சிலப்பதிகாரத்தில் பிற நூல் செய்திகள்
முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.
முன்னுரை
முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், தேசியக் காப்பியம் என்றெல்லாம் சிறப்பாக அழைக்கப்படும் சிலப்பதிகாரத்தில், கதையின் போக்கிற்கேற்ப பிற நூல் செய்திகளை தேவையான இடங்களில், சரியானமாந்தர்களைக் கொண்டு கதையாக ஆசிரியர் கூறிச் சென்றுள்ளார்.அவற்றுள் இராமாயணத்தில் இராமனைப்பிரிந்த அயோத்தி, ஆயிரம் கண் இந்திரன், மகாபாரதத்தில் நளன் கதை, பெரியபுராணத்தில் மனுநீதிச்சோழன், புறநானூற்றில் சிபிச்சக்கரவர்த்தி, புராணத்தில் அருந்ததி, மன்மதன், அகநானூற்றில் ஆதிமந்தி, இலக்கியங்கள் காட்டும் கண்துடித்தல்என்று சிலவற்றை மட்டும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளவற்றையும், அதை அடுத்து அந்தந்த நூல்களில் கூறப்பட்டுள்ளவற்றைப் பற்றியும் காண்போம்.
சிலப்பதிகாரத்தில் இராமனைப் பிரிந்த அயோத்தி
சிலப்பதிகாரத்தில் புறஞ்சேரியிருத்த காதையில் கோசிகன் கோவலனிடம் பேசும் போது, நீ புகார் நகரத்தைப் பிரிந்ததால், அவ்வூர் இராமனைப் பிரிந்த அயோத்தி போல உள்ளது. நின் தந்தை எல்லாத் திசைகளிலும் சென்று கோவலனைத் தேடிக் கொண்டு வருக என ஏவலா்களை அனுப்பினான். அந்த ஏவலர்கள் உன்னைத் தேடிப் பல திசைகளுக்கும் சென்றுள்ளனர். தந்தை ஏவலைக் கேட்டு அதன்படி நடப்பதே சிறந்தது. அவன் பணியில்லாது அரசாட்சியே கிடைப்பினும் தஞ்சம் என்று அதனைப்பற்றி யாண்டும் கிடைப்பது தீமையேயாகும் என்று கருதித் தந்தையின் கட்டளைப்படி கானகம் சென்ற இராமனைப் பிரிந்து துன்புற்ற அயோத்தி போல, நும் பிரிவினால் புகழ் பெற்ற மூதூரான புகார் துன்புறுகிறது என்பதை,
“அரசே தஞ்ணமென் றருங்கணும்
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல
பெரும்பெயர் மூதூர் பெரும்பேதுஉ உற்றதும்” (புறஞ்சேரி இறுத்த காதை 64-67)
என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
இராமாயணத்தில் இராமனைப் பிரிந்த அயோத்தி
இராமன் சீதையுடனும், இலக்குவணனுடனும் காட்டுக்குச் சென்று விட்டான். பரதன், சத்ருக்கணனுடன் அயோத்திக்கு வருகை தருகிறான். இச்செய்தி கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் பள்ளியடைப்படலத்தில் வருகிறது. கேகய நாட்டிலிருந்து புறப்பட்டு, ஒரு வாரம் பயணம் செய்து, பரதன் கோசல நாட்டை அடைகிறான். பல அலங்கோலக் காட்சிகளைக் கண்டு நிகழ்ந்த செய்தியை ஓரளவும் அறியானாதவனாகிய பரதன் சிந்தித்துப் பார்த்தான். அரண்மனையை அடைந்து கேட்கப் போகும் ஒரு தீய செய்தி உள்ளது என்று ஊகித்துத் தயங்கி தயங்கி நின்று பெருமூச்செறிந்தான். அயோத்திக்கு வந்து அழகிழந்த அயோத்தியின் நிலையைக் காண்கிறான். அயோத்தியின் நிலையைக் கம்பர் 7பாடல்களில் (812-818) கூறியுள்ளார்.
