பாலைத்திணையில் அழுகை மெய்ப்பாடு
கி. ச. புனிதவதி
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி – 605008.
மற்றும்
முனைவர் வேல். கார்த்திகேயன்
இணைப் பேராசிரியர் & நெறியாளர், தமிழியல் துறை, காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி – 605008.
முன்னுரை
தமிழ் மொழியின் வளமையை வடித்துக்காட்டுவது சங்க இலக்கியங்கள். அவ்விலக்கியங்கள் திணையின் கிளைகளாய் தழைத்து நிற்பவையாகும். அவற்றில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றில் பாலைத் திணையை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மலையும் காடும் வளமிழந்து திரிந்த பாலை நிலமும், வேனில், நண்பகல் முதலியன முதற்பொருட்களாகவும், வாடிய புலி, யானை, பருந்து, கள்ளி, இருப்பை, மரா, கொள்ளையிடல் ஆகியவை கருப்பொருட்களாகவும், வினையால் தலைவன் தலைவி பிரிவால் பிரிதல் உரிப்பொருளாகவும் பாலைத்திணையில் உள்ளன. இவற்றின் அடிப்படையில் சங்க அகப் பாடல்களில் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகியவற்றில் உள்ள பாலைத்திணையில் உவமை வழி வெளிப்படக்கூடிய அழுகை மெய்ப்பாட்டினை இக்கட்டுரை ஆராய்கிறது.
மெய்ப்பாடு
தொல்காப்பியர் தம் நூலில் எட்டு வகையான மெய்ப்பாடுகளைச் சுட்டுகிறார்.
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப” (தொல்.பொருள்.மெய்.நூ.251)
அவ்வகையில் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன தொல்காப்பியர் குறிக்கும் எட்டுவகை மெய்ப்பாடுகள் ஆகும்.
அழுகை மெய்ப்பாடு
தொல்காப்பியர் இரண்டாவதாக அழுகை மெய்ப்பாட்டைக் குறிக்கிறார். இது இளிவு, இழவு, அசைவு, வறுமை எனும் நான்கு நிலைக்களன்களைக் கொண்டு தோன்றும்.
“இளிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே” (தொல்.பொருள்.மெய். நூ.253)
என்று தொல்காப்பியர் சுட்டுகிறார்.
நிலைக்களன்கள்
இளிவு
இளிவு என்பது தன்னை எளியவனாக ஆக்குதல் காரணமாகப் பிறப்பதாகும்.
இழவு
இழவு என்பது இழத்தல். தாய், தந்தை முதலிய சுற்றத்தாரையும் இன்பந்தரும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தலைக் குறிக்கும்.
அசைவு
அசைவு என்பது தளர்ச்சியாகும். தன்னிலையிலிருந்து தாழ்ந்து போதலைக் குறிக்கும்.
வறுமை
வறுமை என்பது போகம் துய்க்கப் பெறாத பற்றுள்ளத்தைக் குறிக்கும் என்பர். இது நல்குரவாகும். பொருளில்லாத நிலை மட்டுமே வறுமையன்று. பாலைத்திணையில் அழுகை மெய்ப்பாடு தோன்றுமிடங்கள் பாலைத்திணையில் அழுகை மெய்ப்பாடு என்பது தலைவி பிரிவில் தோழி கேட்ப நெஞ்சிடமும், ஆற்றாள் என்றபோதும், வேறுபாடு கண்டபோதும், பிரிவுணர்த்தியபோதும், வரையாது பிரிந்தபோதும், பருவம் கண்டபோதும், பரத்தைப் பிரிவில் வற்புறுத்தும்போதும், வன்புரை எதிரழிந்து சொல்லும்போதும், செவிலி இடைச்சுரத்திலும், உடன்போக்கு நினைந்து வருந்தியபோதும், தோழி, புணர்ந்துடன்போக நினைத்த தலைவனிடத்தும், பிரிவிடை தலைவிக்கும், செலவழுங்குவித்த போதும், பொருட்பிரிவில் ஆற்றுவித்தபோதும், பிரிவானோ என்ற போதும், தலைவன், இயற்கைப்புணர்ச்சியில் பிரிவச்சத்தின் போதும், இடைச்சுரம் நெஞ்சிடமும், பொருட்பிரிவில் பருவம் கண்டபோதும், நற்றாய் மகட்போக்கிய நிலையிலும், மனைமருட்சியிடத்தும், கண்டோர் இடைச்சுரத்து தாயது நிலை எண்ணியபோதும் தோன்றுகின்றது.
