புறநானூற்றில் அகம்
கு. விஜயலட்சுமி
பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத் துறை,
சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி (தன்னாட்சி), மேல்விஷாரம் - 632 509.
முன்னுரை
சங்க இலக்கியங்கள் என்று அழைக்கப்படுபவை எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் ஆகும். அவை அகம், புறம் என்று இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் அறியும் வகையில் நிகழும் மன்னனின் அரசாட்சி, போர், வீரம், வெற்றி, கொடை, கல்வி, நட்பு, விருந்தோம்பல் போன்றவை புறம் என்று வரையறுக்கப்படுகின்றது. மக்கள் அனைவரும் அறியா வகையில் இல்லத்தினுள் நடைபெறும் தலைவன் தலைவயின் அன்பு, ஊடல், கூடல் போன்றவை அகம் என்று கூறப்படுகின்றது. “சமூக வாழ்வில் மக்கள் அனைவரும் கண்டறிந்து மகிழ்வதை புறம் எனவும், தலைவன் -தலைவி, கணவன,-மனைவி இருவரிடை முகிழ்க்கும் உறவையும், அவர்கள் மேற்கொள்ளும் இல்வாழ்கையையும் பிறருக்கு அறிவிக்கவொண்ணாப் பேரின்பமும், அகம் என்று அழைக்கப்படுகின்றது” (1) என்று அ.மா.பரிமணம் அவர்களின் கருத்து அகம், புறத்திற்கு சான்று பகர்கின்றது.
எட்டுத்தொகையுள் ஒன்றான புறநானூறு மன்னர்களின் வீரம், கொடை, கல்வி, சிறந்த அறநெறிகள்ஆகிய உயரிய நோக்கங்களை முதன்மையாகக் கொண்டு பாடப்பட்டது. அவற்றுள் சிற்சிலப் பாடல்கள் அகக்கூறுகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. அகத்திணை ஒழுக்கம், களவும், கற்பும் என இரு வகை கைகோளாகும் என்று நம்பியகப்பொருள் சுட்டுகிறது. (2) புறநானூற்றில் இடம் பெற்றுள்ளஅகப்பாடல்களின் சிறப்புகளைக் குறித்துக் காண்போம்.
திணைநோக்கில் அகம்
திணை என்ற சொல்லிற்கு ஒழுக்கம் என்று பொருள். உரையாசியராகிய நச்சினார்க்கினியர் திணை என்ற சொல்லினை ஒழுக்கம் அல்லது நடத்தை என்று வகைப்படுத்திக் கூறுகின்றார். (3) அத்திணைகளை ஐந்திணைகளாகவும், எழுதிணைகளாகவும் பகுக்கின்றது.
தொல்காப்பியம்ஐந்திணைகளை,
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்” (4)
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஐந்தும் அன்பின் ஐந்திணைகள் என்றழைக்கப்படுகின்றது. காதல் இன்பம் நிலை பெறப் பொருள் தேடவேண்டும். அப்பொருளும் அறவழியில் தேட வேண்டும் என்றுகுறிப்பிட்டுள்ளார். அக ஒழுக்கத்திற்கு ஐந்திணையே அடிப்படை என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
எழுதிணைகளை,
“கைக்கிளைமுதலாபெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்தஎழுதிணைஎன்ப” (5)
என்று தொல்காப்பியர் சுட்டுகின்றார். கைக்கிளை, பெருந்திணைகளைச் சேர்த்து எழுதிணைகளாகக் குறிப்பிட்டுள்ளார். நம்பியகப் பொருளும் திணை ஏழு வகைப்படும் என்று குறிப்பிடுகின்றது. (6) புறநானூற்றில் இடம்பெற்ற பொய்கையாரின் 49 வதுபாடல் நானில அமைப்பு நிலையைத் தெளிவாகச் சுட்டுகின்றது.