அறநெறியில் சேர்த்த செல்வங்கள் அனைத்தையும் செல்வம் விரும்புகிறவர்கள் தாம் விரும்பிய பொருள்களை விரைவாக வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று மக்கள் கூட்டங்களைக் கூவி அழைப்பதைப் போன்ற கொடை முரசுகளின் எங்கும் பரவும் முழக்கங்களை பரதன் கேட்கவில்லை (பள்ளியடைப்படலம் 814) பசுக்களையும், குதிரைகளையும், யானைகளையும், எவரும் விரும்பும் செல்வத்தைத் திரளையும், அந்தணர்கள் கொடையாகப் பெற்றுச் செல்லுதலை பரதன் பார்க்கவில்லை. (பள்ளியடைப்படலம் 816) தேர்களும், குதிரைகளும்,யானைகளும், பல்லக்குகளும் தரையில் ஊர்ந்து செல்லும் வண்டிகளும் ,அவற்றில் ஏறிச் செல்பவர்கள் இல்லாமையாலும் நகர வீதிகள் நடந்து செல்பவர்கள் எவரும் இல்லாமையால் நீர் வற்றி மணல் நிரம்பிய ஆறு போல அழகில்லாதவை ஆயின. (பள்ளியடைப்படலம் 818) என்று இதைக் கண்ட பரதன் சத்ருக்கணனிடம் வினவ, அவன் அளிக்கும் பதிலில் இறுதியாக,
"ஒரு வகைத்து அன்று உறு தயர் ஊழி வாழ்
திருநகர்த் திரு தீர்ந்தனள் ஆம் என்றான்" (பள்ளியடைப்படலம் 821)
இந்நகருக்கு ஏற்பட்டுள்ள பெருந்துன்பம் ஒரு வகையானது அன்று. ஊழிகாலத்தின் இறுதிவரை நல்வாழ்வு வாழக்கூடிய இந்தச்சிறந்த நகரத்தை விட்டுத் திருமகள் வெளியேறிவிட்டாள் போலும் என்று கூறினான்.
*****
சிலப்பதிகாரத்தில் ஆயிரம் கண்ணோன்
சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையில்
"ஆயிரங்கண்ணோன் செவியகம் நிறைய" (கடலாடுகாதை 20)
என்ற பாடலடியில் கூறப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்திரன் அவையில் ஊர்வசி ஆடினாள். ஆனால், நாரத முனிவனின் இனிய யாழ் இசைப்பாடலும் தோரிய மடந்தை பாடிய வாராப்பாடலும் இந்திரனின் செவி குளிரும்படி, அவள் ஆடல்பொருந்தி அமையவில்லை என்று கூறும் இடத்தில் இந்திரனைக்குறிப்பிடும் போது ‘ஆயிரம் கண்ணோன்’ என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
இராமாயணத்தில் இந்திரன்
வானுலக தேவர்களின் தலைவனான இந்திரன், முனிவரான கௌதமரின் மனைவி அகலிகையின் அழகில் மயங்கி, அவளைக் கூடுகிறான். அதைக் காணநேரிட்ட கௌதமர் வெகுண்டு சபித்தார். எந்த பெண்குறியில் நீ ஆசைப்பட்டு இங்கு வந்தாயோ, அந்த உறுப்பு உன் உடலெங்கும் ஆயிரக்கணக்கில் உருவாகட்டும் என்று இந்திரனை சபித்தார். வெட்கக்கேடான தண்டனையை அடைந்து இந்திரன் இறவாப்பழிக்கு ஆளாகிறான். அகலிகையை நோக்கி “விலைமகள் அனைய நீயும் கல்லாகி” என்று கல்லாய் கிடைக்கும்படி சபிக்கிறார். இராமாயணத்தில் இந்திரன் பெண் பித்தனாகவும், அடுத்தவர் மனைவி மேல் ஆசை கொள்பவனாகவும் காட்டப்படுகிறான் .
