கம்பராமாயணத்தில் முனிவர்கள்
முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.
முன்னுரை
முனிவர்கள் சடைமுடி தரித்திருப்பர், காவி உடை அணிந்திருப்பர், கையில் கமண்டலம் வைத்திருப்பர். முனிவர்கள் காடுகளில் தங்கி தவம் செய்கிறார்கள், வேள்விகள் புரிகின்றார்கள். பின்னர், அதன் பயனாக தேவர்கள் ஆகிறார்கள். பரத்வாஜர், அகத்தியர் போன்ற முனிவர்களும் உலக வளத்துக்காகக் காடுகளில் தங்கி, தவமியற்றி வந்தனர். முனிவர் மனம் நல்வினை, தீவினை என்னும் இரு வினைகளை அறுத்து காமம், வெகுளி, மயக்கம் என வகைகளையும் கடந்து இருக்கும். முக்காலமும் உணர்ந்தவர்கள். கம்பராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முனிவர்கள் குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.
கம்பராமாயணத்தில் முனிவர்கள்
உலக இன்பங்களைத் துறந்து, பற்றற்று இருப்பவரே முனிவர்கள். அதனால், எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாக நேரிடலாம். இப்படி அறம் பேணியும், வேள்வி இயற்றியும் புகழ் அடைதல் இயல்பு. முனிவர்கள் இடைவிடாது பரமாத்மாவை நினைப்பவர்கள். அவ்வாறு நினைக்க இந்திரியம் என்னும் ஐம்பொறிகளை அடக்குவார்கள். தவவாழ்க்கை மேற்கொள்வார்கள். காயும், கனியும், இலையுமே உண்பார்கள். இராமன் உண்பதற்காக இலட்சுமணன் காய், கனி, கிழங்கு, பச்சிலைகளைக் கொணர்ந்து தந்தான் என்பதை “பச்சிலை கிழங்கு காய் பரமன் நுங்கிய மிச்சிலை நுகர்வது வேறு நான் ஒன்றும்” அறியமுடிகிறது.
முனிவர்கள் ஐம்புலன்களை அடக்கி, கடும் தவம் செய்பவர்கள். அத்தவத்தின் பலனைத் தாம் விரும்புபவர்களுக்கு அளித்து மகிழும் தன்மையர். இராமன் முடிசூடப் போகிறான் என்பதை அறிந்த முனிவர்கள், தவத்தின் பலனை உனக்கு அளித்தோம் என்று கூறி மகிழ்ந்தனர். “ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக” என்பார். உலக நன்மைக்காக வேள்விகள் பலவற்றைச் செய்வர். முனிவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். காட்டுக்குச் சென்ற இராமன் சுமந்திரனுடன் திரும்பினானா என்று தசரதன் கேட்க, வசிஷ்டர் முகக்குறிப்பு காட்டினான். விசுவாமித்திரருடன், இராம லட்சுமணர்கள் சென்ற போது, சனகன் அரண்மனையில் வில்லினுடையப் பெருமைகளையும், அதை வளைக்க வேண்டும் என்றும் சதானந்தர் எடுத்துச் சொன்னார். விசுவாமித்திரர், சதானந்தர் சொல்லுக்கு உடன்பட்டதைக் குறிப்பிடும்படி மனத்தினுள் எண்ணி, இராமனின் முகத்தைப் பார்த்தபடி அசைத்தார். அவர் பேசவில்லை.
தென் திசையில் சீதையைத் தேடப் புகுந்த வானரவீரர்கள் முனிவர் வடிவம் ஏற்றனர். அனுமன், அங்கதன் உள்ளிட்ட வீரர்கள் விதர்ப்ப நாடு வந்தனர். விரும்பும் வடிவு கொள்ளும் அவ்வானர வீரர்கள், விதர்ப்ப நாட்டின் ஊர்களில் ஐயத்திற்கு சிறிதும் இடம் தராத முனிவரது வடிவைக் கொண்டனர். மனிதர்கள் வாழும் ஊரில் வானரர் உருவில் சென்று தேட இயலாது. எனவே முனிவர் வேடம் கொண்டனர்.