“நாடன் என்கோ? ஊரன் என்கோ
பாடுஇமிழ் பனிக் கடற் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம்மொழிகோ,ஓங்குவாட் கோதையை?” (7)
குறிஞ்சி நிலத்தில் வாழ்பவர்கள் தங்கள் நிலத்தில் தினைக்கதிரை உண்ண வரும் கிளிகளை விரட்ட, தட்டை என்னும் கருவியைக் கொண்டு ஒலி எழுப்புவர். இதனால் நெல்கதிர்களைக் கொண்ட வயல்களிலிருந்தும் கடலுடன் பொருந்திய நிலப்பரப்பிலிருந்தும் தட்டை ஒலியைக் கேட்டுப் பறவைகள் ஒலி எழுப்பும். இத்தகைய பரந்துபட்ட எல்லைகளையுடைய நாட்டில் ஆட்சி செய்பவன் ‘சேரன்’என்பதைக் குறிக்க நாடன், சேர்ப்பன், ஊரன் என்று குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலத் தலைமக்களின் பெயர்களைச் சேரனோடு பொருத்திக் காட்டியுள்ளார். இப்பாடலில் சங்ககால மக்களின் இயற்கைச் சூழலைப் புரிந்து கொள்ள முடிகின்றது.
“தட்டைபறையின் கறங்குநாடன்” (8)
“தழலைவாங்கியும் தட்டைஓம்பியும்” (9)
என்ற வரிகளும் குறிஞ்சித் திணைச் சிறப்பை உணர்த்துகின்றது.
பெண்புலவர் பாடல்களில் அகம்
பெண் புலவர்கள் மன்னர்களின் புகழ், வீரம், ஈகை போன்ற சிறந்த பண்பு நலன்களைக் குறித்துப் பாடியுள்ளனர். இவர்களுள் ஔவையார், நக்கண்ணையார், மாரிபித்தியாரின் பாடல்கள் களவு, கற்பு வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குகின்றது. ஓர் அரசனின் அல்லது குறுநில மன்னனின் அகவாழ்வைச் சித்தரிப்பதாக அமைந்துள்ளது. இப்புறநானூற்றுப் பாடல்களில் அகச் செய்திகள் அக்காலத்தில் நிலவிய அகக்கூறுகளைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது.
ஔவையார் கடையேழு வள்ளலான அதியமானின் மகன் பொருட்டொழியின் வீரச்சிறப்பையும், இன்பச் சிறப்பையும் ஒரே பாடலில் அமைத்துள்ளார்.
“இரண்டு எழுந்தனவால் பகையே; ஒன்றே
பூப்போல் உன்கண் பசந்துதோள் நுணுகி,
நோக்கியமகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே
… … … … … … … … … … … … … …
உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே” (10)
எழினியின் தோற்றத்தைக் கண்டு மகளிர் அவன் மீது காதல் கொண்டனர். இதனால் பெண்களின் கண்களில் பசலைப் பாய்ந்தும், தோள் மெலிந்தும், காணப்பட்டனர். காமநோயால் வருந்தும் பெண்களோடு அவனுக்குப் பகைமை ஏற்பட்டது. இது அவன் அக வாழ்வில் ஏற்பட்ட துன்பம் என்றும் உணர்த்துகின்றது. இப்பாடலில் அவனது மறச்சிறப்பை அவன் படையெடுத்துச் செல்லும் ஊர்களில் மக்கள் அவனுடைய யானைப் படையின் வீரத்தைக் கண்டு அவ்வூரிலிருந்து நீங்கினர். அவற்றாலும் எழினிக்குப் பகைமை ஏற்பட்டது என்று அழகுற விளக்கியுள்ளார்.
“இனத்தோடுஅகலஊருடன் எழுந்துநிலங்கள் வாட
வாழ்தல் ஈயா வளன்அறுபைதிரம்” (11)
என்று விளக்குகின்றார். இப்பாடலில் அவனது மறச்சிறப்பிற்குச் சான்றாக அமைந்துள்ளது.
“... ... வெம்போர்
நுகம்பட கடக்கும் பல்வேல் எழினி
முனைஆண் பெருநிரைபோல” (12)
என்ற வரிகளும் அவன் வீரச்சிறப்பை உணர்த்துகின்றது.