பிரிவில் தலைவியின் நிலை
“தலைவன் பிரிவிடை மெலிந்த தலைவி சொல்கிறாள்.
”செல்வா ரல்லரென் றியா னிகழ்ந் தனனே
ஒல்வா ளல்லளென் றவரிகழ்ந் தனரே
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்
நல்லராக் கதுவி யாங்கென்
அல்ல னெஞ்ச மலமலக் குறுமே” (குறுந்.43)
தலைவன் தலைவி இருவரின் அன்பு இங்கு எடுத்துரைக்கப்படுகிறது. வினையின் பொருட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ளான். அவன் பிரிவான் என்று கருதாதபோதே நான் சோர்ந்திருந்தேன். அவ்வேளையில் அவன் தம் பிரிவைக் கூறினால் நான் ஆற்றேன் என்று எண்ணிச் சொல்லாமல் சென்றுள்ளார். இதனை நினைந்து என் நெஞ்சம் தவிக்கின்றது என்கிறாள்.
இப்பாடலில் தலைவன் பிரிந்து செல்வான் என்று எண்ணாத தலைவி நிலை, பிரிந்து செல்கிறேன் என்றால் தலைவி உடன்படமாட்டாள் என்று தலைவன் எண்ணிய வேளையில், இரண்டு பெரிய வலிமையுடையோர் செய்த போராக இருந்த நிலையில் தலைவன் பிரிந்து சென்ற போது, தலைவியின் மனம், நல்லபாம்பு கவ்விக் கடித்ததைப் போன்று மிக்க கலக்கத்தை அடைந்துள்ளதை எடுத்துரைக்கின்றார் புலவர்.
நல்லபாம்பு பெயருக்கேற்றார் போல் இருக்கும் என்று நம்பியிருந்த வேளையில், திடீரென்று தான் அறியாது போது தீண்டியது. அதுபோல, தலைவன் தன்னைப் பிரியான் என்று நம்பி இருந்தபோது திடீரென்று சொல்லாது பிரிந்து சென்றான். தான் அவனிடம் கொண்டிருந்த நம்பிக்கையை விட, அவன் தான் துன்புறுவோம் என்று சொல்லாது சென்றான். பாம்பின் நஞ்சு உயிரை இழப்பதற்குக் காரணமவதைப் போல, தலைவனின் பிரிவு உயிரை இழக்கும் அளவுக்குக் கொடுமையானது. பொருட்பிரிவில் தலைவனை இழந்த நிலைக்களனைக் கொண்ட அழுகை மெய்ப்பாடு வெளிப்படுவதை இப்பாடல் வழி அறிய முடிகிறது.
தலைவன் பிரிந்து செல்வதை எதிர்ப்பார்க்காத தலைவியின் மனம், நல்லபாம்பு தீண்டியதைப் போல அல்லல்படுவதைப் பாலைத்திணையின் உரிப்பொருள் பிரிதல் வினை உவமத்தின் வழி வெளிப்பட்டுள்ளது.
“இப்படி இயல்பாய் உவமை வெளிப்பட்டுள்ளதற்கு,
முகம்நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்” (குறள்: 708)
எனும் குறள் அரணாகிறது. அத்துடன் தமிழண்ணல் கூறும் கருத்தும் ஒப்புநோக்கத் தக்கதாகும்.
திருக்குறள் உணர்த்துவதுபோல் நாம் அகத்திணை மாந்தர்தம் பண்பு நலன், காதல், ஒழுக்கங்களை எல்லாம் அவர்தம் புறத்தோற்றங்கள், செயல்களை வைத்தே அறிந்து கொள்கிறோம். எனவே கூற்று அடிப்படையாலான திணைப் பாடல்களில் மாந்தர்கள் உள்ளவாறு புனையப்படுவது - அவர்கள் பேச்சு உலகவழக்கில் போல் இயல்பான பேச்சு நடையாகக் காணப்படுவது போல்வன எல்லாம் இம்
மெய்ப்பாட்டுக் கோட்பாடுகளின் வழித்தோன்றிய சிறப்பேயாகும். அகத்திணை வாழ்வையும் கண்டாங்கு அறியக் கூறுதல் இதன் பயனாகும். (தமிழண்ணல், தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள் பாகம்-1, ப.201) என்பது அரணாகிறது.
பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது
“குணகடல் முகந்து குடக்குஏர்பு இருளி
மண்திணி ஞாலம் விளங்கக் கம்மியர்
செம்புசொரி பானையின் மின்னி எவ்வாயும்
தன்தொழில் வாய்த்த இன்குரல் எழிலி
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு
நெஞ்சம் அவர்வயின் சென்றென ஈண்டுஒழிந்து
உண்டல் அளித்து என்உடம்பே விறல்போர்?
வெஞ்சின வேந்தன் பகை அலைக் கலங்கி
வாழ்வோர் போகிய பேர்ஊர்ப்
பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே” (நற்.153)
இப்பாடலில் இரண்டு உவமைகள் வெளிப்பட்டுள்ளன. தலைவன் வினையின் பொருட்டுப் பிரிந்து சென்றுள்ளான். மழை பெய்யும் தொழிலைச் சிறப்புடன் மேற்கொண்டு இடியுடன் மழையைப் பெய்ய செய்த மேகம் தன் தொழிலைச் சிறப்புடன் செய்து முடித்து தெற்குப் பக்கம் சென்றதைப் போல, தலைவியின் நெஞ்சமும் தன்னிடம் இல்லாது தலைவன் சென்று அவனுடனே தங்கி விட்டது.
வலிய போர் செய்யவல்ல, கொடிய கோபத்தை உடைய பகை மன்னனது, பகை கொண்ட படை துன்புறுத்தலால் கலங்கி ஊரில் வாழும் குடிமக்கள் பயந்து குடிபெயர்ந்து விட்ட பெரிய பாழ் நகரத்தைக் காவல் செய்திருந்த ஒரு தனிமகனைப் போன்று என் உடம்பு உண்பதனாற் காக்கப்படும் தன்மையாக இருக்கின்றது என்கிறாள் தலைவி.
தலைவன் வாழும் இடம் தலைவி உள்ளம். அது அவனுடனே சென்றுவிட்டது. பகை மன்னனால் அழிக்கப்பட்டுக் கிடக்கும் ஊரினை ஒருவன் மட்டும் இருப்பதினால் ஏற்படும் மன உணர்வை உவமையாக்குகிறார் புலவர். யாரும் இல்லாத ஊர் அவன் மட்டும் இருப்பதினால், இன்பத்திற்கும் ஆள் இல்லை. தான் படும் துன்பத்தினைச் சொல்லவும் துணையின்றி வாடும் நிலை. இங்குத் தலைவி இருக்கும் ஊரில் மக்களும் இல்லத்தில் சுற்றத்தாரும் இருக்கின்றனர். தலைவன் மட்டும் இல்லை. தலைவன் இல்லாததினால் தன்னைச் சுற்றி உள்ள மக்கள் யாரும் இல்லாதது போல தலைவியின்
பற்றற்ற வாழ்க்கைக் காட்டப்படுகிறது. பகை அரசனால் பாழ்பட்டுப் போன ஊரில் யாரும் இல்லை. அவன் அவ்வூரைக் காவல் செய்வதற்காக நிறுத்தப்பட்டுள்ளான். அவன் மக்களோடு செல்லவும் முடியாமல், ஊரைக் காக்கும் பணியில் தன் தனிமை துன்பத்தினையும் தனக்குரிய சுற்றம் மக்கள் யாருமற்று வாழும் மனநிலையும், தலைவி தன்னைச் சுற்றி மக்கள் இருந்தபோதும் தலைவன் இல்லாததால் அத்தனிமகன் போல் துயருவதாக உவமைப் படுத்துகின்றார் புலவர்.
நெஞ்சம் உடலுடன் இருக்க வேண்டும். மாறாக. தலைவியின் மனம் தலைவன் பிரிந்து சென்ற போது, அவனுடன் சென்றுவிட்டது. தலைவி சுற்றம் சூழ இருந்த போதும், மனம் கூடத் தன்னிடமில்லாது சென்றுவிட்டதை எண்ணித் தன்னிலையில் தாழ்ந்த அசைவு நிலைக்களனைக் கொண்ட அழுகை மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.
இப்பாடலில் தலைவன் பிரிவைத் தாங்காத தலைவியின் துயரைப் பாலைத்திணையின் பிரிதல் உரிப்பொருள் சிறக்க உவமை வழி வெளிப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
அகநானூற்றுத் தலைவன் பிரிவில் வேறுபட்ட தலைவி தோழிக்குச் சொல்லியது.
“திதலை மாமை தளிர்வனப்பு அழுங்க,
புதல் இவர் பீரின் எதிர்மலர் கடுப்பப்
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி
எழுதுஎழில் மழைக்கண் கலுழ, நோய்கூர்ந்து,
ஆதி மந்தியின் அறிவுபிறிது ஆகி,
பேதுற் றிசினே - காதல்அம் தோழி!