*****
சிலப்பதிகாரத்தில் நளன்
சிலப்பதிகாரத்தில் ஊர்காண் காதையில் கவுந்தியடிகள் கோவலனிடம் வருந்தாதே என்று கூறும் போது, நளனின் கதையை,
"வல்லாடாயத்து மண்ணர சிழந்து
மெல்லியல் தன்னுடன் வெங்கான அடைந்தோன்
காதலில் பிரிந்தோ னல்லன் காதலி" (ஊர்காண்காதை 51-53)
சூதாட்டத்தில் நாட்டை இழந்து மென்மைத்தன்மையுடைய தன் மனைவி தமயந்தியுடன் கொடியகாட்டை அடைந்த நளன், காதலினின்றும், நீங்கியவன் அல்லன், அவன் காதலியும் தீதொடுபொருந்திய இழி குணத்தான் அல்லள்; அப்படியிருந்தும் நளன் அக்காரிகையைக் கானகத்தே காரிருளில் கை விட்டு நீங்கியது எதனால் வல் வினையால் அன்றோ அது நேர்ந்த அது தமயந்தியின் பிழை என்று கூறச் சான்றுகள் உண்டோ இருந்தால் சொல். நீ அவர்களைப் போலத் துன்பம் அடையவில்லை. மனைவியைப் பிரியாத வாழ்க்கையைப் பெற்றிருக்கிறாய். எனவே வருந்தாது மன்னனின் கூடல் மாநகர் சென்று தங்குவதற்குப் பொருத்தமான இடம் ஒன்றை அறிந்து வருவாயாக என்று ஆறுதல் கூறித் தேற்றினார் என்று கூறுமிடத்தில் நளன் கதை கூறப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் ஊர்காண் காதையில் கவுந்தியடிகள் கோவலனை ஆறுதல் படுத்தும்படி பேசும்போது, ‘தந்தையின் ஏவலால்தன் மனைவியுடன் கானகம் சென்று அவளைப் பிரிந்து கடுந்துயர் உற்றோன், வேதத்ததை அருளிய நான்முகனைப் பெற்ற திருமாலான இராமன் என்பதனை நீ அறியாயோ அது வினையின் பயன் அன்றோ' என்று பலவாறு கூறி அறிவுரை கூறுகிறார் என்று இராமனைப் பற்றி,
"தாதை ஏவலின் மாதுடன் போக
காதலி நீங்கக் கடுந்துயர்உழந்தோன்" (ஊர்காண்காதை 46-48)
என்று சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.
மகாபாரதத்தில் நளன்
மகாபாரதத்தில் உள்ள துணைக் கதைகளில் ஒன்று. அதன் பெயர் “நளோபாக்கியானம்” என்பதாகும். மகாபாரதத்தில் வனப்பருவம் அத்தியாயம் 53 முதல் 78 முடிய நளன், தமயந்தி தம்பதியரின் காதல், திருமணம், சூதாட்டம், தமயந்தியைப் பிரிதல் போன்ற சோதனைகளுக்குப் பின் மீண்டும் இருவரும் இணைவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. (காதல் தூதுசென்ற அன்னம் வனப்பருவம்பகுதி 53-78 முடிய)
நிடத நாட்டை நளன் ஆண்டு வந்தான். நீரும் நெருப்பும் இன்றி சமையல் செய்வதில் வல்லமை பெற்றவன். இவன் மனைவி தமயந்தி. மகிழ்ச்சியுடனும் குறைவற்ற வாழ்வு வாழ்ந்து வந்த இவனைச் சனி பிடித்ததால் துன்பங்கள் உருவாகத் தொடங்கின. அயல்நாட்டு அரசனுடன் சூது விளையாட்டில் ஈடுபட்டு தனது நாட்டை இழந்தான். நாட்டை விட்டு வெளியேறிய அவனுடன், யானும் வருவேன் எனக்கூறி தமயந்தி பிடிவாதமாகச் சென்றாள். தனது மனைவி கல்லிலும், முள்ளிலும் நடந்து துன்பப்படுவது கண்டு பெறாத நளன் வழியிலே விடுகிறான். அதன் பின்னர் பல ஆண்டுகள் அவனுக்கு ஏற்பட்ட துன்பங்களையும், இறுதியில் மீண்டும் அவன் இழந்த அரசைப் பெற்று மனைவியுடன் வாழ்வதைக் கூறுவதே இவனுடைய கதையாகும்.
