கம்பராமாயணத்தில் வாழ்த்துதல்
முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.
முன்னுரை
சங்க இலக்கியங்களில் மன்னர்களைப் புலவர்கள் வாழ்த்திப் பாடல்கள் பாடினர். அவ்வாறு வாழ்த்தும் போது, ஒரு சில சொற்களால் வாழ்த்தும் மரபையே அவர்கள் மேற்கொண்டிருந்தனர் என்பதைப் பாடல் அடிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நீண்ட ஆயுளோடும், நீண்ட புகழோடும் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார். சங்க இலக்கியங்கள் மட்டுமல்லாமல், பரவலாக அனைத்து இலக்கியங்களிலும் மன்னனையும், மக்களையும் வாழ்த்தும் மரபைக் காணமுடிகிறது. கம்பராமாயணத்தில் வாழ்த்தும் மரபு பரவலாகக் காணப்படுகிறது. கம்பராமாயணத்தில் வாழ்த்தும் மரபு குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.
வாழ்த்தும் முறைகள்
பிறரை வாழ்த்தும் போது சில மரபுகளை அவர்கள் பின்பற்றி வந்துள்ளனர்.
1. உயர்ந்த மலைகளாகிய இமயமும், பொதிகையும் நீண்ட நாள் வாழ் என்று வாழ்த்துவதற்குப் பயன்படுத்தினர். அரசர்கள் புகழோடு நீண்ட நாள் வாழ ஞாயிறு திங்களும், உடன் ஏய்த்தும், தனித்தும் கூறப்பட்டுள்ளது.
2 அரசர்களின் முன்னோர்களின் சிறப்பை எடுத்துக் கூறி அது போலவே சிறப்புடனும், புகழுடனும் வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றனர்.
3. நீண்ட ஆயுள் உடையவர்களாக வாழ வேண்டும் என்று வாழ்த்தும் போது, ஒரு சில எண்ணிக்கை மரபுகளையும் கடைபிடித்தனர்.
மழைத்துளிகளைப் போலவும், மணல் பெருக்கைப் போலவும், நெல் குவியலைப் போலவும் விண்மீன்களைப் போலவும் என்று வாழ்த்தினர். கபிலர் பாடலில் பரிசிலாகப் பெற்ற ஊர்களும் எண்ணிக்கைப் பொருளாக வாழ்க்கையில் கூறப்பட்டுள்ளது.
சங்க இலக்கியங்களில் வாழ்த்துதல்
சங்க இலக்கியங்களில் மன்னர்களைப் புலவர்கள் வாழ்த்திப் பாடல்கள் பாடினர். பண்ணன் என்ற வள்ளலைக், கிள்ளிவளவன் என்ற மன்னனே வாழ்த்தியதையும், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதியை, நெட்டிமையார் வாழ்த்தியதையும், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சியநன்மாறனை, மதுரை மருதனளநாகனார் வாழ்த்தியதையும், பாண்டியன் கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதியை, இரும்பிடர்த்தலையார் பாடும் போது மன்னனுக்குப் பல சிறப்புகள் இருப்பினும், அவன் மனைவி கற்புடையவளாக இருப்பது தனிச்சிறப்பு. எனவே, அதையும் புலவர்கள் வாழ்த்தினர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை, ஆவூர்மூலங்கிழார் வாழ்த்தினார் என்பதனைச் சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது.
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய
சிறுகுடிகிழான் பண்ணன் என்பவன் பசி என்று வருபவர்களின் பிணியைத் தீர்த்து வைப்பவன். எறும்புகள் எப்படி சாரைசாரையாக உணவைக் கொண்டு போகுமோ, அவ்வாறு சோறுடைக் கையினராய் பெருஞ்சுற்றத்தோடும், பிள்ளைகள் பசிப்பிணி நீங்கிச் செல்வர். அப்பேர்ப்பட்ட சிறுகுடிக்கிழான் பண்ணன் என்னுடைய வாழ்நாளையும் பெற்று வாழ்வானாக என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் வாழ்த்தினான்.
“யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய” (புறநானூறு 173:1)
நீண்ட நாள் வாழ வாழ்த்துதல்
செம்பொன்னைக் கூத்தர்க்கு வழங்கிக் கடல் விழா எடுத்த நெடியோனால் உண்டாக்கப்படும் பஃறுளி யாற்றின் மணலினும் நெடியபல காலம் வாழ்வானாக என்று பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதியை, நெட்டிமையார் வாழ்த்துகிறார்.