நக்கண்ணையார், சோழன் கோப்பெருங்கிள்ளி மீது ஒருதலையாகக் காதல் கொண்டார். அதனை கைக்கிளைத் திணையில் பழிச்சுதல் துறையில் பாடியுள்ளார். கைக்கிளைக்குரிய இலக்கணத்தை தொல்காப்பியம்,
“காமம் சாலா இளமையோள் வயின்
ஏமம் சாலா இடும்பைஎய்தி
நன்மையும் தீமையும் என்று இருதிறத்தான்
தன்னொடும் அவளொடும்தருக்கியபுணர்த்துச்
சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே” (13)
அவற்றுள் கைக்கிளை என்பது ஆணோ, பெண்ணோ ஒருவர் மாத்திரம் காதல் கொள்வதைச் சொல்வது கைக்கிளை. அதை ஒருதலைக் காமம் என்றும், ஒரு மருந்து பற்றி கேண்மை என்றும் சொல்வார்கள். (14)
கைக்கிளை என்பது ஒருவரிடம் தாம் கொண்ட காதலை அவரால் விரும்பப்படாத நிலையிலும் கூறி மகிழ்வதாகும் என்று புறநானூறு குறிப்பிடுகின்றது. (15)
நக்கண்ணையார் ஒருதலைக் காதலால் தனக்கு ஏற்பட்ட உடல் மாற்றத்தையும் மனத்தடுமாற்றத்தையும் அழகியவரிகளால் நயம்பட விளக்கியுள்ளார்.
“அடிபுனைதொடுகழல் மையணல் காளைக்குஎன்
தொடிகழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே
அடுதோள் முயங்கல் அவைநானுவலே” (16)
சோழனை நினைத்து வருந்துவதால் நக்கண்ணையாரின் கை வளையல்கள் சுழல்கின்றன. அந்தக் காரணத்தைத் தாய் அறிந்து விடுவாளோ என்று எண்ணி அச்சம் கொள்கின்றார். தன் காதலைக் கூறி சோழனே கூட முடியாமையால் அவையில் உள்ளோரைக் கண்டு நாணம் கொள்வார். இப்படி இரு வேறு நிலைகளில் ஒரு பெண்ணின் ஒருதலைக் காதலைப் புலப்படுத்தியுள்ளார்.
பெண்மைக்குரிய பண்புகளாக,
“அச்சமும் நாணமும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்குரிய என்ப” (17)
என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
நக்கண்ணையார், தமது பாடலில் சோழன் பெருநற்கிள்ளியின் வீரத்தைப் பாராட்டி, தனது ஆற்றாமையாகிய காதலை அழகிய உவமைகளால் வெளிப்படுத்தியிருக்கிறார்.
“என்னைபுற்கையுண்டும் பெருந்தோளன்னே!
யாமேபுறஞ்சிறை இருந்தும் பொன்னன்மே!” (18)
தலைவன் வறுமை நிலையில் கூழ் உணவு உண்டாலும் வீரமிக்க தோளையுடையவன். தான் அவனைக் கூடாமையால் பசலையாகிய பொன் நிறத்தை அடைந்து அந்தக் காம நோயை வெல்லாமல் துன்புற்ற நிலையைக் கூறியுள்ளார். அக இலக்கியங்களில் புலவர்கள், காதலர்கள் படும் மனமாறுபாட்டை வேதனையாகவும், மகிழ்ச்சியாகவும் தங்களது குறிப்பினை ஏற்றிப் பாடுவதும் உண்டு. என்பதற்கு நக்கண்ணையாரின் பாடல்கள் சான்றாக அமைந்துள்ளது.
புறநானூற்றில் மன்னருக்கும் புலவர்க்குமான காதலைக் கொண்டவர் இவர் ஒருவரே என்பதை உணர முடிகிறது.
