Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

கம்பராமாயணத்தில் அடைக்கலம்

முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.


முன்னுரை

தன்னை அடைக்கலமாக அடைந்தவர்களைக் காப்பதேத் தலைசிறந்த அறமாகும். அடைக்கலம் அடைந்தவரை தன்னுயிர் தந்தும் காத்தல் வேண்டும். அடைக்கலம் பெற்றவராலேயே, அடைக்கலம் தந்தவர்க்கு துன்பம் ஏற்பட்டாலும், அது அடைக்கலம் தந்தவர்க்குப் புகழேயாகும். எனவே யார் வந்து அடைக்கலம் வேண்டினாலும் அடைக்கலம் தரவேண்டும். பழந்தமிழ் இலக்கியங்களில் அடைக்கலம் குறித்து கூறப்பட்டுள்ளன. கம்பராமாயணத்தில் அடைக்கலத்தின் இன்றியமையாமை குறித்து கம்பர் கூறிய கருத்துக்களை ஆராய்வோம்.

இறைவனது கருணையைப் பெற அவனை வழிபடலாம். நாம் அதை விட, அவனையேச் சரணடைந்து விட்டால் அவன் காப்பாற்றுவான். கிருஷ்ணபகவான், அர்ச்சுணனுக்கு இதையேக் கூறினார். "அர்ச்சுனா என்னை சரணடைந்துவிடு, உன்னை நான் காப்பாற்றுகிறேன்". இதையே சரணாகதித் தத்துவம் என்கின்றனர். இறைவனை அடைவதற்கு ஞானயோகம், பக்தி யோகம், கர்மயோகம் என்று சொல்லப்பட்ட பல வழிகளை விட மிக எளிய வழியே சரணாகதி என்பர். குலசேகராழ்வாரும் “திருமால் திருவடிகளே சரணம்” என்று “தருதுயரம் தடடியேல் உன் சரணல்லால் சரண்இல்லை" என்கிறார். மாணிக்கவாசகர் தனது திருவாசகத்தில் "அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்" என்கிறார்.

சங்க இலக்கியங்களில் அடைக்கலம்

சங்க இலக்கியங்களில் அடைக்கலம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. பாரி மூவேந்தர்களால் வஞ்சித்துக் கொல்லப்பட்டப் பின்னர் அவன் மகளிரை அழைத்துச் சென்று, கபிலர் பார்ப்பார்பால் அடைக்கலம் செய்தார்.

"கலை உணக் கிழிந்த, முழவு மருள், பெரும் பழம்
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்
மலை கெழு நாட மா வண் பாரி!
கலந்த கேண்மைக்கு ஓவ்வாய், நீ எற்
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே
பெருந் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது,
ஒருங்கு வரல் விடாது, ’ஒழிக’ எனக் கூறி
இனையை ஆதலின் நினக்கு மற்று யான்
மேயினேன் அன்மையானே ஆயினும்,
இம்மை போலக் காட்டி, உம்மை
இடை இல் காட்சி நின்னோடு
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே" (புறநானூறு 236)

சிபி கொடுத்த அடைக்கலம்

கழுகிடமிருந்து புறா ஒன்று தப்பி, சிபி எனும் மன்னனிடம் அடைக்கலம் புகுந்தது. அதனைத் தொடர்ந்து வந்த பருந்து, புறாவை வேண்ட, அதன் எடைக்குத் தக்கத் தன் தசையை அரிந்து தர முயன்றான். இறுதியில் புறாவின் எடையுடன் நேர் நில்லாததால், தானேத் துலாத்தட்டில் ஏறினான்.

"புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல்" (புறநானூறு 37)


குரங்கு தன் குட்டியை அடைக்கலம் தரல்

"கருங்கட் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செருக்கும்" (குறுந்தொகை.69)

கரிய கண்களையும் வலிமையையும் உடைய ஆண் குரங்கு இறந்து படுகிற போது, அதன் பிரிவுத் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளாத பெண் குரங்கு தாவுதல் தொழிலை அறியாதத் தன் கடுவன் குட்டியைச் சுற்றத்தினிடத்து அடைக்கலமாகச் சேர்ப்பித்த பின் உயர்ந்த மலையின் மீது ஏறிக்குதித்துத் தன் உயிரைப் போக்கிக் கொள்ளும்.

திருக்குறள் கூறும் அடைக்கலம்

வள்ளுவரும் இதையே,

"தனக்கு உவமையில்லாதான் தாள்சேர்ந்த்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது" (திருக்குறள்- கடவுள்வாழ்த்து 7)

தனக்குவமை இல்லாத தலைவனே இறைவன். அவன் திருவடிகளைச் சரணடைந்தாலன்றிப் பிறப்பில் வரும் துன்பத்தைப் போக்க இயலாது என்று கூறுகிறார்.

சிலம்பில் அடைக்கலம்

ஆயர்குல மூதாட்டியான மாதரி, கவுந்தியடிகளைக் கண்டு வணங்கினாள். அவளை வாழ்த்தியக் கவுந்தியடிகள், பசுக்களைப் பிணி முதலியவற்றினின்றும் காத்தும், அந்தப் பசுக்கள் தரும் பயனை யாவருக்கும் நல்கும் ஆயர் வாழ்க்கையில் சிறிதும் தீமையில்லை. மேலும் இவள் குற்றமற்றவள். முதியவள். பண்புடையவள். அருள் உள்ளம் உடையவள். ஆதலால் இம்மாதரியிடம், கண்ணகியை அடைக்கலம் தருவதில் குற்றமில்லை என்று எண்ணினார்.

" "கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்
உடைப் பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும்
இடைக் குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்" (சிலப்பதிகாரம்-அடைக்கலக்காதை 127-129)

மாதரியிடம், கண்ணகியை அடைக்கலம் தந்தார். மாதரியிடம், தவத்தோர் தரும் அடைக்கலப் பொருளைக் காத்தல் எளியதேயாயினும், அது மிகப் பெரிய இன்பத்தினை அளிக்கும் என்றும் பல கதைகளைக் கூறினாள். அடைக்கலம் அளித்தால், அடைக்கலம் அளித்தவர்க்கும், அடைக்கலம் பெற்றவர்க்கும் தடையிலா இன்ப வாழ்வைப் பெறுவர் என்று கவுந்தியடிகள் மாதரியிடம், அடைக்கலத்தின் சிறப்பையும், அடைக்கலம் தந்தவர், அடைக்கலம் பெற்றவர் அடைந்த நற்பலன்களையும் கூறினார்.


நல்வினையால் குரங்கு தேவனாதல்

சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் மாதரியிடம், கண்ணகியை அடைக்கலமாகத் தரும் போது, சாயலன் என்பவனின் மனைவி செய்த நல்வினைக் குறித்துக் கூறுகிறார். எட்டி என்ற பட்டத்தினை பெற்ற சாயலனும், அவன் மனைவியும் நோன்பு மேற்கொள்ளும் நோன்பிகளுக்கு உணவு அளிப்பதையேத் தங்களின் முக்கியக் கடமையாகச் செய்து வந்தனர். ஒருநாள் சாயலன் மனைவி முனிவர் ஒருவருக்கு உணவளித்து உபசரிக்கும் வேளையில், குரங்கு ஒன்று அம்மனையுள் நுழைந்து முனிவரின் திருவடிகளை வணங்கி, அவர் உண்டு எஞ்சிய எச்சில் சோற்றையும், ஊற்றிய நீரையும் உண்டு, மகிழ்ச்சி கலந்த விருப்புடன் அவருடைய திருமுகத்தை நோக்கியது. அதன் பார்வையால் உள்ளம் நெகிழப் பெற்ற முனிவர் சாயலன் மனைவியை நோக்கி, "இக்குரங்கினை உன் மக்களைக் காப்பது போல் காப்பாயாக" என்றுகூறிச் சென்றார். அவளும் அவ்வாறே அக்குரங்கிற்கு உணவளித்துக் காப்பாற்றி வந்தாள். அக்குரங்கு இறந்த பின்னரும், தானம் செய்யும் போது ஒரு பகுதியை "அதன் தீய பிறவி ஒழிக" எனக் கருதி செய்து வந்தாள். அவள் செய்த தவப்பயனால், அக்குரங்கு இறந்தபின் வாரணாசி நகரத்தில் 'உத்தர கௌத்தமன்' என்பவனுக்கு ஒரே மகனாகப் பிறந்து அழகாலும், செல்வத்தாலும், அறிவினாலும் உயர்ந்து விளங்கி, தானங்கள் பல செய்து அப்பிறவி 32-ஆம் ஆண்டில் முடிய பின் தேவர் வடிவம் பெற்றது. சாயலனும் அவன் மனைவியும் தடையிலா இன்ப உலகான விண்ணுலகை எய்தினர். இதனை,

