிச் செய்த தேர்க்காலைப் போன்ற வலிமையும் அழகும் வாய்ந்தவன் அதியமான். இதனை,
‘‘எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்தகால் அன்னோனே’’(6)
என்ற பாடல் தெளிவுறுத்தும்.
வீரம்
அதியமானின் வீரத்தை விதந்தோதிய பாடல்களில் அவனது ஆளுமையின் முழுவீச்சையும் புலப்படுத்துகிறார் ஔவையார். அம்பகட்டு மார்பினன் அதிமான். அவன் மழவர் பெருமகன். போர் முழவுத் தோளினன். அவன் வீரம் சான்றாவனாதலின்.
‘‘யாவீர் ஆயினும், கூழைதார் கொண்டு
யாம்பொருதும் என்றல் ஓம்புமின்’’(7)
என அதியனின் தானைமறச் சிறப்பினைப் பகைவருக்கு எடுத்துக் கூறி, இனி நீர் எப்படிப்பட்டவராயினும் அவனோடு போரிடுவோம் எனச் சொல்லாதீர் என அறிவுறுத்துகிறார் ஔவையார். அவர் அதியமானை நோக்கி மறவர் பெரும! என அழைத்து நீ போர்க்களம் புகின்,
‘‘துன்னருங் கடாஅம் போல
இன்னாய்பெரும, நின் ஒன்னாதோர்க்கே’’(8)
என வியந்து கூறுவதிலிருந்து அதியமானின் வீரத்தினைத் தெளிவுறுத்துகிறார்.
பண்டைய மரபுப்படி பிறந்த குழந்தையைக் காணச் சென்ற அதியமான் போர்க்கோலம் புனைந்து செல்கிறான். மகனைக் காணும் ஆவலிலும் அவன் மறச்சினம் தவிர்ந்திலன். இதனைக் கண்ணுற்ற ஔவை,
‘‘வரிவயம் பொருத வயக்களிறு போல,
இன்னும் மாறாத சினனே அன்னோ!
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே
செறுவர் நோக்கியகண் தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப் பானாவே!’’ (9)
என மகனைக் கண்ட பின்பும் அவன் பகைவர்பால் கொண்ட சினம் தணிந்திலன் என அவன் வீரத்தினை இலைமறை காயாகக் கூறி அதியன் பகைவரை அழிக்கின்ற இயல்பை விளக்குகிறார்.
அதியமான் பேராற்றலன். தொண்டைமான் படைவலி காரணமாக அதியமானைத் தன்னினும் மெலியன் எனக் கருதிப் போர் தொடுக்க எண்ணினன். இதனை அறிந்த அதியமான் தன்னாற்றலையும் சிறப்பினையும் அஞ்சாமையையும் எஞ்சாது தூதுமூலம் அறிவித்தற்குக் கருதித் தொண்டைமானிடம் ஔவையாரைத் தூது விடுத்தான். தூது வந்த ஔவையிடம் தொண்டைமான் தன் படைக்கலக் கொட்டிலைக் காட்ட,
‘‘... ... ... அவ்வே,
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து,
கொல்துஐறக் குற்றில முாதோ’’(10)
என ஔவை அதியமானின் படை பலத்தையும், ஆற்றலையும் பழிப்பது போலப் புகழ்ந்து கூறி அதியமானின் வீரத்தைத் தொண்டைமானுக்கு அறிவுறுத்துகிறார்.
அதியமானின் படைச்சிறப்பு
அதியமானஞ்சியின் மறப்பண்புகளை ஔவையார் விரித்துரைக்கும் பாங்கு சிறப்புடைத்து. போர்க்கள வீரச் செயல்களையும் அவனுடைய வீரத்தால் பகைவருடைய நாடு வீழ்ச்சி அடைந்ததையும் செந்தமிழ்க் கவிச் சொல்லாற் கவினுறக் கூறுகின்றார் ஔவையார்.
‘‘முனைத் தெவ்வர் முரணவியப்
பொரக் குறுகிய நுதி மருப்பின் நின்
இனக் களிறு செலக் கண்டவர்
மதிர்க் கதவம் எழுச்செல்லவும்
பிணன் அழுங்கக் களன் உழக்கிச்
செலவு அசைஇய மறுக்குளம் பின்நின்
இனநன்மாச் செலக் கண்டவர்
கவை முள்ளின் புழை யடைப்பவும்’’(11)
என யானைப்படை, குதிரைப் படை, வேற்படை, காலாட்படைகளின் நிலையினை எடுத்துக் கூறுவது, போரிடுவதற்கு முன்பே பகைவர் நாடு தனக்குரியதாகி விடும் என உணர்த்துவதாக வரும் பகுதி அவனது படைச்சிறப்புக்களைப் புலப்படுத்தும்.
