ஆழ்நிலைச் சுற்றுச்சூழல் திறனாய்வில் திணையெனும் ‘வாழிடம்’
முனைவர் மா. பத்மபிரியா
உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,
தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்னம் மகளிர் கல்லூரி, சிவகாசி.
திணை என்ற சொல்லாடல் வாழிடம் என்னும் பெருண்மையில் இயங்குவதாக சங்கப்பாக்களை ஆராய்ந்தால் பழந்தமிழரின் அரும்பெரும் சூழலியல் சிந்தனைகள் வெளிக்கொணரப்படும். பழந்தமிழர் தம்மை சூழ்ந்துள்ள இயற்கைப் பொருள் குறித்த பதிவுகளை முதல்,கரு என்ற கட்டமைப்பில் சூழலுடன் கூடியே அறிவித்துள்ளனர். மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடமான முல்லை, வயலும் வயல் சார்ந்த இடமான மருதம், கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தல், வளம் குன்றிய மலைவளமும் வளம் குன்றிய காட்டு வளமுமாகிய பாலை என்ற ஐவகை நிலவியலில் தனித்தனியே உயிரினங்களையும் பயிரினங்களையும் பதிவுசெய்துள்ளனா். அகப்புற உணா்வோடு சூழ்நிலையின் பொருத்தவுணா்வும் சுட்டப்படுகின்றது. மனிதனும் இயற்கையும் என்ற இணைவில் இயற்கை மேலானதாக மனிதன் அதன் கீழாக கட்டமைக்கப்பட்டுள்ளான். ஆழ்நிலைச்சூழல் சுட்டும் சுற்றுச்சூழல் சுயவுணர்வுடன் பழந்தமிழ் மக்கள் செயலாற்றியுள்ளனர் என்பதனை இக்கருத்துரை வழிமொழிகின்றது.
ஆழ்நிலைச் சுற்றுச்சூழல் - விளக்கம்
ஆழ்ந்த சுற்றுச்சூழல் என்பது சூழியல் குறித்த ஆய்வின் மற்றுமொரு கிளை ஆகும். “‘ஆழமான சூழலியல்’ என்ற சொற்றொடர் 1973 ஆம் ஆண்டில் நார்வே தத்துவவாதியான ஆர்னே நாஸால் உருவாக்கப்பட்டது” (1) கி.பி.1970களின் முற்பகுதியில் சூழலியியல் முன்னேற்பாடுகள் நிகழ்ந்தன என்றே கூறலாம். சுற்றுச்சூழல் இயக்கம் செயலளவில் மட்டுமே இயங்குகின்றது என்று குற்றம் சாட்டிய ஆர்னே நாஸ் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சில ஆழ்ந்த நோக்குகளையும் முன்னெடுத்தார். மனித இயல்பினை மறுமதிப்பீடு செய்வது அவசியம் என்று கருதினர். ஏனெனில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மனிதனின் விழிப்புணர்வுடன் கூடிய செயலாக்கம் தேவையாகும். அதுவே சூழல் மேம்பாட்டுக்கான வழிமுறையாகும் என்று வலியுறுத்தினார். மேலும், சுற்றுச்சூழல் சீரழிவுக்குக் காரணமான இயற்கையைக் கையாளும் மனிதநடத்தை பற்றிச் சிந்தித்தார். மனிதர்கள் சுற்றுச்சூழலுக்கு எதிரான தங்களின் தவாறான நடத்தையால் மாசுகளை ஏற்படுத்துகின்றனர் என்றார். ஒவ்வொருவருக்குள்ளும் ‘சுற்றுச்சூழல் சுயவுணர்வு இருத்தல்அவசியம் என்று வலியுறுத்தினார். மக்கள் தங்களை இயற்கையின் ஒரு பகுதியாகக் கருதி, அதை விட்டு விலகாமலும் இருக்க ஆலோசனை தெரிவித்தார். இயற்கையைத் தாழ்வுபடுத்தும் விதிமீறல்களைக் கண்டித்தார். இயற்கையோடு ஒத்துப்போதலே ஆழ்ந்த சூழலியல் தத்துவமாகும்.