வள்ளலின் வாழ்வில் அகம்
புறநானூற்றில் புலவர்கள் கவியாளுமை பெற்றிருந்ததோடு அரசர்களின் தனிப்பட்ட இல்லற வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்களையும் தீர்த்து அவர்களை நன்னெறிப்படுத்தும் செயலையும் மேற்கொண்டிருந்தனர் என்பதற்கு பேகனைக் குறித்த பாடல்கள் சான்றாகும்.
கடையேழு வள்ளல்களுள் ஒருவரான பேகனுக்கும் கண்ணகிக்கும் நடந்த ஊடலைக் குறித்து கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் ஆகியோர் பாடியுள்ளனர். பேகன் மனைவி கண்ணகியைப் பிரிந்து பரத்தையிடம் புறத்தொழுக்கம் மேற்கொண்டான். அதனைக் கண்ட கபிலர், அவனை நல்வழிப்படுத்த எண்ணினார். அவர் பெருந்திணையில் குறுங்கலித்துறையில் பாடியுள்ளார். பெருந்திணைக்குரிய இலக்கணத்தை தொல்காப்பியம்,
“ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகையஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே” (19)
என்று குறிப்பிடுகின்றது.
பெருந்திணை என்பது பொருந்தாக் காமத்தைக் கூறகின்றது. (20)
“பெருந்திணை அளவிறந்த வேட்கை” என்று சொல்வார்கள். (21)
இப்பாடல் அடிகள்;
“நாறிருங் கூந்தல் மகளிரைநயப்ப
வேறுபாடுவேட்கைவீயக் கூறின்று” (22)
ஒருவனால் துறக்கப்பட்ட அவன் மனைவியை அவனோடு கூட்டுவிக்கும் பொருட்டுநீ இவன்பால் அருள் செய்ய வேண்டும்’ என வேண்டும் எனவும் கூறுவர்.
கபிலர் பேகனிடம் பரிசில் பெறச் சென்ற போது, அவனது கொடைப்பண்பையும், வீரச்சிறப்பையும் பாராட்டி, மனைவி கண்ணகிக்கு அருளாத தன்மையினையும் சுட்டிக்காட்டியுள்ளார். பேகனின் நாட்டு வளத்தை குறவர்கள் மழை பெய்யாவிடத்து தெய்வத்தை வேண்டியும், மழைமிகு மிகுதியாகுமிடத்து நிறுத்தல் வேண்டியும் இறைவனை வணங்குவர். அத்தகைய வளமான நாட்டிற்குத் தலைவன் பேகன் என்றும் குறிப்பிட்டுள்ளார். புலவர் பேகனிடம் எம் சுற்றத்தார்கள் பசி துன்பத்தால் மிகவும் வருந்த நின்னுடைய மலையைப் பாடி, பரிசில் பெறுவதற்கு வந்தோம். அப்போது அவள் தன் கண்ணீரை நிறுத்த மாட்டாதவளாய் குழல் இணைவது போன்றுஅழுதாள். அவள் நின்னால் அருளத்தக்கவள். அவளுக்குநீஅருள் செய்ய வேண்டும் என்பதைப் புலப்படுத்தியுள்ளார்.
“இகுத்தகண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையகம், நனைப்பவிம்பிக்
குழல் இணைவதுபோல் அழுதனள்! பெரிதே” (23)
“குழலினும் இனைகுவள் பெரிதே!” (24)
என்ற அடிகளும் அவளின் பிரிவுத் துன்பத்தை உணர்த்துகின்றது.
பேகனைக் குறித்து பரணர் 144,145 ஆகிய பாடல்களில் கண்ணகியின் துயரத்தைத் தீர்ப்பதே தாம் வேண்டும் பரிசில் என பொதுநோக்கோடு செயல்பட்டதைக் காணும் போது புலவர்க்கும் மன்னனுக்கும் இருந்த உயரிய நட்பினைஅறிந்து கொள்ள முடிகின்றது.