“காதல் குரங்கு கடைநாள் எய்தவும்
தானம் செய்வுழி அதற்கொரு கூறு
தீதறு கென்றே செய்தனள் ஆதலின்
மத்திம நன்னாட்டு வாரணம் தன்னுள்
உத்தர கௌத்தற்கு ஒருமகனாகி
உருவினும் திருவினும் உணர்வினும் தோன்றிப்
பெறவிறல் தானம் பலவும் செய்தாங்கு” (சிலம்பு-அடைக்கலக்காதை 175-181)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

மணிமேகலையில் அடைக்கலம்

சுதமதியின் தந்தை கௌசிகன் பிச்சை எடுத்து வரும் உணவைக் கொண்டு சுதமதியைக் காத்து வந்தான். ஒருநாள் அவன் பிச்சை எடுக்கப் போகும் பொழுது, ஒரு பசு அவனை முட்டி விட்டது. அவன் வயிறு கிழிந்து, குடல் சரிந்தது. அவன் சரிந்த குடலைக் கையிலே தாங்கிக் கொண்டு சுதமதி தங்கியிருந்த சமணப் பள்ளியிலேப் புகுந்தான். தன்னைக் காக்கும்படி முறையிட்டான். சமணமுனிவர்கள் அவன் முறையீட்டை ஏற்கவில்லை. அவனையும், சுதமதியையும் வெளியேத் தள்ளி விட்டனர். இதனால் துக்கமடைந்த கௌசிகனும், சுதமதியும் வாய்விட்டு புலம்பிக் கொண்டு வீதி வழியேச் சென்றனர். அப்பொழுது பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்தி வந்த சங்கதருமன் என்னும் பௌத்த முனிவன் அவர்களைக் கண்டு வருந்தி அவனைத் தோளில் தூக்கிச் சென்று புத்த துறவிகள் தங்கியுள்ள இடத்தில் சேர்த்துக் காப்பாற்றினான்.

"எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க
எடுத்தனன் தழீஇ கடுப்பத் தலை ஏற்றி
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்
சாதுயர் நீக்கிய தலைவன் தவமுனி" (மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை 66-69)

கம்பராமாயணத்தில் அடைக்கலம்

அடைக்கலத்தின் பெருமையை விளக்கும் காவியம் கம்பராமாயணம். அடைக்கலமாக வந்தோரை எல்லாம் இராமன் ஆதரித்து ஏற்றுக் கொண்டான். அவர்களின் மனக்கவலையை மாற்றி அருளினான். இக்காவியத்தின் உட்கருத்தைக் கம்பர் தன் முதல் பாடலிலேயே, “உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே” (கம்பராமாயணம்- கடவுள் வாழ்த்து1)

உலகங்களை எல்லாம் படைத்தும், காத்தும், துடைத்தும் விளையாடும் பெருமானே ஆண்டவன். அவனே எல்லார்க்கும் அடைக்கலம் அளிப்பவன் என்று உணர்த்துகிறார்.

தசரதன், பரசுராமரிடம் இராமனை அடைக்கலப்படுத்துதல்

இராமன் வில்லை ஒடித்துச் சீதையைத் திருமணம் செய்து கொண்டு வரும் போது, பரசுராமர் எதிரே வந்து நீ ஒடித்த வில்லின் தன்மையை நான் அறிவேன். இப்போது உன் அழகியத் தோளின் வலிமையைச் சோதிக்கும் ஆசை உடையவன். எண்ணற்ற அரசர்களை அழித்து உயர்ந்த என் திரண்டத் தோள்களில் ஏற்பட்டத் தினவும் சிறிது பெற்றுள்ளேன். இங்கு நான் வந்ததன் காரணம் இதுவே, வேறொரு நோக்கமும் இல்லை என்றுரைத்தான். அவர் கூறியதைக் கேட்ட தசரதன், பரசுராமனை நோக்கி, நிலவுலகம் முழுவதையும் வென்று, அதை ஒப்பற்ற முனிவனானக் காசிபனுக்குக் கருணையோடு தானம் செய்தவனே, சிவனும், பிரம்மனும், திருமாலும் உன் வீரத்துக்கு ஒரு பொருளாக மாட்டார் அவ்வாறிருக்க, அற்ப மானிடர் உனக்கு ஒரு பொருளாவாரோ, இந்த இராமனும், எனது பிராணனும் இனி உன் அடைக்கலப் பொருள் என்று கூறினான்.

"சிவனும் அயன் அரியும் அலர் சிறு மானிடர் பொருளோ
இவனும் எனது உயிரும் உனது அபயம் இனி என்றான்" (பரசுராமப்படலம் 1227)

தன்னைக் காக்க வேண்டி, யார் அடைக்கலமாக வந்தாலும் அவர்களுக்கு அடைக்கலம் தரவேண்டியது கடமையாகும். ஆனால் தசரதன் இராமனுக்காக வேண்டி பரசுராமரிடம் அடைக்கலமாக வேண்டியும் அவர் அதைக் கண்டு கொள்ளவேயில்லை. இராமனிடம், வில்லை வளைத்துக் காட்டுமாறு கூறினார். இராமனும் வில்லை வளைத்து நாண்ஏற்றி அந்த அம்பு இலக்கு இன்றி வீணாக்கக்கூடாது, இந்த அம்புக்கு இலக்கு எது என்று கேட்டபோது, "உன்னால் எய்யப்படும் அம்பு, இடையே வீணாகப் போகாமல் நான் செய்துள்ள தவங்களின் பயன் முழுவதையும் கவர்ந்து செல்வதாக" என்று பரசுராமன் கூறினான். உடனே இராமன் அம்பைப் பிடித்துக் கையைச் சிறிது தளர்த்தினான். வில்லிலிருந்து புறப்பட்டுச் சென்ற அம்பு பரசுராமரது குற்றமற்ற தவப்பயன் முழுவதையும் கவர்ந்து கொண்டு இராமனிடமே மீண்டு வந்தது.

"கை அவண் நெகிழ்தலும் கணையும் சென்று அவன்
மை அறு தவம் எலாம் வாரி மீண்டதே" (பரசுராமப்படலம் 1247)

அடைக்கலம் வேண்டி வந்தவர்க்கு அடைக்கலம் அளிக்கவில்லை என்றால், அது அவர்களுக்கேத் துன்பமாகவே அமையும்.

தசரதன், அரசர்களிடம் இராமனை அடைக்கலம் எனல்

இராமனுக்கு முடிசூட்ட விரும்பிய தசரதன் மன்னர்களிடம் ஆலோசனை செய்தபோது, “அவர்களும் சரியான முடிவே” என்று கூறினர். அரசர்கள் கூறியதைக் கேட்ட தசரதன், அவர்களிடம் "நடுவு நிலையிலும், அறத்தாலும், அரிய செயலாலும், தீயவற்றை வெறுப்பதாலும், ஒழுக்கத்தாலும் மேன்மை பெற்ற அரசர்களே, இப்போது என் மகன் என்று சொல்வது ஏன்? முறைமையினால் இராமன் உங்கள் மகனே, இராமனை அடைக்கலமாக ஏற்றுக் கொண்டு, இனிமேல் அவனை அக்கருத்தோடேக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று தசரதன் கூறினான்.

"என் மகன் என்பது என் நெறியின் ஈங்கு இவன்
நும் மகன் கையடை நோக்கும் ஈங்கு என்றான்" (மந்திரப்படலம் 84)

தசரதன், அரசர்களிடம் இராமனை அடைக்கலப் படுத்தினான் என்பதை அறியமுடிகிறது.


தசரதன் அடைக்கலம் வேண்டல்

தசரதன் தனக்கு உயிர்ப் பிச்சைக் கேட்டு கைகேயியைச் சரணடைகிறான். “சத்தியம் தலைகாக்கும் என்பார்கள். என் விசயத்தில் அது வேரொடு அழிக்கும் வினையாயிற்று. நா உலர்ந்து வாடுகிறேன். இராமன் என்கண் முன் இருந்து நீங்கிக் காடு சென்றால் என் உயிர் தங்காது. என் உயிர் உன் அடைக்கலம்" என்றான். கணவன் கெஞ்சிக் கூறும் இன்னுரையைக் காதிலே போட்டுக் கொள்ளவில்லை.