அதியமானின் ஆற்றல்
கடுமான் தோன்றல் நெடுமானஞ்சியின் ஆற்றல் அளவிடற்கரியது. அவனை எதிர்க்கும் வலி படைத்தோரிலர்.
‘‘இல்லிறைச் செரீஇய ஞெலிக்கோல் போல
தோன்றா திருக்கவும் வல்லன் மற்றதன்
கான்று படுகனை எரிபோல
தோன்றவும் வல்லன் தான்தோன்றுங் காலே’’(12)
என ஔவையார் அதியனின் ஆற்றலைத் தீக்கடைக்கோல் கொண்டு நிறுவுகிறார்.
எழுவர், கோவலூர் வெற்றி
திருக்கோவிலூர் அரசனாகிய மலையமான் திருமுடிக்காரி என்பான், பல வேற்றரசர்களைப் போரில் வென்று அடக்கி, தனக்கு நிகர் ஒருவருமிலரென்று பெருமிதங் கொண்டிருந்தான். இதனை அறிந்த அதியமான் அவனது ஆற்றலை அடக்கக் கருதி நால்வகைப் பெரும்படையுடன் சென்று மலையமானை வெற்றி கொண்டான். மலையமான் புறங்கொடுத்து ஓடினான். அவனது படைகளும் நிலை கலங்கிக் கலைந்தன. கோவலூர் அதியமானது ஆட்சிக்குட்பட்டது.
ஔவையார் அதியமானின் கோவலூர் வெற்றியைப் பாடும்போது, கேழல், மேழி, கலை, ஆளி, வீணை, சிலை, கெண்டை என ஏழிலாஞ்சனையையும் நீங்க அரச உரிமையையும் பெற்றதோடு நில்லாது மீண்டும் தன்னோடு போர்செய்ய வந்த எழுவரையும் வென்று கோவலூரையும் முற்றுகையிட்ட செய்தியை,
‘‘... .... ... செருவேட்டு,
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
சென்று, அமர் கடந்து, நின்ஆற்றல் தோற்றிய
அன்றும் பாடீநர்க் கரியை இன்றும்
பரணன் பாடினன் மற்கொல் மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறி நின்
அரண்அடு திகிரி ஏந்திய தோளே!’’ (13)
என்று கூறி, அவனது புகழையும், வெற்றியையும், பகைவென்ற திறத்தையும் பாடுகின்றார். பரணன் பாடினான் என்பது அதியமான் புகழை மேலும் வலுப்படுத்துவதற்கு, தான் மட்டும் பாடவில்லை, இவன் புகழ் பரணராலும் பாடப்பட்டுள்ளது எனக் கூறுகிறார்.
சேரமான் பெருஞ்சேரலிரும் பொறையுடன் போர்
திருக்கோவலூரை இழந்த மலையமான் சேரமான் பெருஞ்சேரலிரும் பொறையை அடைந்து தனக்கு உதவுமாறு வேண்டினான். அவன் மலையமானுக்கு உதவ ஒருப்பட்டு பெரும்படையுடன் புற்பட்டுக் கொல்லிமலையை முற்றுகை இட்டான். இவ்வமயம் ஓரி அதியமானஞ்சியை உதவுமாறு வேண்டினான். அதியமானும் தனது நட்பரசனாகிய சோழ, பாண்டியரோடும் ஓரியுடனும் சேர்ந்து, சேரனோடும் மலையமானோடும் பெரும் போர் நிகழ்த்தினான். இப்போரில் சேரன் இருபெரும் வேந்தர்களின் முரசினையும் குடையையும் கவர்ந்து, ஓரியைக் கொன்று கொல்லி மலையைக் கைப்பற்றிக் கொண்டான். இதனை,
‘‘கொல்லிக் கூற்றத்து நீர் கூர்மீ மிசைப்
பல்வேற்றானை யதியமானொடு
இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று
முரசுங் குடையும் கலனும் கொண்டு’’(14)
எனப் பதிப்ற்றுப்பத்து நவிலும்.
அதியமான் தகடூர் போய், மதிலினுள் இருந்தான். மலையமானும், பெருஞ்சேரலும் தகடூர் மேல் படை நடத்தி மதிலை வளைத்தனர். அதியமானோ வெளியில் வந்து போர் செய்யாதிருந்தனன். உழிஞைத் திணையினை விளக்கும்போது இதனை, ‘சேரமான் செல்வுழித் தகடூரிடை அதியமான் இருந்தாதாம்’’ என நச்சர் தம்முரையில் குறிப்பிடுகின்றார் (15).