*****
சிலப்பதிகாரத்தில் மனுநீதிச்சோழன்
சிலப்பதிகாரத்தில் வழக்குரைக்காதையில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் பேசும் போது, தான் பிறந்த புகார் நகரின் சிறப்பைக் கூறும் இடத்தில்,
“வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணிஉகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியில் மடித்தோன்” (வழக்குரைக்காதை 53-55)
கட்டிய மணியின் நடுவிலுள்ள நாவானது அசைய, பசுவின் கடைக் கண்களினின்றும் ஒழுகும் நீர் தனது உள்ளத்தைச் சுட, தானே தன் அரும்பெறற் புதல்வனைத் தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச்சோழனும் ஆண்ட மிக்க புகழினையுடைய புகார் நகரமே நான் பிறந்த ஊர். அவ்வூர் பழியற்ற சிறப்புடன் கூடிய ஊர் என்று கூறுகிறாள்.
பெரியபுராணத்தில் மனுநீதிச்சோழன்
மனுநீதிச்சோழன் சூரியகுலத்தில் பிறந்தவர். சோழ அரசர்களில் சிறந்தவர். நல்ல கேள்வி ஞானம் பெற்றவர். எல்லா உயிர்களிடத்தும் அன்புடையவர். சிவபக்தியில் மிகுந்தவர். அனைத்துச் செல்வங்களும் இருந்தும் குழந்தைப்பேறு அவருக்குக்கிட்டவில்லை. பல்லாண்டுகள் கழித்து தியாகராசப்பெருமான் அருளினால் ஒரு குழந்தைப் பிறந்தது. ‘வீதிவிடங்கன்’ என்று பெயரிட்டார்.அனைத்து கலைகளிலும் வல்லவவனாகவும், பக்தியிலும், அன்னை தந்தை மேல் பெருமதிப்பும் கொண்டிருந்தான். பதினாறு வயது நிரம்பிய வீதிவிடங்கன் ஒருநாள் பெற்றோர் அனுமதியோடு, தியாகராசப்பெருமானைத் தரிசிக்க தேரில் சென்று கொண்டிருந்தான். அப்போது கன்று ஒன்று வீதிவிடங்கன் எதிர்பார்க்காத நேரத்தில், தேர்ச்சக்கரத்தில் மாட்டி இறந்துவிட்டது. இதைக்கண்ட வீதிவிடங்கன் செய்வது அறியாது திகைத்தான். கன்றின் தாயான பசுவும் அதைக்கண்டு கதறி அழுதது. அந்தப் பசுவுக்கும் நெடுநாட்கள் குழந்தைப்பேறில்லாமல் இருந்து, இறையருளால் பெற்ற கன்றுதான் அது. வீதிவிடங்கன் பரிகாரம் நாடிப் பெரியோர்களைக் காணச் சென்றான். அப்போது தாய்ப்பசுவானது ஆராய்ச்சி மணியை அடித்து நீதி கேட்டது. ஆராய்ச்சி மணியின் ஒலிகேட்ட மன்னன் நடுநடுங்கி, அரண்மனை வாசல் வந்து விபரம் முழுவதையும் அறிந்தான். நிதானமாகச் சிந்தித்து, ஒரு முடிவுக்கு வந்தான். வீதிவிடங்கனை படுக்க வைத்து, அவன் மேல் தேரை ஓட்ட மந்திரி ‘கலாவல்லவனிடம்’ ஆணையிட்டான். மன்னன் சொல்லை கேட்க இயலாத மந்திரி, தன் கழுத்தைத் தானே வெட்டி இறந்தான். இதைக்கண்ட மன்னன் தானே தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக்கொல்ல