முக்கூடற் பள்ளு இலக்கியத்தின் சிறப்புகள்
ம. செல்வ ரோசரி புஷ்பா
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
குருநானக் கல்லூரி (தன்னாட்சி),
வேளச்சேரி, சென்னை -600042.
முன்னுரை
தமிழ்நாட்டில் இடைக்காலங்களில் மக்களிடையே மிகச் சிறப்புடன் இருந்த ஒருவகை கூத்துக்கலை இலக்கியமே பள்ளு. தொண்ணூத்தி ஆறு வகைப் பிரபந்தங்கள் பள்ளும் ஒருவகை சிற்றிலக்கியம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். வட இலக்கியங்களில் பிரபந்தம் (அ) பாட்டியல் என வழங்கப்படுகிறது. பள்ளு இலக்கியம் பள்ளர்கள் எனப்படும் ஒரு சாதி மக்களின் வாழ்வியல் முறைகளைக் கதைப்போக்கில் விளக்கிக் கூறும் நாடக இலக்கியம். இவ்இலக்கியத்தின் மூலம் அவர்களின் பழக்கவழக்கங்கள் ஒழுகலாறுகள், வேளாண்மை, செயல்முறைகள், பள்ளர்கள் இடையே வழங்கும் சமூக பழக்கவழக்கங்கள், மரபுகள், சடங்குகள், குடும்பவாழ்வியல் , முறைகள் முதலான பல்வேறு செய்திகளை அறியமுடிகின்றது. சிற்றிலக்கியங்களுள் பள்ளும் குறவஞ்சியும் தனிச்சிறப்புடைய எளிய மக்களின் வாழ்வியலை காட்டுவது என வழங்கலாம். இதற்கு முன்பு சிற்றிலக்கியங்களில் தெய்வம் அல்லது மன்னன் இடம் பெற்றதை நினைவுகூர்தல் நன்று. சிற்றிலக்கியம் மக்கள் இலக்கியமாக மாறியதில் வியப்பில்லை. பள்ளு குறவஞ்சி இலக்கியங்கள் மக்களிடையே பெற்றமைக்கு அதன் எளிமையே காரணம். உழவுத் தொழிலுக்குச் சிறந்த இடம் மருதம். இது பயிர் தொழில் செய்வதற்குத் தக்கவாறு தண்ணீர் தங்கும் பள்ளமான இடங்களை உடையது. பள்ளங்கள் நிறைந்த இடத்தில் வேலை செய்வோரைப் பள்ளர் என வழங்கினர் பள்ளர்கள் பாடும் பாடலை கொண்டதே பள்ளு இலக்கியம். இவ்விலக்கியம் பிற்காலத்தில் இலக்கிய வடிவை பெற்றிருந்தாலும் அடிப்படைக் கூறுகள் பண்டைய இலக்கியங்களில் தென்படுகின்றன. பள்ளு இலக்கியம் ஒரு வடிவை பெறுவதற்கு பல்வேறு கூறுகள் துணை செய்திருக்க வேண்டும். தொல்காப்பியர் புலன் என்னும் செய்யுள் பற்றி கூறும் செய்திகள் பள்ளு இலக்கியத்தின் தோற்றம் பற்றிய செய்திகளோடு ஒத்துள்ளன. தொல்காப்பியர் கூறும் ஏரோர் களவழி எனும் புறத்துறையும் இங்கு கூறுதல் வேண்டும் ஏரோர் களவழி என்பது உழவர்களின் நெல் களத்தில் நிகழும் செயல்கள் ஆகும் (தொல்.பொருள் 75) பன்னிருபாட்டியல் கூறும் உழத்திப் பாட்டும் பள்ளு இலக்கியத்தின் தோற்றத்திற்கு காரணமாகும். உழத்திப் பாட்டு என்பது பெண்களின் பாடல் முறையாகும்.