“வைதருப்ப மண்டலந்தனில் வந்து புக்கு
எய்து அருப்பம் அத்தனையும் எய்தினார்
பெய் தருப்பை நூல் பிறழும் மேனியரர்
செய் தவத்துளார்வடிவில் தேடினார்”
(ஆறுசெல்படலம் 901)
அந்தணப் பிரமச்சாரி உரு ஏற்றுத் தவ முனிவர்கள் முஞ்சி எனப்படும் தருப்பைப்புல் புரி நூலையும், பூணூலும் தரித்திருப்பர். பரதன், இராமனிடம் நாடாள வர வேண்டும் என்று ண்டும்போது,கற்புடை மகளிர், தவ ஒழுக்கத்தினர்,அறம் செய்வோர் ஆகிய மூவரும் என்றும் நெறி பிறழாதவர். இதுபோன்ற அரசாள்பவர் உறுதியுடன் பொறுப்பேற்பதே முறை என்கிறான்.
“நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும்
பொறையின் நீங்கிய தவமும், பொங்கு அருள்”
(திருவடி சூட்டுப் படலம் 1156)
முனிவர்களின் சாபமொழி நெருப்பு போன்று சுடும் தன்மையும், விரைவில் சென்றடையும் தன்மையும் கொண்டன. தான் என்னும் அகப்பற்றைத் துறத்தல் தான் உண்மையான துறவாகும். அது எல்லோராலும் அவ்வளவு எளிதாகக் கூடியதன்று. அதையும் துறந்தவர்கள் தாம், தன்னையே துறந்தவர்கள் என்ற அளவிற்கு உயர்ந்தவர்கள். கங்கைக் கரையை அடைந்த இராமனைக் கண்ட முனிவர்கள், இந்த ஆனந்தத்தை சொல்லில் வடித்துக் காட்ட, கம்பன் இல்லறத்தார் அனுபவிக்கும் அக இன்பமும், முனிவர்கள் அறிவால் துய்க்கும் ஆனந்தமும் உள்ளதால் உணர்வதற்கு உரியதே அன்றி ஒருவர் பிறருக்கு (இவர் அவர்க்கோ, அவர் இவர்க்கோ) எண்ணத்தாலும், பார்வையாலும், சொற்களாலும் எடுத்து இயம்ப முடியாத இன்பமே என்கிறார்.
இராமனைக் காதல் நோக்கோடு கண்ட முனிவர்கள் அடைந்த இன்பம். அதனால் ஊனக் கண்களால் கண்டதும், உள்ளத்தில் இன்பம் ஏற்பட்டது. எளிமையாகச் சொல்லிப் புரிய வைக்க வேண்டுமெனில், இல்லறத்தார் காம சுகத்தை அனுபவித்து இன்பத்தை அடைவது போல, முனிவர்கள் இறைவனை இசை, தியானத்தின் மூலமாக துய்த்து இன்பம் அடைகின்றனர். இன்பம் அடைகின்ற திறப்பின் ஒப்புமையை தவிர, இன்பத்திற்கு ஒப்புமை கூற முடியாது. அதுதான் என்னை நோக்கி வரும் இன்பம் சிற்றின்பம் பேரின்பத்திற்கு ஒருநாளும் ஒப்புமை ஆகாது.
வேள்விகள் செய்தலும், அவ்வேள்வியை வீரர் காத்தலும், வைதிக காலத்தில் இன்றியமையாத நிகழ்ச்சிகள் ஆகும். வேள்வி காக்க வரும் வீரருக்கு, முனிவர் முதலியோர் படைக்கலம் வழங்கினர். போரிடும் வீரர்களுக்கு படைக்கலம் வழங்கும் மரபு, சங்க காலத்திலும் இருந்தது. போர்க்கள வீரரை ஊக்குவிப்பதற்காக ‘இப்படைக்கலக் கொடை மரபு’ இந்திய மண்ணில் இருந்து வருகிறது.
பண்டைக் காலத்தில் ஏட்டுக்கல்வியோடு வில்வித்தை போர்க்கலை, களரி பாய்தல், யானை ஏற்றம், குதிரை ஏற்றம் முதலான இன்ன பிற கலைகளையும் இளவரசர்களுக்கு பயிற்றுவித்தார்கள்.
அயோத்தி மக்களின் தவ நெறி கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், சரணாகதி ஆகிய நெறிகளை உடையோர் சாறும் இடமாக அயோத்தி திகழ்கிறது. எனவே அயோத்தி திருமால் இருக்கும் பரம பதத்திற்கு ஈடானது என கம்பர் வர்ணிக்கின்றார்.
