கம்பராமாயணத்தில் ‘மும்மடங்கு’ என்ற சொல்லாட்சி
முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.
முன்னுரை
கம்பராமாயணம் இந்து சமய இதிகாசங்களுள் ஒன்று. கம்பரால் இயற்றப்பட்ட இராமாயணம் ஒரு வழி நூலாகும். வடமொழியில் வால்மீகி இயற்றிய இராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டது. இது ஒரு வழி நூலாக இருந்தாலும் கம்பர் தனக்கே உரிய பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். இராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணத்தைப் பெற்று, சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்டு தமிழ்ப் பண்பாட்டோடு இயைந்து விளங்குகிறது. கம்பர் இராமாயணத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்தார். ஒன்று, இரண்டு, மூன்று என்பதை ஒருமை, இருமை, மும்மை என்று கூறுவார்கள். மும்மை, மூன்று மடங்கு எனும் சொல் என்றாலும் கம்பனின் ஆளுமை கொண்ட கவிதைகளில் ஒன்று. ‘மும்மடங்கு’ கம்பனில் சொல்லாட்சி சிறப்புக்குக் காரணமாக அமைகிறது. மும்மை எனில் மும்மடங்கு என்றும் பொருள். Three fold எனலாம். கம்பனின் சொல்லாட்சியில் இருந்து 'மும்மடங்கு' என்பதை இக்கட்டுரையில் ஆராய்வோம்.
கோசலை பரதனைப் புகழ்தல்
இராமன், இலக்குவன், பரதன், சத்ருக்கணன் ஆகிய நால்வரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்தும் கோசலையிடம் இராமன், “பரதன் நாடாளப் போகிறான்" என்று கூறிய போது “மூத்தவனே முடிசூட வேண்டும் என்னும் முறைமைக்கு இது மாறாக உள்ளது என்னும் ஒரு குறை இருக்கிறது. மற்றபடி பரதன் உன்னைக் காட்டிலும் மூன்று மடங்கு நிறைந்த குணங்களை உடையவன்” என்று கோசலை பரதனைப் புகழ்ந்து கூறும் இடத்தில் மூன்று மடங்கு வந்துள்ளது என்பதை,
“முறைமை அன்று என்பது ஒன்று உண்டு மும்மையின்
நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால்" (நகர்நீங்குபடலம் 296)
என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.
பரதன், இராமனைக் காட்டிலும் மிகவும் நல்லவன் என்று கோசலை குறிப்பிடும் போது, ‘மூன்று மடங்கு’ நல்லவன் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
கைகேயியின் செயலைப் பழித்து இலக்குவன் போர்க்கோலம் பூணுதல்
கைகேயியின் செயலைப் பழித்து இலக்குவன் போர்க்கோலம் செய்யும் போது, இலக்குவணனின் கால்களில் கட்டியுள்ள வீரக்கழல், கடல் நாணும்படி ஒலித்தது. தனது பிடியிலே இருந்த வில்லின் நாணை அவன் தடவியதால் பிறந்தப் போருக்குரியப் பேரொலி இவ்வுலகம் அழியும் காலத்தில் ஏழு கடல்களின் நீரையும் உட்கொண்டு, இடிகளோடு தொடர ஒலிக்கும் மேகங்களைக் காட்டிலும் மூன்றுமடங்கு அதிகமாக இருந்தது என்பதை,
“இடியின் தொடர கடல் ஏழும் மடுத்து இஞ்ஞால
முடிவில் குமுறும் மழை மும்மையின்மேல் முழங்க" (நகர்நீங்குபடலம் 407)
பாடலின் மூலம் அறியமுடிகிறது.