“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே” (புறநானூறு 9: 9-11)
நுண்ணிய மணலைக் காட்டிலும் பல காலம் வாழ்க
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சியநன்மாறனை, மதுரை மருதனிளநாகனார் பாடும் போது, ஞாயிறு போன்ற ஆண்மையும், திங்கள் போன்ற கருணையையும், வானத்தைப் போன்ற வண்மையும் ஆகிய மூன்றும் உடையையாகி வாழ்க. நெடுந்தகையை, தாழ்ந்த நீரை உடைய கடலின் திரைகள் அலைக்கும் இடம் திருச்சீர் அலைவாய் எனப்படும் செந்தில் ஆகும். இங்கே நெடிய வேளாகிய முருகவேள் நிலை பெற்றிருக்கின்றான். இந்த இடம் மிக அழகான அகன்ற துறையை உடையது. இத்துறையில் பெருங்காற்று கொண்டு வந்து மணலைத் திரட்டும். இந்த மணல்மேட்டில் ஆங்காங்கே வடுக்கள் அழுந்தியிருக்கும். இந்த மேட்டில் சூழ்ந்துள்ள நுண்ணிய மணலைக் காட்டிலும் பல காலம் வாழ்க என வாழ்த்தினான்.
“ஞாயிற்று அனை வெந் திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தன்பெருஞ் சாயலும்,
வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,
உடையை யாகி இல்லோர் கையற,
நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறை
கடு வளி தொகுப்ப ஈண்டிய
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே“ (புறநானூறு 55:13-21)
மனைவி கற்புடையவளாக இருக்க வாழ்த்துதல்
பாண்டியன் கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதியை, இரும்பிடர்த்தலையார் பாடும் போது, அரசனுக்கு இருக்க வேண்டியப் பல்வகை குணங்களையும் கூறிப் போற்றுகிறான். வெண் கொற்றக்குடை, வீர முரசம், ஈரமுடைய நெஞ்சம், ஒள்ளிய வாள், தறுக்கண்மை, தேவையறிந்து இரப்போர்க்கு ஈதலாகிய ஒழியாத வண்மைப் பண்புடைய மன்னனை வாழ்த்தும் போது, "செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ" என்று கூறுவதால் எல்லாப் பண்புகளுடன் மனைவி குற்றமற்ற கற்புடையவளாக இருக்க வேண்டுவதும் இன்றியமையாதது. (புறநானூறு 3)
நின் புதல்வர் நோயிலராகுக என்று வாழ்த்துதல்
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை அணுகிப் பரிசில் வேண்டி ஆவூர்மூலங்கிழார் நிற்கிறார். அரசனோ புலவருக்குப் பரிசில் கொடுக்கவில்லை. அந்த நிலையிலும் அவனை நின் வாழ் சிறக்க, நின் புதல்வர் நோயிலராகுக என்று வாழ்த்துகிறார்.
“புகழ் குறைபடுஉம் வாயில் அத்தை
அனைத்து ஆகியர், இனி, இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம், அதனால்
நோய் இலராக நின் புதல்வர், யானும்” (புறநானூறு 196; 7-10)
பதிற்றுப்பத்தில் வாழ்த்துதல்
பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தில் பாலைக் கோதமனார் சேரமன்னன் குணங்களைப் புகழ்ந்து, அவனையும் அவன் செல்வத்தையும் ‘நின் செல்வமும், நின் வாழ்நாளும் வாழ்வனவாகுக’ என்று வாழ்த்துகிறார்.
"அயிரைப் பொருந" என விளித்து ' மனைவியொடு ஆயிரம் வெள்ளம் வாழிய" என வாழ்த்துவதிலிருந்து அவன் அயிரை மலைக்கு உரிமையுடையவனாக இருந்தான் என்பது தெரிகிறது.
“அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவ த்து
வேய் உறழ் பணைத்தோள், இவளொடு
ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே” (பதிற்றுப்பத்து 21;36-39)
பதிற்றுப்பத்து நான்காம் பத்தில் காப்பியாற்றுக் காப்பியனார், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலை,
‘வாழ்க நின் வளனே நின்னுடை, வாழ்க்கை’ (பதிற்றுப்பத்து 37;1)
என்றும், பிறருக்குப் பகுத்துண்ணும் உணவை இரவலர்க்குச் சேரும் வகையில் கொடுத்த ஆண்மையுடைய நீ, பிறர்க்கென வாழ்த்தி என்று வாழ்த்துகின்றார்.
