கம்பராமாயணத்தில் உடலும் உயிரும்
முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.
கட்டுரையின் தொடர்ச்சி - பகுதி 2
உடம்பு பதறி, உயிர் விடுதல்
அந்த அயோத்தி என்னும் பெரிய நகரம் தன்னை விட்டுப் பிரிதல் இல்லாத உயிர்கள் யாவும் பெருமூச்சுடன் உடம்பு பதறி, நிலைகுலைந்து வருந்துதலாலும், இயல்பாக அமைந்துள்ள சிறந்த அழகு சிதைந்து போனதாலும், கலங்கச் செய்யும் துன்பம் மிகுதலாலும், முற்றிலும் அழியாத ஐந்து பொறிகளும் கலங்குதலாலும், தசரதனைப் போலவே உயிர் விடுகின்றதை ஒத்திருந்தது. (நகர் நீங்கு படலம் 502)
உடலில் தங்கிய உயிரைப் பற்றிக் கொள்ளுதல்
சுமந்திரன், இலட்சுமணனிடம் கேட்ட போது, நல்ல புதல்வனான இராமன் காட்டை அடைந்து, காய் முதலானவற்றை உணவாக உண்ண, தான் நாட்டிலே கிடைக்கும் சிறந்த உணவை விரும்பி உண்கின்ற பொய்யாத அரசனுக்கு, உடலில் தங்கிய உயிரைப் பற்றிக் கொண்டு, இன்னமும் இறந்து போய் மேல் உலகத்தை அடையாதிருக்கும் வன்மையை எடுத்துக் கூறுக என்றான். (தைல மாட்டு படலம் 567)
உயிரில் கலந்த உறவு
வாலி இறந்த செய்தியை அறிந்த தாரை, போர்க்களம் வந்து இறந்து கிடக்கும் கணவன் வாலியைப் பார்க்கிறாள். அவனது உடலிலிருந்து ரத்தம் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. அப்படியே அவனது உடலில் விழுந்து கட்டிப் புரள்கிறாள். (வாலி வதைப் படலம் 387)
பெருக்கெடுத்து வரும் இரத்தம் தாரையின் உடலையும், கூந்தலையும் நனைத்து விடுகிறது. மலைகள் போன்ற வலிமையான உன் தோள்களிடையே நாள்தோறும் நான் தங்குகின்ற போது, இதனால் வரையிலும் எப்போதும் என்னோடு மாறுபடாத குணத்தை உடையவனே, உனக்கு நேர்ந்த துன்பத்தைக் கண்டதும், இந்நேரம் என் உயிர் பிரிந்திருக்க வேண்டும். அவ்வாறு பிரியாது உன் முன் நின்று கொண்டிருக்கிறேனே, உயிர் துறக்கையில் உடல் இன்பம் அடைவது என்பது உலகத்தில் இல்லை. ஆனால் உலகத்தில் நடக்காத செயலை நீ செய்து கொண்டிருக்கிறாய் என்று வருந்தி பேசுகிறாள். என்னை நோக்கி மிக்க அன்புடன் நீயே என் உயிர் என்றாயே, உன் உயிரான நான், இங்கு துன்பமடைய உன் உடல் மட்டும் எப்படி இன்பமடைய முடியும்? அப்படியானால் நீ கூறியது பொய்யோ...
“செருவார்தோள் நின் சிந்தை உளேன்எனின்
மருவார் வெஞ்சரம் எனையும் வவ்வுமால்
ஒருவேனுள் உளை ஆகின்உய்தியால்
இருவேமுள் இருவேம்இருத்திலேம்" (வாலி வதைப் படலம் 396)
இறந்து கிடக்கும் வாலியை நோக்கிப் பேசுகிறாள், நாம் இல்லறத்தை இனிதே நடத்திய போது, என்னை நோக்கி உன் இதயம் என்னிடத்தில் உள்ளது என்றாய். நானும், உன்னை நோக்கி உன் இதயம் என்னிடத்தில் உள்ளது என்று மாறிமாறிக் கூறினோம். நாம் பேசியது உண்மை என்றால், உன் உடலில் பாய்ந்த இராமனின் அம்பானது என் இதயத்தைத் தொலைத்து, என் உயிரைப் போக்கியிருக்க வேண்டும். ஆனால், இறந்திருப்பது நீ தானே. அப்படி என்றால் பொய் பேசினோமோ என்று வருந்தி, அழுது புலம்புகிறாள்.