இலக்குவன் வில்லில் நாணேற்றிய ஒலி, இடியின் ஒலியைப் போல அதிகமாக இருந்தது என்று குறிப்பிடும் இடத்தில் ‘மூன்று மடங்கு’ இருந்தது என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
இராமனைக் கண்ட சூர்ப்பணகை
இராவணன் தங்கை சூர்ப்பணகை இராமபிரானைக் கண்டு மையல் கொண்டாள். மலைக்குகையைச் சேர்ந்த போதும், வெப்பம் மிகுந்த தென்றல் காற்றினால் அவளுடைய முலைகள் முன்பைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக வெந்து அனலைச் சொரிய, இதைத் தணிக்க இன்னது செய்வது என்று அறியாமல், பொன்னிறமான, இளமையான, மிகுதியான தளிர்களின் மேல் விழுந்து புரண்டாள். இராமபிரானைக் கண்டு காமம் மேலிட அவள் அதைப் பொறுக்க மாட்டாமல் செய்த செயலில் மூன்று மடங்கு அதிகம் ஏற்பட்டதாகக் கம்பர் குறிப்பிடுகிறார் என்பதை,
“அன்ன காலை அழகு மிகு தென்றலால்
முன்னின் மும்மடி ஆய் முலை வெந்து உக" (சூர்ப்பணகைப்படலம் 299)
என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.
இராமன் மேல் அதிகமான காம உணர்வு ஏற்பட்டதால், அதைத் தணிக்க சூர்ப்பணகை செய்த செயல் அதிகமாக இருந்தது என்பதைக் குறிப்பிடும் இடத்தில் ‘மூன்று மடங்கு’ என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
இராமன் வேகமாகத் தேடினான்
அயோமுகி, இலக்குவணனைத் தூக்கிக் கொண்டு சென்ற போது, அவன், அவளுடைய மூக்கு போன்ற உறுப்புக்களை அறுத்த போது, மூக்கு அறுபட்ட அயோமுகி கூக்குரல் இட்டாள். அந்த ஒலியைக் கேட்ட இராமன், ஒலி வந்த திசையில் பெரிய மலைகள் தூளாகவும், உயர்ந்த பெரிய மரங்கள் ஒடிந்து போகவும், பூமாதேவி வருத்தமடையவும், புயற்காற்றைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமான வேகம் உடையவனாய் தம்பியைத் தேடிக் கொண்டு விரைவாக ஓடினான் என்பதை,
“சட சட எனும் ஒலி தழைப்பச் சாவும்
முடுகினன் இராமன் வெங்காலின் மும்மையான்” (அயோமுகிப்படலம் 1105)
என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.
நீர் கொண்டு வரச் சென்ற இலக்குவணனைக் காணாததாலும், திடீரெனச் சத்தம் கேட்டதாலும், இராமன் வேகமாக வந்தான் என்று கூறும் போது ‘மூன்று மடங்கு வேகம்’ என்ற கம்பர் குறிப்பிடுகிறார்.
அனுமன் இலங்கையை எரியூட்டுதல்
அனுமன் அரக்கருடன் நடத்தியப் போரில் இறந்தவர்கள் அல்லாமல், அங்கே தோன்றியவர்களான ஆண் சிங்கம் போன்ற வீரர்கள் அனுமனை எதிர்த்துப் போரிட்டனர். எல்லாக் கலைகளையும் கற்றவனும், காற்றின் மைந்தனுமான அனுமன் எமனை விட, மூன்று மடங்கு அதிக வலிமை உடையவனாகி அவர்களைக் கொன்றான்.
“காற்றின் மகன் கலை கற்றான்
கூற்றினும் மும்மடி கொன்றான்" (இலங்கை எரியூட்டு படலம் 1239)
என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.
அனுமன் இலங்கையை எரியூட்டும் போது, நடைபெற்ற போரில் தம்மை எதிர்த்த அரக்கர்களைக் கொன்றதைக் குறிப்பிடும் போது, ‘மூன்று மடங்கு’ அதிகமான வலிமையுடன் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
பொலிவு பெற்ற முகம்
இராமனைப் பிரிந்த சீதை அசோக வனத்தில் இருக்கும் போது, “கைகேயி, கோசலைநாடு தம்பிக்குரியதாயிற்று என்று சொல்ல, அதைக்கேட்டு முன்பு இருந்ததாயினும் மூன்று மடங்கு அதிகமாகப் பொழிவு பெற்ற முகத்தினை உடைய கொடிய ஆண் சிங்கத்தை ஒத்தவனாக இருந்த இராமனை நினைத்து சீதை வாடினாள்” என்பதை,
"மும்மடங்கு பொழிந்த முகத்தினன்
வெம் மடங்கலை உன்னி வெதும்புவாள்" (காட்சிப்படலம் 347)
என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.
