செலவழுங்குதல் என்பது ஒரு துறை தொடக்கத்திலேயே செலவழுங்குதல் செல்லாமை அன்று என்று கூறப்படுகிறது. தலைவி நிலை குறித்துப் பிரிந்து செல்லாமல் இருப்பதாகும். திருமணத்திற்கு பின்னர், காதலிலேயே மூழ்கி அன்பு மனைவியை விட்டுப் பிரிய மனமின்றி இல்லறத்திலேயே இருத்தல் தலைவனுடைய கடமை உணர்வுக்கு இழுக்காகவும் அமையும். இத்தகைய செலவழுங்கல் குறித்து நற்றிணையின் வழி இக்கட்டுரையில் காண்போம்.
நானூறு பாடல்கள் கொண்ட நற்றிணையில் நூற்று நான்கு பாலைத்திணைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அது நற்றிணையில் 26 விழுக்காடு ஆகும். இந்நூலில் செலவழுங்குவித்தல் என்ற துறையில் அமைந்த பாடல்களின் எண்ணிக்கை பதின்மூன்று ஆகும். அதன் விழுக்காடு 3.25 ஆகும். இத்துறையைச் சார்ந்த பதின்மூன்று பாடல்களில் பாலைத்திணையைச் சார்ந்தது பன்னிரண்டு ஆகும். மற்றொன்று நெய்தல் திணையைச் (124) சார்ந்ததாகும். இந்நூலில் அமைந்துள்ள பாலைத்திணைப் பாடல்களுள் செலவழுங்குவித்தல் சார்ந்த பாடல்களின் விழுக்காடு 11.53 ஆகும்.
செலவழுங்குவித்தல் துறையில் காட்டப்படும் தோழி அறிவு நுட்பம் கொண்டவளாகவும், தலைவனிடம் தலைவியின் நிலையை எடுத்துரைக்கும் சொல்லாற்றல் கொண்டவளாகவும் அறியப்படுகிறது. நற்றிணையில் காட்டப்படும் தோழி தலைவியின் கண்ணீர், உடல் மெலிவு, தலைவியின் உள்ளக் கலக்கம், அவற்றோடு காலத்தின் இன்பப் பயனை மிகுதியாகக் கூறிச் செலவழுங்குவிப்பதாக அமைந்துள்ளது. பாலையின் கொடுமையை விளக்கிக் கூறிச் செலவழுங்குவித்தல் ஒரு சில பாடல்களே உள்ளன. தலைவியின் பிரிவாற்றாத நிலையே தலைவனின் செலவைத் தவிர்க்கும் என்பது நற்றிணைத் தோழியின் முடிபாகும் எனலாம்.
தலைவன் ஆறலை கள்வர் நிறைந்திருக்கும் பாலை நிலம் கடந்து செல்வதாக இருக்கும் எண்ணத்தை அறிந்த தலைவி மறுமொழி கூற முடியாது, விம்மி அழுது கொண்டு தன் தோழியின் முகத்தையே நோக்கினாள். அவள் கண்களிலிருந்து வடிந்த நீர் மார்பின் பரப்பை நனைத்தது. இத்தகைய நிலையில் பிரிந்தால் தலைவியின் நிலை கேள்விக்குறியாகும் என்று தலைவனிடம் தலைவியின் அவல நிலையை எடுத்துரைத்து அவனது செலவைத் தவிர்க்கின்றாள். தலைவியின் அழுகையும் கண்ணீரும் தலைவனது செலவைத் தவிர்க்க இயலும் என்பதை அறிந்த தோழி,
“விம்முறு கிளவியள் என்முகம் நோக்கி
நல்அக வனமுலைக் கரைசேர்பு
மல்குபுனல் பரந்த மலர்ஏர் கண்ணே”
(நற்.33.10-12)
என்ற அடிகளால் எடுத்துக் கூறுகிறாள். பெண்களின் மிகப்பெரும் ஆயுதம் கண்ணீர் என்று கூறுவர். தலைவனின் பொருளார்வத்தைக் குறைக்கச் செய்து, அவனது செலவையும் தவிர்க்க வைக்கும் கருவி தலைவியின் கண்ணீராகும். இதனை நன்குணர்ந்த தோழி,
“நீர்சூழ் மாமலர் அன்ன கண்அழ”
(நற்.37.5)
என்று தலைவியின் அழுகையும் கண்ணீரும் தலைவனிடத்துக் கூறிச் செலவழுங்குவிக்கின்றாள். தலைவியின் ஆற்றமுடியாத அழுகையும் கண்ணீரும் தொடரப் பாலை நிலத்தைக் கடந்து சென்று பொருள் தேட முயல்வது அறமற்ற செயலாகும் என்றுரைப்பதை,
“பூப்போல் உண்கண் புதுநலம் சிதைய
வீங்குநீர் வாரக் கண்டும்
தகுமோ பெரும தவிர்கநும் செலவே”
(நற்.325.7-9)
என்ற அடிகளால் தலைவனுக்கு உணர்த்தி அறத்தை நிலைநாட்டும் தோழி பாராட்டுக்குரியவளாகும். பெண்களின் கண்ணீருக்குப் பெரியோர் காரணமாகுதல் அறத்திற்கு முரணாகும் என்ற உண்மையைத் தலைவனுக்கு எடுத்துரைத்துச் செலவு விலக்கும் தோழியானவள் செலவழுங்குவிப்பதற்கு ஏற்றப் பாத்திரமே என்பது நற்றிணை வழிப்பெறப்படுகிறது.