பதிற்றுப்பத்து ஏழாம் பத்தில் செல்வக்கடுங்கோவாழியாதனை, கபிலர் 'செல்வத்தையுடைய அரசே, சேரர்குடியில் வழித்தோன்றலாயுள்ளாய். கடலாகிய எல்லையையும் அகன்ற இடத்தையுமுடைய உலகத்து நன்மக்கள் செய்த அறம் உண்டாயின் அடை அடுத்தலை அறியாத பூக்கள் அரிதாகிய பல ஆம்பல் என்னும் எண்ணும் ஆயிரத்தாற் பெருக்கிய வெள்ளம் என்னும் எண்ணும் ஆகிய எண்களின் அளவுள்ள பல ஊழிகள் நீ வாழ்வாயாக” என்று வாழ்த்துகிறார்.
“அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல்
ஆயிர வெள்ள ஊழி
வாழி, ஆத, வாழிய பலவே” (பதிற்றுப்பத்து 63;20-21)
அருவிகள் பெரியனவாகிய உச்சியையுடைய சிகரங்கள் தோறும் நிறைந்து விளங்கும் அயிரையென்றும் உயர்ந்த மலையைப் போல நீ வாழும் நாள் அழிவில்லாததாகுக என்று வாழ்த்துகிறார்.
“முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும்
அயிரை நெடுவரை போல,
தொலையாதாக, நீ வாழும் நாளே” (பதிற்றுப்பத்து 70;25-27)
அயிரைமலையைப் போல வாழ்க" எனப் போற்றியுள்ளார்.
பதிற்றுப்பத்து எட்டாம்பத்து அரிசில்கிழார், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையை, கொற்றவை வாழும் இடமாகிய அயிரமலையைப் பொல நிலைபெற்று, நின்னுடைய புகழ் அழிவில்லாமல் விளங்குக என்று வாழ்த்துகிறார்.
“மடை எதிர் கொள்ளா அஞ்சுவரு மரபின்,
கடவுள் அயிரையின் நிலைஇ,
கேடு இலவாக, பெரும, நின் புகழே” (பதிற்றுப்பத்து 79;17-19)
கம்பராமாயணத்தில் வாழ்த்துதல்
கம்பராமாயணத்தில், சீதை அனுமனை வாழ்த்துதல், இராமன் வீடணனை வாழ்த்துதல், இராமன் அனுமனை வாழ்த்துதல், மக்கள் இராமனை வாழ்த்துதல், தாரை வார்த்துக் கொடுத்து வாழ்த்துதல், பரசுராமர் இராமனை வாழ்த்துதல், அவையோர் பரதனை வாழ்த்துதல், இராவணனைத் தேவமாதர்கள் வாழ்த்துதல், நரசிங்கப் பெருமாள் பிரகலாதனை வாழ்த்துதல், அனுமன் சீதையை வாழ்த்துதல், தேவர்கள் இராமனை வாழ்த்துதல், இந்திரஜித் இராவணனை வாழ்த்துதல் என்று பல வாழ்த்துகளைக் காணமுடிகிறது.
சீதை, அனுமனை வாழ்த்துதல்
இராமன் அனுமனிடம் அடையாள மோதிரத்தைக் கொடுத்தனுப்பினார். அந்த மோதிரத்தை அனுமன் தரப் பெற்றுக் கொண்ட சீதை, போன உயிர் மீண்டும் பெற்றவர்கள் போலவும், இழந்த செல்வத்தைப் பெற்றவர்கள் போலவும், குழந்தை பெற்ற மலடி போலவும் ஆனந்தக் கடலில் மூழ்கி, மோதிரத்தைக் கையில் வாங்கி தன் மார்பில் வைத்தாள். தலை மீது வைத்தாள். கண்ணில் நீர் பெருகினால் வாய் திறந்து பேச வைத்தாள். ஆனால் பேச முடியாமல் போனது. இராமனின் மோதிரத்தால் சீதையின் மேனியில் புதியதோர் பிரகாசம் ஏற்பட்டது. கண்ணீர் சிந்திய வண்ணம்,
“உத்தமனே, நீ எனக்கு உயிர் தந்தாய். துணை இல்லாமல் என் துன்பத்தைத் தீர்த்த வள்ளலே, நீ வாழ்வாயாக, நான் கற்பு நிலையில் களங்கமற்றவளாக இருந்தால் பல யுகங்கள் ஒருநாள் என்று சொல்லப்படும் ஆண்டுகள் எல்லாம் 14 உலகங்களும் அழியும் காலத்திலும் கூட, இன்று போல் என்றும் இருப்பாயாக” என்று சீதை அனுமனை வாழ்த்தி வரம் அளித்தாள்.