"மெய்யே என்தன் வேர் அற நூறும் வினை நோக்கி
நையாநின்றான் நாவும் உலர்ந்தேன் நளினம்போல்
கையான் இன்று என் கண் எதிர்நின்றும் கழிவானேல்
உய்யேன் நங்காய் உன் அபயம் என் உயிர் என்றான்" (கைகேயி சூழ்வினைப் படலம் 214)

தசரதன், கைகேயியிடம் என் உயிர் உன் அடைக்கலம் என்ற பிறகும் அவள் அடைக்கலம் அளிக்காமல் பிடிவாதமாகஇருந்ததால், தசரதன் உயிரும் பிரிந்தது.

அடைக்கலம் குறித்து பரதன்

பரதன் தன் மேல் தவறில்லை என்பதைக் கோசலைக்குத் தெரிவிக்கும் போது, நான் தவறுசெய்தேன் என்றால், இத்தகையப் பாவங்கள் என்னை வந்து சேரும் என்று பலவாறு சபதமாகக் கூறும் போது, "நீயே அடைக்கலம் என்று தன் நாட்டுக்கு வந்து தங்கிய பிறநாட்டவரும் தன் நாட்டிலே வாழும் குடிமக்களும் மிகுதியானக் கலக்கத்தோடுப் பயந்து ஓடுமாறு, வஞ்சி மாலை சூடுமாறு, அவனை எதிர்க்க அஞ்சிப் போரிடாமல் ஓடிய அந்தக் கோழையை மன்னனாக நான் ஆவேனாக" என்றான்.

"தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளேர்
எஞ்சல் இல் மறுக்கினோடு இரியல் போயுற" (பள்ளியடைப்படலம் 892)

"திருவடியில் சரணடைந்தவரைப் பாதுகாத்தால் தனக்குத் தீமை வரும் என்று பயந்து, அவரை எதிரிகளிடம் காட்டிக்கொடுக்கும் பேதை, எப்போதும் அறத்தை மறந்தவன் ஆகியோர் செல்லும் மீளமுடியாத நரகத்தை நான் இப்போதேச் சேர்வேனாக" என்று பரதன் கூறினான்.

முனிவர்கள், இராமனிடம் அடைக்கலம் வேண்டல்

தசரதனின் புதல்வனே, “அரக்கர்கள் எங்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள். போக்க முடியாத துன்ப இருளில் நாங்கள் இருக்கிறோம். எங்களைக் காப்பாற்று. நாங்கள் உங்கள் அடைக்கலம்” என்றனர். இராமனும் முனிவர்களிடம், “எவ்வரக்கர் அறத்தொடு பொருந்தாமல் பாவத்தோடு பொருந்தினார்களோ, அவ்வரக்கர்களை அடியோடு அழிப்பேன். எனவே நீங்கள் அஞ்ச வேண்டாம்” என்றான் இராமன்.

"சூர் அறுத்தவனும் சுடர் நேமியும்
ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும்
ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்
வேர் அறுப்பென் வெருவன்மின் நீர் என்றான்" (அகத்தியப்படலம் 137)

இதன் மூலம் இராமன், முனிவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை அறியமுடிகிறது.

சீதை, இறைவனிடம் அடைக்கலம் வேண்டல்

இராவணன், சீதையைப் பர்ணசாலையோடுத் தூக்கிச் சென்றபோது, சீதை இறைவனிடம் தன்னைக் காக்குமாறு வேண்டினாள். கழுகுகளின் அரசன் சடாயு, சீதையிடம் அஞ்சவேண்டாம் என்று தைரியம் கூறி, இராவணனுடன் போரிட்டு தன் உயிரையும் கொடுத்தான்.

"ஆண்டு உற்ற அவ் அணங்கினை அஞ்சல் எனா" (சடாயு உயிர் நீத்தப் படலம் 893)

அடைக்கலமாக வந்தவர்களைக் காப்பாற்றும் போது, தன் உயிரேப் போனாலும், அது புகழுடையதேயாகும்.

சுக்ரீவன், இராமனிடம் அடைக்கலப்படுத்தல்

இராமனிடம், சுக்ரீவன் “முன் பிறந்தவனான வாலி, பின் பிறந்தவனான என்னை எல்லா உலகங்களிலும் பின் தொடர்ந்துத் துரத்தினான். இம்மலையையேப் பாதுகாப்பாகக் கொண்டுப் பிழைத்தேன். அரிய உயிரை விடமாட்டாமல் வைத்துக் கொண்டிருப்பவன் நான். உன்னை அடைக்கலம் அடைந்தேன். என்னைக் காப்பாற்றுதல் உனக்குக் கடமையாகும்” என்றான்.

"அரண் உடைத்து ஆகி உய்ந்தேன் ஆர் உயிர் துறக்கலாற்றேன்
சரண் உனைப்புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம்என்றான்” (நட்பு கோட் படலம் 102)

வாலி, சுக்ரீவனுக்கு அடைக்கலம் வழங்காதது

இராமன் மறைந்து நின்று அம்பு செலுத்தியதால் கீழே விழுந்த வாலி, இராமனிடம் பலவாறு கேள்விகள் எழுப்பினான். இராமன் அதற்கு விடை கூறும்போது, தன் செயலைச் சரி என்று காட்டுவதற்கானக் காரணங்களைக் கூறுகிறான். தவறு செய்யாதத் தம்பியைத் தண்டித்தது, உன்னையே அடைக்கலம் என்று அடைந்தவனைக் கொல்ல முயன்றது. அறத்துக்குப் புறம்பாகத் தன் தம்பியின் மனைவியை கவர்ந்தது ஆகியக் காரணங்களாலும், சுக்ரீவன் எனது உயிருக்கு உயிரான நண்பன் என்பதாலும், நான் உன்னைப் பயிர்க்கு இடையே வளரும் களையை எடுப்பது போல எடுத்தொழித்தேன் என்று கூறினான்.

"அல்லல் செய்யேல் உனக்கு அபயம் பிழை
புல்லல் என்னவும் புல்லலை பொங்கினாய்” (வாலி வதைப்படலம் 330)

அடைக்கலம் வேண்டி வந்தவருக்கு அடைக்கலம் தராதது பெருங்குற்றமாகும் என்பதை இராமன், வாலிக்கு அறிவுறுத்தினான்.

அடைக்கலம் குறித்து இலட்சுமணன்

இராமன் மறைந்து நின்று வாலி மேல் அம்பினைச் செலுத்த, கீழே விழுந்த வாலி, இராமனிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பிய போது இலட்சுமணன், வாலியிடம் "முன்பு உன் தம்பி சுக்ரீவன் வந்து அடைக்கலம் அடைய, அப்போது இராமன் நீதி நெறியல்லாத உன்னைக் கொல்வதாக அவனுக்கு வாக்குறுதி அளித்தான். பின்பு நீயும் போரில் இராமனிடம் வந்து, 'நானும் உனக்கு அடைக்கலம்' என்று கூறலாம் என்று நினைத்தே அவன் மறைந்து நின்றுஅம்பு எய்தான்" என்றான்.

"அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி
என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்தது என்றான்” (வாலி வதைப்படலம் 351)

இலட்சுமணன், இருவரும் அடைக்கலம் அடைந்தால் என்ன செய்வது என்றான் என்பதை அறியமுடிகிறது.

வாலி, இராமனிடம் சுக்ரீவனை அடைக்கப்படுத்தல்

இராமனின் அம்புபட்டு கீழே விழுந்த வாலி, சுக்ரீவனுக்குப் பல அறிவுரைகள் கூறினான். இராமனிடம் , “இந்தச் சுக்ரீவன் சுற்றத்தோடும் உனக்கு அடைக்கலமானான்” என்று கூறினான்.

"மன்னவர்க்கு அரசன் மைந்தன் மற்று இவன் சுற்றத் தோடும்
உன் அடைக்கலம் என்று உய்த்தே உயர்கரம் உச்சி வைத்தனன்" (வாலி வதைப்படலம் 371)

வாலி, சுக்ரீவனை சுற்றத்தோடும் இராமனிடம் அடைக்கலப்படுத்தினான் என்பதை அறியமுடிகிறது.