காய்கதிர் திருகலின் களைந்துகால் கடுகி,
ஆடுதளிர் இருப்பைக் கூடுகுவி வான்பூ,
கோடுகடை கழங்கின், அறைமிசைத் தாஅம்
காடுஇறந் தனரே, காதலர்அடுபோர்
வீயா விழுப்புகழ் விண்தோய் வியன்குடை
ஈர்-எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போலக்
கலங்கின்று மாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே” (அகம்.135)
தலைவன் பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்தான். அப் பிரிவினை ஆற்றாத தலைவி வருந்தி உடல் வேறுபட்டாள். அதனை அறிந்த தோழி ஆறுதல் கூற அத்தோழியை நோக்கித் தலைவி கூறுவதாக இப்பாடல் அமைகிறது.
இப்பாடலில் மூன்று உவமைகள் வெளிப்பட்டுள்ளன. முதலில் தலைவனைப் பிரிந்து வாழும் நெஞ்சத்தின் வெம்மையால் உடல் தன் பொலிவுத் தன்மையை இழந்தது. மாந்தளிர் போன்ற நிறமும் அழகும் அழிந்துவிட்டது. புதர்களில் படர்ந்து கிடக்கும் பீர்க்கம்பூவினைப் போன்று வெளிர்மஞ்சள் நிறமான பசலை நெற்றியைச் சூழந்தது என்கிறாள். தலைவனின் பிரிவை எண்ணியவுடன் உடல் வேறுபாடாக நெற்றியைப் பசலைக் கவ்விக்கொண்டது. இப்பசலை குறித்து, செடிகள் நிழலிலே இருந்தால் இலைகளிலுள்ள இலைப்பச்சை (chlorophyll) அழிந்து போய்விட இலை வெண்மை அடையும் இதைத் தாவர நூலில் ‘Etiolation’ என்பர். இதை;
“நீணிழற் றளிப்போல நிறணூழ்த்த லறிவேணும்” (கலித்தொகை, 20,17) - (பி.எல்.சாமி, சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம், பக்.11-13)
என்ற பி.எல்.சாமியின் கருத்து பசலை நோய் கொண்டுள்ளார் நிறத்தைக் குறிக்கப் பயன்படுகிறது.
அடுத்து ஓவியம் எழுத வல்லமையுடையவர் பார்த்து எழுதுவதற்குரிய அழகிய குளிர்ச்சி பொருந்திய கண்கள் அழுமாறு மிக்க துன்பத்தை அடைந்த ஆதிமந்தியைப் போல யான் அறிவு திரிந்து மயங்கித் துன்புற்றேன் என்கிறாள். இங்குத் ஆட்டனத்தியின் ஆடலைக் கண்டு மயங்கி காவிரி பெண்ணாள் கவர்ந்து சென்று கடலினுள் ஒளித்து வைத்தாள். தன் காதலனைக் காணாது ஆதிமந்தி தேடி அலைந்து காணாது அவனுக்கு என்னானது? இருக்கின்றானா? இல்லையா? என்பது போன்ற வினாக்களினால் அறிவு திரிந்து மயங்கித் துன்புற்றதைப் போல யானும் தலைவன் எப்பொழுது வருவான்? விரைவில் வருவானா? என்பது போன்ற வினாக்களினால் துயருற்று இருப்பதைக் காட்டுகிறது.
மூன்றாவது பகையைக் கொல்லும் போர்த்தொழிலையும், அழியாப் புகழையும், வானைத் தொடும் அளவுக்கு நிற்கும் வெண்கொற்றக் குடையையும் கொண்ட கழுவுள் என்பானுக்கு உரியது காமூர் ஆகும். அவ்வூரைப் பதினான்கு வேளிர் ஒன்று சேர்த்துத் தாக்கி அழித்ததைப் போல, எம்மை விட்டுப் பிரிந்து சென்ற தலைவர் விரைந்து வருவார் என்று தெளிவுற்று இருந்த என் நெஞ்சம் கையற்றுக் கலங்கியது என்கிறாள் தலைவி.
இதில் யாரும் அழிக்க முடியாதது என்ற நிலையில் இருந்த காமூரை ஒன்று அல்லது இரண்டு அரசர்கள் தாக்கவில்லை பதினான்கு அரசர்கள் தாக்கி அழித்துள்ளனர். அதைப் போலப் பிரிந்து சென்ற தலைவனும் விரைவில் வந்துவிடுவான் என்ற நிலை நீட்டிக்கப்படுவதினால் பிரிவுத்துயர் கையற்ற நிலையை எடுத்துரைக்கின்றது.