கூடு கண்டிலது
கூட்டை விட்டுப் பிரிந்து சென்ற ஓர் உயிர், மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது, கூட்டைக் காணவில்லை எனில், அவ்வுயிர் எவ்வாறு திகைக்குமோ அவ்வாறு சீதையைத் தேடி வந்த இராமன் திகைத்து நின்றான்.
“ஓடி வந்தனன் சாலையில் சோலையின் உதவும்
தோடு இவர்ந்த பூஞ்சுரி குழலாள் தனைக்காணான்
கூடு தன்னுடையது பிரிந்தா ருயிர் குறியா
தேடி வந்து அது கண்டில தாம் என்றேன் என நின்றான்" (சடாயு உயிர் நீத்த படலம் 957)
இராமன் - உயிர், சீதை - கூடு. கூடு என்றால், உடம்பு பிரித்து வைத்துவிட்டுச் சென்ற உயிர் மீண்டும் வந்து உடலைத் தேடிய போது காணவில்லை.
உடல் நீ, உயிர் அவன்
14 வருடங்கள் சென்ற பின்னும் இராமன் திரும்பி வராததால், பரதன் தீக்குளித்து இறக்க முயன்றான். அப்பொழுது அனுமன் வந்து பரதனை நோக்கி, எல்லா உலகங்களுக்கும் தலைவனானவன் வந்தான். அனைவராலும் பூசிக்கத் தக்கவன் வந்தான். மெய்ம்மைக்கு உடல் போன்ற நீ, அவன் வருவதற்கு முன் இறப்பாயானால் அவன் வந்து உயிர் வாழ்ந்திருப்பானோ? என்று சொல்லி அக்கூட்டத்தில் நுழைந்து மூட்டிய நெருப்பை அவித்துக் கரியாக்கினான்.
“அய்யன் வந்தனன் ஆரியன் வந்தனன்
மெய்யின் மெய்அன்ன நின் உயிர் வீடினால்
உய்யுமே அவன்? என்றுரைத்து உள்புகா
கையினால் எரியைக் கரி ஆக்கினான்" (மீட்சிப் படலம் 4130)
தம் உயிர் உடம்பொடு பொருந்தப் பெற்றவர்
சஞ்சீவி மலையின் காற்று வந்து வீசிய அளவில் தேவர்களால் போற்றப்பட்டு, இதுவரையடையாத புதிய துன்பம் அடைந்தவர்களாகிய இராமன், சேனை வீரர்கள், இதற்கு முன் இல்லாத, மிக்க வலிமையும், அழகும் உடையவர்களாக எழுந்தார்கள். நமனை வென்று தம்முயிர் உடம்பொடு, பொருந்தப் பெற்றவரும் ஆயினர்.
“ஏற்றமும் பெருவலி அழகொடு எய்தினார்
கூற்றினை வென்று தம் உருவும் கூடினார்" (மருத்துமலைப் படலம் 2744)
உடம்பை விட்டுப் பிரியாத உயிர்
நிகும்பலை யாகப் படலத்தில் இந்திரசித்தோடு போர் புரிய இலட்சுமணனை அனுப்பிய இராமன், தன்னை விட்டுப் பிரிதலில்லாத தம்பியாகிய இலட்சுமணன் மிக்க வேகத்தோடு சென்று, உடம்பை விட்டுப் பிரியாத உயிரைப் போல மறைந்த அளவில், அதைக் கண்டு வருந்தின இராமன், முன்பு விசுவாமித்திர முனிவருடைய யாகத்தைக் காக்கும் பொருட்டு, தான் சென்றபொழுது, வருந்திய தன் தந்தையாகிய தசரதனை ஒத்தான்.