“அருளாய்ஆகலோகொடிதே: இருள்வர
சீறியாழ் செவ்வழிபண்ணி” (25)
கணவனைப் பிரிந்து வாழும் பெண்ணின் மனநிலையைக் கண்முன் நிறுத்துகின்றார். புலவர், கண்ணகியின் தோற்றம் மிகவும் இரங்கத்தக்கதாய் இருந்தது. அதனைப் பேகனிடம் வெளிப்படுத்த முயன்ற புலவர், “ பேகனே! மாலைக் காலம் வர சிறிய யாழில் செவ்வழிபண்ணை இசைத்து நின்னுடைய காட்டினைப் பாடினோம். அதைக் கேட்டு நீலநறு நெய்தல் போன்றமையுண்ட கண்கள் கலங்கக் கண்ணீர் சொரிய மார்பை நனைப்ப அழுதனள்” என்று கண்ணகியின் துயரத்தை எடுத்தியம்பி நீ முதலில் கண்ணகிக்கு அருள் செய்ய வேண்டும் என்பதை ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.
“கண்முழையருவிப் பன்மலைமுந்திச்
சீறியாழ் செவ்வழிபண்ணிவந்ததை” (26)
என்ற அடிகள் கண்ணகியைப் பிரிந்து சென்ற பேகனிடம் கண்ணகியின் நிலையைத் தெரிவிப்பதாக பெருங்குன்றூர் கிழாரின் பாடல்அமைந்துள்ளது.
“கார் செய் காலை… … … …
மையுள் நல்யாழ் செவ்வழிபிறப்ப
இந்நிலைவராராயின் தந்நிலை
கவன் சொல் பாணஉரைத்திசின்சிறிதென
கடவுட் கற்பின் மடவாள் கூற” (27)
இவ்வரிகளும் கார்காலத்தில் பிரிந்து சென்ற தலைவன் மீண்டு வருவதை எதிர்பார்த்தவாறு தனித்திருந்து வருந்தும் தலைவியைப் பற்றி கூறுகின்றது. அறம் என்னும் தலையாய பண்பான அருள் செய்வதன் அவசியத்தை அரசர்க்கு வலியுறுத்தியும் முறையற்ற ஒழுக்கததைக் கடிந்து அரசர்களை நன்னெறிப்படுத்தியும் புலவர்கள் வாழ்ந்திருந்தனர் என்பதற்குப் புறநானூற்றுப் பாடல்கள் உதாரணமாக அமைந்துள்ளது.
போர் பாடல்களில் அகம்
புறநானூற்றில் இடம் பெற்றுள்ள போர் குறித்த பாடல்களில், அகம் சார்ந்த உவமைப் பண்புகள் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. புறம் 301-ல் தும்பைத்திணையில் தானைமறம் துறையில் அமைந்த பாடலில் வீரன் ஒருவன் தனது படை வலிமையைப் பகைவருக்கு அறிவிக்கப் பெண்ணின் கூந்தலை உவமையாகக் கையாண்டுள்ளான்.
“குமரி மகளிர் கூந்தல் புரைய
அமரின் இட்டஅருமுள் வேலி” (28)
பெண்ணின் கூந்தலைப் போல தீண்டப்படாத, முள்வேலி சூழ்ந்த படைவீடு.
“மீன் உண் கொக்கின் தூவிஅன்ன
வால் நரைக் கூந்தல் முதியோன் சிறுவன்” (29)
முதுமை எய்திய பெண்ணின் கூந்தலுக்கு மீனை உண்ணுகின்ற கொக்கின் வெள்ளிய இறகானது, நரைத்த கூந்தலுக்கு உவமையாக்கப்பட்டுள்ளது.
“நீலத்து இணைமலர் புரையும் உண்கண்” (30)
வேள்பாரியின் தோள் ஆற்றலை மூவேந்தர்க்கும் உணர்த்தும் விதமாக, விறலியின் கண்ணிற்கு நீலமலரினை ஒப்பிட்டுக் கூறி விறலிக்கே அவன் மலை எளிது என்று கபிலர் குறிப்பிட்டுள்ளார்.
“எதிரிதழ் நீலம் பிணைந்தன்னகண்ணாய்” (31)
இது போன்ற தொடர்கள் புறத்திற்கு மெருகூட்டுவனவாக அமைந்ததைக் காணமுடிகிறது.
