வாலி பெற்ற வரம்
வாலியின் எதிரில் யார் நின்று போர்செய்தாலும், அவர்கள் பெற்றுள்ள நல்ல வரங்களும், வலிமைகளுமாக உள்ளவற்றில் தன்னையேச் சரிபாதி வலிமை சேரும் என்ற வரத்தைப் பெற்றுள்ளான்.
"பேதையர் எதிர்குவர் எனினும் பெற்றுடை
ஊதிய வரங்களும் உரமும் உள்ளதில்" (வாலி வதைப் படலம் 255)
வாலி வரம் பெற்ற செய்தி, வாலி வதைப்படலத்தில் இடம் பெற்றிருக்கிறது.
கைகேயி பெற்ற வரம்
சம்பராசுரனுக்கும், தசரதனுக்கும் நடைபெற்ற போரின் போது, கைகேயி தேரோட்டியாகச் செயல்பட்டாள். வண்டியின் அச்சு முறிந்த போது, தன்னுடைய விரலை வைத்துத் தேரோட்டிச் சென்று, தசரதனை வெற்றி பெறச் செய்தாள். மிகவும் மகிழ்ந்த தசரதன் கைகேயிக்கு இரு வரங்களை அளித்தான். அவ்விரு வரங்களையும் தேவைப்படும்போது, பெற்றுக் கொள்வதாக கைகேயி கூறினாள். இராமரின் பட்டாபிசேகம் அறிவிக்கப்பட்ட போது, அந்த இரு வரங்களில் ஒன்றினால், பரதன் நாடாளவும், சீதையின் கேள்வன் பதிநான்கு வருடங்கள் காடாளவும் வரம் கேட்டாள்.
"ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது எனப் புகன்று நின்றாள்" (அயோத்தியா காண்டம்- கைகேயி சூழ் வினைப் படலம் 191)
கைகேயி வரம் பெற்ற செய்தி, கைகேயி சூழ்வினைப்படலத்தில் இடம் பெற்றுள்ளது.
இரணியன் பெற்ற வரம்
பெண்ணினாலும், ஆணினாலும், அலியினாலும், உயிர் உடையவற்றாலும், உயிர் இல்லாதவற்றாலும், அஃறிணைப் பொருட்களாலும், படைக்கலன்களாலும், மந்திரத்தாலும் இறக்க மாட்டான். மண்ணிலும், விண்ணிலும் இறக்க மாட்டான்.
"பெண்ணின் பேரெழில் ஆணினில் அலியினில் பிறிதும்
உள் நிற்கும் உயிர் உள்ளதில் இல்லதில் உலவான்
கண்ணில் காண்பன கருதுவ யாவினும் கழியான்
மண்ணில் சாகிலன் வானிலும் சாகிலன் வரத்தால்” (இரணியன் வதைப் படலம்143)
திருமால், நான்முகன், சிவனாலும் இறக்கமாட்டான். நீரில், காற்றில், தீயில், மண்ணில் எந்தப் பொருட்களினாலும் இறக்க மாட்டான். தேவர்கள், முனிவர்கள் சாபத்தினாலும் இறக்க மாட்டான். மாளிகை உள்ளேயும், வெளியேயும் இறக்க மாட்டான். தெய்வத்தன்மை வாய்ந்த படைக்கலன்களாலும் இறக்க மாட்டான். நள்ளிரவிலும் இறக்க மாட்டான். பகலிலும் இறக்க மாட்டான். எமதருமனும் அவன் உயிரை எடுக்க மாட்டான். தன்னைப் பெற்ற தந்தையாலும் இறக்க மாட்டான் என்பதே அவன் பெற்ற வரமாகும்.
இரணியன் வரம் பெற்ற செய்தி, இரணியன் வதைப் படலத்தில் இடம் பெற்றிருக்கிறது.