நிகழ்வுகள்
விவசாயத் தொழில் செய்யும் உழவர்கள், உழத்தியர்கள் ஆகியோரின் ஏழ்மை வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிமையாக, இனிமையாக, சுவையாகக் கூறுவதே பள்ளு இலக்கியத்தின் நோக்கம் ஆகும். இவ்வகையில் பள்ளு இலக்கியத்தின் செய்திகள் பின்வருமாறு அமைகின்றன. ஏராளமான நிலங்களைக் கொண்ட ஒரு செல்வனின் பண்ணையில் பள்ளன் ஒருவன் பரம்பரை பரம்பரையாக விவசாய வேலை செய்து வருகின்றான். அவனுக்கு இரண்டு மனைவியர். பள்ளன் தன் விவசாய வேலைகளைக் கவனிக்காது இளைய மனைவியிடம் மயங்கிக் கிடக்கின்றான். மூத்த மனைவியைக் கவனிக்கவில்லை. அப்போது நல்ல மழை பெய்கின்றது. ஆற்றில் தண்ணீர் நிரம்ப வருகின்றது. பள்ளனோ விவசாய வேலைகளைச் செய்யாமல் இளைய மனைவியின் வீட்டிலேயே இருக்கின்றான். இதை மூத்த மனைவி பண்ணையிடம் கூறுகின்றாள். பண்ணைக்காரன் கோபம் கொள்கின்றான். இதை அறிந்த பள்ளன் பயந்து போய் பண்ணையிடம் வருகின்றான். பண்ணை பள்ளனிடம் விவசாய வேலைகள் பற்றிக் கேட்கிறான். பள்ளன் கூறுகின்றான். பின், பண்ணையின் ஆணைப்படி வயல்களில் ஆட்டுக்கிடை வைக்க இடையனை அழைத்து வருகின்றான். பின், பள்ளன் இளைய மனைவியின் வீட்டிற்குச் செல்கின்றான். இதை அறிந்த மூத்த மனைவி மீண்டும் பண்ணையிடம் சென்று கூறுகின்றாள். இதை அறிந்த பள்ளன் விவசாய வேலைகளைச் செய்வது போல் நடிக்கின்றான். இதனால், பண்ணை அவனைத் தண்டிக்கும் பொறி ஆகிய தொழுவத்தில் மாட்டித் தண்டிக்கின்றான். இதனால் பள்ளன் வருந்துகின்றான். இதைக் கண்ட மூத்த மனைவி மனம் வருந்துகின்றாள். பள்ளனை மீட்கின்றாள். விடுபட்ட பள்ளன் ஒரு நல்ல நாளில் வயல்களை உழச் செல்கின்றான்.
பள்ளனை ஒரு மாடு முட்டி விடுகின்றது. அதனால் பள்ளன் மயங்கி விழுகின்றான். பின் மயக்கம் நீங்கி வயலை உழுகின்றான். சில நாட்கள் சென்றதும் பயிர் நன்கு விளைகின்றது. அவன் மூத்த மனைவிக்கு உரிய பங்கு நெல்லைச் சரியாகக் கொடுக்கவில்லை என அவள் பள்ளர்களிடம் முறையிடுகின்றாள். இதை இளைய மனைவி கேட்கின்றாள். மூத்த மனைவிக்கும் இளைய மனைவிக்கும் சண்டை ஏற்படுகின்றது. இறுதியில் இருவரும் சமாதானம் அடைகின்றனர். பள்ளனுடன் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இவையே பெரும்பாலான பள்ளு நூல்களின் செய்திகள் ஆகும்.