வாலி, அங்கதனை இராமனிடம் அடைக்கலப்படுத்தல்

இராமன், வாலி மீது அம்பினைச் செலுத்தியப் பின், இறக்கும் தருவாயில் வாலி, இராமனிடம், “என் மகன் நெய் பூசப்பெற்றப் பெரிய வேலை ஏந்திய சேனைகளையுடையக் கருநிற அரக்கர்களானப் பஞ்சின் மூட்டைக்குத் தீயைப் போன்றத் தோள்களை உடையவன். குற்றம் இல்லாதச் செயல்களை உடையவன். இத்தகைய இவன் உனக்கு அடைக்கலம்" என்று மொழிந்தான்.

" பொய் அடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவ மற்றுஉன்
கையடை ஆகும் என்று அவ் இராமற்குக் காட்டும் காலை" (வாலி வதைப்படலம் 384)

வாலி தன் மகன் அங்கதனை மரணத்தருவாயில் அடைக்கலப்படுத்தியதை அறியமுடிகிறது.

இராமன், அங்கதனை அடைக்கலமாக ஏற்றல்

வாலி கூறியதைக் கேட்ட அங்கதன், இராமனை வணங்கினான். உடனே இராமனும் அங்கதனைத் தன் அடைக்கலமாக ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாய்த் தன் உடைவாளை எடுத்து "நீ இதை ஏற்றுக் கொள்வாயாக" என்றான்.

"தன்னடி தாழ்தலோடும் தாமரைத் தடங் கணானும்
பொன்னுடை வாளை நீட்டி நீ இது பொறுத்தி என்றான்" (வாலிவதைப்படலம் 385)

வாலி தன் மகன் அங்கதனை மரணத்தருவாயில் அடைக்கலப்படுத்தியதையும், இராமன் அடைக்கலம் அளித்ததையும் அறியமுடிகிறது.

சீதையை சனகன் அடைக்கலப்படுத்தல்

சீதையைப் பிரிந்திருந்த இராமன் கார்காலத்தில் பிரிவுத்துன்பம் அதிகமாகி வருந்தும் போது பலவாறாகக் கூறினான்.

"திருமணத்தின்போது, வேள்வி வளர்ப்பதற்காக நெய் வார்த்து உண்டாக்கப் பெற்றத் தீயின் முன்னிலையில் சீதையைக் கொண்டு வந்து நிறுத்தி, 'இவள் உனக்கு அடைக்கலம்' என்று என்னைப் பார்த்துக் கூறிய அந்தச் சனகனின்உறுதிச் சொல்லைப் பொய்ச் சொற்களாகச் செய்துவிட்ட நல்ல ஊழ் இல்லாத என்னிடத்தில் மெய்ம்மை என்பது அமையாது. ஆதலால் நான் இறப்பதே நல்லதாகும்” என்கிறான்.

"நெய் யடை தீ எதிர் நிறுவி நிற்கு இவள்
கையடை என்ற அச் சனகன் கட்டுரை" (கார்காலப்படலம் 531)

சீதையை சனகர் அடைக்கலமாகத் தந்தார், தன்னால் முடியவில்லையை என்று இராமன் வருந்தியதை அறியமுடிகிறது.

அடைக்கலம் குறித்து சுக்ரீவன்

இராமன் குறித்துத் தந்த நாளில் சுக்ரீவன் வராததால், இராமன் இலட்சுமணனை அனுப்பிப் பார்த்து வருமாறுக் கூறினான். மது மயக்கத்தில் இருந்த சுக்ரீவன், பின் தெளிந்து வருந்தினான். மது அருந்துபவரை வஞ்சகமும், திருடுதலும், பொய்யும், அறியாமையும், தொன்றுதொட்டு வந்த முறைமைக்கு மாறான கொள்கையும், அடைக்கலமாக அடைந்தவரைக் கை விடுகின்ற தீய பண்பும், செருக்கும் சேர்ந்து வருத்தும். திருமகளும் நீங்குவாள். நஞ்சு உண்டவரின் உடலை மட்டும் அழிக்கும். மதுவோ உடலை அழித்தலோடு நரகத்தில் தள்ளும் என்கிறான்.

"வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபில் கொட்பும்
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும்" (கிட்கிந்தைப் படலம் 655)

அடைக்கலமாக அடைந்தவரைக் கை விடுகின்ற தீய பண்பும் தன்னிடம் உள்ளதை எண்ணி சுக்ரீவன் வருந்தியதை அறியமுடிகிறது.


காகத்திற்கு அடைக்கலம் வழங்கல்

அசோகவனத்தில் தன்னைச் சந்தித்த அனுமனிடம், சீதை இராமனிடம் கூறும் செய்திகளாகக் கூறுமிடத்தில் அமைந்துள்ளது. வனவாசம் செய்தபோது, சித்திரக்கூட மலையில் என் அருகில் வந்து எனது மார்பைத், தன் கூரிய நகங்களால் துழாவிய ஒரு காக்கையைக் கோபித்து, அருகே கல்லிடை வளர்ந்த புல்லைக்கொண்டு விரைவும், கொடுமையும் கொண்ட பிரமாச்சிரத்தை இராமன் செலுத்திய போது, காகம் நடுங்கி பிரம்மலோகம், கைலாயம், இந்திரலோகம் செல்ல அனைவரும் மறுக்க, இந்திரன் பெற்ற மகனாகிய செயந்தனது வடிவமாகிய காகத்தைக் கண்ட தேவர்கள் இராமனுடைய திருவடிகளே உனக்கு அடைக்கலம் என்று சொல்ல, அவனும் அடைக்கலம் அடைந்ததைச் சொல்வாயாக என்றாள்.

“அந்தரத்தினில் நின்றவர் கண்டு இனி அந்தோ
எந்தைதன் சரண் அன்றி ஓர் தஞ்சமும் இன்றேல்" (சூளாமணி படலம் 683)

தன் உயிராகிய சீதைக்குத், துன்பம் தந்த காகம் என்றாலும், அது அடைக்கலம் என்று வந்துவிட்டதால் அதற்கும் இராமன் அடைக்கலம் அளித்ததை அறியமுடிகிறது.

அடைக்கலம் குறித்து அனுமன்

அனுமன் அசோக வனத்தை அழிப்பது பற்றிச் சினத்தோடு எண்ணிப் பார்க்கிறான். இராவணனின் பத்துத் தலைகளையும், கலங்கச் செய்து அவனைச் சிறையிலிட்டு வெல்வேன். இல்லாவிடின் எங்களைக் காத்து, அடைக்கலம் தந்த இராமனுக்கு நாங்கள் என்ன நன்மை செய்தவர்களாவோம் ஒருவருக்கு ஒருவர் தஞ்சம் அளித்தல் என்பது என்னவாகும் என்றான்.

“வஞ்சனை அரக்கனை நெருங்கி நெடுவாளால்
அஞ்சுனோடு அஞ்சுதலை தோள்உற அசைத்தே
வெஞ்சிறையில் வைத்து மிலென் வென்றும் இலென் என்றால்
தஞ்சம் ஒருவருக்கொருவர் என்றால் தகவமோ" (பொழில் இறுத்தப் படலம் 696)

வருணன் இராமனிடம் அடைக்கலம் வேண்டல்

வழி வேண்டி இராமன் வருணனை வேண்ட, அவன் தரிசனம் தராமல் காலம் தாழ்த்த, கோபம் கொண்ட இராமன் வில்லை வளைத்து நாணை ஏற்ற, பயந்து போன வருணன், இராமனிடம் “தலைவனே நீயே சினம் கொண்டால் அந்தச் சினத்திலிருந்துக் காத்துக் கொள்வதற்குரியக் கவசம் உன் திருவடிகளே அல்லாது, வேறு காவல் உண்டோ? கடலை எரியூட்டித் தடுமாறச் செய்யும் இச்செயல் உனக்கு அரியதோ? உன் வலிமையால் நான் வாழ்வதன்றி வேறு வலிமை எனக்கு உண்டோ? அடைக்கலம், நினக்கு அடைக்கலம்”என்று திரும்பத் திரும்பப் பலமுறை வருணன் கூறினான்.

"இவை உனக்கு அரியவோதான் எனக்கு என வலி வேறுஉண்டோ
அவயம் நின் அவயம் என்னா அடுத்து அடுத்து அரற்றுகின்றான்" (வருணனை வழிவேண்டு படலம் 596)

அனுமன், இலங்கையை எரியூட்டிய போது, பறவைகள் கடலில் போய் விழுந்தன. அவற்றைப் பெரிய மீன்கள் விழுங்கின. மனத்தில் அருள் இல்லாத வஞ்சகரை அடைக்கலம் அடைந்தவர் அழிவது போல் பறவைகளின் நிலைமை ஆயிற்று.

