புறநானூற்றில் அகத்திணைக் கூறுகள்
முனைவர் கு. செல்வஈஸ்வரி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி.
முன்னுரை
சங்க காலம் போர்ச் சமுதாயமாக இருந்தது.போரினால் மக்களுடைய புறவாழ்வில் மட்டும் அல்லாமல், இல்லற வாழ்விலும் சிக்கல்கள் நேர்ந்துள்ளன. உயிரை விடவும் நாணத்தை விடவும் கற்பேச் சிறந்ததாக இருந்தது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற பண்புடைய பெண்களைக் குடும்பப் பெண்ணாகப் பாவித்தனர். பரத்தையர் கருவுற்றாலும் மனைவிக்கு நிகராக அவர்கள் மதிக்கப்படுவதில்லை. திருமணமான பெண், கணவன் இறந்த பின்னர் கைம்மை நோன்பு இருத்தல் போன்ற மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெண்களுக்குப் பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளமையினை இக்கட்டுரையில் காணலாம்.
மனைவியின் கடமை
இன்பத்தின் ஆணி வேர் இல்லறம். இல்லறத்தின் நுழைவாயிலாக அமைவது திருமணம். ஒரு பெண் திருமணமாவதற்கு முன் தன் தந்தையின் கீழும், திருமணமான பின் தன் கணவனின் கீழும், முதுமையான பின் தன் பிள்ளையின் கீழும் பிறப்பு முதல் இறப்பு வரை ஓர் ஆண் வர்க்கத்தையேச் சார்ந்து வாழும் நிலை ஏற்படுகின்றது. கணவனைப் பேணுவது மனைவியின் தலையாய கடமையாக இன்று வரை நிலவுகின்றது. மனைவி தன் கணவனின் உடல், மன நலனில் அக்கறை செலுத்துபவளாகவே திகழ்கின்றாள். கணவன் தூங்கும் போது கூட மனைவி அவனை விட்டு நீங்காது, அவனது துயிலுக்குத் துணை நிற்கும் பாங்கினைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. புறநானூற்றில், தன் கணவன் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவனது தூக்கம் கலைந்து விடக் கூடாது என்பதற்காக அவனது மனைவி சத்தம் இல்லாமல் நடக்கும் காட்சி இதோ,
“தீர்தொழில் தனிக்கலை திளைத்து விளையாட
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சி கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி யாவதும்
இல் வழங்காமையின்… … … … … …”
(புறம். 320)
என்ற அடிகளின் வாயிலாக தன் கணவனின் துயிலுக்குத் துணை நின்றதனை அறிந்து கொள்ள முடிகின்றது.
இன்னும் மனைவியின் கடமை செவ்வனே நடைபெறுவதால் கணவன் இளமையோடு இன்பமாக வாழ்கிறான். அதாவது, ஆடவர் வாழ்வில் கவலையின்றி ஆரோக்கியமாக வாழும் காட்சி புறநானூற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பிசிராந்தையார் என்ற புலவர் ஆண்டு பலவாயினும் இளமையான தோற்றத்துடன், தான் இருப்பதற்கான காரணத்தைச் சொல்லும் போது, இல்லறப் பண்புகள் அனைத்தும் நிரம்பியவளாய்த் தன் மனைவி இருப்பதால்தான் தனது வாழ்வு மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரிவிக்கின்றார். இதனை,
“யாண்டு பல ஆக, நரைஇல ஆகுதல்
யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியொடு, மக்களும் நிரம்பினர்,
யான் கண்டனையர் என் இளையரும்... ... ... ... ... ... ...”
(புறம்.191)
என்ற பாடல் அடிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. இக்கூற்றினை வள்ளுவப்பெருந்தகையும்,
“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக்கடை”
(குறள்.53)
என்று குறிப்பிடுவதன் வாயிலாக, மனைவி சிறப்புடையவளாக அமைந்தால்தான் ஒருவனுடைய வாழ்வு சிறப்புடையதாகும் என்பது புலனாகிறது.