நம்பி வந்து அடைக்கலமாகப் புகுந்தவரை இறுதி வரைக்கும் பாதுகாத்து அருளுதல் தமிழர் மரபாகும். அம்மரபே இல்லறத்தில் பெரிதும் போற்றப்படுகிறது. பெரும் செல்வ மரபைச் சேர்ந்த தலைவி எளிய தலைவனைத் திருமணம் செய்து கொண்டு அவனது ஊருக்கு வருவாள். இல்லறம் நடத்த போதுமான பொருள் பற்றாக்குறையால் தலைவன் பொருளீட்டச் செல்ல எண்ணுவான். அவ்வெண்ணம் தன் மனையாளை நல்முறையில் வாழ்விக்கவே ஆகும். ஆயினும், அப்பிரிவு தலைவியை வேதனைப்படச் செய்யும். தலைவியின் வேதனையை உணராத தலைவனுக்கு எடுத்துரைப்பதாகத் தோழி கூற்று அமைகின்றது.
“விண்டுப் புரையும் புணர்நிலை நெடுங்கூட்டுப்
பிண்ட நெல்லின் தாய்மனை”
(நற்.26.3-4)
என்ற அடிகளால் தலைவியின் தாய் மனையினது செல்வச் செழிப்பைத் தோழி எடுத்துக் கூறுகிறாள். அச்செல்வக் குடும்பத்திலிருந்து தலைவனின் அன்பின் பொருட்டே தலைவி நீங்கி வந்தாள். ஆனால், தலைவனோ பொருளைத் தேடித் தொகுத்து வர, தலைவியைப் பிரிந்து செல்ல எண்ணுகிறான். நம்பி வந்தோரைத் தவிக்கவிட்டுச் செல்லுதல் பெருங்குற்றம் என்று தோழி எடுத்துக் கூறித் தலைவனின் குற்றங்களைத் திருத்துவதால், அறிவுடைய சான்றோர்களின் குணநலன்கள் தோழி பெற்றிருப்பது கண்கூடாகும். கணவன் மனைவி ஆகிய இருவரும் பிரிதல் கூடாது என்று செலவழுங்குவித்தல் துறை வலியுறுத்துவதையும் அறிய முடிகின்றது.
தலைவியின் புறமாகிய உடலில் பிரிவாற்றாத நிலையில் ஏற்படும் மாற்றங்களைத் தோழி சுட்டுவதைப் போலத் தலைவியின் அகமாகிய உள்ளத்தில் நிகழும் எதிர்ப்பார்ப்பைத் தலைவனிடம் கூறி அவனது செலவை விலக்குவதும் உண்டு. தலைவிக்கு இருக்கும் இயல்பான உள்ளத்தின் நிலையானது இளவேனிற்காலம், கார்காலம், கூதிர்காலம் ஆகிய காலங்களில் ஏற்படும் விருப்பம், மாற்றங்களைத் தலைவனுக்கு எடுத்துரைத்துச் செலவை விலக்குமாறு வேண்டிக் கொள்வதே. நற்றிணையில் ஆறு பாடல்கள் உள்ளன. பொருளைக் காட்டிலும் இன்பமே பெரிதெனக் கொண்ட கணவன், மனைவி ஆகியோரின் வாழ்வைப் பெறவே நற்றிணைச் செலவழுங்குவித்தல் துறை விரும்புகின்றது எனலாம்.