முடிவுரை
புறநானூற்றில் இடம் பெற்றுள்ள அகப்பாடல்கள் அகத்திணைப் பண்பினைக் கொண்டதாக உள்ளன. வீரனுக்குள்ளும் அக உணர்வுகள் பொருந்தியிருந்தது என்பதை புறநானூறு வெளிப்படுத்திநிற்கின்றது. கணவன் மனைவி அன்பின் இடைவெளி அதிகமாகும் போது, அவர்களின் இல்லறத்தின் உயர் பண்பின் அளவும் குறைந்து விடுகிறது என்பதைப் புறநானூற்றில் பேகன் - கண்ணகி உறவு வெளிப்படுத்துகின்றது. போர்ப்பாடலில் பெண்களின் கூந்தலை உவமையாகப் பாடும் மரபு இருந்ததை அறிய முடிகிறது. சமுதாய வாழ்வில் புறமும், அகமும் இரு கண்கள் போன்றது என்பதற்குப் புறநானூற்று அகப்பாடல்கள் சான்று பகர்கின்றது.
அடிக்குறிப்புகள்
1. புறநானூறு மூலமும் உரையும் தொகுதி-I, அ. மா.பரிமணம் (உ.ஆ), பக்.11
2. நம்பியகப்பொருள் விளக்கம் மூலமும் விரிவுரையும், வ. த. இராமசுப்பிரமணியம் (உ.ஆ), பக்.372
3. பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி, கா.சிவத்தம்பி, பக்.27-28
4. தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் விளக்கவுரையும், வ.த. இராமசுப்பிரமணியம் (உ.ஆ), பக்.18
5. மேலது, பக்.22
6. நம்பியகப்பொருள் விளக்கம் மூலமும் விரிவுரையும், வ.த. இராமசுப்பிரமணியம் (உ.ஆ), பக்.12
7. புறநானூறு மூலமும் உரையும் தொகுதி- I, அ.மா. பரிமணம் (உ.ஆ), பக்.133
8. குறுந்தொகை மூலமும் உரையும் தொகுதி-I, வி. நாகராசன் (உ.ஆ), பக்.445
9. அகநானூறு மூலமும் உரையும் தொகுதி-I, அ.மா. பரிமணம் (உ.ஆ), பக்.565
10. புறநானூறு மூலமும் உரையும் தொகுதி-I, அ.மா. பரிமணம் (உ.ஆ), பக்.231
11. பதிற்றுப்பத்து மூலமும் உரையும், முனைவர் அ. ஆலின் (உ.ஆ), பக்.38
12. குறுந்தொகை மூலமும் உரையும் தொகுதி-I, வி. நாகராசன் (உ.ஆ), பக்.197
13. இலக்கிய ஒப்பாய்வு - சங்க இலக்கியம், முனைவர் அ.அ. மணவாளன் (உ.ஆ), பக்.131
14. தாமரைப் பொய்கை (சங்கநூற் காட்சிகள்), கி.வா. ஜகந்நாதன், பக்.4
15. புறநானூறு மூலமும் உரையும் தொகுதி-I, அ.மா. பரிமணம் (உ.ஆ), பக்.209
16. மேலது, பக்.209
17. தமிழர் நாகரிகமும், தமிழர் வரலாறும் (மகளிர் வளர்த்த தமிழ்), தொகுதி-7, அ.ச. ஞானசம்பந்தம், பக்.101
18. புறநானூறு மூலமும் உரையும் தொகுதி-I, அ.மா. பரிமணம் (உ.ஆ), பக்.211
19. தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணார் (உ.ஆ), பக்.2
20. புறநானூறு மூலமும் உரையும் தொகுதி-I, அ.மா. பரிமணம் (உ.ஆ), பக்.331
21. தொல்காப்பியம் பொருளதிகார நாவலர், பாவலர் புத்துரைகள் முனைவர் வே. விக்னேசு, பக்.4
22. சங்க இலக்கியங்கள் மூலமும் உரையும், நோ.அ. மாணிக்கம் (உ.ஆ), பக்.2
23. புறநானூறு மூலமும் உரையும் தொகுதி-I, அ.மா. பரிமணம் (உ.ஆ), பக்.331
24. ஐங்குறுநூறு மூலமும் உரையும் தொகுதி-I, அ. தட்சிணாமூர்த்தி (உ.ஆ), பக்.673
25. புறநானூறு மூலமும் உரையும் தொகுதி-I, அ.மா. பரிமணம் (உ.ஆ), பக்.334
26. மேலது, பக்.341
27. புறநானூற்று ஆய்வுகள், நை.சி. கரிகாலன் (உ.ஆ), பக்.254