“பொங்கு மாதவமும் ஞானமும் புணர்ந்தோர்
யாவர்க்கும் புகலிடமான”
(நகரப்படலம் 6)
என்றதால் அயோத்தியில் தவம் மிகுந்தோர் பலர் இருந்தனர் என்பது தெளிவாகிறது.
தசரதனும், இராமனுக்கு முடிசூட்டிவிட்டு ஐம்புலன்களை அவித்தல் என்பதை செய்யவே தவம் மேற்கொள்ள விரும்பினான். பண்டைய அரசர் நாடாளுதல், தவம் மேற்கொள்ளல் ஆகிய இரண்டிலும் சிறந்திருந்தனர் ’அஞ்சு தேர் வெல்லுதல்’ என்பது ஐம்புலன்களை வெல்லுதல் என்பதே ஆகும்.
சித்திரகூடத்தில் வந்திருந்த தவ முனிவர்களுக்கு உதவினர்
யானைகள், முனிவர்களுடைய குண்டிகைகளில் நீரைக் கொணர்ந்து நிரப்பின. கண்கள் இடுங்கிய முனிவர்களுக்குக் குரங்குகள் தங்கள் வால்களைப் பற்றுக்கோலாகக் கொடுத்து அவர்களை அழைத்துச் சென்றன. மயில்கள் தம் சிறகுகளை விசிறிகளாகக் கொண்டு ஓமகுண்டத்தில் அணைத் திருந்த அக்கினியை ஒளி உறச் செய்தன. குரங்குகள், முனிவர்களுக்குக் காய்கனி, கிழங்குகளைக் கொண்டு வந்து அளித்தன. யானைகளையும் விழுங்கக் கூடிய பெரும் மலைப் பாம்புகள் முனிவர் தம்மை மிதித்து ஏறும் படிகளாக உதவின.
சிலம்பி நூல்களைச் சில குரங்குகள் பூணூலுக்கு உதவின. கிளிகள் தானியங்களைத் தங்கள் சிவந்த அலகுகளில் கொத்தி முனிவர் இல்லங்களில் சேர்த்தன.
வசிட்டர்
கற்பிற் சிறந்த அருந்ததியின் கணவர். இராமனின் குலகுரு வசிஷ்டர் தசரதன் எனக்கு எல்லா செல்வங்களும் இருந்தும் குழந்தைச் செல்வம் இல்லாது மிகவும் வருந்தி, குலகுரு வசிஷ்டரிடம் வேண்டினான். கொடுமையான இராவணனை அழித்து தேவர்களைக் காப்பதற்காக திருமால் அருளியதை, வசீகரன் தன் மனதுக்குள் சிந்தித்து தசரதனிடம், புத்திர காமேஷ்டி யாகம் செய்யக் கூறினான். அவ்வாறு வசிஷ்ட முனிவர் உரைத்ததைக் கேட்ட தசரதன், பெரும் மகிழ்ச்சி பொங்க முனிவனின் திருவடிகளை வணங்கினான், உன்னை அடைக்கலமாக அடைந்த எனக்கு துன்பம் வராது. நீ சொன்ன யாகத்துக்கு நான் செய்ய வேண்டிய செயல்களை இனிதாக எடுத்து உரைப்பாயாக என்று கேட்டான். கலைக்கோட்டு முனிவரைக் கொண்டு மகவேள்வி புரியச்சொன்னார்.
தசரதக் குமாரர்களுக்கு இராமன், இலட்சுமணன், பரதன், சத்ருக்கணன் என்று பெயரும் இட்டார்.தசரதக் குமாரர்களுக்கு வில் வித்தை முதலான பல வித்தைகளையும் கற்றுத் தந்தார்.
“ஆயவன் ஒரு பகல் அயனையே நிகர்
தூயமா முனிவனைத் தொழுது தொல்குலத்” (திருஅவதாரப்படலம் 181)
இராமன் சீதையையும், இலட்சுமணன் ஊர்மிளையையும், பரதன் மாண்டவியையும், சத்ருக்கணன் சுருதகீர்த்தியையும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை வசிட்டரே சிறப்புடனும், மகிழ்வுடனும் நடத்தி வைத்தார்.