“ஊழி ஓர்பகலாய் ஓதும் யாண்டுஎலாம் உலகம் ஏழும்
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என இருத்தி என்றாள்" (உருக்காட்டுப்படலம் 559)
இராமன் வீடணனை வாழ்த்துதல்
வீடணன், இராமனிடம் தன்னை அடைக்கலப்படுத்தினான். அப்பொழுது இராமன்,
“பதினான்கு உலகங்களும், என் பெயரும் எவ்வளவு காலம் வரை இருக்குமோ, அந்தக் கால எல்லை வரை அரக்கர் வாழ்கின்ற ஆழ்ந்த கடலில் நடுவண் அமைந்திருக்கின்ற இலங்கை அரசை உனக்குத் தந்தேன். ஆட்சி புரிவாயாக” என்றான்.
“ஆழியான் அவனை நோக்கி அருள் சுரந்து உவகை கூர
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எந்நாள்
வாழும்நாள் அன்றுகாறும் வாள் எயிற்று அரக்கர் வைகும்
தாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன் என்றான்" (வீடணன் அடைக்கலப் படலம் 444)
இராமன் அனுமனை வாழ்த்துதல்
“இந்திரசித் பிரம்மாத்திரத்தை விடுத்த இந்த நாளில், எவரும் இறக்காமல், எம்மொடு இருந்து நீண்ட காலம் வாழுமாறு அருளினாய். இங்ஙனம் அருளிய நீ, துன்பம் விளைவிக்கக் கூடிய பிணி ஒன்றையும் அடையாது இன்பமாக என் ஏவலால் என்றும் வாழ்வாயாக”
என்று இராமன் வாழ்த்தினான்.
“இன்று வீகலாது எவரும் எம்மொடு
நின்று வாழுமா நெடிது நல்கினாய்
ஒன்றும் இன்னல்நோய் உறுகிலாது நீ
என்றும் வாழ்தியால்இனிது என் ஏவலால்” (மருந்துமலைப் படலம் 2757)
இராவணன் வீடணனை நோக்கி வேலை செலுத்த, அடைக்கலப் பொருளைக் காக்க வேண்டும் என்று எண்ணிய இலட்சுமணன், அந்த வேலைத் தன் மார்பில் ஏந்தி மயக்கமடைந்தான். அனுமன் மருத்துவமலையைக் கொண்டு வந்து மயக்கத்தைத் தெளிவித்தான். இதைச் செவியுற்ற சாம்பவான் அனைத்தையும் இராமனிடம் கூற, இராமன் அனுமனைத் தொடர்ச்சியாகத் தழுவிக் கொண்டு,
“உன்னைப் பெற்றேன் பெருமையுடையவனே, நான் பெறாதவை எவை? பின்னும் சற்றும் இடையூறில்லாத ஆயுளைப் பெறுவாயாக”
என்று வாழ்த்தினான்.
“பெற்றனென் என்னை பெறாதன பெரியோய் என்றும்
அற்ற இடையூறு செல்லா ஆயுளை ஆக என்றான்” (வேல் ஏற்றப்படலம் 3516)
மக்கள் இராமனை வாழ்த்துதல்
இராமன் சிறுவனாக இருக்கும் போதே, தமக்கு எதிர்ப்பட்ட நகர மாந்தர்களைக் கண்டு என்ன தொழில் செய்து கொண்டிருக்கிறீர்கள்? நலமாக இருக்கிறீர்களா? மனைவியும், குமாரரும் நலமாக இருக்கிறார்களா? என்று விசாரித்து வருவான். அதற்கு அவர்கள்.
“ஐயா அப்படியே உம்மை அரசராகப் பெற்ற எங்களுக்கு, இவைகள் ஒரு பொருள் அல்ல, நீர் எங்கள் உயிரோடு ஏழு உலகங்களையும், ஒரு பிரம்மகற்ப அளவும் பெற்று வாழ்வீராக”
என்று பதில் கூறினார்கள்.
இங்கு, மனிதர்களுக்கு ஒரு வருடம் - தேவர்களுக்கு ஒரு நாள்,
தேவர்களுக்கு ஒரு வருடம் - பிரம்மாவிற்கு ஒரு நாள்
பிரம்மாவிற்கு 100 ஆண்டாவது - ஒரு பிரம்மகற்பம் ஆகும்.