முடிவு செய்தான். அதற்குள் அவ்விடம் வந்த வீதிவிடங்கனும், தந்தையின் சிந்தனையை, எண்ணத்தை முகக்குறிப்பினால் அறிந்து, தானே தரையில் படுத்து, தன்மேல் தேரை ஏற்றும் படி கிடந்தான். நீதி தவறாத மனுநீதிச்சோழன் தானே தேரை வீதிவிடங்கன்மேல் செலுத்தினான். நீதிதவறாத மனுநீதிச்சோழன் பல்லாண்டுகள் கழித்து இறையருளால் கிடைக்கப்பெற்றவன், தவறு செய்தது தன் மகனே ஆனாலும், அடுத்த ராசியப்பதவியில் அமரவேண்டியவன் என்றாலும் மகனைத்தானே தேர்க்காலிலிட்டு, நீதியை நிலை நாட்டினான் என்று பெரியபுராணம் கூறுகிறது.
*****
சிலப்பதிகாரத்தில் அருந்ததி
சிலப்பதிகாரத்தில் அருந்ததி பற்றி
“திலார் திருவினாள் புகழுடை வடிவு என்றும்
தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்” (சிலப்பதிகாரம்-மங்கலவாழ்த்துப்பாடல் 26-27)
அருந்ததியின் கற்பு, இவள் கற்கை ஒக்கும் என்றும், அவ்வூர் மக்களே வியந்து போற்றுமாறு பெருங்குணங்களை விரும்பும் பண்பினள் கற்புக்கரசி என்று போற்றப்படுபவள் அருந்ததி . அவளின் கற்பே, கண்ணகியின் கற்பினை நிகர்க்கும் என்று கூறும் போது, கண்ணகியே உயர்த்திக் காட்டப்பெறுகிறாள். சிலப்பதிகாரத்தில் மங்கலவாழ்த்துப் பாடலில், கோவலன் கண்ணகியின் திருமணத்தில், கண்ணகியின் கற்பை வியந்து கூறும் போது கூறப்பட்டுள்ளது. அருந்ததி சப்தரிசி பத்தினியரில் ஒருத்தி. வானின் வடதிசையில் இன்றும் விண்மீனாக இருக்கிறாள் என நம்பப்படுகிறாள். 'அம்மி மிதித்து அருந்ததி பார்த்து' என்பதும் இவளையேதான். அருந்ததி பார்த்தல் - நிலா மாறா உறுதியுள்ள கற்பு விண்மீன் போல மின்னுவேன் என்று மணப்பெண் விண்மீனைப் பார்த்தபடி உறுதியளித்தல்.
பரிபாடலில் அருந்ததி
பரிபாடலில் வரும் முருகனின் பிறப்பு பற்றிய பகுதியில் அருந்ததி இடம் பெறுகிறாள். சிவனுக்கும் உமையவளுக்கும் தோன்றிய கருவைச் சிதைத்து விடுமாறு, இந்திரன் ஒரு வரத்தை வேண்டுகிறான். அதற்கு உடன்பட்டு சிவனும் கருவைச் சிதைக்க அந்தக் கருவில் உண்டான குழந்தைதான் பின்னாளில் தேவர்களின் சேனாதிபதி முருகன் என்று தீர்க்கதரிசனத்தால் சப்தரிசிகள் அறிகிறார்கள். சிதைந்த கருத்துண்டுகளைச் சேகரித்து வேள்வியில் இடுகிறார்கள். வேள்வியில் இடப்பட்ட கருவை ரிசிப்பத்தினிகள் எழுவருள், அருவர் பெற்று கர்ப்பம் தரிக்கிறார்கள். அருந்ததி மட்டும் அதை ஏற்கவில்லை. கடவுளின் குழந்தையாக, கருவாக இருந்தாலும் வேறொருவரின் கருவைத் தாங்குவது தன்னுடைய கற்புக்கு உகந்ததல்ல என்று நினைக்கிறாள்.
