கம்பராமாயணத்தில் உடலும் உயிரும்
முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.
முன்னுரை
உயிர் எனப்படுவது இந்த உடலை அசைத்திடும், இயக்கிடும் ஒரு சக்தி. உடலை இயக்கும் மின்சாரம் போன்றது உயிர். உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்கிறது திருமந்திரம். உடலுக்கும், உயிருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த உடல் அழியத் தொடங்கினால், அதனோடு சேர்ந்து உயிரும் அழியும். உடம்பிற்குள் ஒதுங்கி இருக்கும் உயிருக்கு, நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லையோ என்று வள்ளுவரும் குறிப்பிடுகிறார். உயிரானது புல்லின் மேல் உள்ள பூவைப் போன்று உடலில் உள்ளது என்று விவிலியம் கூறுகிறது. கம்பன் தன் காப்பியத்தில் உடம்பிற்கும், உயிருக்கும் இடையிலான தொடர்பைத் தேவைப்படும் இடங்களில் எல்லாம் எவ்வாறு அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் என்பது குறித்து ஆராய்வோம்.
முன் பிரிந்த உயிர் வருவது போல
இராம இலட்சுமணர்கள், தசரதனைப் பிரிந்து, விசிவாமித்திரருடன் சென்றனர்.
"அன்ன தம்பியுந் தானும் ஐயன் ஆம்
மன்னன் இன்உயிர் வழிக் கொண் டாலெனச்"
(கையடைப்படலம் 335)
திருமணத்திற்காக மிதிலை நகருக்கு வரும் தசரதனை எதிர்கொள்ள இராமன் வந்தான்.
"தேவருந் தொழுகழற் சிறுவன் முன் பிரிவது ஓர்
ஆவிவந் தென்னவந்து அரசன் மாடு அணுகினான்"
(எதிர்கொள் படலம் 999)
இராமன், தசரதனுடைய உயிர் பிரிவது போலப் பிரிந்து போனவன் எனக் கூறாமல், திருமணக்காலத்தில் மங்கலமாக முன் பிரிந்த உயிர் வருவது போல வந்தான் என்கிறார்.
மீட்சிப் படலத்தில் சீதை, இராமனைக் கண்டபோது,
"மானமீது அரம்பையர் சூழ வந்துளாள்
போனபே ருயிரினைக் கண்ட பொய்யுடல்
தான் அது கவர் வுறுந் தன்மைத் தாமெனல்
ஆனனம் காட்டுற அவனி எய்தினாள்"
(மீட்சிப் படலம்3950)
சீதையை உடலாகவும், இராமனை உயிராகவும் குறித்து, தன் உடலைப் பிரிந்த உயிர் மீண்டும் வந்து அதனைக் காணாமைப் போலச் சீதையைப் பிரிந்த இராமன் மீண்டு வந்து அவளைக் காணாது வருந்தினான். மீட்கப்பட்டு இராமனும், சீதையும் கூடுவதைக் கூறும்போது, போன உயிரைக்கண்ட உடல் அதனைக் கவர்வது போன்ற முகத்தோற்றத்துடன் சீதை, இராமனைக் கண்டாள் என அவ்வுடலையும், உயிரையும் கூட்டி மங்கலமாகவே முடிக்கின்றார்.
இறையின் தத்துவம் உடல் - உயிர்
கம்பர் கிட்கிந்தா காண்டக் கடவுள் வாழ்த்திலும் இறையின் தத்துவத்தை எடுத்து இயம்புவார்.
"மூன்று உரு எனக் குணம் மும்மை ஆம்முதல்,
தோன்று உரு எவையும் அம் முதலைச் சொல்லுதற்கு
என்று உரு அமைந்தவும் இடையில் நின்றவும்
சான்றுரு உணர்வினுக்கு உணர்வும் ஆயினான்" (கிட்கிந்தா காண்டம் - கடவுள் வாழ்த்து)
அனைத்துமாய் விளங்குபவன் இறைவன். அந்த இறையின் இயல்பைக் கம்பர் இப்பாடலில் உணர்த்தினார். மூன்று உரு என்பது பிரம்மன், திருமால், சிவபிரான் என்பவை. மும்மைக் குணம் சாத்துவிகம், இராசதம், தாமசம் என்பன. கம்பர், பிரகலாதன் கூற்றில் 'மூன்று அவன் செய்கை, மூன்று அவன் உருவம் மூன்று' என்பார்.