28. புறநானூறு மூலமும் உரையும் தொகுதி-II, அ.மா. பரிமணம் (உ.ஆ), பக்.660
29. மேலது, பக்.620
30. புறநானூறு மூலமும் உரையும் தொகுதி-I, அ.மா. பரிமணம் (உ.ஆ), பக்.262
31. கலித்தொகை மூலமும் உரையும், முனைவர் அ. விசுவநாதன் (உ.ஆ), பக்.417
துணைநூற்பட்டியல்
1. அ.மா. பரிமணம், புறநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098. (மு.பதிப்பு, ஏப்ரல் 2004)
2. இராமசுப்பிரமணியம் வ.த (உ.ஆ), நம்பியகப்பொருள் விளக்கம் மூலமும் விரிவுரையும், முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தி.நகர், சென்னை 600 017. (முதற் பதிப்பு 2000)
3. கா. சுரேஷ், முனைவர் பட்ட ஆய்வாளர், தொல்காப்பியரின் திணைக் கோட்பாடும், பிற்கால இலக்கண நூல்களில் அதன் வளர்ச்சியும், அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். (ஆய்வு12 டிசம்பர் 2015)
4. இளம்பூரனார், தொல்காப்பியம் பொருளதிகாரம், சாராதா பதிப்பகம், சென்னை – 14. (முதற் பதிப்பு 2005, 14-ஆம் பதிப்பு 2016)
5. முனைவர் வி. நாகராசன், குறுந்தொகை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098. (மு.பதிப்பு ஏப்ரல் 2004)
6. முனைவர் செயபால். இரா (ப.ஆ), அகநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41-பி, சிப்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098. (முதற் பதிப்பு ஏப்ரல் 2004)
7. முனைவர் அ. ஆலிஸ், பதிற்றுப்பத்து மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098. (மு.பதிப்பு ஏப்ரல் 2004)
8. முனைவர் அ.அ. மணவாளன், இலக்கிய ஒப்பாய்வு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098. (மு.பதிப்பு மே 2009)
9. கி.வா. ஜகந்நாதன், தாமரைப் பொய்கை (சங்கநூற் காட்சிகள்), அமுத நிலையம் லிமிடெட், சென்னை. (மூன்றாம் பதிப்பு 1967)
10. அ.ச. ஞானசம்பந்தம், தமிழர் நாகரிகமும், தமிழர் வரலாறும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை – 17. (மு. பதிப்பு ஏப்ரல் 2021)
11. முனைவர் வே. விக்னேசு, தொல்காப்பயம் பொருளதிகார நாவலர் பாவலர் புந்துரைகள், பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். (உலகத்தமிழ் பன்னாட்டு மின் ஆய்விதழ், மலர் -1 இதழ்-4, ஏப்ரல் 2019 )
12. புலவர் மாணிக்கம் அ, சங்க இலக்கியங்கள் மூலமும் உரையும், வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணாதெரு, தியாகராயநகர், சென்னை – 17.
13. அ.மா. பரிமணம், புறநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098. (மு.பதிப்பு ஏப்ரல் 2004)
14. நை.சி. கரிகாலன், புறநானூற்று ஆய்வுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098. (மு.பதிப்பு டிசம்பர் 2011)
15. முனைவர் அ. விசுவநாதன், கலித்தொகை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098. (முதற் பதிப்பு ஏப்ரல் 2004)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.