"தான் பிரி கின்றிலாத தம்பி, வெங் கடுப்பின் செல்வான்,
ஊன்பிரி கின்றிலாத உயிர் என, மறைதலோடும்" (நிகும்பலை யாகப் படலம் 2888)
உயிர், உடம்பைப் பாதுகாத்து வருகிறது
சரயு நதி, பூமியின் பல பாகங்களிலும் பாய்ந்து அவற்றைக் காத்து வருகிறது. உயிர், உடம்பைப் பாதுகாத்து வருவதைப் போல ஆறும், ஒவ்வோர் இடத்திலும் பாய்ந்து, அந்த இடங்களை எல்லாம் செழிப்பாக்கிக் காத்து வருகிறது.
“மாதவி வேலிப் பூக வனம்தோறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்புதோறும் உயிர் என உலாயது அன்றே" (ஆற்றுப்படலம் 32)
வெற்று உடல்
இராவணன் மந்திரிமார்களிடம் கூறும் போது, ஒரு சிறிய குரங்கு வந்து, நமது பெரிய நகரத்தைச் சுட்டு எரித்தது. அக்கினி சூறையாட, நமது நகரம் அழிந்துவிட்டது. அதுவுமின்றி என் உறவினர்களும், நண்பர்களும் இறந்தார்கள். இந்த அவமானம் உலகெங்கும் பரவிற்று. இந்தச் சிம்மாசனத்தில் இராவணனா இருக்கிறான். என் வெற்றுடலன்றோ இருக்கிறது என்றான். (இராவணன் மந்திரப்படலம் 23)
உயிரை விட்டு உடலைத் தூக்கிச் சென்றானே
தசரதன் இறந்து விட்டான் என்பதை இராம, இலட்சுமணர்கள், சடாயுவிடம் கூறினர். உலகிற்கு மகிழ்ச்சியை விளைவிக்கும் கொற்றக்குடையை உடையவனே, நீயாளும் பூமி ஆள்வாரற்றுக் கிடக்கவும், நான் வருந்தவும் விட்டுப் பிரிந்தனையோ? என்னை விட்டுப் பிரிந்தது, என்னுடைய நட்பின் தீரத்தை அறிவதற்கோ? நீவிர் இறந்தமையைக் கேட்ட பாவி, இன்னும் உயிர்த் துறக்கவில்லை. நான் ஒரு விலங்கு ஆதலின் நான் விலகி நிற்கிறேன்.
தோழனே, சம்பராசுரனை வதைத்த அந்நாளில் என்னைப் பார்த்து, நீ உயிர், நான் உடல் என்று சொன்னீரே, இப்போது இங்கே உயிர் கிடக்கிறது, உடல் போயிற்று. அந்தப் புத்திக் கெட்ட எமன் உயிரைப் போட்டுவிட்டு உடலைத் தூக்கிச் சென்றானே என்று புலம்பினான்.
“செயிர் கிடத்தல் செய்யாத திரு மனத்தாய்
செப்பினாய் திறம்பா நின் சொல்
உயிர் கிடக்க உடலை விசும்பு ஏற்றினார்
உணர்வு இறந்த கூற்றினரே" (சடாயு காண் படலம் 197)
உடம்பு, உயிரைத் தொடர்வது போல
திருமணத்தின் போது இராமன், சீதையின் கையைப்பற்றித் தீ வலம் வந்தான்.