*****
சிலப்பதிகாரத்தில் சிபிச்சக்கரவர்த்தி
தன் கணவனான கோவலனைக் கொன்ற பாண்டியனிடம் வழக்குரைக்கச் சென்ற கண்ணகி தன்னைப்பற்றியும், தன் சோழன் அருளாட்சி பற்றியும் எடுத்துரைக்கும் போது சிபி மன்னன் வரலாற்றை எடுத்துரைக்கின்றாள்.
“எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன்” (சிலம்பு-வழக்குரைக்காதை 51-52)
கங்கை ஆற்றின் தென்கரையில் ஆரியஅரசர்கள் அமைத்துத் தந்த வெள்ளிடைப் பாடி படை வீட்டில் இருந்து கொண்டு மாடலனைத் தனியே அழைத்து வினவிய போது சோழ நாட்டின் ஆட்சியைப் பற்றி கூறுகையில் புறாவின் துன்பமும் விலகுமாறு தன் உடம்பைஅரிந்து புறாவின் எடை அளவு பருந்துக்கு இரையாகத் தந்த அறநெறி (சிபிமன்னன்)வழி வந்த ஆட்சி இது என்று கூறினான்.
“குறுந டைப்புறவின் நெடுந்துயர் தீர
எறிதருபருந்தின் இடும்பை நீங்க,
அரிந்துடம் பிட்டோன் அறந்தருகோலும்
திரிந்து வேறாரும் காலமும் உண்டோ” (நீர்படைக்காதை 166-169)
என்பது பெறப்படுகிறது.
புறநானூற்றில் சிபிச்சக்கரவர்த்தி
புறா ஒன்று குறுநடைப் போட்டு நடந்து கொண்டிருந்தது. ஆண்பருந்து ஒன்று அதனை இரையாக்கிக் கொள்ளத் தன் கூரிய நகங்களால் பற்ற வந்தது. புறா தப்பிப் போய் சிபி அரசனின் வீட்டுக்குள் புகுந்து கொண்டது. சிபி புறாவை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் பறக்கவிடப் பார்த்தான். புறாவுக்காகப் பருந்து வட்டமிடுவதையும் பார்த்தான். புறாவையும் காப்பாற்றவேண்டும், பருந்துக்கும் இரை வேண்டும் என்று எண்ணிப்பார்த்தான். புறாவின் எடைக்கு எடைத் தன் உடலிலிருந்து பருந்துக்கு உணவு தரத் தீர்மானித்தான். சீர் செய்யும் தராசின் ஒரு தட்டில் புறாவையும், மறுதட்டில் தன்னையும் நிறுத்திக்காட்டித் தன்னைப் பருந்திற்கு அளித்தான்.
“கூர் உகிர்ப்பருந்தின் ஏறுகுறித்து ஒரீஇத
தன் அகம் புக்க குறுநடைப்புறவின்
தபுதி அஞ்சிச் சீரைபுக்க புறவின்
வரையா ஈகை உரவோன்” (புறநானூறு 43)
என்று சிபிச்சக்கரவர்த்தி சோழனின் வரலாற்றை புலவர் தாமப்பல்கண்ணனார் குறிப்பிடுகிறார்.
*****
சிலப்பதிகாரத்தில் ஆதிமந்தி ஆட்டனத்தி
சிலம்பில் வஞ்சின மாலையில் கரிகால் வளவன் மகள்ஆதிமந்தி (ஆட்டனத்தி) குறித்து கூறப்பட்டுள்ளது.