பகைவர் மதிலை வளைக்க வாளாவிருந்த அதியனைக் கண்ட ஔவையார்,
‘‘வழுவில் வன்கை மறவர் பெரும!
இருநிலை மண்கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ?’’ (16)
என அதியமானின் ஆற்றலை எடுத்துக் கூறி அவனுக்குப் போரில் மனஞ்செல்லுமாறு ஊக்கமூட்டினார். இதுகேட்ட அஞ்சி அஞ்சாது போர்க்களம் புகுந்து வீரதீரமொடு போர் செய்தான். அப்போது பகைவர் விடுத்த படைகள் பல அதியமானின் மார்பிலும் கழுத்திலும் முகத்திலும் பட்டுப் புண்படுத்தின. அவ்வமயத்தும் ஔவையார் அதியமான் முன்னர் சென்று பெருந்தகையாய்! நீ விழுப்புண் பட்டபடியால் உன்னோடு எதிர்த்த அரசர் பலர் யுத்தத்தில் இறவாமையால் உளதாகும் குற்றம் நீங்கும்படி பிற்காலத்தில்,
‘‘அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம்கந்தாக நல்லமர் வீழ்ந்த
நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்க!
வாள் போழ்ந்தடக்கலும் உய்ந்தனர்’’(17)
இனி நீ வருந்திப் போர் செய்து வெல்ல வேண்டுவது யாதுளது? என்று பின்னரும் அவனை ஊக்கினர்.
அதியமான் அப்புண்பட்ட நிலையிலும் தளராது போர்புரிந்தான். இறுதியில் பெருஞ்சேரல் விடுத்த வேலொன்று காற்றிலும் கடுக வந்து, அஞ்சியின் நெஞ்சிற் பாய்ந்து ஊடுருவிச் சென்றது. அதியமான் உயிர் துறந்தான். அவனது இன்னுயிர் நண்பரான ஔவையார் கையற்று,
‘‘சிறியகட் பெறினே, எமக்கீயு மன்னே!
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான் மகிழ்ந் துண்ணும் மன்னே!’’ (18)
என நெஞ்சுருகிப் பாடினார்.
தகடூர் யாத்திரை என்னும் தமிழ் நூல் சேரனின் தகடூர்ப் படையெடுப்பின் தன்மையயும், போரின் வெம்மையையும் எடுத்துரைக்கின்றது. தகடூர் என்னும் மூதூர் இக்காலத்தில் தருமபுரி என்ற பெயர்கொண்டு வழங்குகின்றது. அதனருகே அதமன் கோட்டை என்ற சிற்றூர் உண்டு. அதிகமான் பெயரால் அமைந்தது அக்கோட்டை. அதிகமான் கோட்டை என்பது அதமன் கோட்டை என மருவிற்று’’ என்பர் டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை (19).
அதியனின் தகடூர்க் கோட்டை இடிந்தது. கொற்றவன் மடிந்தான். ஆயினும் வீரனான அதியமான் பெயர் அழியாது நின்று நிலவுகிறது எனலாம்.
அடிக்குறிப்புகள்
1. டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை, தமிழர் வீரம், ப., 100
2. புலியூர் கேசிகன், புறநானூறும் தமிழர் சமுதாயமும், ப., 92
3. டாக்டர் உ.வே.சா., புறநானூறு பதிப்பு, ப., 62
4. ஆ. பூவராகம் பிள்ளை, புலவர் பெருமை, பக்., 35-36
5. தமிழர் வீரம், ப., 101
6. புறம்., பா.எ., 87
7. புறம்., பா.எ., 88
8. புறம்., பா.எ., 94
9. புறம்., பா.எ., 100
10. புறம்., பா.எ., 95
11. புறம்., பா.எ., 98
12. புறம்., பா.எ., 315
13. புறம்., பா.எ., 99
14. பதிப்ற்றுப்பத்து பா.எ., 73
15. தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரை, நூற்பா, 62
16. புறம்., பா.எ., 90
17. புறம்., பா.எ., 93
18. புறம்., பா.எ., 235
19. தமிழர் வீரம், ப., 102.
துணைநூற் பட்டியல்
1. சேதுப்பிள்ளை, ரா.பி., தமிழர் வீரம், பழனியப்பா பிரதர்ஸ், மதுரை, ஒன்பதாம் பதிப்பு, 1971.
2. புலியூர் கேசிகன், புறநானூறும் தமிழர் சமுதாயமும், பசவேஸ்வரா பிரசுரம், தவுலாதாபாத், கிருஷ்ணகிரி, சேலம், 1964.
3. பூவராகம் பிள்ளை, ஆ, புலவர் பெருமை, நேஷனல் பப்ளிசிங் கம்பெனி, சென்னை, நான்காம் பதிப்பு, 1957.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.