தசரதனுக்குக் கிடைத்த சாபம்
தசரதன் வேட்டையாட விருப்பம் கொண்டு, காட்டிற்குச் சென்றான். யானை, சிங்கங்களைத் தேடி அலைந்த போது, ஓரிடத்தில் யானை நீர் அருந்தும் சத்தம் கேட்க, அவ்விடத்திற்கு அம்பைச் செலுத்தினான். சலபோசன முனிவர்க்கும், அவர் மனைவிக்கும் கண் தெரியாததால் அவர் மகன் சுரோசணன் அவர்களைப் பாதுகாத்து வந்தான். அப்பெற்றோர்களுக்கு தாகம் தீர்ப்பதற்காகத் தண்ணீர் எடுத்துவர வந்த சுரோசணன் மேல் அம்பு பட, குரல் கேட்ட தசரதன் பதறிப் போய் அக்குரல் கேட்ட இடத்திற்கு ஓடி வர, மரண வேதனையில் தவித்த சுரோசணன், அனைத்து விபரங்களையும் கூறி, பெற்றோர்களுக்குத் தண்ணீர் கொடுத்து விடுங்கள்” என்று கூறி உயிர் விட்டான்.
தண்ணீருடன் சென்ற தசரதனை விசாரித்தப் பெற்றோர், "மனம் உடைந்து, நாங்கள் இப்போதே விண்ணுலகம் செல்கிறோம். நீயும் உன் மகன் உன்னை விட்டுப் பிரிய விண்ணுலகம் அடைவாயாக" என்று சாபமிட்டனர்.
இந்தச் சாப வரலாறு இராமன் காடு சென்றதால் ஏற்பட்ட பிரிவுத் துயரத்தால், தசரதன் கோசலையிடம் கூறும் இடத்தில் அமைந்துள்ளது.
"விண்ணின் தலை சேருதும் யாம் எம்போல் விடலை பிரிய
பண்ணும் பரி மா உடையாய் அடைவாய் படர் வான் என்னா” (அயோத்தியாகாண்டம் - நகர்நீங்குபடலம் 377)
இராவணனுக்குக் கிடைத்த சாபம்
1. வேதவதி தந்த சாபம்
2. நந்திதேவர் தந்த சாபம்.
3. பிரம்மன் தந்த சாபம்
வேதவதி தந்த சாபம்
வேதவதி குசத்துவ முனிவரின் புதல்வி. முனிவர் வேதம் ஓதிக் கொண்டிருக்கும் சமயத்தில், குழந்தை பிறந்ததால் அவளுக்கு ‘வேதவதி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அவள் வளர்ந்து பருவமடைந்த போது, அவள் அழகில் மயங்கி தேவர்கள், அசுரர்கள் முதலானோர் அவளை மணந்து கொள்ள விரும்பினர். ஆனால், முனிவர் தன் மகளுக்குத் திருமால்தான் தகுந்த வரன் என்று எண்ணினார். அவளை மணந்து கொள்ள விரும்பி 'சம்பு' என்ற அரக்கன் முன் வந்து விருப்பத்தைச் சொல்ல, முனிவர் மறுக்க, அரக்கன் முனிவரைக் கொன்றான், அவர் மனைவியும் இறந்தார். தந்தையின் விருப்பப்படியேத் திருமாலையே மணக்க வேதவதி தவம் இருந்தாள். அவளைக் கண்ட இராவணன், அவளை மணக்க ஆசைப்பட, அவள் மறுக்க அவளை வலியத் தீண்டினான். அதனால் சினமடைந்த வேதவதி, "பிரம்மன் அளித்த வரத்தின் பலத்தால் ஆணவத்தோடு நீ என்னைத் தீண்டியதால் உன்னைக் குலத்தோடு அழிக்க, நான் மீண்டும் பிறந்து வருவேன். உன் மரணத்துக்குக் காரணமான நோயாக நானே ஆவேன்” என்று சொல்லிவிட்டுத் தீயில் பாய்ந்து உயிரை விட்டுவிட்டாள்.
"தீயிடைக் குளித்தவத் தெய்வக் கற்பினால்
வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ"
(இராவணன் மந்திரப் படலம் 92)
இந்தச் சாப வரலாறு விபீடணன், இராவணனுக்கு அறிவுரைக் கூறும் போது இடம் பெற்றிருக்கிறது.