திரிமூர்த்திகள் பரம்பொருளின் அம்சம் என்பதும், தத்துவங்களும், உயிர்களும், உலகங்களும் பரம்பொருளின் உண்மையைத் தெரிவிப்பனவே என்பதும் கம்பரின் கருத்து.
உடலுக்குள் உயிர் ஒளிந்திருக்கிறது. உயிருக்குள் உணர்வு உள்ளது. உடம்பு உயிர் போலவும், உயிருக்கு உணர்வு போலவும், உணர்வுக்கு இறைவன் உளன் என்பதை 'உணர்வினுக்கு உணர்வது ஆயினான்' என்றார்.
உடம்புகள் அழியினும், உயிராகிய மூலப் பிரகிருதி என்றும் இருக்கும். அது ஒன்றே அழியாதது; அதிலிருந்துதான் அனைத்தும் உண்டாகும்; அதிலேயே அனைத்தும் ஒடுங்கும். மூலப் பிரகிருதியிடமே போய்ச் சேரும்.
மன்னன் - உடல், மக்கள் - உயிர்
மன்னனை உயிராகவும், மக்களை உடலாகவும் உவமையாகக் கூறும் மரபை, சுக்ரீவனைக் குறிப்பிடும் இடத்தில் (6;11;33) எடுத்தாள்கிறார்.
தசரதனைப் பற்றிக் குறிப்பிடும் கம்பர் இம்மரபை மாற்றி அமைக்கின்றார்.
"செயிர் இவா உலகினில் சென்று நின்று வாழ்
உயிர்எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான்" (அரசியல் படலம் 178)
மன்னனை உடலாகவும், மக்களை உயிராகவும் கூறி மரபை மாற்றுகிறார்.
உயிரும், உடலும் இல்லை எனும்படி
குவளை மலர்களும், அவற்றிற்கிடையே விளங்குகின்ற தாமரை மலர்களும் ஒன்றாக இருந்த தன்மை அமைந்த ஓவியத்தின் அழகை உடைய ஒப்பற்ற இராமனைத் தவிர, தனக்கு வேறு ஓர் உயிரும், உடம்பும் இல்லை என்னும்படி, உலகம் முழுவதையும் ஆளும் தசரதன், இராமனிடத்துப் பேரன்புடையவனானான்.
"காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே
… … … … … … … ...
ஆவியும் உடலமும் இலது என அருளின்
மேவினன் உலகுடை வேந்தர் தம் வேந்தன்" (திருஅவதாரப் படலம் 302)
உயிர் வந்து உடலில் பொருந்துதல்
பிரம்மாஸ்திரத்தால் இலட்சுமணன் மயங்கி விழ, அனுமன் மருத்துவ மலையைக் கொண்டு வந்ததால், உயிர்ப் பிழைத்த இலட்சுமணன் எழுந்தான். இராமன், இலட்சுமணனைத், தழுவிக் கொண்டான். உயிர் வந்து உடலில் பொருந்துவதால் எழுந்து நின்ற தம்பியைத் தன் உயர்ந்த தோளால் தழுவினான். (மருத்துமலைப் படலம் 2748)
உயிர் மீண்டும் உடலில் ஒட்டுதல்
இராவணன், சீதையின் காலில் விழுந்து வணங்கினான். சீதை இராவணனைப் பார்த்து உயிர் மேல் உள்ள ஆசையினால் அல்ல, இராமபிரானைப் பார்க்க வேண்டும் என்ற ஒரே ஆசையால், உடம்பில் உயிரைச் சுமந்து கொண்டிருக்கின்றேன். அது மட்டுமல்லாமல் போர்க்களத்தில் அரக்கர்களை அழித்து, உன் தலைகளை இராமன் தரையில் உருளச் செய்கின்ற காட்சியினைக் காண வேண்டும் என்ற ஆவலால் தான், பிரிய நினைக்கும் எனது உயிர், மீண்டும் உடலில் ஒட்டிக் கொள்கிறது என்று கூறினாள்.