“மன்னன்கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்
தன்னைப்புனல்கொளளத்தான்புனலுன்பின்சென்று
கன்னவில் தோளாயோ என்னக் கடல்வந்து
முன்னிறுத்திக்காட்ட அவனைத் ழீஇக்கோண்டு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள்” (வஞ்சின மாலை11-15)
பெரும் புகழ் வாய்ந்த மன்னன் கரிகால் வளவனின் மகள் ஆதிமந்தி, வஞ்சி நகரத்துத் தலைவனான ஆட்டனத்தியைக் கணவனாகக் கொண்டவள். அச்சமயம் புனலாடும் போது காவிரிப் பெருவெள்ளம் அவனைக் கவர்ந்து சென்று விட்டது. அவள் காவிரிக்கரையிலே தொடர்ந்து ஓடி மலையொத்த தோளையுடைய எம்பெருமானே எனப் பலமுறைக் கூறிக் கதறினாள். அவளது கற்பின் பெருமையுணர்ந்த கடல், அவனைக் கொண்டு வந்து அவள் முன் நிறுத்திக் காட்ட, அவனைத் தழுவிக் கோண்டு பொன்னாலான பூங்கொடி போலத் திரும்பி வந்தாள் ஆதிமந்தி என்னும் அப்பத்தினிப்பெண் என்று கூறப்பட்டுள்ளது.
அகநானூற்றில் புனல் விழா (ஆட்டனத்தி)
புனல்விழா என்றவுடனேயே ஆட்டனத்தி ஆதிமந்தி கதைதான் நினைவுக்கு வரும். புனல் விழா, ‘நீர் விழா’ என்றும் அழைக்கப்படுகிறது. அன்றையமக்கள் காவிரி ஆற்றில் வருகின்ற புதுப்புனலில் ஆடி மகிழ்ந்தனர். ஆடிப்பெருக்கன்று காவிரிக் கரையில் புதுத்துணி உடுத்தி புனலாடுதல் வழக்கம்.
“மலிபுனல் பொருத மருது ஓங்கு படப்பை
கலிகொள் சுற்றொடு ககொல்காண” (அகநானூறு 376;3-5)
நன்றாக வளர்த்த கதிர்களையுடையது கழார் என்னும் பகுதியாகும். அப்பகுதியில் கரிகால மன்னன் தன் சுற்றத்தாரும் ஆரவாரம் மிக்க புனல் விழாவினைக் கண்டு மகிழ்ந்தான் என்று (222;4-7) மிகுந்த அழகுப் பொலிவினையும் திரண்ட தோள்களையும் உடைய ஆட்டனத்தி என்பான் முரசொலி இடைவிடாது கேட்கும் புனல் விழாவில் நடனம் ஆடினான் என்கிறது.
*****
சிலப்பதிகாரத்தில் மன்மதன்
சிலப்பதிகாரத்தில் இந்திரவிழாவூரெடுத்தகாதையில் மன்மதன் உருவமற்றவன் என்று கூறப்பட்டுள்ளது.
“உருவிலாளன் ஒரு பெருஞ்சேனை” (இந்திரவிழாவூரெடுத்தகாதை 224)
உருவமற்ற காமனின் ஒப்பற்ற பெரும்படை என்று கூறுகிறது.
உருவமற்ற மன்மதன்
சிவபெருமான் கைலாயத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அவர் பார்வதியை மணக்க வேண்டி, காமதேவன் சிவனை நோக்கி, மலரம்புகளை எய்து விடுகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன் தனது நெற்றிக் கண்ணால் காமதேவனை எரித்து விடுகிறார். இதனைக் கண்ட ரதிதேவி சிவனிடம் தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு மன்றாடுகிறாள். காமத்துக்கு எவ்வாறு உருவம் இல்லையோ அவ்வாறே காமதேவனுக்கும் உருவமில்லை எனக் கூறி, உருவமற்ற நிலையில் காமதேவனை உயிர்ப்பிக்கிறார். பின்னர் திருமால் கண்ணனாக அவதரிக்கும் போது காமதேவனின் மகனாக அவதரிப்பார் எனவும், அதன் பின்னர் காமதேவனின் தேகம் திரும்பி விடும் என்றும் சாபவிமோசனம் குறித்தும் கூறுகிறார் என்று புராணம் கூறுகிறது.