உனக்கு அரசு இல்லை என்று கூறிய போதும் முகமானது அதிகமாக பொழிவு பெற்றது என்று கூறும் போது, ‘மூன்று மடங்கு’ என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
கும்பகர்ணனை அழிக்க வானரப்படை
இராமன் பக்கத்திலிருந்த வானர சேனையைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் போதே, கொடிய எமன் கொல்லுமாறு முன்பு அழித்ததை விட, மூன்று மடங்கு அதிகமாக வானரப்படைகளை இப்போது கும்பகர்ணனை அழிக்கின்ற செயலை நோக்கி, “வானரப் பெருஞ்சேனை இன்றே முற்றிலும் அழிந்து ஒழியும் என்பதை எண்ணுவதால் ஏற்பட்ட துன்பத்தோடு உயிர்த் தொடக்கக், கும்பகர்ணனது அற்றுப் போகாதக் கையைக் காட்டிலும், அற்றுப் போனக் கையைக் கண்டே அனைவரும் அதிகதாக அஞ்சினார்கள் என்பதை,
"கொள்ளை கொண்டிடப் பண்டையின் மும்மடி
குமைக் கின்றபடி நோக்கி" (கும்பகர்ணன் வதைப் படலம் 1552)
என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.
கும்பகர்ணனுடன் நடந்த போரில் அவனை அழிக்க எண்ணிய வானரப்படைகள் அதிகமாக சேர்ந்து, அவனை வெல்லக் கருதியது என்று குறிப்பிடும் இடத்தில், ‘மூன்றுமடங்கு’ என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
இரு சேனைகளும் மோதின
இந்திரஜித் அரக்கர் படை, வானரப் படையுடன் மோத, ஒருவரை ஒருவர் அடியுங்கள், பிடியுங்கள், பிடித்தவரைத் தூக்கி எரியுங்கள், அம்புகளை எய்யுங்கள் என்று அந்தந்த சமயத்துக்கேற்றவாறு இரு படை வீரர்களும் கூறும் ஒலியும், வில்லிலிருந்து புறப்படும் ஒலியும் யாவும், அழியும் ஊழியும் இறுதிக் காலத்தில் ஏற்படும் இடியின் ஓசையைக் காட்டிலும் மூன்று மடங்கு பெருக ஒலித்தன என்பதை,
"முற்றுற கடை யுகத்து இடியின் மும்மடி
பெற்றன பிறந்தன சிலையின் பேர்ஒலி” (நாகபாசப் படலம் 1982)
என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.
போர்க் களத்தில் ஏற்பட்ட அனைத்துவிதமான ஒலிகளும், ஊழிக் காலத்து ஏற்படும் ஒலியை விட, அதிகமாகக் கேட்டன என்று குறிப்பிடும் போது, ‘மூன்று மடங்கு’ என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
சூரியனைக் காட்டிலும் ஒளி விடுபவன்
இந்திரஜித் நாகாஸ்த்திரத்தை இலக்குவன் மேல் ஏவ, அவன் இறந்தது போல் விழுந்தான். அப்போது கருடன் விரிந்த திசைகள் எங்கும் நீங்காத ஒளியைப் பரப்புவதன் மூலமாக இருளைச் சுருளச் செய்து, தன் மேனியின் ஒளியை விரியச் செய்தும், வெண்கழுத்தின் ஒளியைத் திரட்டிப் பரவுகின்ற சந்திர ஒளியை மிரளச் செய்தும், தன் உடலால் பகல் பொழுது உண்டாக்கியும், தனது ஒளி விடுகின்ற மகுடம் போன்ற நாவலந்தீவின் இடையிலே நின்ற மேரு என்னும் பெயர் கொண்டிருந்தப் பழமையான மலையின் மேலே ஒளி வீசும் சூரியனைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக ஒளி விடுபவன் ஆயினான் என்பதை,
"தொல்லைப் பொருப்பின் மிசையே விளங்கு
சுடரோனின் மும்மை சுடர” (நாகபாசப் படலம் 2189)
என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.