தசரதன், இராமனுக்கு மணிமுடி சூட்ட எண்ணியபோது, நாளையே நல்ல நாள் என்று நாள் குறித்தவரும் இவர்தான். கைகேயி வரம் பெற்று இராமனைக் காட்டிற்கு அனுப்பக் கேட்ட போதும், அருகே இருந்து புத்தி சொல்லியதும் இவர்தான். தசரதன் இவரிடம்தான் கைகேயி என் மனைவி அல்லள், பரதனும் மகன் அல்லன். இறுதிக்கடனுக்கு ஆகான் என்று கூறியதும் இவரிடம்தான். இறுதியில் இராமன் அயோத்தி வந்தவுடன், பட்டாபிசேகம் செய்து வைத்ததும் இவரே.
“விரை செறி கமலத்தாள் சேர் வெண்ணையூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி” (திருமுடிசூட்டுப்படலம் 4268)
விபாண்டக முனிவர்
காசிப முனிவர் பெற்ற மகன் விபாண்டக முனிவர். அவர் கங்கையைத் தலையில் சூடிய சிவனும் புகழ்வதற்கு உரியவர். அவர் அறிந்த சாஸ்த்திரம் முதலிய கலைகளை ஆராய்ந்ததால் அவருடைய தந்தை காசிப முனிவரை ஒத்தான்.
“மாசு அறு சுரர்களோடு மற்றுளோர் தமையும் ஈன்ற
காசிபன் அருளும் மைந்தன் விபாண்தகன் கங்கைசூடும்” (திருஅவதாரப் படலம் 211)
கலைக்கோட்டு முனிவர் (ரிஷ்யசிருங்கர்)
விபாண்டகருடைய மேலான கருணையினால் உதித்தவன் கலைக்கோட்டு முனிவர். வையகத்தில் வழங்கிவரும் பிற சாஸ்திரங்களிலும், நீதியை உரைக்கும் மனுதர்ம சாஸ்திரத்திலும் அளவற்ற மெய்ப்பொருளை விளக்கும் வேதங்களிலும், பிரம்மனுக்கு உவமையாகும் சான்றாண்மை பெற்றவன். மாறுபாட்டுக்கு உள்ளாகும் இந்த உலகத்தாரின் தன்மைகளை அறியாதவனாகிய அவன் ஒரு மானின் கொம்பினை முகத்திலே உடையவன்.
சிறந்த தவத்தை உடையவன். இவரைக் கொண்டு தசரதன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அசுவமேத யாகம் செய்தார். சாந்தை என்ற மன்னன் மகளை மணந்தார். யாக முடிவில் பூதம்
கொண்டுவந்த அமுதத்தை தசரதன் மனைவியர் உண்டதால் குழந்தைகள் பிறந்தனர்.
“திருகலை உடைய இந்தச் செகத்து உளோர் தன்மை தேரா
ஒரு கலை முகச் சிருங்க உயர்தவன் வருதல் வேண்டும்” (திருஅவதாரப் படலம் 212)
உரோமபாதன் கட்டளைப்படி கலைக்கோட்டு முனிவரைக் காணச் சென்ற மகளிர்க்கு, அம்முனிவர்அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்தார்.
அருக்கியம் என்பது முனிவோர்க்கும், பெரியோர்க்கும் பதினாறு உபசாரங்களில் முதன்மையானது. மந்திர நீர் இறைத்தல். கலைக்கோட்டு முனிவர் தம் குடிலுக்கு வந்த மங்கையர்க்கு முதலில் அருக்கியம் கொடுத்தார். அருக்கியம் எனில் கை கழுவ நீர் தருதல், வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்கும் முதல் கடன் அது. நீர் கை கழுவவும், கால் அலம்பவும், வாய்க் கொப்பளிக்கவும் தருதலாம். பின்னர் முனிவர் அவர்களுக்கு ஆசனம் தந்தார்.
பதினாறு வகை உபசாரங்களாவன:
1. தவிசு அளித்தல்
2. கை கழுவ நீர் தரல்
3. கால் கழுவ நீர் தரல்
4. முக்குடி நீர்தரல்
5. நீராட்டல்
6. ஆடை சார்த்தல்
7. முப்புரி நூல் தரல்
8. தேய்வை பூசல்
9. மலர் சார்தல்
10. மஞ்சள் அரிசி நூல்
11. நறும்புகை காட்டல்
12. விளக்கிடல்
13. கருப்பூரம் ஏற்றல்
14. அமுதம் ஏந்தல்
15. அடைகாய் தரல்
16. மந்திர மலரால் அர்ச்சித்தல்
பிருகு முனிவர்
பிருகு முனிவரின் மனைவி கியாதி என்பவள் வலிமை பொருந்திய அரக்கர்களிடம் உள்ளம் உருகும் காதல் கொண்டு உறவு கொண்டாள். தவறு செய்த போது, சக்கரக் கையனான திருமால் அவளைக் கொன்றார்.