செய்திகள்
பள்ளு நூல்களில் பாட்டுடைத் தலைவனின் பெயர் மட்டும் கூறப்படும், மற்றவர்களின் பெயர்கள் கூறப்படுவது இல்லை. பள்ளனின் பெயர் பாட்டுடைத் தலைவனின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். மூத்த பள்ளியின் பெயர் பாட்டுடைத் தலைவனின் ஊர் அல்லது நாட்டின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். இளைய பள்ளியின் பெய ர்பாட்டுடைத் தலைவனின் ஊரின் பக்கத்து ஊர் அல்லது பக்கத்து நாட்டின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். இரண்டு பள்ளியர்களில் ஒருத்தி சிவன் அடியாராகவும் மற்றொருத்தி திருமால் அடியாராகவும் காணப்படுவர். சான்றாக, முக்கூடற்பள்ளு என்ற நூலை எடுத்துக் கொண்டால் இது ஒரு வைணவ சமய நூல் என்பதை அறியலாம். பாட்டுடைத் தலைவன் அழகர். திருமாலின் மற்றொரு பெயர் இது. பள்ளனின் பெயர் அழகக்குடும்பன். மூத்த பள்ளியின் பெயர் முக்கூடற்பள்ளி, இளைய பள்ளியின் பெயர் மருதூர்ப்பள்ளி. சைவ சமய நூலாகிய திருவாரூர்ப் பள்ளில் பாட்டுடைத் தலைவன் வன்மீக நாதன். பள்ளனின் பெயர் வன்மீகப் பள்ளன். மூத்த பள்ளியின் பெயர் வன்மீகப் பள்ளி. இளைய பள்ளியின் பெயர் சீரங்கப் பள்ளி என்பது ஆகும்.
பாட்டின் இனிமை
குருந்தி என்பவள் தன் பருவம் வரும் முன்பு சிறு பெண்ணாகத் தான் இருந்தாள்; முந்திய ஆண்டு நடுகை நடும் போது அவளை ஒருவரும் பொருட்படுத்தவில்லை; ஆனால், இப்போது என்ன புதிதாக ஒன்று நடக்கிறது.
“கொண்டாடிக்கொண்டுநடச்செய்து-இன்று
கண்டோமிதென்னபுதுமையோ
தொடையென்றால்வாழைத்தண்டைப்போல்-விழிக்
கடையென்றால்கணைரெண்டைப்போல்
சொருக்கென்றால்மேகப்படத்தைப்போல்-முலை
நெருக்கென்றாலிணைக்குடத்தைப்போல்
இடையென்றால்வஞ்சிக்கொடியைப்போல்-வரும்
நடையென்றாலிளம்பிடியைப்போல
இருந்தசாயலுக்கிப்பால்குருந்தி
திருந்தினாளடிபள்ளீரே” (முக்கூடற்பள்ளு 129 )
என்று அவள் இடையையும், தொடையையும், நடையையும், விழிக்கடையையும், கொங்கையாகிய இணைக் குடத்தையும், கூந்தலாகிய மேக படத்தையுங் கண்டு பெண்களே மருண்டு வியந்து கூறுகின்றார்கள். பாட்டின் அடிகளும் நளினமும் வியப்புடன் அவள் வடிவம்போல் அமைந்து சுவைநலம் உண்டாக்குகின்றது.
நாட்டு வளம்
புலவர் முக்கூடல் நகரின் சிறப்பினைக் கற்பனை நயம்பட விவரித்துள்ளார். முக்கூடலில் அழகர் கோயில் கொண்டிருக்கும் கோயிலின் கோபுரம் மிக உயரமானது. மேகத்திரள் அந்தக் கோபுரத்தைச் சூழ்ந்து நிற்கும்; வானத்திலிருந்து மழைத் துளிகள் படியும். கொடிமரத்துக் கொடிகள் வானத்தையே மூடி மறைத்துக் கொண்டு இருக்கும். பேரண்டப் பறவைகள் கோயிலின் உச்சியை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும். பொற்கோயிலின் முற்றத்தில் உள்ள மழை நீரில் அன்னங்கள் விளையாடிக் கொண்டிருக்கும். சூரியன், கோயிலின் மதிற் சுவர்களில் தான் புகுந்து செல்வதற்குரிய வழியைத் தேடிக்கொண்டிருப்பான். இவ்வாறாக முக்கூடல் நகரைப் புலவர் வருணித்துள்ளார். இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்.
“கொண்டல்கோபுரம் அண்டையில் கூடும்
கொடிகள் வானம்
படிதரமூடும்
கண்டபேரண்டம்தண்டலைநாடும்
கனகமுன்றில்
அனம்விளையாடும்
விண்டபூமதுவண்டலிட்டுஓடும்
வெயில்வெய்யோன்பொன்
எயில்வழிதேடும்
அண்டர்நாயகர்செண்டலங்காரர்
அழகர்முக்கூடல்
ஊர்எங்கள்ஊரே” (முக்.பள்.20)
நாட்டின் இனிமையை இப்பாடலின் மூலம் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
மழை வழிபாடு
அழகருடைய நல்ல நாட்டிலே மழை வளம் சிறக்க வேண்டும் என்று மன்னர்கள் வழிபாடு நடத்துகின்றனர்; மழை வரம் வேண்டுகின்றனர்; சேரியிலே குரவை ஒலிக்கத் தெய்வத்தைப் போற்றினர்.