சூரியனைக் காட்டிலும் அதிகமான ஒளிவிடுபவன் என்று கூறும் போது, ‘மூன்று மடங்கு’ என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
இந்திரஜித் இலக்குவன் கடும்போர்
இந்திரஜித்க்கும், இலக்குவணனுக்கும் போர் நடைபெற்றது. அப்போது இலக்குவன், இந்திரஜித்திடம், " நீ இறந்து போக உன் தந்தை உனக்கு நீர்க்கடன் செய்வான்” என்று கூற மிகுந்த கோபமடைந்த இந்திரஜித் வானமும், வையமும் திசைகள் யாவையும் மறையுமாறு சிறந்த பாற்கடலைப் போல பரவி நின்ற குரங்குப் படையைக் குடிப்பனவான ஒளியை முனையிலே உடைய அம்புகளை பெருமழையை பெய்விக்கும் கருமேகத்தை விட, இருமடங்கு, மும்மடங்கு அதிகமாக பொழிந்தான் என்பதை,
"பால் நல் வேலையைப் பருகுவ சுடர் முகப் பகழி
சோனை மாரியின் இருமடி மும்மடி சொருந்தான்” (பிரம்மாத்திரப் படலம் 2449)
என்ற பாடலடி மூலம்அறிய முடிகிறது.
கோபமும், வருத்தமும் அதிகமான நிலையில் பெருவாரியாக அம்புகளை இந்திரஜித், இலக்குவன் மேல் மழையைப் போல் பொழிந்தான் என்று கூறுமிடத்து, ‘மூன்று மடங்கு’ என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
அனுமன் - அகம்பன் போர்
அனுமனுக்கும், அகம்பனுக்கும் போர் நடைபெற்றது. அப்போது, அகம்பன் போர்க்களப் பரப்பைப் பார்த்து, குகை போன்ற தனது வாயை மடித்துக் கொண்டு, பகைவரைக் கொன்று குவிக்கும் தொழிலில் வெம்மையானத் தீப்பொறிகள் தன் கொடிய வழிகளில் வெளிப்படக் கொடி பறக்கும் தேரினைச் செலுத்தி, அனல் பறக்கும் அம்புத் தொகுதியாகிய மழையை, இயற்கை மழையைக் காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாகப் பொழிந்து, விரைவாகச் சென்று அனுமனை அடைந்து மேகம் போல ஆர்ப்பரித்தான் என்பதை,
"விடு கனல் பகழி மாரி மழையினும் மும்மைவீசி
முடுகுறச் சென்று குன்றின் முட்டினான் முகிலின் ஆர்ப்பான்” (பிரம்மாத்திரப் படலம் 2511)
என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.
இயற்கை மழையை விட, வேகமான அம்புகளைப் பொழிந்தான் என்று கூறுமிடத்து, ‘மூன்று மடங்கு’ என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
இலக்குவன் - அதிகாயன் போர்
இடையில் ஏற்பட்ட தளர்ச்சி நீங்கப் பெற்ற அதிகாயன் தன் பக்கத்தே நின்ற படை வீரர்கள் இறந்து விழுந்த விதத்தையும், அரக்கரை நோக்கிப் பறந்து போகின்ற இலக்குவன் ஏவிய சிறந்த அம்புகள் அனைத்தையும் நின்று கணக்கிட, அந்த இடத்தில் ஒரு கணக்கே இல்லாத நிலையினையும் உணர்ந்தான். அவன் ஊன்றிய வில்லினை எடுத்துக் கொண்டவனாய் மனங்கொதித்துத் , தொடுக்கப்படுதலைப் பெற்ற அம்பு மழையை, இயற்கை மழையைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாகச் செலுத்தினான் என்பதை,
“இடை நின்ற மயக்கம் தீர்ந்தான் ஏந்திய சிலையன் காந்தி
தொடை நின்ற பகழி மாரி மாரியின் மும்மை தூர்த்தான்" (அதிகாயன் வதைப் படலம் 1863)
என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.