“வெருளும் வெம்புகைப் படலையின்
மேற் செல வெருவி
இருளும் வெங்கடல் விழுந்தன" (இலங்கை எரியூட்டுப்படலம் 1219)

அடைக்கலம் குறித்து பிரகலாதன்

எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து, என்றென்றும் தன்னை இறைவனிடம் அடைக்கலப்படுத்திக் கொண்டான் பிரகலாதன். இன்பத்தை அளிப்பதும் இறைவனே, துன்பங்களில் இருந்து விடுபடுதலையும் இறைவனே அருளுகின்றான் என்ற நம்பிக்கையில் சரணாகதி அடையும் போது இறைவன் நம்மைக் காப்பார் என்ற உயர்ந்த சரணாகதி தத்துவத்தைப் பிரகலாதன் மூலம் கம்பர் நமக்குத் தருகிறார். இறைவனின் திருவடியே கதி நின்று அடைக்கலம் புகுந்தார் அவர் அருள் கைக் கொண்டு காக்கும் சரணாகதி. பிரகலாதன் தன் தந்தையான இரணியனிடம், திருமாலின் பெருமைகளைப் பலவாறாக எடுத்துக் கூறும் போது, காமமும், சினமும் முதலியனவாகக் கருதப்பட்ட தீயகுணங்களையும், அவற்றின் வலிமையையும், தன்னை அடைக்கலமாக அடைந்தவர்க்கு விலக்கியருளும் செயலையுடையவனான அந்தத் திருமாலின் திருப்பெயர்களின் மகிமையையும், அவன் உயிர்களுக்கு வருத்தம் தராத பாதுகாத்தல் தொழிலும் எவராலும் சொல்லி முடிக்கவல்ல தன்மையுடையனவோ என்று கூறியதை,

”காமமும் வெகுளியும் முதல் கண்ணிய
தீமையும் வன்மையும் தீர்க்கும் செய்கையான்” (இரணியன் வதைப் படலம் 202)

பலவாறு அறிவுரைகளை எடுத்துக் கூறிய போதும் அசுரன் மனம் மாறாமல் மிகுந்த கோபம் கொண்டு அவனைக் கொல்ல ஆணையிட்டான். பிரகலாதன் பயமின்றி தன்னால் அறியப்பட்ட தலைவனான திருமாலின் சிவந்த அடிகளை மறந்தானில்லை. அவனது பெயரைச் சொல்லாமல் இல்லை.

"சொறிந்த தன்மையும் செய்தால் ஆயின
தூயவன் துணிவு ஒன்றா
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன்
அயர்த்திலன் அவன் நாமம்" (இரணியன் வதைப் படலம் 212)

இறைவனைச் சிந்தித்தலில் சிறிதும் தவறாதவனாய் இருந்தான். தீயவர்களைத் தண்டிப்பதில் கொடுமையுடையவனே! எவராலும் குறித்து அறிய ஒண்ணாதவனே! தீய குணம் எதுவும் இல்லாதவனே! நெடியவனே! உன் அடியவர்க்கு அடியவன் ஆவேன் என்னும் ஒன்றைத் தவிர, பகைவர் செய்யும் துன்பங்களுக்குச் சிறிதும் தளராத பெருவன்மையை நான் பெற்றவனோ! அடியேன் படும் இத்துன்ப நிலையில் எனக்கு எதிர்தோன்றி அருள் செய்யாயோ?
"அடியார் அடியேன் எனும் ஆர்வமலால்
ஓடியா வலியான் உடையேன் உளெனோ
கொடியாய் குறியாய் குணம் எதும் இலாய்
நெடியாய் அடியேன் நிலை நேர்குதியோ?” (இரணியன் வதைப் படலம் 233)

என்று இறைவனிடம் பிரகலாதன் சரணடைகிறான். இரணியனை வதம் செய்து இறைவன் பிரகலாதனைக் காத்தருளினார்.

வீடணன், இராமனிடம் அடைக்கலம் வேண்டல்

இராவணனை விட்டு விலகி, அங்கிருந்து இராமனிடம் அடைக்கலம் பெறலாம் என்ற எண்ணத்துடன் வீடணன் வந்தான். அவனுடன் வந்த அமைச்சர்கள் மயிந்தனிடம் கூற, மயிந்தன் வீடணனைப் பற்றி அனைத்து விபரங்களையும் தெரிந்து கொண்டு இராமனிடம் கூறினான். இராமன் ஒவ்வொருவரிடமும் அடைக்கலமாக ஏற்றுக் கொள்ளலாமா? என்று கேட்க, எல்லோரும் தத்தமக்கு தோன்றியதைக் கூற, அனுமன் மட்டும் சரியானதே என்று கூறினான்.

"தேவர்களாலும், அசுரர்களாலும் பிரம்மன், திருமால், சிவன் ஆகிய மூன்று கடவுளர்களாலும் இராவணனை அழிப்பது என்பது அரிய செயலாகிவிட்டது. அவனை அழிப்பதற்கு நீ முனைந்து நின்றாய். ஆபத்துக்காலத்தில் அபயம் என்று வந்தவனை ஏற்றுக் கொள்ளாமல் விட்டுவிடுவாயானால், பெரிய கடலானது, சிறிய கிணற்றில் உள்ள நீர் நம்மையும் அடித்துக் கொண்டு போய்விடும் என்று ஐயுறுவதற்கு ஒப்பாகிவிடும்" என்று அனுமன் விரிவாக எடுத்துரைத்தான். அனுமன் இறுதியிலே தொகுத்துரைத்ததனை,

“தேவர்க்கும் தானவர்க்கும் திசைமுகனே
முதலான தேவ தேவர்
மூவர்க்கும் முடிப்ப அரிய காரியத்தை
முற்றுவிப்பான் மூண்டு நின்றாய்!
ஆவத்தின் வந்து அபயம் என்றானை
அயிர்த்து அகல விடுதியாயின்
கூவத்தின் சிறுபுனலைக் கடல் அயிர்த்தது
ஒவ்வாதோ? கொற்ற வேந்தே!” (வீடணன் அடைக்கலம் படலம் - 405)

இராமன் அனைவரிடமும், “ வீடணன் நம்மிடம் அடைக்கலமாக அடைந்த ஒரு செயலும், சிறந்த தவத்தைச் செய்துள்ள இவன் ஒரு தவறும் இல்லாதவன். அவனைச் சேர்ப்பதால் நாம் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் சரி எம்மை நோக்கி அடைக்கலம் என்று வந்தவனை ஏற்றுக் கொள்வதே அன்றிக் கைவிடக்கூடாது” என்றான். அடைக்கலம் என்று வந்தவன் பின்பு அவன் தன் கடமையில் மாறுபட்டு நமக்குத் தீமை செய்தாலும், அதனால் நமக்குப் புகழ் உண்டாதலே இன்றி பழியுண்டாகுமோ? என்றான்.

" இன்று வந்தான் என்று உண்டோ எந்தையை யாயை முன்னைக்
கொன்று வந்தான் என்று உண்டோ அடைக்கலம் கூறுகின்றான்" (வீடணன் அடைக்கலப் படலம் 411)


அடைக்கலம் குறித்து இராமனது விளக்கம்

தன்னை அடைக்கலமாக அடைந்த புறாவின் பொருட்டாகத் துலாக்கோல் தட்டில் ஏறித் தன்னையேக் கொடுக்கத் துணிந்த சிபி என்ற குல மன்னனின் பெருமையைக் கொண்டது நம் குலம். அவனுடையக் குலத்தில் வந்த நான், என்னை நோக்கி அடைக்கலமாக அடைந்த, அவனது வஞ்சனையால் எனக்கு இறப்பே உண்டாகும் என்றாலும், அங்ஙனம் இறந்த நாள் அன்றோ என்றைக்கும் நான் நிலைத்திருக்கத்தக்க சிறந்த நாள் ஆகும் என்று இராமன் கூறினான். அடைக்கலம் தாராது போயின், ஒருவன் மேற்கொண்ட அறம் என்ன பயன் கொண்டது? அவன் ஆண்மைதான் என்ன பயன் உடையது? என்றும், தன் பெட்டைப் புறாவைப் பிடித்துப் பின் தன்னையும் பிடிக்க வேண்டும் என்று எண்ணித் தன் இருப்பிடத்துக்கு வந்து அடைந்த அறிவற்ற வேடனுக்குக் குளிர் நீங்கும்படி விறகுகளைத் தந்து, அதில் தீயை மூட்டி உதவி செய்து, பின் அந்தத் தீயின் ஒளியில் அதன் பெரும்பசி நீங்கிடுமாறு தான் தீயில் விழுந்து தன் உடலையே அவன் உண்ணுமாறு தந்த ஆண் புறா, அந்த அறத்தின் பயனாய் நற்கதி அடைந்து, சிறப்புற்ற வரலாறு வேதப்பொருளைப் போல மேலானதாகக் கொள்ளத்தக்கது.