நந்தி தேவர் தந்த சாபம்
இராவணன், தேவரை வருத்துதலைக் கேட்ட குபேரன், சகோதரன் என்ற உரிமையைப் பற்றி, "நான் தவத்தால் சிவபெருமானிடம் தோழமைப் பெற்றேன். நீ தேவரை வருத்தாதே" என்று தூதனிடம் சொல்லி அனுப்ப, அத்தூதனை வெட்டி எறிந்து, குபேரனுடன் யுத்தம் செய்யப் போய், மணிபந்திரனைக் கொலை செய்து, குபேரனை அடித்து, அவனிடம் இருந்த புஷ்பக விமானத்தைப் பிடுங்கிக் கொண்டு, அந்த விமானத்தில் ஏறி சரவணத்தருகல் வருகையில் விமானம் நின்றிட, நந்திதேவன், இராவணனைப் பார்த்து, "இது சிவபெருமானின் இருக்கை நீ போகல் தகாது" என்று கூறினார். இதற்கு இராவணன் நந்திதேவரைக் கண்டு, "குரங்கு முகன்" என்று பரிகசிக்க, நந்திதேவர் கோபம் கொண்டு, "உன் பட்டணம் குரங்கால் அழிக" என்று சாபமிட்டார்.
"நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால்
கூல வான் குரங்கால் குறுகும் கோள் அது”
(இராவணன் மந்திரப் படலம் 91)
இந்தச் சாப வரலாறு, விபீஷணன் இராவணனுக்கு அறிவுரை கூறுமிடத்தில் இடம் பெற்றிருக்கிறது.
பிரம்மன் தந்த சாபம்
படைப்பின் தலைவனான பிரம்மதேவன், இராவணனிடம், “உன்னைக் கூடும் விருப்பமற்ற பெண்களின் உடலை நீ வலியத் தொடுவாயானால் அக்குற்றத்திற்காக, தெய்வத்தன்மைப் பொருந்திய உன் பத்துத் தலைகளும் மீண்டும் முளைக்கமுடியாதபடி நிலத்தில் சிதறி விழும்” என்று சாபமிட்டார்.
"மேவு சிந்தைஇல் மாதரை மெய் தொடின்
தேமேவுவன் தலைசிந்துக நீ என"
(சுந்தரகாண்டம்- சூளாமணி படலம் 625)
இந்தச் சாப வரலாறு சூளாமணி படலத்தில் இடம் பெற்றுள்ளது.
அகலிகைக்குக் கிடைத்த சாபம்
கௌதம முனிவரின் மனைவி அகலிகை மிகுந்த அழகுடையவள். தேவர்களின் தலைவனான இந்திரன், இவள் மேல் ஆசை கொண்டு, முனிவர் இல்லாத நேரத்தில் முனிவரின் ஆசிரமத்திற்கு, அந்த முனிவர் வடிவில் வந்தான். வந்திருப்பவன் தன் கணவன் அல்ல, இந்திரன் என்று தெரிந்திருந்தும், அகலிகை இந்திரனுடன் சேர்ந்தாள். முனிவர் ஆசிரமம் வர, இந்திரன் பூனை வடிவில் வெளியேற, அனைத்தையும் தெரிந்து கொண்ட முனிவர், அகலிகையைக் கல்லாகும்படி சாபமிட்டார். இந்திரனுக்குப் பெண்களின் அடையாளமாக உள்ள பெண்குறிகள் ஆயிரம் உன் உடம்பில் தோன்றும் என்றும் சாபமிட்டார்.
"ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று
ஏயினான் அவைஎலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம்" (பாலகாண்டம் - அகலிகைப் படலம் 478)
இந்த சாபவரலாறு பாலகாண்டம் அகலிகைப்படலத்தில் விசுவாமித்திரர் இராமனிடம் கூறுமிடத்தில் உள்ளது.
கவந்தனுக்குக் கிடைத்த சாபம்
'தனு' என்னும் பெயரையுடைய ஒரு கவந்தன், 'ஸ்தூலசிரஸ்' என்னும் முனிவரது சாபத்தால் அரக்கப் பிறப்பை அடைந்தான். தங்கள் கரத்தால் சாபநிவிர்த்தி பெற்றேன் என்று கூறுகிறான். ஆரண்யகாண்டத்தில் இராமனும், இலக்குவணனும் சீதையைத் தேடிக் கொண்டு வரும்போது, கவந்தன் அவர்களுடன் போரிடுவான். அப்போது, கவந்தன் சாபம் பெற்ற வரலாறு கூறப்பட்டுள்ளது.