அது ஐய நின்னை மலரான் உறுப்புகள் என்று கூறி வாழ்த்தினார்கள்.
“அஃது ஐய நின்னை எமது அரசு என உடையோம்
இஃது ஒரு பொருள் அல எமது உயிருடன் ஏழ்
மகிதலம் முழுதையும் உறுகுவை மலரோன்
உகு பகல் அளவு என உரை நனி புகல்வார்“ (திருஅவதாரப்படலம் 313)
தாரை வார்த்துக் கொடுத்து வாழ்த்துதல்
திருமணத்தில் ஜனகன், சீதையை, இராமனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்த பொழுது ஜனகன், இராமனுக்கு முன்னால் வந்து, சீதையின் கையை இராமன் கை மேல் வைத்து,
“இவளை உனக்கு மணவாட்டியாகக் கொடுத்தேன். திருமாலும், மகாலட்சுமியும் போல் நீ என் மகளோடு நிலைபெற்று வாழ்வாயாக”
என்று வாழ்த்தி அவனது கையில் தாரை வார்த்துக் கொடுத்தான்.
“கோமகன் முன் சனகன் குளிர் நல் நீர்
பூ மகளும் பொருளும் என நீ என்
மா மகள் தன்னொடும் மன்னுதி என்னா
தாமரை அன்ன தடக் கையின் ஈந்தான்” (கடிமணப்படலம் 1192)
பரசுராமர், இராமனை வாழ்த்துதல்
பரசுராமர் இராமனிடம்,
“இராமனே நீ நினைத்த செயல்கள் எல்லாம் எளிதில் கைகூடப் பெறுவனவாகுக”
என்று வாழ்த்தி விடைபெற்றுச் சென்றார்.
“எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக
மண்ணிய மணி நிற வண்ண வண்துழாய்க்
கண்ணிய யாவருக்கும் களை கண் ஆகிய
புண்ணிய விடை எனத் தொழுதுபோயினான்” (பரசுராமப்படலம்1248)
அவையோர், பரதனை வாழ்த்துதல்
பரதன், காடு சென்ற இராமனை அழைத்து வந்து, நாடாளச் செய்வேன் என்று கூறியபோது, அவையோர் பரதனை வாழ்த்தினார்கள்.
“அரசு செலுத்தியும், தர்மங்களைக் காத்தும், யாகங்கள் செய்தும் ஒருவன் புகழ் சம்பாதிக்க வேண்டுமா? உன்னைப் போல் அறத்தின் வழி நின்றால், அதுவே சாலும். ஆகையால் பதினான்கு உலகங்கள் அழிந்தாலும், உன் புகழ் அழியாது நிற்பதாகும்”
என்று வாழ்த்தினர்.
"ஆழியை உருட்டியும் அறங்கள் போற்றியும்
வேள்வியை இயற்றியும் வளர்க்க வேண்டுமோ
ஏழினோடு ஏழ்எனும் உலகம் எஞ்சினும்
வாழிய நின் புகழ் என்று வாழ்த்தினார்" (ஆறு செல் படலம் 945)
இராவணனை தேவமாதர்கள் வாழ்த்துதல்
கங்கை முதலாகிய தெய்வத்தன்மை பொருந்திய தேவ மாதர்கள் அனைவரும், தங்கள் கைகளில் அரிசியையும், மலர்களையும் கொண்டு வந்து இராவணன் மேல் விரைத்து மங்கல மொழிக் கூறி வாழ்த்தினர்.
"கங்கையே முதலிய கடவுட் கன்னியர்
கொங்கைகள் சுமந்து இடைக் கொடியின் ஒல்கிட
செங்கையில் அரிசியும் மலரும் சிந்தினர்
மங்கல முறை மொழிகூறி வாழ்த்தவே" (சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 572)
நரசிங்கப் பெருமாள், பிரகலாதனை வாழ்த்துதல்
நல்ல தருமமும், உண்மையும் நான்கு வேதங்களும், நல்ல கிருபையும் அளவில்லாத அறிவும், எல்லையற்ற எல்லாப் பொருள்களும், எட்டு குணங்களும் நீ சொன்ன சொற்படி தொழிலைச் செய்வனவாகுக, நீ என்னைப் போலவே சிறப்புற்று வாழ்வாயாக என்று வாழ்த்தினார்.