மக்கட்பேறு
சங்ககாலச் சமுதாயத்தில் குழந்தை பிறப்பு மிகவும் இன்றியமையானதாகக் கருதப்பெற்றது. அச்சமுதாயம் “மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே”என்ற அடிப்படையில்; அன்றைய சமூகம் செயல்பட்டது. அதிலும் குறிப்பாக, குழந்தைகள் பிறப்பில் பெண் மக்களை விட ஆண் மக்களையேப் பெருமளவு விரும்பியுள்ளனர். இல்லற வாழ்வில் மக்கட்பேறு சிறப்பு உடையது எனலாம். சங்க இலக்கியத்தில் மகன், புதல்வன், சிறார், மகார், குழவி, குழந்தை, சேய் போன்ற பல சொற்கள் புதல்வரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாகச் சங்க காலத்தில் ஆண் குழந்தையே முதலிடம் பெறுவதனை அறிய முடிகின்றது. புறநானூற்றிலும், ஆண் குழந்தைக்கே முதன்மையிடம் அளிக்கப்பட்ட முறைமையினைக் கீழேக் காணலாம். இதனை;
“பொன் போல் புதல்வர் பெறாஅ தீரும்” (புறம். 9)
“அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை” (புறம். 92)
“முலைக் கோள் மறந்த புதல்வனொடு” (புறம். 211)
“புகழ்சால் புதல்வன் பிறந்த பின்வா” (புறம். 222)
“முனித்தலைப் புதல்வர் தந்தை” (புறம். 250 )
“புல் உளைக் குடுமிப் புதல்வன் தந்த” (புறம். 273)
என்ற பாடல் மெய்ப்பிக்கின்றது. மேற்கண்ட பாடலடிகளில், புதல்வன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளனவே தவிர, புதல்வி, மகள் என்று குறிப்பிடப்படவில்லை. ஆண் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அன்றைய சமூகத்தில் இறுதியில் ஒரு மகன் தனது தாயினை மட்டுமே உடனிருந்து பாதுகாக்கும் செய்தி நிறைய பாடல்கள் (புறம். 159, 254) உணர்த்துகின்றன.வயதான தந்தையைப் பாதுகாத்ததற்கான சான்றுகள் பதிவு செய்யப்படவில்லை.
விருந்தோம்பல்
சங்க காலத்தில் இல்லறத்தார் விருந்தறம் பேணுவதனைத் தம் வாழ்வியல் அறமாகவும், இல்லறக் கடமையாகவும் கருதி வாழ்ந்தனர். இதுபற்றி வள்ளுவர் கூறுகையில்,
“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத்தவர்க்கு” (குறள் - 86)
என்ற குறளின் வாயிலாக, வந்த விருந்தினரைப் போற்றி இனிவரும் விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன் வானுலகத்தில் உள்ள தேவர்களுக்கும் நல்ல விருந்தினன் ஆவான் என்று கருதி வாழ்ந்தனர். இத்தகைய விருந்தறம் பேண வேண்டுமெனில் பொருள் இன்றியமையாததாகின்றது. தன் குடும்ப வறுமை நிலையினைப் பிறர் அறிந்தால், தன் குடும்பத்திற்கு இழுக்கு என்று கருதினர். அதனால், தன் வீட்டிற்கு வந்த விருந்தினர்க்கு உணவிட விதைக்கு வைத்திருந்த தினையைப் பயன்படுத்தி விருந்து அளித்தனர். இதனை,
“சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்கள் உணக் கொள்த் தீர்ந்தெனக்
குறித்துமாறு எதிர்ப்பை, பெறா அமையின்
குரல் உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து” (புறம். 333)
என்ற அடிகளின் மூலம் வறுமையினைப் பிறர் அறியாதபடி மறைத்து இன்முகத்துடன் மனைவி விருந்தோம்பும் பண்பினை அறிந்து கொள்ள முடிகின்றது.
தாயின் இற்செறிப்பு
சங்க காலத்தில் களவு மணமே பெரும்பாலும் நடைபெற்றது. ஆதலால், தன் மகள் களவில் ஈடுபட்டு விடக்கூடாது என்ற காரணத்தினால் வீட்டிற்குள்ளேயேப் பாதுகாத்து வைப்பர். இவ்வாறு பாதுகாத்து வைப்பதே ‘இற்செறித்தல்’என்பர். புறநானூற்றில் மணமுடிக்கப் பெறாத கன்னியரைக் கட்டுப்பாட்டுடன் இல்லத்தில் அமர்த்தியமை,
“பாரி பறம்பின் பனிச் சுனை போலக்
காண்டற்கு அரியள்” (புறம். 337)
என்ற பாடலடி புலப்படுத்துகின்றது. மேலும், சங்கக் காலத்தில் இளைஞரை இற்செறித்து வைத்ததற்கான சான்றுகள் பதிவிடப் பெறவில்லை. மகளிர்க்கு இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காரணம், மகளிர் தம் ஒழுக்கத்திற்குக் குறைபாடு நேரிடும் என்பதைத் தவிர்க்கும் விதம் இற்செறிப்பு நடந்துள்ளது.