இலக்குவணனால் தனது படைவீரர்கள் இறந்து படுவதைக் கண்ட அதிகாயன் மிகுந்த கோபத்துடன் இயற்கை மழை பெய்வதைக் காட்டிலும் அதிகமாக அம்பு மழைகளைப் பெய்வித்தான் என்று குறிப்பிடும் போது, ‘மும்மடங்கு’ என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
இந்திரஜித் - நீலன் போர்
இறந்தவை தவிர, இன்னும் உயிரோடு உள்ள குரங்குகள் அனைத்தும் எல்லாப் பக்கங்களிலும் சிதறி ஓடுமாறும், தேவர்கள் உள்ளத்திலும், மற்றுள்ளவர்களின் உள்ளத்திலும் தொகுப்பு உண்டாகுமாறு மேரு மலையை விட, மூன்று மடங்கு மிகுந்த உறுதி நிறைந்த நீலனின் உடல் முழுவதிலும் துளைகள் சல்லடைக் கண் போலத் தோன்றி வெட்டவெளியாகவும், ரத்த வெள்ளம் பெருகிப் பாயவும் இந்திரஜித் அம்புகள் எய்தான் என்பதை,
"மோகம் எங்கும் உள ஆக மேருவினும்
மும்மடங்கு வலி திண்மைசால்" (நாகபாசப்படலம் 2027)
என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.
அதிகாயன், நீலனுடன் போரிடும் போது, அம்புகளைப் பொழிந்தான் என்று கூறும் போது ‘மூன்று மடங்கு’ பொழிந்தான் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
இராவணன் சோர்தல்
இராமனுடன், இராவணன் போர் செய்த போது களைப்பாகித் தேரிலேயே மயங்கினான். அதைக் கண்டத் தேர்ப்பாகன் தேரைத் திருப்பினான். மயக்கம் தெளிந்த இராவணன் சாரதியிடம் கோபம் கொண்டு, அவனைக் கொலை செய்ய வாளை எடுத்தான். சாரதி பொறுமையாகவும், நிதானமாகவும் இராவணன் மனம் ஏற்கும் வகையில் காரணத்தைக் கூற, இராவணனும் மனம் மாறினான். பின், யமனைவிடக் கொடிய அம்புகளைக் கோடிக் கணக்காக இராமன் மேல் சொரிந்தான். முன்னை விட மூன்று மடங்கு வலிமை பெற்றவனான அவ்வரக்கன், " இவன் வேறு ஓர் கொடிய வாள் அரக்கனோ" எனப் பிறர் நினைக்குமாறுக் கொடுமையுடன் போர் செய்தான். அப்போரைக் கண்டவர்கள் அச்சம் கொண்டனர்.
"கூற்றின் வெங் கணை கோடியின் கோடிகள்
தூற்றினான் வலி மும்மடி தோற்றினான்" (இராவணன் வதைப்படலம் 3824)
போரைக் கண்டவர்கள் மிகுந்த அச்சம் கொள்ளும்படியாக இராவணன், இராமன் மேல் முன்பை விட, மூன்று மடங்கு வேகமாக அம்பு மழையைப் பெய்வித்தான் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
இராமனுக்கும், இராவணனுக்கும் போர் நடந்த போது, இரண்டு தேர்களும் உலகமெங்கும் செலுத்தப்பட்டுத் திரிந்த சாரிகைகள், கடற்கரை மணலினும் மூன்று மடங்கு ஆகும். அத்துணைச் சாரிகைகள் திரிந்தும் திறமை வாய்ந்த தேர்ப்பாகன் செலுத்திய வெற்றி பொருந்திய இரு பக்கங்களிலும் உள்ள தேர்க் குதிரைகள் இளைக்கவும் இல்லை, பெருமூச்சு விடவும் இல்லை.