இறந்தவன் உயிர் பெற்று எழுந்தது போல
கும்பகர்ணனை உறக்கத்திலிருந்து எழுப்பினார்கள். யானை, குதிரை ஆகியவற்றை ஆயிரக்கணக்கில் அனுப்பி, அவனை மிதிக்கும் படி செய்து எழுப்ப முயற்சித்தனர். பல்வேறு முயற்சிகளுக்கெல்லாம் பின்னர், அரக்கர்கள் கும்பகர்ணனுடைய கன்னத்தில் உலக்கைக் கொண்டு தாக்க, இறந்தவன் உயிர்ப் பெற்று எழுந்தது போன்று, கும்பகர்ணன் எழுந்தான். (கும்பகர்ணன் வதைப் படலம் 1268)
உடலை விட்டு நீங்கிய உயிர், மீண்டும் உடலில் பொருந்த முயல்வது போல
இராவண வதம் முடிந்த பின்னர் இராமன், சீதையை அழைத்து வரும்படியாக வீடணனுக்கு உத்தரவிட்டான். ‘சீரோடும் தருதி’ என்று இராமன் உரைத்ததனால் 10 மாதங்களாக ஒழுங்குபடுத்தப்படாதக் கூந்தலை வாரி, இராமனைக் காண்பதற்குத் தன் விருப்பத்திற்கு மாறாகவே, வீடணன் சொன்னதால், கோலம் புனைந்து வந்தாள். சீதை பத்து மாத கால இடைவெளிக்குப் பின்னர் இராமனைச் சந்திப்பதற்கு இருக்கும் அவளது மனதில்தான், பல கற்பனைகள். மாற்றான் சிறையில் இருந்த தன்னை, இராமன் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற கவலை ஒரு புறம், எனினும் உடலை விட்டு நீங்கிய உயிர் மீண்டும் உடலில் பொருந்த முயல்வது போலத் தன் உயிரனையே இராமனை நோக்கி வந்தாள். (மீட்சிப்படலம் 3950)
உடலில் உயிரைச் சுமந்து
சூர்ப்பணகையின் மூக்கைக் கூரிய வாளினால் அற்ப மானுடர்கள் அறுத்தப் பின்னரும், இன்னும் உயிரோடு அவர்கள் திரிகின்றனர். அதற்குப் பின்னரும், புதுமை மாறாத வாளொடும், விழித்த கண்ணோடும், வெட்கமில்லாமல் உடலில் உயிரைச் சுமந்து கொண்டு நான் இருப்பதா என்று இராவணன் குமுறுகிறான்.
இரண்டு உடற்கு உயிர் ஒன்று
இராமன், சீதை இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் பருகினர். ஒத்த காதல் கொண்டவராயினர். இராமனும், சீதையும் பார்த்த அளவில் இரண்டு உடல்களுக்கு ஓர் உயிர் அமைந்தது போல மனம் ஒன்றுபட்டார்கள். ஒருவரை ஒருவர் பிரிந்து நீண்ட காலத்திற்குப் பிறகு கூடும்போது, அவர்களின் அன்பு பார்வையேக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும். வாய்ச் சொற்கள் தேவையில்லை.
“மருங்கு இலா நங்கையும்வசை இல் ஐயனும்
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினர்
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால்பேசல் வேண்டுமோ" (மிதிலைக் காட்சிப் படலம் 522)
உயிர் உண்டோ இல்லையோ
உயிர் உண்டோ இல்லையோ என்று காண்போர் ஐயுருமாறு தோன்றுகின்ற பரதனின் வடிவத்தைப் பார்த்த அருள் கண்களை உடைய இராமன், தன் கண்கள் சொறிகின்ற கண்ணீர் பரதனின் சடை முடியை நிரம்பி மேற்சென்று பெருகி வழிந்து ஒழுக நின்றான். பரதனின் எளிய உருவம், இராமனின் உள்ளத்தை உருக்கியது. (திருவடி சூட்டுப்படலம் 1108)
உயிரும், உயிரும் பொருந்தத் தழுவல்
இராமனை எப்போதும் நினைக்கும் பரதன், கண்களில் நீர் சிந்த வணங்கினான். பரதனை, இராமன் தன்னைத் தந்தை தசரதன் முன் தழுவியது போன்று, தன் மார்பில் அழுத்த அணைத்துக் கொண்டு உயிரும், உயிரும் பொருந்துமாறு தழுவினான்.