பழங்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சங்கஇலக்கியப் பிரதிகளில் ஐந்திணை கட்டமைப்பில் உருவாக்கம் பெற்ற திணை இலக்கியங்கள் இத்தகைய ஆழமான சூழலியல் சிந்தனைகள் உள்வாங்கிய, சூழல் நடத்தை செயலாக்கம் என்பதை நாம் மறுக்க முடியாது.
திணையே வாழிடம் அகராதி விளக்கம் வழி
பழந்தமிழ் இலக்கியத்தில் ஐவகைநிலப் பாகுபாட்டிற்கு ‘திணை’ என்று பெயரிடுகிறோம். திணை என்றாலே ‘குடி’ என்ற பொருண்மை உண்டு. குடிமக்கள் வாழும் நிலமே ‘திணை’ எனலாம். ‘‘திணை என்பது இடம், ஒழுக்கம், குடி, குலம், பூமி, பொருள், உயா்திணை, அஃறிணையாகிய பிரிவு, வீடு, திண்ணை, உயா்நிலம்’’ (2) என்ற பதிவு உள்ளது. திணை பற்றி கூறுகையில் ‘‘பூமி, இடம், குடி, பொருள், குலம், ஒழுக்கம், ஐந்திணை, பெருந்திணை’’ (3) என்ற விளக்கமும் சான்று பகா்கின்றது. அகராதிகளின் விளக்கம் வழி வாழிடம் தான் திணை என்று சுட்டப்பெறுதலை உறுதி செய்யலாம்.
திணை என்ற சொல், மக்களின் வாழிடம் மட்டுமின்றி, அங்குள்ள மரம், செடி, கொடிகள், உயிரினங்கள், பயிரினங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் ஆகும். இளம்பூரணா் எழுதிணை
என்பதற்கு ‘ஏழு பொருள்’ என்றே விளக்கம் தந்துள்ளார். ஏழு பொருள் தான் ‘இயற்கைப்பொருள்’ என்று நோக்கினால் சூழலியல் பாங்கு புலப்படும்.
நச்சினார்க்கினியா் திணை என்பதனை ‘ஒழுக்கம்’ என்கிறார். மாறுபட்ட கருத்தாக, மனிதனும் இயற்கையும் இணைந்த சோ்க்கை திணை என்னும் விளக்கமாக பின்வரும் பதிவு அமைந்துள்ளது. ‘திணை பற்றி அபிதான நூல் கூறுகையில் உயா்திணை, அஃறிணை, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் இவை முறையே மலை, மணற்காடு, காடு ஊர், கடல் சார்ந்த நிலங்கள் அகத்திணை, புறத்திணை’’ (4) என்பதாகும்.
திணைக்கான பெயா்காரணம் இயற்கையுடன் இணைந்துள்ளமை தனிநாயக அடிகளார் கருத்தால் வெளிக்கொணரலாம். அவா், ஐவகை நிலத்தின் பெயா்க் காரணங்களைக் கீழ்க்கண்டவாறு சுட்டியுள்ளார்.
“பழந்தமிழா்கள், மலைப்பகுதிக்குப் பெயராகத் தென்னிந்திய மலைப்பகுதிகளில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கக் கூடிய குறிஞ்சி (ஸ்ட்ரோபிலாந்தஸ்) என்னும் பெயரை வைத்தார்கள். மேய்ச்சல் நிலப்பகுதிக்கு அந்நிலத்தின் மிக அழகிய, மிக்க மணமுள்ள முல்லைப்பூவின் பெயரை வைத்தார்கள். கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் ஏரிகளிலும் நீா் நிலைகளிலும் பூக்கும் நெய்தல் என்ற பூவின் பெயரை அந்நிலப்பகுதிக்குச் சூட்டினார்கள். ஆற்றங்கரையிலமைந்த விவசாய நிலப்பகுதியைக் குறிக்க, அதன் அடையாளமாகத் திகழும் மருதம் என்ற மரத்தின் பெயரைச் சூட்டினார்கள். வறண்ட குற்றுக் காட்டுப் பகுதியைக் குறிக்க, கோடையின் வெப்பத்திலும் வளமான பூக்களோடு திகழும் பாலை என்ற மரத்தின் பெயரைச் சூட்டினார்கள் ” (5) இவ்வாறு அந்நிலத்தின் பெயரைப் பூக்களின் பெயரில் அடையாளப்படுத்தியுள்ளனா்.