"சந்தப்பூண் அலங்கல் வீர தனு எனும் நாமத்தேன் ஓர்
கந்தர்ப்பன் சாபத்தால் இக் கடைப்படு பிறவி கண்டேன்" (ஆரண்யகாண்டம்- கவந்தன் படலம் 1177)
விராதனுக்குக் கிடைத்த சாபம்
'தும்புரு' என்னும் பெயரை உடையவன் குபேரனுக்குரிய வானுலகத்தில் வாழ்பவன். ரம்பை மேல் வேட்கைக் கொண்டு, அவளிடம் ஊடல் கொண்டு, கூடலும் கொண்டு அவளை அடைந்ததால், குபேரன், விராதனுக்கு அரக்கவடிவம் பெற சாபமிட்டான். உன்னுடைய திருவடி தீண்டப் பெற்றதால் நான் சாப விமோட்சம் பெற்றேன் என விராதன் இராமனிடம் கூறினான்.
"கரக்க வந்த காம நோய்
துரக்க வந்த தோமினால்
இரக்கம் இன்றி ஏவினான்
அரக்க மைந்தன் ஆயினேன்” (ஆரண்ய காண்டம்-விராதன் வதைப் படலம் 65)
இது ஆரண்ய காண்டத்தில் இராமன், சீதை, இலக்குவணனுடன் வர, விராதன் அவர்களுடன் போரிட்டான். அப்போது இந்தச் சாபவரலாறு கூறப்பட்டுள்ளது.
வாலிக்குக் கிடைத்த சாபம்
வாலிக்கும், துந்துபி என்ற அரக்கனுக்கும் இடையே போர் நடைபெற்றது. வாலி துந்துபியைக் கொன்று, அவனை இழுத்து வீசி எறிந்தான். அப்போது அவ்வசுரனின் உயிர், மேல் உலகத்துக்குச் செல்ல, உடல் இம்மண்ணுலகத்தில் விழுந்தது. முடை நாற்றத்தையுடைய துந்துபியின் உடல் வானத்தின் உச்சியைத் தாக்கி அங்கு படிந்துப் பின், உருசிய மலையை அடைந்தது. அங்கிருந்த ‘மதங்க முனிவர்’, ”பிணத்தை எறிந்து ஆசிரமத்தைத் தூய்மைக் கெடச் செய்தவன் இங்கு வரின், அவன் தலை வெடித்து இறப்பான்” என்று வாலிக்குச் சாபமிட்டார்.
"கட்டி மால் வரையை வந்து உறுதலும் கருணையான்
இட்ட சாபமும் எனக்கு உதவும் என்று இயல்பினின்” ( துந்துபிப் படலம் 191)
வாலிக்கு மதங்க முனிவர் சாபமிட்ட வரலாறு கிட்கிந்தா காண்டம் துந்துபிப் படலத்தில் கூறப்பட்டுள்ளது.
சுயம்பிரபைக்குக் கிடைத்த சாபம்
‘மயன்’ என்ற அசுரன் தேவப்பெண்களுள் ஒருத்தியின் இன்பத்தை விரும்பினான். அந்த அழகிய தேவமாது என் உயிர் போன்ற தோழி. அந்த அசுரன் என்னை மன்றாடிக் கேட்டதால், நான் அவளைத் தேவ உலகிலிருந்து இந்துருட்ச பிலத்தில் சேர்க்க, இருவரும் இங்கு தங்க, இந்திரன் சினந்து விபரம் தெரிந்து கொள்ள, “நீ இந்த நகரிலேயே தங்குக என்றும், நகரத்தைக் காக்கும் வேலை உன்னுடையது என்றும் கூறி சாபமிட, இராமனால் அனுப்பப்படும் வானரர்கள் இங்கு வந்தால், அப்போது உன் துன்பம் நீங்கும்" என்றார்.
"வனைந்து முடிவுற்றது என மன்னனும் இது எல்லாம்
நினைந்து இவண் இருத்தி நகர் காவல் நினது என்றான்" (கிட்கிந்தா காண்டம்- பிலம் புக்கு நீங்கு படலம் 873)
இந்த சுயம்பிரபை சாபவரலாறு கிட்கிந்தா காண்டம் பிலம்புக்கு நீங்கு படலத்தில் இடம் பெற்றுள்ளது.