காலத்திற்கும், காமத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்க அகப்பாடல்களே எடுத்துக் காட்டுகின்றன. நற்றிணையில் பொருள் குறித்துப் பிரிய நினைக்கின்ற தலைவனிடம் காமம் தோன்றும் காலத்தின் வரவை எடுத்துரைத்துச் செலவு மேற்கோள்ள வேண்டாம் என்று கூறுவதாகத் தோழி கூற்று அமைந்துள்ளது.
“கார்செய் மாலை வரூஉம் போழ்தே”
(நற்.37.11)
என்று கார்காலப் பெரும்பொழுதையும், மாலைப்பொழுது என்னும் சிறுபொழுதையும் சுட்டிக்காட்டி, அப்பொழுதுகளில் தலைவி படும் துன்பங்களைத் தன்னால் தாங்கிக் கொள்ள இயலாது, ஆகவே செலவை விலக்கிக் கொள்க என்று தோழி செலவழுங்குவிப்பதை அறிந்து கொள்ளலாம். அதேபோலத் தண்டியலங்கார விளக்கப்பாடலில் செலவழுங்குவிக்கும் தோழி மாலைப்பொழுதில் வரும் இருளும் நிலவும் தலைவியை நோகச் செய்யும் இயல்பை,
“இப்போது இவளும் இசைகின்றாள் – தப்பில்
பொருளோ! புகழோ?தரப்போவீர் மாலை
இருளோ நிலவோ எழும்”
(திருஞானசம்பந்தம்.ச – தண்டி.- ப.23.)
என்ற அடிகளில் எடுத்துக்கூறுகிறாள்.
காலமுறைகளை அறிவதற்குத் தவறிய தலைவனுக்குக் கூதிர்காலத்தின் வருகையை உரைத்து அவனது செலவை விலக்க வேண்டுகிறாள். கூதிர் காலத்தில் மலரக்கூடிய இண்டங்கொடியில் அரும்பும் காட்டு மல்லிகையின் மலரும் மணல் திட்டில் நிரம்பி இருக்க, அவை மான்களின் வலிய குளம்பில் மிதிப்பட்டு வெள்ளிய தெளிந்த நீர் ஓடும்படி கூதிர்காலம் வந்ததை,
“முகைவீ அதிரல் மோட்டுமணல் எக்கர்
நவ்வி நோன்குளம்பு அழுந்தென வெள்ளி
உருக்குறு கொள்கலம் கடுப்ப”
(நற்.124.5-7)
என்ற அடிகளில் பூக்கள் மானின் காலால் மிதிபட்டு வாடுவதைப் போலக் கூதிர்காலத்தால் தலைவியும் வாடுவாள் என்றும், பூக்களில் தேன் சிந்தி ஓடுவதைப் போலத் தலைவியின் கண்களில் கண்ணீர் பெருகி ஓடும் என்றும் குறிப்பு மொழியால் தலைவனுக்குத் தலைவியின் நிலையைத் தோழி உணர்த்திச் செலவழுங்குவித்தலை நற்றிணை வெளிக்காட்டுகின்றது.
மழை பொழிந்து வீசுகின்ற வாடைக்காற்று யாவரையும் நடுக்கம் கொள்ளச் செய்யும். அது தனித்திருக்கின்ற தலைவியைப் பெரிதும் துன்புறுத்தும் என்பதை அறிந்த தோழி, தலைவனிடம் சென்று யாமப்பொழுதில் தலைவனை அணைத்துக் கொண்டு உறங்கும் பொழுதும், தலைவியானவள் நடுங்கும் இயல்பினை உடையவள். அந்நிலையில் மிகுதியான மழை பெய்து குளிர்ந்த வாடைக்காற்றும் வீசுவதால் அவளை விட்டுப் பிரிதல் ஏற்புடையதன்று எனத் தோழி கூறுகின்றாள்.