மு.வரதராசனார், இயற்கை நெறிக்காலப்பதிவுகளே சங்கப்பாக்கள் என்கின்றார்.
“இயற்கையியல், விருந்தியல் (Naturalism, Romanticism) ஆகிய இரண்டும் சங்க இலக்கியத்தின் பண்புகளாக உள்ளன வோர்ட்ஸ்வொர்த்தைப் போல வானோங்கு மலை, பொங்கிவீழ் அருவி, நிறைந்தொளிரும் நீா்நிலை, தெளிந்தோடும் ஆறு ஆகியவற்றை எழில் ததும்பும் ஓவியங்களாகத் தீட்டிக்காட்டும் கவிஞா்கள் சங்க காலத்தில் உண்டு” (6) இக்கருத்து சங்க காலத்தின் இயற்கை இணைந்த வாழ்வியலைக் காட்டுகின்றது. மேலும், நிலப்பகுப்பின் காரணமாக நிலம், நீா் என்று பிரித்தறிந்து வளம் சுட்டப்பட்டுள்ளமையைக் குறிக்கின்றது.
பழந்தமிழகத்தில் திணைக்கான இயல்பு நெறிகள், அந்தந்த நிலம் சார்ந்திருந்தமை குறித்து, பி.டி. சீனிவாச அய்யங்கார் பின்வருமாறு கூறியுள்ளார்.
“ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்ட தமிழகத்தின் ஒவ்வொரு திணையும் தத்தமக்கென்று இனம், பண்பாடு, நீர்ப்பாசனம், உற்பத்தி முறை போன்றவற்றைக் கொண்டிருந்தன. திணைக் கோட்பாட்டினைப் பொருளியல் பரிமாணத்துடன் அணுக வேண்டுமென அறிஞா்கள் வலியுறுத்தியுள்ளனா். மலையும் மலை சார்ந்ததுமான குறிஞ்சித் திணையின் மக்கள் மெல்ல மெல்ல காடுகள் சார்ந்த முல்லைத் திணைக்கு இறங்கி, வயல்பரப்பான மருதத்திணைக்கு வந்து வேளாண் தொழிலை மேற்கொண்டனா்” (7)
பழந்தமிழர் இயற்கையின் ஆளுமையை நன்முறையில் ஏற்றுக்கொண்டனா். ஆதலால், திணையின் இயல்பு நெறிகள் பேணப்பட்டுள்ளன. அதன் வழியே, சூழலும் பாதுகாக்கப்பட்டது. அத்தகைய
திணை வளப்பாதுகாப்பினை சங்கப் பதிவுகள் வழி ஆராயலாம்.
மலையெனும் வாழிடம்
மலையும், மலையடிவார காடுகளும் குறிஞ்சி நிலப்பரப்பாக அமைவதால் கூட்டு முயற்சியுடன் காட்டு வளங்கள் செழித்துள்ளன. வன்புலத்தில், நெல் தொடங்கி ஐயவி ஈறாக உள்ள தானியங்கள் அனைத்தும் மிகுதியாக விளைந்துள்ளன.
“நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த் தோரை, நெடுங்கால் ஐயவி,
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடிய
இஞ்சி மஞ்சள் பைங்களி பிறவும்
பல்வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டி”
(மதுரைக்காஞ்சி.286-290)
மதுரைக் காஞ்சியில், அகில், சந்தனம், தோரை (மூங்கில் நெல்), ஐயவி (வெண்சிறு கடுகு), ஐவனமாகிய வெண்ணெல், இஞ்சி, மஞ்சள், மிளகு, தினை, கிளி, காட்டுப்பன்றி, புலி போன்ற தொடர் பதிவுகளில் மலையெனும் வாழிடத்தின் உயிரின, பயிரின வளம் சுட்டப்பட்டுள்ளது.
புறநானூறு பாடலில், உழவு நடைபெறாமல் விளைச்சல் சிறப்புற்றிருந்த இயற்கையின் இயல்புநெறி காட்டப்பட்டுள்ளது.
“… … … பாரியது பறம்பே!
… … … … … ….
உழவா் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே
இரண்டே தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே
மூன்றே கொழுங் கொடி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே
நான்கே … … … … …
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே
… … … … …
மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு
மரம் தொறும் பிணித்த களிற்றினா்… … ...”