தலைவனின் பிரிவைத் தாங்காத தலைவியின் உடல், மனம், மொழிகளால் துயருவதை இப்பாடலில் புலவர் எடுத்துரைத்துள்ளார்.
பிரிவில் முதல் நிலை பசலைப் பாய்கிறது மெய் உவமம். இரண்டாவது ஆதிமந்தியைப் போல அறிவு மயங்கி திரிகிறது வினை உவமம். மூன்றாவது காமூர் எனும் ஊர் போல முற்றிலும் அழிந்து கையற்று நிற்கிறது உரு உவமம். இம்மூன்று உவமைகள் வழியும் பசலையால் அழகினை இழத்தல், ஆதிமந்தி போல் அறிவை இழத்தல், காமூர் போல் எனும் உரு உவமத்தின் வழி வாழ்க்கையின் அனைத்தையும் இழத்தல் என்று இழத்தல் நிலைக்களனைக் கொண்ட அழுகை மெய்ப்பாட்டினை இப்பாடல் வெளிப்படுத்தியுள்ளது.
இம்மூன்று உவமைகள் வழி பாலைத்திணையின் பிரிதல் என்னும் உரிப்பொருள் சிறக்கப் பாடப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
இவ்வாய்வின் வழிப் பெறப்படுவன
* வினையின் பொருட்டுத் தலைவன் பிரியும்போது, தலைவியிடம் கூறாமல் செல்கிறான். அதை எண்ணி தலைவி கலங்குகிறாள்.
* தலைவன் வினையின் பொருட்டு சென்றுள்ளான். தன் நெஞ்சமும் தனக்குத் துணையாக இல்லாமல் அவனுடன் சென்றுவிட்டது என்று எண்ணி மனம் நோகிறாள்.
* தலைவன் பிரிவால் பொலிவிழந்து காணப்படுகிறாள். பீர்க்கம் பூப்போன்ற பசலை தன் மேனியில் குடிகொண்டிருப்பதை எண்ணி மனம் நொந்துள்ளாள்.
* பாலைத்திணையில் தலைவியின் அழுகை அதிகம் இடம்பெற்றுள்ளன.
* தலைவன் வினையின் பொருட்டு பிரிந்திருப்பதினால் மனம், உடல் வாட்டமுற்று அழுகை மெய்ப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.
முடிவுரை
பாலைத்திணையின் உரிப்பொருள் பிரிதல். இத்திணையில் தலைவன் வினையின் பொருட்டு பிரிந்து சென்றிருப்பதினால் தலைலவி மனம் நொந்து வாடி இருக்கிறாள். அழுகை மெய்ப்பாடு தலைவியின் வாயிலாக அதிகம் வெளிப்பட்டு பிரிதல் உரிப்பொருள் உவமை வழி எடுத்துரைக்கப்பட்டுள்ளது ஆய்வின் வழி அறிய முடிகிறது.
துணை நின்ற நூல்கள்
1. சாமி. பி.எல், சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி, சென்னை - 1.
2. சாமிநாதையர், டாக்டர் உ.வே., குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், வெளியீட்டெண்: 277, பெசன்ட் நகர், சென்னை - 600 090. எட்டாம் பதிப்பு - 2020.
3. சுப்பிரமணியன் முனைவர் ச.வே. (உ.ஆ), தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600 108. முதற்பதிப்பு – மே, 1998.
4. செயபால், முனைவர் இரா. (உ.ஆ), சங்க இலக்கியம் அகநானூறு (புத்தகம் 1) (மூலமும் உரையும்), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., அம்பத்தூர், சென்னை - 600 098. நான்காம் அச்சு: அக்டோபர், 2011.
5. தமிழண்ணல், தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள் பாகம்-1, செல்லப்பா பதிப்பகம், மயூரா வளாகம் 48, தானப்ப முதலி தெரு, மதுரை - 625 001. இரண்டாம் பதிப்பு - ஆகஸ்ட் 2011
6. வேங்கடராமன் வித்துவான் ஹெச். (பதி.ஆ), நற்றிணை மூலமும் உரையும், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், வெளியீட்டெண்: 277, பெசன்ட் நகர், சென்னை - 600 090. எட்டாம் பதிப்பு - 2020.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|