"உய்த்து உலகு அனைத்திலும் உழன்ற சாரிகை
மொய்த்தது கடலிடை மணலிம் மும்மையால்" (இராவணன் வதைப்படலம் 3715)
போர் செய்யும் போது, சாரிகைகள் கடற்கரை மணலினும் மூன்று மடங்காகும் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
வருணனை வழி வேண்டு படலம்
இராமன் பெரிய குல மலைகள் ஏழைவிப் பெரு வலிமை கொண்ட கட்டமைந்தக் கொடிய தன் வில் வளர்பிறைச் சந்திரனைப் போன்றது எனக் கூறும்படி நாணினை இழுத்தான். இவ்வுலகில் உள்ள இயங்குவனவும், நிற்பனவுமான உயிர்கள் எல்லாவற்றையும் யுகமுடிவில் எரித்து அழிக்கின்றத் தீயை விட, மூன்று மடங்கு வெம்மையால் கொடிய அம்புகளை ஆராய்ந்து எடுத்துச் செலுத்தினான் என்பதை,
"திரிவ நின்றன யாவையும் முடிவினில் தீக்கும்
எரியின் மும்முடி கொடியன சுடுசரம் எய்தான்” (வருணனை வழி வேண்டு படலம்547)
என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.
யுகமுடிவில் எரித்து அழிக்கின்ற தீயை விட, அதிகமான வெம்மையால் அம்புகளை எய்தான் என்று குறிப்பிடும் இடத்தில் ‘மூன்று மடங்கு’ வெம்மையாக என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
மும்மடங்கு பொழிந்தன
இராவணன் இறந்த பின்பு அவன் முகம் மூன்று மடங்கு பொழிவு பெற்றன. கொடிய சிங்கத்தின் சினம் போன்ற மிக்க சினம் அடங்கவும், மனம் அடங்கவும், தீயநினைவுகள் அடங்கவும் , பகைவர் ஒடுங்கப் போர் செய்கின்றப் பெரிய கைகளின் செயல் அடங்கவும், சீதைமேல் கொண்ட காமம் அடங்கவும், ஆற்றல் அடங்கவும், அந்த அறநெறி துறந்த இராவணனின் உயிர்த் துறந்த முகங்கள், தம் ஐம்பொறிகளும் அடங்கி நிற்கும் முனிவரையும், அவர்தலை நிற்கும்படியும், அவரின் தவநிலை அடங்கும்படியும் வருத்திய நாளில் இருந்தப் பொழிவை விட, மூன்று மடங்கு பொழிவு மிகுந்திருந்தன என்பதை,
“வெம் மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க
மனம் அடங்க வினையம் வீய
தெவ் மடங்கபொரு தடக் கைச் செயல் அடங்க
மயல் அடங்க ஆற்றல் தேய
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்க
நிலை அடங்கச் சாய்த்த நாளின்
மும்மடங்கு பொலிந்தன அம் முறை துறந்தான்
உயிர் துறந்த முகங்கள் அம்மா" (இராவணன் வதைப் படலம் 3841)
என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.
இராவணன் இறந்தவுடன் அவனது சினம் அடங்கியது. சீதையை அடைய நினைத்த மனம் அடங்கியது. தீய நினைவுகள் அடங்கியது என்று பல தீய செயல்கள் அடங்கியதால் அவனது முகம் பொழிவு பெற்றதைக் குறிக்கும் போது ‘மூன்று மடங்கு’ பொழிவு மிகுந்திருந்தானென்று கம்பர் குறிப்பிடுகிறார்.
முடிவுரை
கம்பனின் சொல்லாட்சியில் 'மும்மடங்கு' என்ற சொல் வேகத்தை வெளிப்படுத்தவும், உயர்ந்த பண்பைக் காட்டவும், வலிமையைக் குறிப்பிடவும், எண்ணிக்கையில் மிகுதியைக் குறிப்பிடவும், பொழிவைக் கூறவும் என்று பல வகையிலும் சிறப்பாகக் குறிப்பிட இச்சொல்லையேக் கம்பர் பயன்படுத்தியுள்ளார். இராவணன் இறந்த பின், உணர்ச்சிகள் அடங்கப் பெற்ற அவனது முகம் முன்பு இருந்ததைக் காட்டிலும் மும்மடங்கு பொழிவு பெற்றன என்பதை மிகச் சிறப்பாகக் கம்பராமாயணத்தில் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.
துணை நூற்பட்டியல்
1. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8 வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.