“ஆடிய இளமழைப் பின்றை
வாடையும் கண்டிரோ வந்துநின் றதுவே”
(நற்.229.10-11)
என்று தோழி எடுத்து மொழிய, தலைவனும் தலைவியின் மெல்லியல்பை உணர்ந்து தன் செலவை விலக்கினான் என்பதை அறியலாம். அதைப்போல வாடைக்காற்று வீசும் காலத்தில் பிரியக் கருதிய தலைவனுக்குப் பருவ வரவை உரைத்துத், தலைவியின் நிலை குறித்து இரக்கம் கொண்ட தோழி செலவழுங்குவிக்கும் தன்மையை,
“முல்லைக் கொடிநடுங்க மொய்காந்தள் கைகுலைப்ப
எல்லை இனவண்டு எழுந்துஇரங்க – மெல்லியல்மேல்
தீவாய் நெடுவாடை வந்தால் செயல்அறியேன்
போவாய் ஒழிவாய் பொருட்டு”
(திருஞானசம்பந்தம்.ச – தண்டி.ப.99)
என்ற பாடல் காட்டுகின்றது. ஆகவே கூதிர்காலத்தில் கணவன் மனைவி ஒன்றுபட்டு இருக்கும் இல்லற நெறியை அகப்பாடல்கள் வலியுறுத்துகின்றன என்பதை அறியலாம்.
தென்றல் வீசுகின்ற காலமாகிய இளவேனிற்காலமும் பிரிந்திருக்கும் மனையாளை வருத்தக்கூடிய காலமாகும். இளவேனிற்காலத்தில் பூத்த மலர்களைத் தலைவி சூடித் தன்னை அழகு படுத்திக்கொண்டாள். தலைவி சூடிய பூக்களை,
“முதிரா வேனில் எதிரிய அதிரல்
பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர்”
(நற்.337.3-4)
என்ற அடிகளால் தோழி தலைவனுக்கு உணர்த்துகிறாள். நறுமணம் கமழ்கின்ற ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்ட கூந்தலில் உடனிருந்து உறைகின்ற பெரும்பயனாகிய இன்பத்தை விட்டுச் செல்வது முறையற்றது என்றும் உலகம் தோன்றிய காலத்திலிருந்து தம்மை வந்து அடைந்தவரைக் காக்கின்ற மரபினை மறப்பது அறமற்றது என்றும் தலைவனின் குறைகளைச் சுட்டிக்காட்டித் தலைவியோடு இன்புற்று இருக்க வேண்டுவதாக,
“அரும்பெறல் பெரும்பயம் கொள்ளாது
பிரிந்துறை மரபின் பொருள்படைத் தோரே”
(நற்.337.9-10)
என்ற பாடலடிகள் காட்டி நிற்கின்றன. அடைக்கலமாக வந்தோரைப் பேணிக் காக்கும் தமிழர்களின் உயர்ந்த அறத்தை நற்றிணை வழி உணர்ந்து கொள்ளலாம்.
தலைவனைப் பிரிந்த தலைவி, காமம் மேலோங்காது தனித்து இருக்கும் நிலையில் பற்பல பிரிவுகளாய் அமைந்த இல்லத்தில் சிவந்த கால்களையுடைய ஆண்புறா தான் காமுறும் பெண்புறாவைப் புணர்ச்சிக்கு அழைக்கும் ஒலிக்கின்ற குரலை இவள் கேட்பாளாயின் அழகிய கூந்தலையுடைய தலைவி பெரிதும் நடுங்குவாள் என்று தலைவியின் தனிமைத் துயரைத் தலைவனுக்குப் புலப்படுத்திச் செலவழுங்குவிக்கும் பாங்கை,
“வண்ணப் புறவின் செங்கால் சேவல்
வீழ்துணைப் பயிரும் கையறு முரல்குரல்
நும்இலள் புலம்பக் கேட்டொறும்”
(நற்.71.8-10)
என்ற நற்றிணைப் பாடலடிகள் அழகுறக் காட்டுகின்றன. அண்மையில் மணமான மனையாளை விடுத்துப் புறம் போதலானது அறமற்ற செயல் என்பது பழந்தமிழர்களின் முடிபு என்பதைச் செலவழுங்குவித்தல் என்னும் துறை உறுதிப்படுத்துகிறது.
பொருளீட்டிய பின்னர் இன்புறலாம் எனினும் இளமையும் காம விருப்பமும் நிலையற்றதாக உள்ளது. பொருள், யாக்கை எவ்வாறு நிலையற்ற பொருளோ அதைப்போல இளமையும் காம விருப்பமும் நிலையற்றதாகவே அகச்சான்றோர் கருதுவர். இதனை அறிந்த தோழி இவற்றின் நிலையாமையை அழகான உவமையால் எடுத்து மொழிகின்றாள்.
“வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய்கணை நீழலின் கழியும்இவ் வுலகத்து”
(நற்.46.1-2)
என்ற அடிகளில் எய்யப்பட்ட அம்பின் நிழல் விரைந்து செல்வதைப் போல நாள்தோறும் இளமையும், இளமையால் விளைகின்ற விருப்பமும் சென்று தேய்ந்து அழியும் என்று விளக்கப்பட்டுள்ளன.
தலைவியின் இளமை விருப்பத்தின் அளவு மிகுந்திருப்பதை,
“உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே”
(குறுந்.18.5)
என்னும் அடி சுட்டுகிறது. அவ்விருப்பத்தைப் போக்கவே தலைவன் தன் செலவைத் தவிர்ப்பான் என்பதை அறிந்து கொள்ளலாம். தலைவியின் விருப்பத்தை நிறைவேற்றி, அவளது உள்ளமும் உடலும் நலமுடன் இருப்பதில் முக்கிய பங்கு வகிப்பவள் தோழி என்பதை நற்றிணை உறுதிப்படுத்துகிறது.
காம விருப்பத்தைத் தோழி எடுத்துரைத்துச் செலவு விலக்கிய தலைவன் அண்மையில் மணமானவன் ஆவான். அதே பாலை நிலத்தில் நடக்கும் கொடுமைகளை எடுத்துரைத்துச் செலவு விலக்கிய தலைவன் எனில், அவன் அண்மையில் ஈன்றெடுத்த குழந்தையின் தந்தை ஆவான். தலைவனுக்குப் பாலை நிலத்தில் தீங்கு ஏற்படுமாயின் அவனது மனைவி, மக்கள் ஆகியோர் திக்கற்றுப் போவர். அக்கொடிய சூழலில் தலைவனது போக்கை நிறுத்த, பாலை நிலத்தில் நிகழும் கொடுமைகளை எடுத்துக் கூறிச் செலவு விலக்குவதும் நற்றிணையில் சில பாடல்கள் உள்ளன.
ஐந்து வகையான நிலப்பாங்கில், பாலைநில மக்களே கொடியவராகக் காட்டப்பட்டுள்ளனர். அங்கு வாழ்கின்ற ஆறலை கள்வர், நீண்ட மலைச்சாரலில் வன்மையான பாறைகளில் சிறுகுடிசை அமைத்து அச்சம் தரக்கூடிய வழியிலுள்ள கற்குழிகளில் நிற்கும் நீரைக் குடித்துவிட்டுத் துறவிக்குரிய ஆடையை அணிந்த கள்வர்கள் இரவில் கையில் அம்பையும் வில்லையும் கொண்டு கொள்ளையடிக்க வழியை நோக்கியவாறு இருப்பர்.
“நிறைபெயல் அறியாக் குறைக்கூண் அல்லில்
துவர்செய் ஆடைச் செந்தொடை மறவர்
அதர்பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை”
(நற்.33.5-7)
என்ற அடிகள் இடைச்சுரத்தின்கண் வாழும் ஆறலை கள்வர்களின் வாழ்வியலையும் கொடிய கொலைத் தொழிலையும் எடுத்துரைத்துத் தலைவனைச் செலவு விலக்கியதைக் காட்டுகின்றன.