“பிருகு என்னும் பெருந்தவன் தன் மனை
வரு சுயல்கண் கியாதி வல்ஆசுரர்க்கு
உருகு காதல் உற உறவாதலே
கருதி ஆவி சுவர்ந்தனன் நேமியோன்” (தாடகை வதைப் படலம்381)
விஸ்வாமித்திரர்
விஸ்வாமித்திரர், தசரதனிடம் தன்னுடைய வேள்வியைக் காக்க இராமனை அனுப்புமாறு வேண்டுகிறார். மக்கள் இளையவர்கள் என்று தசரதன் தயக்கம் காட்டினார். குலகுரு வசிஷ்டர், தசரதனிடம், இராமனுக்கு வித்தைகள் வந்து எய்தும் பருவம் இதுவன்றோ என மொழிந்து தக்க முடிவெடுக்கக் கூறினார். தசரதன் புதல்வரை விசுவாமித்திரருடன் அனுப்பி வைத்தான். வேள்வி காக்க இராமருக்கு முனிவர் விஸ்வாமித்திரர் படைக்கலங்கள் வழங்கினார்.
வேள்வி தடுத்த துயர்நீங்கிய விஸ்வாமித்திரர், இராமனுக்கு உபதேசம் செய்து, தெய்வப் படைக்கலன்களை மகிழ்ச்சியுடன் அளித்தார்.
“ஆறிய அறிவன் கூறி அளித்தலும், அண்ணல் தன்பால்
ஊறிய உவகையோடும், உம்பர்தம் படைகள் எல்லாம்
தேறிய மனத்தான் செய்த நல்வினைப் பயன்கள் எல்லாம்
மாறிய பிறப்பில் தேடி வருவது போல் வந்த அன்றே” (வேள்விப்படலம் 400)
விஸ்வாமித்திரர் தாடகையை வதம் செய்ய இராம லட்சுமணர்களை பாலைநிலம் வழியாக அழைத்துச் சென்றபோது, பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பலை, அபலை எனும் இரண்டு மந்திரங்களை இவற்றில் உடல் தொல்லை நோய் உண்டாகாது. உருவம் மாறாது. தோள் வலிமை உண்டாகும் அங்கு அவர்களுக்கு உபதேசித்தான். (விஸ்வாமித்திரர் திரிசங்குவை உடலோடு விண்ணுலகு அனுப்ப முனைந்தவர். அவனுக்காக வேறு உலகை அமைத்தார்). இராமனுக்கு உபதேசம் செய்து தெய்வப் படைக்கலன்களை மகிழ்ச்சியுடன் தந்தார் நடக்க இருக்கும் அசுரர் போரில் அவர்களுக்கு உறுதுணை புரிய, இனிய தெய்வப் படைக்கலங்கள் எனப்படும் அஸ்திர, சஸ்திர வித்தைகளைக் கற்றுக் கொடுத்தார்.
சூளி முனிவன்
நிறைந்த தவத்தை உடையவர் சூளி என்னும் முனிவர். அவருடைய மகன் அறியாமை என்னும் இருள் நீங்கிய பிரம்மதத்தன். குசன் மகளாகிய நூறு பெண்களும் வாயுதேவன் சாபத்தினால், முதுகுகள் கூனும்படி செய்ததை பிரம்மதத்தன் திருமணம் செய்துகொண்டு சரி செய்தான்.
“நிமிர் குழல் மடவார்த் தேற்றி நிறைதவன் சூளி நல்கும்
திமிர் அறு பிரமதத்தற்கு அளித்தனன்திரு அனாரை” (வேள்விப்படலம் 408)
காசிபமுனிவர்
திருமால் வாமன அவதாரம் எடுத்தபோது, அவருடைய மகனாகவே அவதரித்தார். காசிப முனிவர் நீல நிறத்தை பெற்ற நெடுமாலான பெருமாள். முக்காலத்தையும் நுட்பமாக உணரவல்ல காசிபன் (காசிபவன்) என்னும் ஞானியாகிய முனிவனுக்கும், அவன் மனைவியான அதிதிக்கும் ஒரு குழந்தையாய் பெரிய ஆலமரம் முழுவதும் அடங்கியுள்ள, சிறிய ஆலம் விதையைப் போல, மிகக் குறுகிய வடிவத்தோடு அவதரித்தான்.
“காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வால் அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய்
நீலநிறத்து நெடுந்தகை வந்து ஓர்
ஆல் அமர் வித்தின் அருங்குறள் ஆனான்” (வேள்விப்படலம் 419)
சுக்கிராச்சாரியார்
அசுர குல குரு ஆவார். மாவலி மன்னனின் குரு. திருமால் வாமன அவதாரம் எடுத்து மூன்றடி மண் கேட்ட போது தடுத்தார். திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியைப் பார்த்து, மூன்றடி மண் தானமாகக் கேட்கும்போது, ’மாவலியும் தந்தேன்’ என்று சொன்னான். அருகே இருந்த அவருடைய குருவான சுக்ராச்சாரியார் அதைத் தடுத்தார்.
’ஐயனே நம் கண்ணால் பார்க்கும் இந்த உருவம் வஞ்சக வடிவமாகும். இது கருமேகம் போன்ற நிறம் உள்ள குறு வடிவம் என்று நம்பாதே, இந்த அண்டத்தையும் மற்றுமுள்ள அண்டங்களையும், முன்னொரு காலத்தில் உண்டவன் ஆகிய பெருமாளே இவன், இவ்உண்மையை உணர்ந்து கொள்’ என்று சுக்ராச்சாரியார் சொன்னார்.
“கண்ட திறத்து இது கைதவம் ஐய
கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்
அண்டமும் மற்றை அகண்டமும் மேல் நாள்
உண்டவன் ஆம்இது உணர்ந்துகொள் என்றான்” (வேள்விப்படலம் 424)
கௌதம முனிவர்
அகலிகையின் கணவர் கௌதம முனிவர். தாடகை வதம் முடிந்த பிறகு, விஸ்வாமித்திரர் இராம இலட்சுமணர்களை அழைத்துக்கொண்டு, மிதிலை நகருக்கு வரும் வழியில், அகலிகை கல்லாகக் கிடக்கும் இடத்தை பார்க்கின்றனர். அப்போது இராமனின் திருவடித் துகள் அந்த கல்லின் மீது படும்போது, அகலிகை பழைய உருவம் பெறுகிறாள். இராமன் அகலிகை கதையைக் கேட்க, விஸ்வாமித்திரர் கூறுகிறார். தேவர்களின் தலைவன் இந்திரன். கௌதமர் இல்லாதபோது, அகலிகையை விரும்புகிறான். இந்திரன் கௌதம முனிவரை தந்திரம் செய்து ஆசிரமத்திலிருந்து வெளியேற்றுகிறான். கௌதமர் வெளியேறிய பிறகு, அவர் உருவத்தில் இந்திரன் வந்தான். இந்திரனோடு சேர்ந்து அகலிகை இன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, வந்திருப்பவன் இந்திரன் என்பதை அறிந்து கொள்கிறாள். உணர்ச்சியின் உந்துதலால் அகலிகையும் இன்பம் அனுபவிக்கிறாள். அந்த நேரம் கௌதமர் ஆசிரமம் திரும்புகிறார்.
இந்திரன் பூனை வடிவத்தில் வெளியே செல்ல முயற்சிக்கிறான். பெரும் பாவத்தை செய்துவிட்டதாக அகலிகையும் நடுக்கம் அடைகிறாள். ஆயிரம் பெண் குறிகள் உனக்கும் உண்டாகட்டும் என்று இந்திரனுக்கு சாபம் விட்டார். விலங்குகளைப் போன்று நடந்து கொண்டதால் கல் வடிவம் ஆகுமாறு அகலிகைக்கும் சாபமிட்டார். தன் தவறை உணர்ந்த அகலிகை, கௌதமரை சாப விமோசனம் வேண்ட, தசரத குமாரன் திருவடிகள் உன் மீது படும்போது சாபம் நீங்குவாய் என்று கூறி இமயமலைக்கு சென்று விட்டதை இராமனிடம் விஸ்வாமித்திரர் கூறினார். கௌதமர் தவ வலிமையால், அகலிகை சாபவிமோசனம் பெற்றதை அறிந்து வந்தார். இராமனும் முனிவரிடம் அவளை ஏற்றுக் கொள்ளக் கூறினார்.