(புறநானூறு. 109)
உழவா்கள் உழவு செய்ய தேவையில்லை. மூங்கில் நெல், பலாக்கனி, வள்ளிக்கிழங்குகள் விளைந்துள்ளன. மரங்கள்தோறும் பிணிக்கப்பட்ட யானைகள் சுட்டப்பட்டுள்ளது. பறம்பு மலையில் யானைகளின் நெருக்கம் மிகுந்துள்ளது. இன்றோ யானையினம் அழிந்து வருகின்றது.
இச்சூழலில் யானையின் பயனை அனைவரும் அறிதல் அவசியம். யானையின் நன்மைகளை ஆய்வாளா்கள் பின்வருமாறு சுட்டியுள்ளனா்.
“தமிழகத்தில் ‘தும்பிக்கை நாயகன்’ எஞ்சிப் பிழைத்திருக்கும் காடுகளாகிய களக்காடு, முதுமலை, ஆனைமலை சரணாலயங்களின் இயற்கை வளக்காட்சிகள் (Landscape) எழில் படைத்தவை… யானையைச் சுற்றி வாழும் நூற்றுக்கணக்கான தாவர, விலங்குகளும் செவ்வனே வாழ்ந்திட முடிகிறது. இவற்றில் பூச்சிகள், தவளைகள், பாம்புகள், ஆமைகள், காட்டுப்பூனை, முயல், முள்ளம் பன்றி, நீா்நாய் போன்ற சிறு விலங்குகளோடு பலஅடுக்கு உயிரின அட்டவணையில் (Food Pyramid) உச்சத்தில் உள்ள புலி, சிறுத்தை, கரடி, காட்டெருது, மான்கள் ஆகியவற்றுக்கும் யானைகளாலேயே வளம் பகிர்ந்து அளிக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன” (8) யானைகள் சூழலியலின் நண்பன் என்பது புலனாகின்றது. புறப்பாடல் சோலையில் உலாவும் உயிரினங்களைப் பதிவு செய்துள்ளது.
“பயில்பூஞ் சோலை மயிலெழுந் தாலவும்
… … … … …
யாண ரறாஅ வியன்மலை யற்றே”
(புறநானூறு. 116)
பாரியின் பறம்பு மலையில் பயிரினம், உயிரினம் பேணப்பட்டுள்ளன. மயில், மான் என்று உயிரினத்தின் மகிழ்வு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
“அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி
கன்று கால் யாத்த மன்றப் பலவின்
வோ்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம்
… … … ... ...”
(நற்றிணை. 213)
நற்றிணையில், மலைநாடு, சிறுகுடியின் சிறப்பு, அருவியின் வளம் சுட்டப்பட்டுள்ளது. இப்பாடலைப் பாடிய கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார், குறிஞ்சித் திணையில் வாழும் விலங்கினப் பாதுகாப்பினையும், அதன் உணவினையும் உறுதி செய்துள்ளார். பலாமரத்தில் கட்டப்பட்ட பசுவின் கன்றானது வோ்ப்பலாவினை தின்று பின்னா் அருவி நீரை அருந்தி மகிழ்ந்திருக்கும் மாண்பு இயல்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இன்று கால்நடைகள் சாலையோரங்களில் சுற்றித்திரிந்து உண்பதற்கு இலைதழையின்றி பாலிதீன் பைகளை தின்று மரணமடையும் அவலம் தொடா்ந்து கொண்டிருக்கின்றது.
“பல்ஆன் குன்றில் படுநிழல் சோ்ந்த
நல்ஆன் பரப்பின் குழுமூர்……..”
(அகநானூறு. 168)
அகநானூறு பாடல் பசுக்கூட்டம் நிழலில் ஓய்வெடுக்கும் சூழமைவைச் சித்தரித்துள்ளது.
இற்றைக் காலத்தில் பயிரின உயிரின வாழிடம் தொழில்நுட்பத்தின் விரிவாக்க காரணத்தினால் சிதைக்கப்படுதலைக் கவனப்படுத்தல் ஆய்வின் கடமையாகும்.