*****
சிலப்பதிகாரத்தில் கண் துடித்தல்
சிலப்பதிகாரத்தில் கடலாடுகாதையில் கண்ணகியின் இடக்கண்ணும், மாதவியின் வலக்கண்ணும் துடித்தன. பெண்களின் இடக்கண் துடித்தால் நன்மையாகும், வலக்கண் துடித்தால் தீமையாகும் அறிகுறியாகும். இங்கே பிரிந்த கணவனை விரைவில் கண்ணகி அடையப்போகிறாள் ஆதலின், நன்னிமித்தமாக இடக்கண் துடித்தது. மாதவி கோவலனை அறவே பிரியப் போகிறாள் ஆதலின் தீ நிமித்தமாக அவளது வலக்கண் துடித்தது.
“கண்ணகி கருங்கண்ணும் மாதவி செங்கணும்
உண்ணிறை கரந்தகத் தெளித்து நீருகந்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன” (கடலாடுகாதை 237-239)
என்று கூறுகிறது.
கண் துடித்தல்
பெண்களின் இடக்கண்ணும், இடத்தோளும் துடித்தால் நல்லது. ஆண்களுக்கு வலக்கண்ணும், வலது தோளும் துடித்தால் நல்லது நிகழும் என்பது பண்டைய மக்கள் நம்பிக்கையாகும். தலைவனை எதிர்நோக்கும் தலைவிக்கு இடக்கண் துடித்தால், தலைவன் விரைவில் வருவான் என நம்புகிறாள் என்பதை,
“நல்லெழி லுண்கணு மாடுமா லிடனே” (கலித்தொகை 11)
“நுண்ணோர் புருவத்த கண்ணுமாகும்” (ஐங்குறுநூறு 218)
என்று கூறுகிறது.
*****
முடிவுரை
இராமாயணத்தில் இராமனைப் பிரிந்த அயோத்தி, ஆயிரம் கண் இந்திரன், மகாபாரதத்தில் நளன் கதை, பெரியபுராணத்தில் மனுநீதிச்சோழன், புறநானூற்றில் சிபிச்சக்கரவர்த்தி, புராணத்தில் அருந்ததி, மன்மதன், அகநானூற்றில் ஆதிமந்தி, இலக்கியங்கள் காட்டும் கண்துடித்தல் என்று சிலவற்றை மட்டும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளவற்றையும், அதை அடுத்து அந்தந்த நூல்களில் கூறப்பட்டுள்ளவற்றைப் பற்றியும் பற்றி அறியமுடிகிறது.
துணை நூற்பட்டியல்
1. அய்யாசாமி. ம. நளவெண்பா, அபிராமி பதிப்பகம், சென்னை, 2007.
2. சுப்பிரமணியன். பெ.(உரை.ஆ) தட்சிணாமூர்த்தி.அ. பரிபாடல் மூலமும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடெட், சென்னை, 2004.
3. செயபால்.இரா.(உரை.ஆ), அகநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடெட், சென்னை, 2004.
4. தட்சிணாமூர்த்தி (உரை.ஆ) ஐங்குறுநூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட் சென்னை, 2004.
5. பாலசுப்பிரமணியன்.கு.வை (உரை.ஆ), புறநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட் சென்னை, 2004.
6. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8, வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
7. மாணிக்கனார்,அ,(உரை.ஆ) பெரியபுராணம் மூலமும் தெளிவுரையும் - தொகுதி 5, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2010.
8. விசுவநாதன்.அ.(உரை.ஆ) கலித்தொகை மூலமும் உரையும், , நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடெட், சென்னை, 2004.
9. ஸ்ரீ. சந்திரன். ஜெ. சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும், தமிழ் நிலையம், சென்னை, 2012.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.