“தழைத்து வண்டு இமிரும் தண்தார்த் தசரதராமன் என்பான்
கழல்துகள் கதுவ இந்தக்கல் உருத் தவிர்தி என்றான்” (அகலிகைப்படலம் 480)
கோசலை பயந்த இராமனுக்கு வசிட்டர் பெயர் சூட்டும் முன்னர், இவரே ‘தசரதராமன்’ என்னும் பெயர் சூட்டிவிட்டார்.
சதானந்த முனிவர்
கௌதம முனிவரின் மகன் சதானந்த முனிவர். சனக மன்னன் அவையில் இருந்த சதானந்த முனிவரே வில்லின் வரலாற்றைக் கூறினார். சிவபெருமான் உமாதேவியை அவளுடைய தந்தையான தக்கன் இகழ்ந்தான் என்பதால், பொங்கிய சினத்தோடு இந்த வில்லை எடுத்துக்கொண்டு உறுதி மிகுந்த தக்கன்வேள்வி செய்யும் இடத்திற்குச் சென்றார். தேவர்கள் உட்பட அனைவரும் பயந்து நடுங்கினர். வேள்வி குண்டத்திலிருந்து அக்கினியும் அழிந்தன. சிவன் சினம் தணிந்து ஜனகன் அது குலத்தில் தோன்றிய வாள் கொண்டு உழும் வல்லமை பெற்ற தேவராதன் என்னும் அரசனிடம் கொடுத்து விட்டான். அந்த வில்லை வளைத்து நாணேற்றுபவருக்கு சீதை உரியவள் என்பதைக் கூறினார்.
“போதகம் அனையவன் பொலிவை நோக்கி அவ்
வேதனை தருகிறை வில்லை நோக்கித் தன்
மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய
கோதமன் காதலன் கூறல் மேயினான்” (கார்முகப் படலம் 625)
இரிசிக முனிவர்
மன்னன் காதி மகன் கௌசிக முனிவர். மகள் கௌசிகி பிருகு முனிவர் மகனான இரிசிகனுக்கு கௌசிகியை மணமுடித்துக் கொடுத்தான். அரிய மறைகளை அறிந்தவனாகிய ரிஷிகள் சிலகாலம் அறம், பொருள், இன்பம் என முப் பொருளையும் அனுபவித்து இல்லறம் மேற்கொண்டிருந்த பின்பு, சிறந்த தவத்தைச் செய்து தாமரையில் வாழும் பிரம்மனிடம் சேர்ந்தான். தன் கணவனாகிய இரிசிகன் வானில் செல்ல, அவன் பிரிவைப் பொறுக்க முடியாதவளான கௌசிகி, ஒரு நதியின் வடிவில் அவனைத் தொடர்ந்து வானத்தில் சென்றாள். அதைக் கண்ட முனிவர்க்குத் தலைவனான இரிசிகன், பெரிய உலகத்து மக்களின் துன்பங்களை நீக்கும் பொருட்டு, இந்த நதியின் வடிவிலே பூமிக்குச் செல்க என்று அவளிடம் கூறிவிட்டுப் பிரமலோகம் சேர்ந்தான்.
“காதலன் சேணின் நீங்க கவுசிகை தரிக்கலாற்றாள்
மீத உறப் படரலுற்றாள் விழு நதி வடிவம் ஆகி
மாதவர்க்கு அரசு நோக்கி மாநிலத்து உறுக்கண் நீங்கப்” (வேள்விப்படலம் 412)
முற்காலத்தில் இரண்டு வில்கள் இருந்தன. மேரு மலையைப் போல அழியாத வலிமையை உடையன. சிற்ப அமைப்பு தொழிலைச் செய்யும் விஸ்வகர்மாவால் செய்யப்பட்டன. அதில் ஒன்றினை சிவனும், மற்றொன்றினை திருமாலும் ஏற்றுக்கொண்டனர். இதை அறிந்த தேவர்கள் இந்த இரண்டு வில்களிலும் வலிமைமிக்கதாய் வெற்றி பெற்றது எந்த வில் என்று பிரம்மனை கேட்டார்கள் தேவர்கள். இருவராக விளங்கும் சிவனையும், திருமாலையும் வலிய கொடியவில்லைக் காரணமாகி ஒரு வலிய போர் செய்யுமாறு தூண்டி விட்டனர். இருவரும் இரண்டு வில்களையும் நாணேற்றி போரிட்டனர். ஏழு உலகத்தவரும் அஞ்ச, திசைகள் நிலைப்பெற, தன் கடும் கோபத்துடன் இருவரும் போரிட்டபோது, சிவனின் கட்டமைந்த வில் சிறிது முறிந்தது. அதனால் சிவன் கோபம் கொண்டு மீண்டும் போரைத் தொடங்கும் போது, தேவர்கள் தலையிட்டுப் போரை விளக்கினர். சிவன் அந்த வில்லை இந்திரனிடம் தந்தான். திருமால் நடந்த போரில் வெற்றி பெற்ற தனது வில்லை, இவ்வுலகில்
சிறந்த தவங்கள் செய்த இரிசிகன் என்னும் முனிவனுக்கு கொடுத்துவிட்டு சென்றார்.