காட்டழிப்பால் விலங்கினங்கள் ஒய்வெடுக்க இடமின்றி சாலையோரங்களில் சுற்றித்திரியும் அவல நிலையும், அந்த உயிரின இழப்பும் அதிகரித்துள்ளது. பழந்தமிழா்கள் உயிரினங்களின் ஓய்வெடுப்பினை உற்று நோக்கியுள்ளனா்.
“சூழலியலில் ஒவ்வொரு உயிரினமும், பல காரணங்களுக்காக மற்ற உயிரினங்களைச் சார்ந்து வாழ்கின்றன. அந்த வகையில் இயற்கை சார்ந்த வாழ்வியல் முறையில் மனிதன் பெரிதும் சார்ந்திருக்கும் உயிரினம் மாடு ஆகும். பல்வேறு நிலைகளில் மாடு மனிதனுக்கு உதவி செய்கின்றது. இதனை நம் முன்னோராகிய பழந்தமிழா்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனா்” (9) என்ற உண்மை சங்கப்பாடலில் வெளிப்பட்டுள்ளது.
“பெருமலைச் சிலம்பின் … … … … …
… … … … …
இன்தீம் பலவின் ஏர்கெழு செல்வத்து
எந்தையும் … … … … ...”
(அகநானூறு. 282)
மலைநாட்டில் வாழ்பவா்கள் தங்களிடம் உள்ள சொத்துக்களாகப் பயரினத்தை மதிப்பிடுவது அகநானூறு பாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பலா மரங்களைச் செல்வமாக வைத்திருக்கும்
எனது தந்தை என்று தலைவி குறிப்பிடுகின்றாள்.
“… … … … …
அகில் சுமந்து
ஆர முழுமுதல் உருட்டி வேரற்
பூவுடை அலங்குசினை புலம்ப வோ்கீண்டு
… … … … …
இழுமென இழிதரும் அருவி
பழம் முதிர் சோலை மலைகிழ வோனே!”
(முருகு. 295-317)
அகில், சந்தனம், மூங்கில், ஆசினிப்பலா, சுரபுன்னை, கருங்குரங்கு, முசு என்னும் குரங்கு வகை, யானை, மிளகுக்கொடி, மயில், கோழி, ஆண்பன்றி, காட்டுப்பசு, எருது இவ்வாறு பயிரினங்களும் உயிரினங்களும் இணைந்த மலைநாட்டு வாழ்வியல் காட்டப்பட்டுள்ளது.
மலைபடுகடாம், சங்ககால குறுநில மன்னன் நன்னனின் மலைநாட்டு வளத்தைத் தொகுத்துரைக்கின்றது. காஞ்சி மரங்களும், நீா் வந்து பெருகின்ற ஆறுகளும், உணவு வளம் நல்கும்
விளைநிலமும் குறைவின்றிக் காணப்பட்டுள்ளன.
“ஆற்றின் அளவும், அசையும் நல் புலமும்
வீற்றுவளம் சுரக்கும் அவன் நாடு படுவல்சியும்
மலையும் சோலையும் மாபுகல் கானமும்”
(மலைபடுகடாம். 67-68)
மலை, சோலை, காடு என்று வளம் சுட்டப்பட்டுள்ளது.
“புல் அரைக் காஞ்சி, பனல் பொரு புதவின்
… … … … …
காணுநா் வயாஅம் கட்கு இன் சேயாற்றின்
யாணா் ஒரு கரைக் கொண்டனிர் கழிமின்”
(மலைபடுகடாம். 449-477)
என்ற தொடா்ச்சியான பாடலடிகள் மலைவளம் தரும் உணவு ஆதாரத்தையே நமக்குப் பறை சாற்றுகின்றன. இன்றைய இலக்கியங்களில் மானுட நடத்தையியல் வழிமுறைகளில் சூழலியல் நற்சிந்தனைகள் குறைந்துள்ளன.
“பழங்கால மனிதனின் உணவில் குறைந்தது 2,500 வகையான காட்டுத் தாவரங்கள் இடம் பெற்றிருந்தன. பண்டைக்கால நாகரிகங்களில் 500க்கும் மேற்பட்ட காய்வகைகள் உபயோகிக்கப்பட்டன. ஆனால் இன்று மனிதனின் உணவுச் சத்து முழுவதுமே 30 தாவர வகைகளிலிருந்து மட்டுமே கிடைக்கின்றன” (10) இந்த நிலை வருவதற்கு காரணம் இயற்கை பாதுகாப்பு இன்மையும் மக்களிடம் மறைந்து போன சுற்றுச்சூழல் சுயவுணர்வும்தான்.