“திங்கள்மும்மாரியுலகெங்கும்பெய்யவே
தெய்வத்தைப்போற்றிவந்தாற்கைதருங்காண்
பொங்கலுமிட்டுத்தேங்காயுங்கரும்பும்
பூலாவுடையாருக்குச்சாலக்கொடுங்கள்
குங்குமத்தோடுசந்தனமுங்கலந்து
குமுக்காவுடையாரய்யர்தமக்குச்சாத்தும்
கங்கணங்கட்டியேஎழுசெங்கடாயும்
கரையடிச்சாத்தாமுன்னேவிரையவெட்டும்” (முக்.பள்.32)
பூலா உடையாருக்குப் பொங்கல் இட்டுத் தேங்காயும் கரும்பும் நிறைய படைத்தனர். குமுக்கா உடையார் அய்யனுக்குக் குங்குமத்தையும் சந்தனத்தையும் கலந்து சாத்திப் போற்றினர். கரையடிச் சாத்தானுக்குக் காப்புக் கட்டி ஏழு செங்கிடாய்களை வெட்டிப் பலியிட்டனர். புலியூர் உடையார் ஏற்றுக் கொள்ளுமாறு சேவலைச் சாத்திர முறைப்படி பலியிட்டனர். சாராயத்தையும், பனையில் இருந்து
இறக்கும் கள்ளையும் வடக்கு வாசல் செல்லி உண்ணுமாறு வைத்தனர். பள்ளர்கள் எல்லோரும் ஒன்று கூடினர். பண்பாடிப் போற்றினர். கூத்தாடித் தொழுதனர். அழகரின் திருநாமங்களை ஏத்தினர். (முக்.பள். 33, 34) (பூலா உடையார், கரையடிச் சாத்தான், புலியூர் உடையார், செல்லி – நாட்டுப்புறத் தெய்வங்கள்) போன்ற செய்திகளை நாம் காண்கிறோம்.
விதை வகைகள்
முக்கூடற்பள்ளு உழவுத் தொழிலை மையமாக வைத்துப் பாடப்பட்டது. உழவுத் தொழிலுக்கு அடிப்படையான வித்து (விதை), மாடு, ஏர் ஆகியன பற்றிய விரிவான விளக்கங்களும் அவற்றின் வகைகளும் இங்கே கூறப்பட்டுள்ளன. இவை பழங்கால வேளாண்மைக் கலைச் சொல்லாக விளங்குவதை அறியமுடிகிறது. சீரகச்சம்பா, நெடுமூக்கன், மூங்கிற்சம்பா, கருங்குறுவை, புனுகுச்சம்பா, பூம்பாளை முதலிய இருபதுக்கும் மேற்பட்ட நெல் விதைவகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
“குடைக்கொம்பன்செம்மறையன்
குத்துக்குளம்பன்மேழை
குடைச்செவியன்குற்றாலன்
கூடுகொம்பன் மடப்புல்லைக்
கரும்போரான் மயிலை
கழற்சிக்கண்ணன்
மட்டைக்கொம்பன்கருப்பன்
மஞ்சள்வாலன்
படைப்புப்பிடுங்கிகொட்டைப்
பாக்கன்கருமறையன்
பசுக்காத்தான்அணிற்காலன்
படலைக்கொம்பன்
விடத்தலைப்பூநிறத்தான்
வெள்ளைக்காளையும்இந்த
விதத்திலுண்டாயிரந்தான்
மெய்காணாண்டே”
(முக்.பள்.109)
எதார்த்த நிலை
பள்ளனை மாடு முட்டி விடுகிறது; மயங்கி விழுகிறான்; மூத்த பள்ளி வருந்திப் புலம்புகிறாள்.