பயணத்தைப் பற்றிய அறிவு நிரம்பியவளாகவே அனைத்துச் செலவழுங்குவித்தல் கூற்றுக்குரிய தோழி காட்டப்பட்டுள்ளாள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாலை நில மக்களால் துன்பம் நேருவதைப் போல, அங்கு வாழ்கின்ற விலங்குகளாலும் துன்பம் நேரும் என்பதை அறிந்தவள் தோழி. நற்றிணையில்,
“இரைதேர் வேட்கையின் இரவில் போகி
நீடுசெயல் சிதலைத் தோடுபுனைந்து எடுத்த
அரவாழ் புற்றம் ஒழிய”
(நற்.325.2-4)
என்ற அடிகளின் வழி மலைப்பகுதியில் வாழ்கின்ற கரடி, பெரும் பசியுடன் இரவுப் பொழுதில் பாம்புகள் வாழ்கின்ற கரையான் புற்றுகள் முழுவதும் அழிய, வேகமாகத் தன் நகங்களால் பெயர்த்து உணவினைத் தேடும் கொடிய வழியில் செல்லுதல் வேண்டாம் என்று செலவுக் குறிப்பாக அமைவதை அறியலாம். பாலைநிலக் கள்வர் விலங்குகள் இவற்றால் அவ்வழிச் செல்வோர்க்கு ஆபத்து ஏற்படலாம். கொலையுண்ட மாந்தர்களின் குடும்பம் துன்புற்றுக் கண்ணீர் வடித்துக் கதறிய காட்சிகளைக் கண்ட தோழி, அந்நிலையானது தன் தோழிக்கு வருதல் கூடாது என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு செலவழுங்குவிக்கும் தன்மையை நற்றிணையில் காணமுடிகின்றது. அகநானூறு - 10 பாடல்கள், ஐங்குறுநூறு - 13 பாடல்கள், கலித்தொகை - 16 பாடல்கள், குறுந்தொகை - 2 பாடல்கள், நற்றிணை - 13 பாடல்கள் என 54 பாடல்கள் எட்டுத்தொகை அக இலக்கியங்களில் செலவழுங்குவித்தல் துறை சார்ந்த பாடல்களாக இடம்பெற்றுள்ளன. எட்டுத்தொகை அக இலக்கியங்களில் செலவழுங்கல் துறை 88 பாடல்களும், செலவழுங்குவித்தல் துறை 54 பாடல்களும் என மொத்தம் 142 பாடல்கள் அமையப்பெற்றுள்ளன.
* சங்க அகப்பாடல்களில் பாலைத்திணையின் கண் இடம்பெறும் செலவழுங்குவித்தல் என்ற துறை, தலைவன் பிரிந்து செல்வதால் பிரிவாற்றாத தலைவியின் அழுகை, பசலை படர்தல், மனம் கலங்குதல், உடல் மெலிதல், நலனாகிய அழகு கெட்டு வாடுதல் ஆகிய துன்ப நிலைகளை அவனுக்கு எடுத்துரைத்துச் செலவழுங்குவித்தல்.
* கார்காலம், கூதிர்காலம், இளவேனிற்காலம், பனிக்காலம் ஆகிய காலங்களில் தலைவியின் விருப்பங்களை நிறைவேற்றும் இல்லறக் கடமையை எடுத்துரைத்துத் தலைவனின் செலவைத் தடுத்தல்.
* அஃறிணை உயிர்களின் இணைபிரியாத அன்புடைய காட்சிகளை விளக்கியுரைத்து இருவரையும் சேர்ப்பதின் பொருட்டு செலவு தடுத்தல்.
* பாலைநிலத்தின் வெம்மையும் வறட்சியும் விலங்குகளின் வாழ்க்கையையும் கள்வர்களின் கொலைத் தொழிலையும் எடுத்துரைத்துத் தலைவனின் செலவை விலக்குதல்.
* பொருள் நிலையாமை, யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, விருப்பம் நிலையாமை ஆகிய நிலையாமை என்னும் அறத்தை வலியுறுத்திச் செலவழுங்குவித்தல்.
- இது போன்ற பல்வேறு காரணங்களில் தோழி செலவழுங்குவிப்பதன் காரணம் இல்லறம் ஒற்றுமையுடன் அன்புடன் பிரிவில்லாது ஒழுக வேண்டிக் கூறப்படும் அறத்தின் தொகுப்பு எனலாம்.
1. சரளா இராசகோபாலன், சங்க இலக்கியம் (அகம்),ஒளிப் பதிப்பகம், 63, டாக்டர் ரங்காச்சாரி சாலை, சென்னை, முதற்பதிப்பு, 1988.
2. சுப்புரெட்டியார்.ந., அகத்திணைக் கொள்கைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை,1966.
3. திருஞானசம்பந்தம்.ச., தண்டியலங்காரம் தெளிவுரை, கதிர் பதிப்பகம், திருவையாறு, 2006.
4. பாலசுப்பிரமணியன்.கு.வே., நற்றிணை, நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை. மு.ப.2008.
5. மாணிக்கம்.வ. சுப., தமிழ்க்காதல், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம், இரண்டாம் பதிப்பு, 2005.