முடிவுரை
• பழந்தமிழகத்தில் திணைக்கான இயல்பு நெறிகள் அந்தந்த நிலம் சார்ந்திருந்த பயிரின உயிரினச் சூழலோடு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வுரையின் சுருக்கம் கருதி மலையெனும் வாழிடம் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது.
• சூழல் சுயவுணர்வு கொண்ட பழந்தமிழ் மக்கள் அக மற்றும் புறப்பாடலின் அங்கமாகியுள்ளனர் என்பது தெளிவுபடுதத்தப்பட்டுள்ளது.
• ஆழ்நிலைச்சூழல் என்னும் கோட்பாட்டுக்குள் சங்கப்பாக்களை அகப்படுத்த திணையெனும் வாழிடம் ஆய்வில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
அடிக்குறிப்புகள்
1. Naess,Arne(1973) “ The shallow and the deep,long-rang ecology movement a summary(PDF).Inguiry.16(1-4):95-100 ISSN 002-174X
2. சந்தியா நடராஜன், மதுரைத்தமிழ்ப் பேரகராதி முதல்பாகம், ப. 1130.
3. ச.பவானந்தம்பிள்ளை, பவானந்தா் தமிழ்ச் சொல்லகராதி, ப. 266.
4. ஆ. சிங்கார வேலு முதலியார், அபிதான சிந்தாமணி, ப. 818.
5. தனிநாயக அடிகள், நில அமைப்பும் தமிழ்க்கவிதையும், ப.38.
6. மு.வரதராசன், பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, ப.20.
7. P. T. Srinivasa Lyengar, History of the Tamils : From the earliest to 600 AD, AES, New Delhi, 1984,4
8.ச. முகமது அலி, அழியும் பேருயிர் யானைகள், ப.83.
9. தீ. கார்த்திக், தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல், ப.50.
10. பூவுலக நண்பா்கள், விதைகள், ப.22
துணைநூற்பட்டியல்
1. சோமசுந்தரனார்.பொ.வே (உ.ஆ), பத்துப்பாட்டு மூலமும் உரையும் தொகுதி I,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 2007.
2. சோமசுந்தரனார்.பொ.வே (உ.ஆ), பத்துப்பாட்டு மூலமும் உரையும் தொகுதி II, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 2008.
3. துரைசாமிப்பிள்ளை, ஔவை.சு. (உ.ஆ), புறநானூறு பகுதி I, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1947.
4. கார்த்திக்.தீ ., தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல், இயல்வாகை பதிப்பகம், கதித்தமலை அடிவாரம், ஊத்துக்குளி, 2014.
5. தனிநாயக அடிகள், பூரணசந்திரன் (மொ.ஆ), நில அமைப்பும் தமிழக் கவிதையும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை, முதற்பதிப்பு, 2014.
6. பூவுலக நண்பா்கள் விதைகள், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி.2017.
7. முகமது அலி.ச, யோகானந்த்.க, அழியும் பேருயிர் யானைகள், இயற்கை வரலாறு அறக்கட்டளை, பொள்ளாச்சி, இரண்டாம் பதிப்பு, ஜீலை, 2009.
8. வரதராசனார்.மு., பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, பாரி நிலையம், சென்னை, 2006.
9. சிங்காரவேலு முதலியார். ஆ., அபிதான சிந்தாமணி, ஆசிய கல்வியல் கழகம், சென்னை, 2005.
10. சந்தியா நடராஜன் (ப.ஆ.), மதுரைத் தமிழ்ப்பேரகராதி முதல்பாகம்,சந்தியா பதிப்பகம்,சென்னை, 2008.
11. பவானந்தம்பிள்ளை. ச .,பவானந்தா் தமிழ்ச் சொல்லகராதி,நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை ,2007.
12. Arne Naess, The shallow and the deep, long-rang ecology movement a summary(PDF),Volume 16,1973, Published online: 29 Aug 2008.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.