“நெய்அமை ஆவதி யாவையும் நேர்ந்தே
தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்" (கடிமணப் படலம் 1195)
“மடம்படுசிந்தையள் மாறு பிறப்பின்
உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள்" (கடிமணப்படலம் 1196)
ஓமத்தீயை வலம் வரும் போது இராமனைப் பின் தொடர்த்து சீதை சென்றாள். அக்காட்சி வேறுவேறாக எடுக்கும் பிறவிகளில் உயிரானது, உடம்பைத் தொடர்வதற்கு மாறாக, ‘உடம்பு, உயிரைத் தொடர்வது போல இருந்தது’ என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
உயிரைத் தேடி நிலை தளரும் உடலைப் போல
பூக்கொய்ப் படலத்தில் தன் மனைவியிடம் காதல் கொள்வதில் மன்னராக விளங்கிய ஓர் இளைஞன், தான் பிரிந்ததால் மயிலின் சாயலோடு நடந்து வரும் தன் மனைவியின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதைக் கண்டறிவதற்காக, சோலையிலிருந்த மாதவிப் பந்தலில் நுழைந்து மறைந்து கொண்டான். எப்போதும் அவனோடு இணைந்து பழகும் இயல்புடையவளும், கணவனை ஒரு கணமும் பிரிந்து அறியாதவளுமான அந்த மனைவி, மணவாளனைக் காணாமல் துடித்தாள். உயிரைத்தேடி நிலை தளரும் உடலைப்போல மனம் சுழன்று துன்புற்றாள். (பூக்கொய்ப்படலம் 853)
உடல் உயிர்
இராமன் காடு செல்ல இருப்பதை சுமத்திரையிடம் கூற, அவள் வருந்த இராமன் அவளைத் தேற்றினான். அன்னையே, நம் நாட்டில் கடலில், ஆகாயத்தில், வசிப்பதனாயினும் சரி, அங்கெல்லாம் நான் அயோத்தியில் வசிப்பதைப் போலவே வாழ்வேன். என்னைத் துன்புறுத்துபவர்கள் எவரும் இல்லை. ஆகையால் எதற்காக வருந்துகிறாய் என்று இராமன் சுமித்திரையைத் தேற்றினான். சுமித்திரையின் துயரம் முதலில் உடலில், பின் உயிரில் பாய்ந்து கடைசியில் அறிவிலும் பாய்ந்தது.
“யான்புக்கது ஒக்கும், எனை யார்
நலிகிற்கும் ஈட்டார்
ஊன் புக்கு உயிர் புக்கு உணர் புக்கு
உலையற்க என்றான்" (நகர் நீங்கு படலம் 433)
உடலும், உள்ளமும் சேரத் தழுவல்
தன்னை வணங்கின பரதனை, இராமபிரான் தழுவி நின்றான். தான் முன்பு கொடுத்தப் பாதுகைகள் இரண்டையும், அன்பையும் பாத காணிக்கையாகத் தந்து தாமரை மலர் போன்ற தனது பாதங்களைப் பணிந்து நின்ற பரதாழ்வானை இராமபிரான் தேம்பி, விம்மி, நாவினால் சொல்வதற்கு ஒன்றும் இயலாதவனாகி கண்ணீர் சோர அழுது, தன் ஆவியும் உடலும், அவனது ஆவியும் உடலும் ஒன்றென்று ஆகும்படியாக இறுகத் தழுவி நின்றான்.
“சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி
பூ வடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமி விம்மி
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன் நின்ற நம்பி
ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன் அழுது சோர்வான்" (மீட்சிப்படலம் 4219)
உடலின் அழிவு
இராமனைக் காண பரதன் படைகளுடன் கங்கை நதியைக் கடக்கும் போது, தேர்களின் உறுப்புகளாகிய கொடி, கொடிஞ்சு, தட்டு, அச்சு, ஆழி முதலிய உறுப்புகள் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு நாவாய்களில் ஏற்றப்பட்டு அக்கரையைச் சென்றடைந்தன. இந்நிகழ்வை உடல் அழிந்த பின் உயிர்களை வெவ்வேறு உடம்பில் சேர்விக்கின்ற வினை போல, வெவ்வேறு நாவாய்கள் ஏற்றிச் சென்றன என்பதை,
“விடும் சுவல் புரவியோடும் வேறு வேறு ஏற்றிச்சென்ற
மடிஞ்சபின் உடம்பு கூட்டும் வினை என வயிரத்தோள்" (கங்கை காண் படலம் 1035)
அறிய முடிகிறது.