உறவு இழப்பு
மனித இழப்பு என்பது ஈடுஇணையில்லாத ஒன்றாகும். உறவைப் பொருத்தவரை பிரியமானவர்களின் நாம் இழந்தோமையானால் மனம் ஆழ்ந்த துக்கம் அடைகின்றது. புறநானூற்றில் போரினால் மகளிர் தம் தந்தை, கணவன், மகன் என்று அனைவரையும் இழக்கின்றாள். இதனால், மிகவும் பாதிப்பிற்குள்ளாவது பெண்ணே எனலாம். ஏனெனில், அவளது வாழ்வு ஆணை மையமிட்டே அமைகின்றது. இருப்பினும், போர்க்களத்தில் தன் மகன் வீர மரணம் அடைந்தான் என்பதனைக் கேட்டதும் தாய் மிகுந்த மகிழ்ச்சி கொள்ளும் தன்மையினை பின்வரும் பாடலில் காணலாம்.
“களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் ...” (புறம். 277)
“செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே” (புறம். 278)
என்ற பாடல் அடிகள், மகனின் வீரம் கண்டு பெருமிதம் கொள்ளும் தாயினையேப் படம் பிடித்துக் காட்டுகின்றன. மேலும்,
“வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
இடைப்படை அழுவத்துச் சிதைத்து வேறாகிய
சிறப்புடை யாளன் மாண்பு கண்டருளி
வாடுமுலை ஊறிச் சுரந்தன” (புறம். 295)
என்று மகனின் வீர மரணம் கண்டு மகிழ்ச்சியில் வற்றிய முலைப் பால் சுரந்ததாகவும் படைத்துக் காட்டுகிறார் ஔவையார்.
மற்றொரு பாடலில், ஒரு பெண் முதல் நாள் நடந்த போரில், தன் தந்தை யானை மேல் வேல் வீசிக் கொன்று தானும் வீழ்ந்தான். நேற்று நடந்த போரில் இவள் கணவன், பகைவர் கவர்ந்த பசுக் கூட்டங்களை மீட்டு, அவர்கள் மீண்டும் அவற்றைக் கவர வராமல் காத்துத் தடையாக நின்று போரிட்ட போது மடிந்து விட்டான். இன்று நடக்கும் போருக்குத் தனது ஒரே மகனையும் அனுப்பி வைக்கின்றாள். இதனை,
“நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநரை விலங்கி ஆண்டுப் பட்டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித் துஉடீஇப்… … ...
ஒரு மகன் அல்லது இல்லோள்
செரு முகம் நோக்கிச் செல்க என விடுமே” (புறம்.279)
என்ற அடிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.
இவ்வாறு கணவன், தந்தை என்று அனைத்து உறவுகளையும் ஒரு பெண் இழந்து நிற்கின்றாள். சங்க காலம் போர்க்காலச் சூழலினை மையமாகக் கொண்டு இயங்குவதால், போர்இனால் உறவுகளை இழந்தும், கைம்மை பூண்டு வாழும் பெண்களின் துயர நிலையினைக் கோடிட்டு காட்டுகின்றதே தவிர, பெண் மறுமணம் செய்வதாக முதன்மைப்படுத்திக் காட்டவில்லை.
மனைவி இறந்தபின் பிரிவாற்றாமல் கணவன் உயிர்விட்ட நிலை சங்ககாலத்தில் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், ஒரு பாடலில் மட்டும் மனைவி இறப்பிற்கு ஆற்றாது கணவன் துயருற்ற நிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை,
“ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை
இன்னும் வாழ்வல், என் இதன் பண்பே!” (புறம். 245)
என்ற அடிகளின் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.