இலங்காதேவி தன் வரலாறு கூறுதல்
அனுமன் இலங்கை சென்று ஊருக்குள் நுழையும் போது, இலங்காதேவி அவனைத் தடுத்துச் சண்டையிட்டாள். அனுமன் அவளை அடித்துக் கீழே தள்ளிய போது, இலங்காதேவி, "இந்த இலங்கை நகரை நான் எவ்வளவு காலம் காப்பேன் என்று பிரம்மனிடம் வினவிய போது, மிக்க வலிமை பெற்ற ஒரு குரங்கு கையினால் உன்னை அடித்து வருத்தும் போது, நீ இலங்கையை விட்டு வந்து என்னைக் காண்பாய், அதற்குப் பின், இலங்கை அழிவது உறுதி" என்று பிரம்மன் உரைத்ததை அனுமனிடன் கூறிவிட்டுச் சென்றாள்.
"கைத்தலம் அதனால் தீண்டிக் காய்ந்த அன்று என்னைக் காண்டி
சித்திர நகரம் பின்னை சிதைவது திண்ணம் என்றான்" (சுந்தர காண்டம்- ஊர்தேடுபடலம் 188)
இக்கதை சுந்தரகாண்டம் ஊர்த்தேடு படலத்தில் இடம் பெற்றிருக்கிறது.
இந்திரன் பெற்ற சாபம்
திருமகளின் பூமாலையை இந்திரனுக்குக் கொடுக்க, அவன் இகழ்ந்ததால் துர்வாசமுனிவர் சாபமிட்டார். இந்தச் சாபத்தினால் இந்திரனின் செல்வம் அனைத்தும் கடலில் மூழ்கி விட, தேவர்களும், அசுரர்களும் கடலைக் கடைந்த போது, எழுந்தவற்றுள் சந்திரனும் ஒருவன். அது போலக் கடலில் இருந்து மைநாகமலையும் எழுந்தது.
"பூவால் இடையூறு புகுந்து பொறாதநெஞ்சின்
கோ ஆம் முனி சீறிட வேலை குளித்த எல்லாம்" (சுந்தரகாண்டம்- கடல்தாவு படலம் 45)
இந்திரன் பெற்ற சாப வரலாறு சுந்தரகாண்டம் கடல் தாவு படலத்தில் இருக்கிறது.
முடிவுரை
இராவணன் வரங்களாக மூன்றரை கோடி ஆயுட்காலமும், சந்திரஹாசம் வாளையும் பெற்றான். கும்பகர்ணன் தலையைக் கடலுள் மறைத்து விடும்படியான வரத்தை இராமனிடம் பெற்றான். கொம்பன், மகோதரன் ஆகியோர்களும் வரம் பெற்றவர்கள். வாலி எதிரில் யார் நின்றாலும், அவர்கள் அடைந்துள்ள நல்லவர்கள் வலிமை நலமாக உள்ளவற்றில் சரி பாதி வழியில் சேரும் வரம் பெற்றவன். தசரதனிடமிருந்து, கைகேயி பரதன் நாடாளவும், இராமன் பதினான்கு வருடங்கள் வனம் ஏகவும் வரம் வாங்கினாள். பெண்ணாலும், ஆணாலும், அலியினாலும் உயிர் உடையவற்றாலும், உயிர் இல்லாதவர்களாலும், அஃறிணைப் பொருட்களாலும், படைக்கலன்களாலும், மந்திரத்தாலும் இறக்கமாட்டான். மண்ணிலும், விண்ணிலும் இறக்கமாட்டான் என்ற வரம் பெற்றவன் இரணியன். தசரதனுக்குக் கிடைத்த சாபம், இராவணனுக்குக் கிடைத்த சாபம், அகலிகைக்குக் கிடைத்த சாபம், கவந்தனுக்குக் கிடைத்த சாபம், விராதனுக்குக் கிடைத்த சாபம், வாலிக்குக் கிடைத்த சாபம், சுயம்பிரபைக்குக் கிடைத்த சாபம், இலங்காதேவி தன் வரலாறு கூறுதல், இந்திரனுக்குக் கிடைத்த சாபம் ஆகிய சாபங்கள் கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளன.
துணை நூற்பட்டியல்
1. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் (தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8), வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.