“காட்டிய கரிய மாலும் கார்மேகம் தன்னைப் பாரில்
ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான்” (பரசுராமப் படலம் 1238)
ஜமதக்னி முனிவர்
இவர் பரசுராமனின் தந்தையாவார். இரிசிகன் அந்த வில்லை ஜமதக்னி முனிவருக்கு தந்தான். அவர் அந்த வில்லை பரசுராமருக்குக் கொடுத்தார். . இராமன் வில்லை வளைத்து சீதையைத் திருமணம் செய்து அயோத்தி வரும்வழியில் அவனைத் தடுத்தார். தன் தந்தையைக் கொன்ற அரசர்களின் இருபத்தி ஒரு தலைமுறை இவ்வுலகிலுள்ள முடிசூடிய மன்னர்களை எல்லாம் மிக்கு எழும் கோடாரியின் கூரிய நுனியால் வேரற்று அழியும்படி களைந்தார். இறந்த தந்தைக்கு நீர்க்கடன் செய்தார்.இராமனிடம் நான் வென்ற உலகம் முழுவதையும் காசிப முனிவருக்குத் தானமாகக் கொடுத்தேன். வெளிப்படையான பகைவர்களை அடக்கி வென்ற நான், உட்பகைகளை வெல்வதற்காக மகேந்திர மலையில் தங்கி அளவில்லாத பெரிய தவம் செய்து வந்தேன். . இராமன் சிவதனுசை முறித்த ஓசைக் கேட்டு சினத்துடன் அங்கு வந்தேன். உனக்கு வலிமை இருக்குமானால் உன்னுடன் நான் போரிடுவேன். முதலில் இந்த திருமாலின் வில்லை வாங்கி வளைத்திடு என்றான். இராமனும் வில்லை வளைத்துக் கொண்டு, “நீ இந்த நிலவுலகத்தில் அரச குலத்தவர் அனைவரையும் அழித்து விட்டாய் என்றாலும், வேதங்களை ஓதி உணர்ந்த ஜமதக்னி முனிவரின் புதல்வன் நீ. மேலும் நீ தவவொழுக்கங்களை மேற்கொண்டுள்ளாய். எனவே உன்னைக் கொல்லக் கூடாது என்றாலும், வில்லில் பூட்டிய இந்த அம்பு இலக்கு இன்றி வீணாகக் கூடாது, அந்த அம்புக்கு இலக்கு எது விரைவாக உரை செய்க” என்று இராமன் கேட்ட உடனே, பரசுராமர் “உன்னால் எய்யப்படும் அம்பு, இடையே வீணாகப் போகாமல் நான் செய்துள்ள தவங்களின் பயன் முழுவதையும் கவர்ந்து செல்வதாக” என்று கூறினார் வில்லில் இருந்து புறப்பட்டுச் சென்ற அம்பு, பரசுராமனின் குற்றமற்ற தவப்பயன் முழுவதையும் கவர்ந்து கொண்டு இராமனிடமே வந்தது. (தன் தந்தை ஜமதக்னி முனிவரின் சொல்லை மறுக்கவில்லை தன்னை பெற்ற தாயான ரேணுகா தேவியை தலையும் உடலும் வேறு ஆகுமாறு வெட்டினார் பரசுராமர்).
“இரிசிகன் எந்தைக்கு ஈய எந்தையும் எனக்குத் தந்த
வரி சிலை இது நீ நொய்தின் வாங்குதி ஆயின் மைந்த” (பரசுராமப் படலம் 1239)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.