முடிவுரை
மன்னனை உயிராகவும், மக்களை உடலாகவும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. ஆனால், கம்பராமாயணம் மன்னனை உடலாகவும், மக்களை உயிராகவும் பேசுகிறது. இராமனும், சீதையும் ஒருவரை ஒருவர் பார்த்த போது, இரண்டு உடலுக்கு ஓர் உயிர் அமைந்தது போல மனம் ஒன்றுபட்டார்கள் என்பதையும், வாலி இறந்தவுடன் தாரை, ‘நீ என் உயிர் என்றாயே, உன் உயிரான நான் இங்கு துன்பமடைய, உன் உடல் மட்டும் எப்படி இறந்திருக்கும். உன் இதயம் என்னிடத்தில் உள்ளது என்று மாறி மாறி பேசினோமே அப்படி என்றால் இராமனின் அம்பானது, என் இதயத்தைத் தொலைத்து என் உயிரை அல்லவா எடுத்து இருக்க வேண்டும்’ என்று கூறி வருந்தினாள் என்பதையும், பர்ணசாலையில் சீதையைக் காணாத இராமன், ‘கூட்டை விட்டுப் பிரிந்து சென்ற ஓர் உயிர், மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது கூட்டைக் காணாமல் அவ்வுயிர் வருந்தியது போல வருந்தினான்’ என்பதையும், சடாயு, தசரதன் இறந்த செய்தியை அறிந்தபோது, ‘தோழனே சம்பராசுரப் போரில் அவனை வதைத்த அந்நாளில் என்னைப் பார்த்து நீ உயிர், நான் உடல் என்றாயே, இப்போது உயிர் கிடக்கிறது உடல் போயிற்று’ என்று வருந்திப் புலம்பியதையும் அறிய முடிகிறது. இதிலிருந்து உடலுக்கும், உயிருக்குமான தொடர்பினைக் கம்பர் பல இடங்களில் அழுத்தமாகவேப் பயன்படுத்தியுள்ளார் என்பதனை அறிந்து கொள்ள முடிகிறது.
துணை நூற்பட்டியல்
1. இராமன் பன்முக நோக்கில், அ.ச. ஞானசம்பந்தன், சாரு பதிப்பகம், சென்னை, 2016.
2. எல்லைகள் நீத்த இராமகாதை, பழ.கருப்பையா, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.
3. கம்பன் புதிய தேடல், அ. அ. ஞானசந்தரத்தரசு, தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
4. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன், வள்ளி பதிப்பகம், சென்னை, 2019.
5. கம்பன் காட்டும் வைணவப் பேருலகம், அமுதன், லக்ஷண்யா பதிப்பகம், சென்னை, 2019.
6. கம்பர் கவியும் கருத்தும், கருத்திருமன். பி. சி., வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2018.
7. கம்பரும் திருத்தக்கதேவரும், காசி. ஆ, தமிழ்ச்சோலைப் பதிப்பகம், சென்னை, 2010.
8. காலமும், கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி), கபிலன் பதிப்பகம், புதுச்சேரி.
9. கம்பரின் கை வண்ணம், சக்தி நடராசன்.க, சரசுவதி பதிப்பகம், ஆர்க்காடு, 2017.
10. காலத்தை வென்ற கம்பன், பழனிவேலு. தா, பல்லவி பதிப்பகம், ஈரோடு. 2021.
11. கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, பூவண்ணன், வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
(நிறைவுற்றது)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.