"பேடையைப்பிடித்துத்தன்னைப்பிடிக்கவந்துஅடைந்தபேதை
வேடனுக் குதவி செய்து விறகிடை வெந்தீமூட்டிப்" (வீடணன் அடைக்கலப்படலம் 414)

கசேந்திர யானையை, முதலை கடித்த போது, “ஆதிமூலமே யான் உனக்கு அடைக்கலம்” என்று கூக்குரல் இட்டது. அப்போது திருமால் யானையைக் காப்பாற்றினார். அடைக்கலம் அடைந்தவரை காக்க வேண்டியதே முக்கியமாகும். காவாதவர் நரகத்தில் வீழ்வர். சிவன் மிருகண்டு முனிவருக்கு, மார்க்கண்டனைக் கொடுக்கும் போதே இவனுடைய வாழ்நாள் குறைந்தது என்பதைக் கூறியேக் கொடுத்தார். “முனிவர் என் மகன் இறப்பதற்கு அஞ்சினேன். உன்னை அடைக்கலம் ஆனேன்” என்று வேண்ட, சிவனும் எமனை உதைத்துத் தள்ளி மார்க்கண்டேயனைக் காத்தார்.

"நஞ்சினை மிடற்று வைத்த நகைமழுவாளன் நாளும்
தஞ்சு என முன்னம் தானே தாதை பால் கொடுத்துச் சாதல்
அஞ்சினேன் அபயம் என்ற அந்தணற்காகி அந்நாள்
வெஞ்சினக் கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மை உண்டோ?" (வீடணன் அடைக்கலப்படலம் 417)

இராவணன், சீதையைத் தூக்கிக் கொண்டு சென்ற போது அவள், தனக்கு உதவுபவர் யார் என்று அழுது புலம்பினாள். சடாயு நான் உன்னைக் காப்பேன் , வருந்தாதே என்று கூறி, இராவணனுடன் பெரும் போர் செய்து தன் உயிரையும் ஈந்தான். தேவர்களுக்குத் துயரத்தைச் செய்யும் இராவணனைக் கொல்வேன் என்று நான் விரும்பிக் கூறிய சபதத்தின் தன்மை சீதையை இராவணன் எடுத்துச் செல்வான். அதனால் அவனைக் கொல்ல வேண்டும் என்று எண்ணிச் சொன்னதோ? அன்று. "நீயே அடைக்கலம்” என்று என்னிடம் வேண்டிய முனிவர்கட்காக, அக்காலத்தில் நான் அடைக்கலம் தந்தேன். அச்செல்லை நான் இப்போது தவறுதல் தகுமோ என்றான். ஆதலால்ஒருவன் அடைக்கலம் என்று அடைந்த போதே அடைக்கலம் அளிப்பதே என் கடமையாகும். நீங்கள் என்னிடம் வைத்துள்ள அன்பினால் வீடணனை ஏற்பது குறித்து எண்ணி ஆராய வேண்டியது இல்லை என்று கூறி, “சுக்ரீவனே நீயே வீடணனை அழைத்துக் கொண்டு வருவாயாக” என்று இராமன் கூறி முடித்தான்.

வீடணன் அடைக்கலம் பெற்றதை அறிதல்

இராமனின் ஆணைப்படி சுக்ரீவன், வீடணனிடம் சென்று (தன்னை ஏற்பானோ, மாட்டானோ என்று கவலை கொண்டிருந்த மனமுடைய) “இராமன் உனக்கு அடைக்கலம் தந்தான். அப்பெருமானின் திருவடியை வணங்க விரைந்து வருவாயாக” என்றான்.

“வழுவல் இல் அபயம் உன்பால் வழங்கினான் அவன் பொற்பாதம்
தொழுதியால் விரைவின் என்று கதிரவன் சிறுவன் சொன்னான்" (வீடணன் அடைக்கலப் படலம் 426)

எதிரிக்கும் அடைக்கலம் அளித்த இராமன்

எப்பொழுதும் தீமையற்ற நல்ல செயல்களை மட்டுமே, முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்கு எதிராக ஒருவர் தவறான செயலைச் செய்யும் போது, அவர்களுக்கு எதிராகவும் நம் தவறினைத் திருப்பிச் செய்தல் கூடாது. இராவணன் ஏவிய ஒற்றர்கள் இராமனின் படைகளின் அளவினைப் பார்த்த வண்ணமாகக் குரங்குகள் போல தோற்றங்கொண்டு பாசறையில் திரிவாராயினர். ஒற்றரை, வீடணன் இன்னார் என்று அடையாளம் கண்டு கொண்டான். ஒற்றர்கள் தங்கள் தீமையைக் கட்டவிழ்த்து விடாதபடி அவர்களைக் கட்டிக்கொண்டு இராமன் முன்னிலையில் கொண்டு போய் நிறுத்த, இராமன் அந்த ஒற்றர்களைக் கண்ட மாத்திரத்தில் பகைவர் எனக் கருதாமல் அவர்களை விட்டுவிடுமாறு கூறியதோடல்லாமல், நம்மை அடைக்கலம் என்றதோடல்லாமல், நம்மை அடைக்கலம் என்று வந்து அடைந்தோர் தவறு செய்தாலும், நாம் தவறு செய்தல் கூடாது என்று உணர்த்தினான்.

"தாம் பிழை செய்தாரேனும் தஞ்சம் என்று அடைந்தோர் தம்மை
நாம் பிழை செய்யலாமோ நலியலீர் விடுதிர் என்றான்" (ஒற்றுக்கேள்விப்படலம் 713)

இராவணன் ஏவிய ஒற்றர்கள் என்றாலும், நம்மை அடைக்கலம் என்றதோடல்லாமல், நம்மை அடைக்கலம் என்று வந்து அடைந்தோர் தவறு செய்தாலும் நாம் தவறு செய்தல் கூடாது என்று உணர்த்தினான் என்பது பெறப்படுகிறது.

கும்பகர்ணன், வீடணனிடம் அடைக்கலம் குறித்துப் பேசல்

வீடணன், கும்பகர்ணனைச் சந்தித்து, இராமனிடம் அடைக்கலமாக வந்து சேர் என்று கூற வந்த போது, கும்பகர்ணன் வீடணனிடம், அறத்துக்குச் சிறந்த துணைவனான இராமன் தனது அரிய உயிரை இழக்க நேர்ந்தாலும், தம்மை அபயம் என்று அடைந்த உன்னைக் கைவிடத் துணியமாட்டார். முன்னரே நீ பெற்றுள்ள வரத்தின் வலிமையால் இறப்பு என்னும் அச்சத்தை அகற்றி விட்டாய். இராமனை அடைக்கலமாகப் பற்றிக் கொண்டு அரக்கப் பிறப்பு என்னும் இழிவை நீக்கி விட்டாய். இவ்வாறிருக்க எதற்காக நீ இங்கு வந்தாய் என்கிறான்.

“அறப் பெரும் துணைவர் தம்மை அவயம் என்று அனைந்த நின்னைத்
திறப்பது துணியார் தங்கள் ஆர் உயிர் துறந்த போதும்” (கும்பகர்ணன்வதைப் படலம் 1345)

இராமனிடம் அடைக்கலம் பெற்றதால் அவன் தன் உயிரையே தந்து உன் உயிரைக் காப்பான் என்று கும்பகர்ணன், வீடணனிடம் கூறுகிறான்.

கும்பகர்ணனை, இராமனிடம் அடைக்கலமாக சேர வீடணன் கூறல்

கும்பகர்ணனைச் சந்தித்து பேசிய வீடணன், நீ இராமனிடம் அடைக்கலமாக வந்து சேர்ந்தால் உனக்கு இம்மைப்பேறு இலங்கையை ஆளும் அரசுரிமை என எல்லாம் கிடைக்கும் தருமத்தைச் சிறப்பாக கருதுபவர்கள் தீயசெயல்களைச் செய்யார் என்று பலவாறாகக் கூறினான்.

“இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன்
அருளும் நீ சேரின் ஒன்றோ அபயமும் அளிக்கும் அளிக்கும் அன்றி
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம், மாறிச் செல்லும்
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே” (கும்பகர்ணன் வதைப் படலம் 1351)

இராமனிடம் அடைக்கலம் பெற்ற வீடணன், கும்பகர்ணனிடம் அடைக்கலம் வேண்டி, அவனிடம் வருமாறு வேண்டுகிறான் என்பது பெறப்படுகிறது.

கும்பகர்ணன், இராமனிடம் வீடணனைக் காக்குமாறு வேண்டுதல்

கும்பகர்ணன், இராமனிடம் என் உறவினால் உண்டான தீவினை தீர்ந்து உம்மிடம் அடைக்கலமாக வந்த வீடணனின் உயிரை உன்னை வெல்லுமாறு நினைக்கின்ற இராவணன் அடியோடு அழிக்க முயன்று உடன் பிறந்த பாசத்தை உணராதவனாய் கொன்று விடுவான். ஆதலால், வீடணனின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்றான்.

“ஆதியாய் உனை அடைந்தான் அரசர் உருக் கொண்டு அமைந்த
வேதியா இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன்” (கும்பகர்ணன் வதைப் படலம் 1567)

தான் இறந்தாலும் பரவாயில்லை. முன்பே அடைக்கலம் பெற்ற தம்பி வீடணன் வாழவேண்டும் என்று மனதார விரும்பிய கும்பகர்ணன், இராமனிடம், அடைக்கலம் அளித்ததை நினைவு கூறும்படியாகவே வேண்டிக் கொண்டான் என்பது பெறப்படுகிறது.


அடைக்கலம் குறித்து கும்பகர்ணன்

இராமனிடம் அடைக்கலம் பெற்ற வீடணன், கும்பகர்ணனைச் சந்தித்துப் பேசும் பொழுது, வீடணனிடம் ஐயனே, இந்த அரக்கராய் இருக்கின்ற நாங்கள் எல்லோரும் இராமன் செலுத்தும் அம்பு மழையில் அழிந்து வீணாவோம். அவ்வாறு அழிந்து விட்டால், நீ அயோத்தி அரசன் இராமனுக்கு அடைக்கலமாகி உயிர் பிழைத்து வாழாவிட்டால், இறக்கும் எமக்குக் கையினால் எள்ளுடன் கூடிய நீரைக் கொடுத்து நீர்க்கடனை நிறைவேற்ற வேறு யாருளர் இருந்தால் அவரைக் காட்டுவாய் என்கிறான்.

"ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே
உய்கிலை என்னின் மற்று இவ்வரக்கராய் உள்ளோம் எல்லாம்
எய்கணை மாரியாலே இறந்து பாழ் படுவேம் பட்டால்
கையினால் எள் நீர் நல்கிக் கடன் கழிப்பாரைக் காட்டாய்!" (கும்பகர்ணன் வதைப்படலம் 1349)

இராமனிடம் அடைக்கலம் பெற்ற வீடணன், கும்பகர்ணனைச் சந்தித்துப் பேசும் பொழுது, வீடணனிடம் ஐயனே இங்கிருந்து நீ இராமனிடம் செல். பிறகு வேதியர்களுக்குத் தலைவனாக விளங்கும் இராமனை வேண்டி அவன் அனுமதி பெற்று, மெய்மையான-பழமையான நூல்களில் கூறியவாறு, போரில் இறந்த அனைவருக்கும் இறுதிக்கடன்களைச் செய்து, அவர்கள் அடைவதாகவுள்ள பெரும்துன்பம் தரும் நரகத்தை அடையாதவாறு காப்பாயாக" என்று கும்பகர்ணன் கூறினான்.

"ஆதி நூல் மரபினாலே கடன்களும் ஆற்றி ஏற்றி
மாதுயர் நகரம் நண்ணா வண்ணமும் காத்தி மன்னோ!" (கும்பகர்ணன் வதைப்படலம் 1377)

உயிரைத் தந்தும் காக்க வேண்டும்

இராமன் படைக்கும், இராவணன் படைக்கும் போர் ஏற்பட்ட போது, அங்கதன் அஞ்சா நெஞ்சொடு போர்க்களத்தில் முன்னின்று, மாயையில் வல்ல அரக்கர்களுடன் போர் புரிந்தான். இவன் சேனையின் முன்னின்று போர் புரியும் நிலையில் இந்திரஜித் மறைந்து நின்று விடுத்த மலரோன் படையில் உடல் நலிந்து போர்க்களத்தில் விழுந்தான். பகைவனது படையின் வலிமையால் கீழே விழுந்து கிடந்த அந்த வலிமையற்ற நிலையிலும் அவன் கண்களில் தீப்பொறி பறந்தது. அதைக் கண்ட இராமன்,

"விடைக் குலங்கின் நடுவண் ஓர்
விடை கிடந் தென்ன
கடைக்கண் தீயுக அங்கதக்
களிற்றினைக் கண்டான்
படைக்கலம் சுமந்து உழல்கின்ற
பதகனேன் பழி பார்த்து
அடைக்கலப் பொருள் காத்தவரறு
அழகியது என்று அழுதான்" (பிரமாத்திரப்படலம் 2578)

அடைக்கலம் புகுந்த உயிரைக் காக்குமாறு தம் ஆருயிர் கொடுத்த ஆன்றோர்பெருமையையும், தன்னிடம் அடைக்கலப்படுத்தியப் பொருளைத் தான் இழந்த சிறுமையையும் எண்ணி துன்பக்கடலில் வீழ்ந்தான்.

அடைக்கலமாகப் பெற்றவரைக் காப்பாற்றுதல் கடமையாகும். தன் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றவேண்டும் என்பதை அறியமுடிகிறது.

அடைக்கலமாகப் பெற்றவரைக் காப்பாற்றுதல் குறித்து இலட்சுமணன்

இராவணன், வீடணன் மேல் கோபம் கொண்டு அவனை நோக்கி வேலை வீசிய போது இலக்குவன் அடைக்கலமாக வந்தவனைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தான். இராமன், வீடணனுக்கு அடைக்கலமும், அரசாட்சியையும் அளித்தான். அடைக்கலமாகப் புகுந்தவனை விட்டுவிடுதல் அறம் ஆகாது என்ற இராமன் சொல்லிய சொற்களை மறப்பேனோ. என் உயிரைக் கொடுத்தாலும், எங்கள் பால் அடைக்கலமாக வந்த வீடணனின் உயிர் போக விடமாட்டேன். நான் அடைக்கலமாக வந்தவனைக் காப்பாற்றினால், எனது புகழ் இந்தப் பூமியில் நிலைத்து இருக்கும். அடுத்த உலகத்திலும் அந்தத் தருமம் என்னைத் தொடர்ந்து நிற்கும். நல்லவர் சான்றோர் எனது செயலைக் கண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அடைக்கலமாக வந்தவன் அழிந்து போவதை நான் பார்த்துக் கொண்டு இருந்தால் என்மீது நெடிய பழி வந்து விழும். அப்பழி வருவதற்கு முன்னால், இராவணனின் வேலை நான் எனது மார்பிலே ஏற்றுக் கொள்வேன் என்று இலக்குவன் அந்த வேலின் எதிரே மிக விரைந்து சென்றான்.

"தோற்பென் என்னினும் புகழ்நிற்கும் ; தருமமும் தொடரும்;
ஆர்ப்பர் நல்லவர் : அடைக்கலம் புகுந்தவன் அழியப்
பார்ப்பது என் ? நெடும் பழி வந்து தொடர்வதன் முன்னம்
ஏற்பென் என் தனி மார்பின் என்று இலக்குவன் எதிர்ந்தான்" (வேல் ஏற்ற படலம் 3500)

அடைக்கலமாகப் புகுந்தவனை விட்டுவிடுதல் அறம் ஆகாது என்ற இராமன் சொல்லிய சொற்களை மறப்பேனோ. என் உயிரைக் கொடுத்தாலும், எங்கள் பால் அடைக்கலமாக வந்த வீடணனின் உயிர் போக விடமாட்டேன் நான் என்று இலக்குவன் அந்த வேலின் எதிரே மிக விரைந்து சென்றான் என்பதை அறியமுடிகிறது.