பரத்தையர்
பரந்துபட்ட இன்பத்தைத் தருபவர் ‘பரத்தையர்’ என்கிறோம். இவர்களை பரத்தர் என்றும் அழைப்பதுண்டு. சங்க காலத்தில் ஆண்கள், கட்டிய மனைவியேயன்றிக் காம நுகர்ச்சிக்காக மீண்டும் ஒரு பெண்ணை மணந்து கொள்வதும் வழக்கமாக இருந்துள்ளது. இக்கருத்தினை இலக்கண நூலில்,
“பின்முறை ஆக்கிய பெரும்பொருள் வதுவைத்
தொன்முறை மனைவி எதிர்ப்பாடாயினும்” (தொல்.பொருள்.கற்பு.நூ.31)
என்ற நூற்பா வழி தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
புறநானூற்றில், பரத்தையை ‘விலைநலப் பெண்டீர்’ என்று குறிப்பிடுவர். ஏனெனில், இப்பரத்தையர் பொருள் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்கள் ஆகக் கருதினர். இச்செய்தியினை,
“முன்னோர் செல்வம் செல்லாது இன்னும்
விலைநலப் பெண்டிரின் பலர்மீக் கூற
உள்ளேன் வாழியர் யான்எனப் பல்மாண்
நிலமகள் அழுத காஞ்சியும்” (புறம். 365)
என்ற அடிகளின் வாயிலாகப் பரத்தமை என்பது பொருளீட்டக் கூடிய ஒரு வழியாகவே இருந்திருக்கின்றது என்பதையும் பரத்தையர் பொருட்பெண்டிராக இருந்த நிலையையும் அறிந்து கொள்ள முடிகின்றது.
கற்பு வாழ்வில் பெண்ணுக்குச் சிக்கலாக அமைபவள் பரத்தையே. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற தமிழர் கொள்கைப்படி வாழ்கின்ற தலைவன், தலைவியின் இனிமையான இல்லற வாழ்க்கையில் பரத்தை காரணமாகச் சிக்கல்கள் எழுகின்றன. அதாவது, கணவன் பரத்தை காரணமாகப் பிரிந்து சென்று விடுகின்றான். அவனுடைய வருகைக்காக மனைவி வீட்டில் ஆற்றியிருக்கின்றாள். இதனை,
“யாம் அவன் கிளைஞரேம் அல்லேம், கேள், இனி
எம் போல் ஒருத்தி நலன் நடந்து என்றும்
வரூஉம் என்ப வயங்கு புகழ்ப் பேகன்” (புறம். 144)
என்ற பரணர் பாடல் உணர்த்துகின்றது. இப்பாடலில் வழி பேகன் பரத்தையரிடம் சென்றதால் தலைவியின் மனநிலை மாற்றம் கொள்கின்றது. தலைவியை தன்னை விட்டு பரத்தையிடம் பேகன் பிரிந்த காரணத்தினால், தன்னை அழகுபடுத்திக் கொள்ளாமல் எந்த நேரமும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் மகளிர் நிலைஈண்டு புலனாகின்றது.
கைம்மையர் நிலை
திருமணத்திற்கு முன் ஒரு பெண் தன் தந்தையைச் சார்ந்து வாழ்ந்ததைப் போன்று திருமணம் முடிந்த பின் தன் கணவனைச் சார்ந்து வாழத் தலைப்படுகின்றாள். கணவன் இறந்த பின்னர் அவளை கைம்மை மகளிர் என்று அன்றைய சமூகம் ஒதுக்கி வைத்துள்ளது. உடலாலும், உள்ளத்தாலும் பெரும்பான்மை பாதிப்புக்குள்ளாகும் மகளிர்களுள் கைம்மையரே முதன்மையானவர் எனலாம். முற்காலத்தில் நோன்பின் மூலம், “கல்லானாலும் கணவன்” என்று கருதி தன் கணவனின் நினைவாக நடப்பட்ட நடுகல்லினையே கணவனாக எண்ணி மகளிஎ வாழ்ந்தமை புறநானூற்றில் பதிவாகிஉள்ளது. இதனை,
“… … … களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” (புறம். 335)
என்ற பாடல் மெய்ப்பிக்கின்றது.
இங்கு விழுப்புண்பட்டு வீழ்ந்த கணவனது பெயரும் பீடும் எழுதி, நட்ட கல்லைக் கடவுளாகக் கருதி வழிபடும் முறைமையினை அறியலாம். பெண்கள் மறுமணம் செய்து கொள்ளும் வழக்கம் அறியப்படவில்லை.