“மதயானைமுதற்பிடிக்கவல்லாய்--இந்த
மாட்டுக்குமாட்டாமற்போனதென்னசொல்லாய்
கதையோமுன்மலைகளையும்முறித்தாய்-- அந்தப்பலங்
கண்டிலேனான்என்றோடிமறித்தாய்
சதுர்வேதன்விதித்ததலைப்பொறியோ--மருதூர்ச்
சக்களத்திபுலைமருந்தின்வெறியோ
முதலேயீதார்விளைத்தஇடும்போ--தெரிந்திலேன்
முக்கூடல்அழகர்ப்பண்ணைக்குடும்பா” (முக்கூடற்பள்ளு 118)
மத யானைப் பிடிக்க வல்லவன் இப்போது மாடு பிடிக்க வலிமை இல்லையா என்று புலம்புகிறாள். மேலும், இளைய பள்ளி, வடிவழகரின் பாதங்களை மறவாத குடும்பனே, உன் மேனியில் வடுப்பட்டதென்ன. முக்கூடற்பள்ளி சிரிக்க இப்படி விழுந்து கிடக்கிறாயே என்று புலம்புகிறாள்.
“வடுப்படாமேனிவடுப்படுமோ--நன்றுநன்றென்
வல்லாளன்சமர்த்தும்போய்விடுமோ
தடுத்துநீஏன்மாட்டைத்தொடர்ந்தாய்--முக்கூடல்
சதுரிபார்த்துச்சிரிக்கவோகிடந்தாய்
அடுத்திதுவும்உனக்குவரமுறையோ—மலையின்மேல்
ஐயாபூலாவுடையார்குறையோ
படுத்தகிடைஎழுந்திருந்துகொள்ளாய்--வடிவழகர்
பாதம்மறவாதபண்ணைக்குடும்பா” (முக்கூடற்பள்ளு 119)
என்று வருந்திக் கூறுவதும் அவலச் சுவையில்அமைகின்றது.
வீரச்சுவை
பள்ளியர்கள் தங்கள் நாட்டு வளம் கூறும் போது பெருமிதமாகக் கூறிக் கொள்கின்றார்கள்.
“கொண்டல்கோபுரம்அண்டையிற்கூடும்
கொடிகள்வானம்படிதரமூடும்
கண்டபேரண்டந்தண்டலைநாடும்
கனகமுன்றில்அனம்விளையாடும்
விண்டபூமதுவண்டலிட்டோடும்
வெயில்வெய்யோன்பொன்னெயில்வழிதேடும்
அண்டர்நாயகர்செண்டலங்காரர்
அழகர்முக்கூடல்ஊரெங்கள்ஊரே” (முக்கூடற்பள்ளு 20)
இப்பாடலில் முன் மூன்றடிகள் வியப்புச் சுவை பயப்பனவாக இருந்தாலும் “அழகர் முக்கூடல் ஊரெங்கள் ஊரே” என்பது எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு பெருமிதச் சுவை தருகின்றது.
முடிவுரை
சிற்றிலக்கியங்களுள் பள்ளும், குறவஞ்சியும் தனிச்சிறப்புடையன. மக்கள் வாழ்வியலை எளிமையான முறையில் ஆசிரியர் படைத்துள்ளார். தென் தமிழகத்தில் வாழ்ந்த பள்ளர் இனமக்களின் உழவு, பாடல், மாடு, மீன், தெய்வம், பண்ணை, எனப் பலவற்றை அறியமுடிகிறது. சிற்றிலக்கியமாக இருந்தாலும் பலவகைப்பட்ட செய்திகளை நம்மால் காண இயல்கிறது.
துணை நூற்பட்டியல்
1. தொல்காப்பியம் - பொருளதிகாரம், இளம்பூரணர், சாரதா பதிப்பகம், சென்னை - 600014 (பதிப்பு ஆண்டு தேவை)
2. முக்கூடற்பள்ளு, புலியூர்கேசிகன், அமராவதி பதிப்பகம், மைலாப்பூர், சென்னை - 600004 (பதிப்பு ஆண்டு தேவை)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.