இராவணனிடம் அடைக்கலம் குறித்து வீடணன்

அடைக்கலமாகத் தேடிச் சேர்ந்த என் பொருட்டால், எல்லா உலகமும் உடைய இலக்குவன், வேல் ஊடுருவிப் பாய வாடியுள்ளான். நீ உன் வஞ்ச அறிவால் எங்கே ஓடிப் போவது போர் செய்து உன்னை அழித்து நானும் உன்னுடன் இறப்பேன். என்று அந்த இராவணன் மீது வீடணன் சினம் கொண்டான்.

"தேடிச் சேர்ந்த என் பொருட்டினால் உலகுடைச் செல்வன்
வாடிப் போயினன் நீ இனி வஞ்சனை மதியால்" (வேல் ஏற்ற படலம் 3505)

அடைக்கலம் அடைந்தவரை காப்பதற்காக தானும் அழிந்து, உன்னையும் அழிப்பேன் என்று (தன் கூடப் பிறந்த அண்ணனையே) வீடணன் கூறினான்.

இலட்சுமணனைப் புகழ்ந்த இராமன்

மூர்ச்சை தெளிந்து எழுந்த இலட்சுமணனை, இராமன் தழுவிக் கொண்டு, "ஐயனே, அடைக்கலமானவரைக் காத்தற் பொருட்டாக உன்னுடைய உயிரை வழங்கிய கொடைத்தன்மையால் சூரியகுலத்துக்குப் பொருந்திய வள்ளன்மை குணத்தை உடையவரானோம். நீ இத்தகைய செயலைத் துணிவுடன் செய்தாய் என்றால் அது மிக்க அளவையுடைய பெருஞ்செயல் இன்றும் அப்போது செய்வதற்கு ஏற்ற செயலாகும்” என்றான்.

"இளவலை நோக்கி ஐய இரவிதன். குலத்துக்கேற்ற
அளவினம் அடைந்தோர்க்கு ஆதி மன் உயிர்கொடுத்தவன்மையைத்" (வேல் ஏற்ற படலம் 3518)

அடைக்கலமானவரைக் காத்தற் பொருட்டாக, உன்னுடைய உயிரை வழங்கிய வள்ளன்மை குணத்தை இராமன் பாராட்டினான் என்பது பெறப்படுகிறது.

சிபியை வென்று விட்டாய் என்று இராமன் கூறல்

இராமனை அனைவரும் வணங்கிய போது, சாம்பவான் அங்கு நிகழ்ந்த அனைத்தையும் கூறினான். அதனைக் கேட்ட இராமன், அனுமனை நோக்கி, "ஐயனே ! நான் உன்னைப் பெற்றதால், நான் பெறாதவை என்று எதுவும் இல்லை" என்று புகழ்ந்தான். இராமன், அனுமனைப் பெற்றான். அனுமன் இராம பக்தன் ஆனான். இதனால் பயன் மிகப் பெற்றவன் இராமனே. இராமன் அனைத்தையும் பெற்றதாக உணர்கிறான். அனுமன் அவனிடம் இருப்பதால், பெறாது விடுபட்டுப் போனது என்று இராமனுக்கு யாதொன்றும் இல்லை. மேலும், அடைக்கலமாக வந்த வீடணனின் உயிரை இலக்குவன் காத்ததைப் புகழ்ந்து, புறாவுக்கு உடலை அரிந்து வழங்கிய சிபிச்சக்சரவர்த்தியையும் நீ உன் குணத்தால் வென்று விட்டாய்!" என்று புகழ்மொழி கூறினான்.

இராமன், தன் தம்பியைப் புகழ்ந்து பாராட்டினான் என்பதை அறியமுடிகிறது.

அரக்கியர் சீதையிடம் அடைக்கலமாயினர்

இராம, இராவண யுத்தம் முடிந்த பிறகு, அனுமன் சீதையைச் சந்தித்துப் பேசும் பொழுது, திரிசடையைத் தவிர்த்து, மற்ற அரக்கப் பெண்டிரையெல்லாம் கொடிய முறையில் எரித்தழிக்க விரும்புகிறேன் என்று வரம் கேட்டபோது, அரக்கியர், தாயே! உன் திருவடிகளே எங்களுக்கு அடைக்கலம், இவற்றை நாங்கள் விடமாட்டோம்" எனச் சொல்லிச் சீதையிடம் அடைக்கலமாயினர். சீதை "நீங்கள் அஞ்ச வேண்டா, அஞ்சவேண்டா" என்று கூறி அரக்கியர்க்கு அடைக்கலம் தந்தாள். பின் நிலைபெற்ற அனுமனின் முகத்தைப் பார்த்து, "இந்த அரக்கமாதர், தம் தலைவனான அந்த இராவணன் தங்கட்கு இட்ட கட்டளைப்படி, கடுஞ்சொற்களை என்னைப் பார்த்துக் கூறியதே அல்லாது, தாமே வேறு என்ன தீயது செய்தார்? நான் செய்த தீவினைப் பயனால் இத்தகையத் துன்பம் எனக்கு உண்டாகியது. இதற்காக இவர்களைச் சினத்தல் முறையாகாது. இந்த அரக்கியர் எம் துன்பங்களுக்கெல்லாம் காரணமான கூனியைப் போலக் கொடியவர் அல்லரே, இந்த அரக்கியர்களுக்கு மனத் துன்பம் செய்யாதே" என்கிறாள்.

"தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர்
மனக்கு நோய் செயல் என்றனன் மா மதி
தனக்கு மா மறுத் தந்த முகத்தினாள்"(மீட்சிப்படலம் 3928)

அடைக்கலமாக வந்தவர்களைக் காத்தல் என்பது, இராமனுக்கு மட்டுமல்ல சீதாதேவிக்கும்தான். தனக்கு எல்லையில்லாத் துன்பம் அளித்தவர்களானாலும் அடைக்கலமாக வந்துவிட்டால் காப்பதே கடமையாகும்.

முடிவுரை

தன் உயிருக்கே ஆபத்து ஏற்படினும் நீயே என்னைக் காப்பாற்றவேண்டும் என்று வந்தவர்களுக்கும் அடைக்கலம் தருவதே அறமாகும். சங்க இலக்கியத்தில் சிபிச் சக்கரவர்த்தி ஒர் புறாவுக்காகத் தானேத் தராசுத்தட்டில் ஏறி நின்றான். பாரி இறந்த பின்பு கபிலர் அவன் மக்களைப் பார்ப்பனரிடம் அடைக்கலப்படுத்திவிட்டு உயிர் துறந்தார். சிலம்பில் கவுந்தியடிகள், கோவலன் கண்ணகியை மாதரியிடம் அடைக்கலப்படுத்தினார். தசரதன், அரசர்களிடம் இராமனை அடைக்கலம் என்றார். இராமன், முனிவர்களுக்கு, சுக்ரீவனுக்கு, அங்கதனுக்கு, வருணனுக்கு, பிரகலாதனுக்கு, வீடணனுக்கு, காகத்திற்கு. அடைக்கலம் அளித்தார். சீதையும் அரக்க மகளிர்க்கு அடைக்கலம் அளித்தாள். இலட்சுமணன், அனுமன், பரதன் ஆகியோரும் அடைக்கலம் குறித்துக் கூறியுள்ளனர். சீதை தன்னைக் காப்பாற்றும்படி வேண்டிய போது, சடாயு இராவணனுடன் போரிட்டு தன் உயிரையும் தந்தான் என்பதைக் கம்பராமாயணம் வழி அறியமுடிகிறது.

துணை நூற்பட்டியல்

1.இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன், சாரு பதிப்பகம், சென்னை, 2016.

2. காலமும் கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம், புதுச்சேரி, சென்னை.

3.கம்பன் புதிய தேடல், அ.அ. ஞானசந்தரத்தரசு, தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

4. எல்லைகள் நீத்த இராமகாதை, பழ.கருப்பையா, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.

5. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன், வள்ளி பதிப்பகம், சென்னை, 2019.

6.கம்பன் காட்டும் வைணவப் பேருலகம், அமுதன், லக்‌ஷண்யா பதிப்பகம், சென்னை, 2019.

7. கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, பூவண்ணன், வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

8. சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும், ஸ்ரீ. சந்திரன். ஜெ., தமிழ் நிலையம், சென்னை, 2012.

9. புறநானூறு மூலமும் உரையும், பாலசுப்பிரமணியன்.கு.வை (உரை.ஆ), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட், சென்னை, 2004.

10.மணிமேகலை மூலமும் தெளிவுரையும், ஸ்ரீ.சந்திரன். ஜெ., தமிழ் நிலையம், சென்னை, 2012.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p289.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License