உடலை விட்டு நீங்கிய உயிர், மீண்டும் வந்து ஒன்றுபட்டது போல
அனுமன், தான் இராமதூதன் என்பதை நிரூபிக்க இராமனால் கொடுத்து அனுப்பப்பட்ட கணையாழியைக் காட்டுகின்றான். அதைக் கண்ட சீதை மகிழ்ச்சி அடைகிறாள். அனுமன் இந்நிலையைத் தன் ஆழ்ந்த நோக்கும் தன்மையால் எத்தகைய மகிழ்ச்சி அடைந்தாள் என்பதைக் காட்டுகிறான். பிறத்தலால் உண்டாகும் பயனைப் பெற்ற செய்கை என்று கூறுவேனோ, உடலை விட்டு நீங்கிய உயிர்த் தக்க சமயத்தில் வந்து ஒன்றுபட்டது என்று கூறுவேனோ என்கிறான். தவறவிட்ட மாணிக்கத்தைத் தன் எதிரில் கண்ட பாம்பு போலவும், இழந்துவிட்ட பழைய செல்வத்தை மறுபடியும் பெற்ற வறியவரைப் போலவும், மலடி குழந்தையைப் பெற்றெடுத்தது போலவும் இருந்தாள் என்று அனுமன் கூறுகிறான். (உருக்காட்டு படலம் 551)
உயிரெல்லாம் உறைவதோர் உடம்பு
இறைவன் உலகத்தில் உள்ள பொருட்கள் எல்லாவற்றிலும் உடலும், உயிரும் போலவும், உடலும் உணர்வும் போலவும், உள்ளம் புறமும் நிறைந்திருக்கிறான் என்று ஞானிகள் கூறுவர். மனிதனுடைய உள்ளம் தாக்கப்படும் போது, உடல் பாதிக்கப்படுகிறது. அவ்வாறே உடல் பாதிக்கப்படும் போது, உள்ளமும் பாதிக்கப்படுகிறது. இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தே செயல்படுகின்றன. உடல், உயிர் ஆகிய இரண்டு விசயங்களையும் இறைவனோடு தொடர்புப்படுத்திய மருத்துவச் சிந்தனைகளையும், சித்த மருத்துவம் பேசுகிறது.
திருமூலர், “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” (திருமந்திரம் 724) என்கிறார். தொல்காப்பியர் எழுத்திலக்கணம் வகுக்கும் போது, முதலில் அதில் உள்ள எழுத்துக்களை (இரண்டு வகை எழுத்துக்களையும்) உயிரெழுத்து என்றும், மெய் (உடல்) எழுத்து என்றும் வகைப்படுத்திப் பெயரிட்டார். மேலும் உயிரும், உடம்பும் தனித்தனியானவை. ஆயினும் இவை இணைந்தே செயல்படுவன. அதுபோன்ற இவ்விரு எழுத்துக்களும் தனித்தனியானவை என்பதை உடம்புடன் நின்ற உயிரும் இல்லை (தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - கிழவியாக்கம்1)
தலைவனும், தலைவியும் ஓர் உயிர் ஈருடலாக வாழ்பவர்களாக தமிழ் அக இலக்கியங்கள் சுட்டும். அவ்வாறு குறிப்பிடுவதை அக இலக்கிய மரபாகவேக் கொண்டுள்ளனர்.
தலைவன் தனக்கும், தலைவிக்கும் உள்ள அன்பு எத்தகையது என்பதைக் குறிப்பிடும்போது, உயிரும், உடலும் போன்றது என்பர்.
"உடம்பொடு உயிரிட யென்ன மற்றன்ன
மடந்தையோடு எம்மிடை நட்பு" (திருக்குறள் - காதற்சிறப்புரைத்தல் 1122)
உயிர் இருக்கின்ற வரையில்தான் உடலுக்கு மரியாதை, உடலை விட்டு உயிர் போய்விட்டால் உடல் இயங்காது. உடலின் இயக்கமே உயிர்தான். அதேப் போல் உடல் இல்லாவிட்டால், உயிருக்கு உறைவதற்கு இடமில்லை. தனது இருப்பை வெளிப்படுத்த வாய்ப்பில்லை. உடலில்தான் உயிர் தோன்றுகிறது. உடலில்தான் உயிர் அடைக்கலப் படுகிறது. எனவே, இரண்டும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது. உயிரும், உடலும் போன்றவர்கள் தலைவனும், தலைவியும். எனவே இருவரும் பிரிக்க முடியாத வகையில், ஒருவரை ஒருவர் இணைந்து பிணைந்துள்ளனர்.
“நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து" (திருக்குறள் - நாணுத்துறவுரைத்தல்1132)
உடலும் உயிரும்
இந்திரஜித் வேள்வி பூஜை செய்து இலட்சுமணன் மேல் பிரம்மாத்திரம் ஏவ, அவன் மயங்கி விழுந்தான். இராமன், இலட்சுமணன் இறந்து விட்டான் என்றே நினைத்து அழுதார். உனக்கும், எனக்கும் உயிரும், உள்ளமும் ஒன்று என்று சொல்லும்படி இருந்தோம். உன்னை இப்போது இழந்தேன். இழந்தும், இறவாது இருந்திருக்கின்றேன். உன் உயிருடன் என் உயிர் போகாததனால், உயர்வான உயிர் உறவில்லை. உடலோடு என் உடல் போகாததனால் என் உறவு தாழ்வானது என்று வருந்திக் கூறினான். (பிரம்மாத்திரப் படலம் 2595)
உயிரோ உடலை விட்டு நீங்கவில்லை
சீதையும், இராமனும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்டனர். இன்னிசைகள் அடங்கின அல்ல, என் மனதை விட்டு விலகுவன அல்ல, இரவு நேரமோ விடிவதாக இல்லை, மனத்தின் துயரங்களோ மறைவன அல்ல, என் உயிரோ, உடலை விட்டு ஒரேடியாக நீங்கி விடுவதும் இல்லை. கண்களோ தூங்க மறுக்கின்றன. இவ்வாறு வருந்துவது தான் என் கடமையோ என்று பிரிவுத் துன்பத்தில் வருந்தினாள் சீதை. (கடிமணப் படலம் 1116)
உடம்பை விட்டு உயிர் பிரிந்து செல்வது போல
இராமன், இலட்சுமணன், பரதன் சத்ருகணன் நால்வருக்கும் திருமணம் முடிந்த பிறகு, பரதனைக் கேகைய மன்னன் காண விரும்பினான். தசரதனும் அவனைச் செல்லக் கட்டளையிட்டான். கட்டளையைக் கேட்டதும் பரதன் தந்தையை வணங்கினான். இராமனையும் வணங்கினான். பரதனுக்கு அந்த இராமனைத் தவிர, தனியே வேறு ஓர் உயிர் இல்லை. அதனால் ஒருபொழுதும் நீங்காத உயிர், உடம்பைப் பிரிந்து செல்வது போல, பரதன், இராமனைப் பிரிந்து சென்றான். (பரசுராமப் படலம் 1256)
உடம்பிலிருந்து உயிரைப் போக்கிக் கொண்டவர்கள்
பூமியைத் தோண்டிய சகரப் புத்திரர்கள் தன் தந்தையின் கட்டளைப்படி செயல்பட்டு, அதனால் தம்முடைய குற்றமற்ற உடம்பிலிருந்து இனிய உயிரைப் போக்கிக் கொண்ட இணையில்லாத பெரும் புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது. (நகர் நீங்கு படலம் 316)
உயிர் போனதும், உடல் கீழே விழுவது போல
தசரதனைக் காண்பதற்காக நடந்து சென்ற கோசலை, கைகேயியின் மாளிகையை அடைந்தாள். தசரதன் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டு, உயிர் போனதும், உடல் கீழே விழுவது போல மதி மயங்கிக் கீழே விழுந்தாள்.(நகர் நீங்கு படலம் 321)
உடல் உணர்வு அற்றதைப் போல
தசரதன் ஒளி மிகுந்த உடல், உணர்வு அற்றதைப் போலத் தோன்றுமாறு எண்ணிப் பார்ப்பதற்கு அரிதான அதிக துன்பத்தை அனுபவித்துக் கொண்டு, வேறு எதையும் உணராமல் இருந்தான். (நகர் நீங்கு படலம் 325)
உயிர், உடலை விட்டுச் செல்லும்
வசிட்டர், கைகேயியிடம் நீ உன் கணவனின் உயிர் உடலை விட்டுச் செல்லும் துன்பத்தை நினைக்காமல், தாட்சண்யம் இல்லாமல் பேசுகிறாயே என்று கூறுகிறார். (நகர் நீங்கு படலம் 336)
உயிர் வெளியே போவதும், மீண்டும் உடலுக்குள் புகுவதும்
இராமன் காடு செல்லப் போகிறான் என்பதை அறிந்த மக்களுள் சிலருடைய உடல்கள் நெகிழ்ந்து போயின. சிலருடைய உயிர்கள் ஒரு நிலையில் இல்லாமல், இந்த நொடியே உடலை விட்டு செல்லத்தக்கனவாக இருந்தன. சிலருடைய உயிர்கள் வெளியேப் போவதும், மீண்டும் உடலுக்குள் புகுவதுமாக இருந்தன. சிலருடைய கண்களாகிய மலர்கள் நீர் வற்றிப் போய் புண்ணிலிருந்து வெளிப்படுவது போல, இரத்தப் பெருக்கை வெளிப்படுத்தின. (நகர் நீங்கு படலம் 462)
(தொடர்கிறது)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.