கணவன் சடலம் தீ மூட்டப்படும் போது, அந்தத் தீயில் மனைவி தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் தன்மையினை ‘உடன்கட்டை ஏறுதல்’ என்கிறோம். இந்து சமயச் சடங்காக இந்நிகழ்வு அமைகின்றது. புறப்பாடலில்,கணவன் இறந்த பின் தான் உயிர் வாழ முடியாது என்று எண்ணி, தன் கணவனுடன் சேர்ந்தே (உடன்கட்டை ஏறி) மகளிர் உயிர் நீத்துள்ளனர். இதனை,
“கோடு ஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப
மேலோர் உலகம் எய்தினன் எனாஅப் … … … ….
ஔ எரி நைப்ப உடம்பு மாய்ந்தது” (புறம்.240)
என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.
இன்னும் கைம்பெண்கள் அணிகலன்களைக் களைத்தல், ஒப்பனை நீக்குதல், உணவுக் கட்டுப்பாடுடன் வாழ்ந்தது மட்டுமின்றி, தனக்கென்று ஒரு குறிப்பிட்டத் தொழிலை மட்டுமே மேற்கொண்டனர். குறிப்பாக, நூல் நூற்கும் தொழிலில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். தம் வாழ்க்கையினை நடத்துவதற்கும் பொருள் ஈட்டுவதற்கும் ஒரு வாயிலாக இத்தொழிலினை மேற்கொண்டிருந்தனர் எனலாம். இதனை,
“பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன”(புறம் -125)
“பருத்திப்பெண்டின் சிறு தீ விளக்கத்து” (புறம் - 326)
என்ற அடிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.
குளிர்ந்த நீரிலே மூழ்கிட வேண்டும். நெய்யின்றி நீர் பிழிந்த பழைய சாதமே உண்ண வேண்டும். புளி போட்டுக் கடையப்பட்ட வேளைக்கீரையை உட்கொண்ட குறிப்பினை புறநானூற்றில் (புறம்.246)என்ற பாடலில் அறியலாம்.
முடிவுரை
இங்ஙனம், அன்றைய காலத்தில் ஆணாதிக்கம் மேலாங்கியதால் பெண்கள் ஆடவர் பாதுகாப்பில் வாழ வேண்டிய கட்டாயம் நிலவியது எனலாம். சங்ககாலத்தில் ஆண் குழந்தைக்கே முதன்மைத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், புதல்வர்கள் மட்டுமே போரில் பங்கேற்க முடியும். அது மட்டுமின்றி, தென்புலவாழ்நர்க்கு புதல்வர்கள் மட்டுமே இறுதிக்கடன் செய்ய முடியும். ஆதலால், ஆண் குழந்தைகளேப் பெரிதளவில் விரும்பப்பட்ட நிலையை அறிய முடிகிறது.போரின் காரணமாக, பெண், தன் தந்தை, கணவன், மகள் ஆகியோரை இழந்தது மட்டுமின்றி, தன் அடையாளத்தையும், தன் உறவுகளையும் இழந்து நிற்கின்றாள். கைம்மை நோன்பின் மூலம் தன் கணவர் மீது கொண்டிருந்த ஆழமான அன்பினையும், கணவரையேத் தம் வாழ்க்கையின் உயிராக மதித்திருந்த தன்மையையும், அவளுடைய கற்பின் மேன்மையும் வெளிப்படுத்துகின்றது.
பெண்கள் தன் கணவர் இறந்தவுடன் மறுமணம் செய்து கொள்ள வில்லை என்பதும், பெண்களுக்கு ஒரு தார மணமுறை இருந்ததனையும் அறிந்து கொள்ள முடிகிறது.
துணைநூற்பட்டியல்
1. ச.வே. சுப்பிரமணியன் தெளிவுரை, தொல்காப்பியம் எழுத்து சொல் பொருள், சாரதா பதிப்பகம், சென்னை.
2. புறநானூறு மூலமூம் உரையும், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை.
3. பரிமேலழகர் உரை, திருக்குறள், கங்கை புத்தக நிலையம், 13, தீனதயாளு தெரு, தியாகராஜா நகர், சென்னை -17.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.