"நல்லறமும், மெய்ம்மையும் நான் மறையும், நல்லருளும்,
எல்லையிலா ஞானமும், ஈறுஇலா எப் பொருளும்
தொல்லை சால் எண் குணனும் நின் சொல் தொழில் செய்ய
மல்லல் உரு ஒளியாய் நாளும் வளர்க நீ" (இரணியன் வதைப்படலம்302)
இராமபிரான் வீடணனை அறிவுரை வழங்கி வாழ்த்துதல்
இராமன், வீடணனுக்கு அறிவுரைப் பகன்ற பின் அனுமனை நோக்கினான். தன் மாற்றான் தாயாகிய கைகேயியின் சொல்லை மேற்கொண்டு வனம் புகுந்தவனாகிய இராமபிரான், வீடணனை நோக்கி,
“உயர்ந்த கீர்த்தியை உடையவனே என்று புகழ்ந்து அவனுக்கு வேண்டிய பல நீதிகளையும் எடுத்துரைத்து, நீ உன் சுற்றத்தோடு நிலைபெற்று வாழ்வாயாக”
என்ற சொல்லின் வலிமை பொருந்திய அனுமனை நோக்கினான்.
"பன்னும் நீதிகள் பல்பல கூறி மற்று
உன்னுடைத் தமரோடு உயர் கீர்த்தியோய்
மன்னி வாழ்க என்றுரைத்து ஆடல் மாருதி
தன்னை நோக்கினான் தாயர் சொல் நோக்கினான் "
(மீட்சிப்படலம் 3905) “எளியவள் போன்று இருந்த தாயே, உனக்கு மங்கலம் உண்டாகுக. அணிகலன்கள் அணிந்தவளே, உனக்கு மங்கலம் உண்டாகுக. நீ வாழ்வாயாக. உனக்கு மங்கலம் உண்டாகுக. கொடுமை கடல் போன்றவனாகிய இராவணனை, இராமனாகிய முகப்படாம் அணிந்த யானையானது மிதித்துக் கொன்றது, ஆதலால், உனக்கு மங்கலம் உண்டாகுக”
என்று கூறி அனுமன், சீதையை வாழ்த்தினான்.
"ஏழை சோபனம், ஏந்திழை சோபனம்
வாழி சோபனம் மங்கல சோபனம்
ஆழி ஆன அரக்கனை ஆரியச்
சூழியானை துகைத்தது சோபனம்" (மீட்சிப்படலம் 3908)
மூல பல வதைப்படலத்தில் இராமன் போர்க்கோலம் பூண்டதைக் கண்ட தேவர்கள் அவனை வாழ்த்தினர்.
“உலகுக்குக் கண் போன்றவனே, எளியேனாகிய எங்களுக்கு ஒரு கவசம் போன்று நின்று காப்பவனே, கடல் போன்ற கரிய நிறத்தை உடையவனே, தருமத்தின் வாழ்வாக உள்ளவனே, வேதம் உணர்ந்தவர்களுக்கு வலிமையாகி இருப்பவனே, உம்மைத் தவிர வேறொருவர் இந்த மூலபலவதைப் படைகளுக்குப் பின் வாங்காமல் எதிர்த்து நிற்க முடியுமோ? எங்கள் எண்ணமாகிய அரக்கர் அழிவை முடித்துத் தருவாயாக”
என்று தேவர்கள் எல்லோரும் வாழ்த்துக்களைக் கூறினர்.
"பனிவரு கண்ணர் விம்மிப் பதைக்கின்ற நெஞ்சர் பாவத்து
அனைவரும் தோற்க அண்ணல் வெல்க என்று ஆசி சொன்னார்" (மூலவதைப்படலம் 3309)
அனுமனைப் பிடிக்கச் சென்ற அக்ககுமரன் இறந்ததை அறிந்த இந்திரஜித் கோபம் கொண்டான். அழுதான் என்றாலும், அக்குரங்கைப் பிடித்தல் தன் கடமை என்று எண்ணினான்.
"ஆயினும் ஐய நொய்தின் ஆண் தொழில் குரங்கை யானே
ஏ எனும் அளவில் பற்றித் தருகுவென் இடம் என்று ஒன்றும்
நீ இனி உழக்கற்பாலை அல்லை நீடு இருத்தி என்னா
போயினன் அமரர் கோவைப் புகழொடு கொண்டு போந்தான்" (பாசப்படலம் 994)
”தன் தந்தைக்கு நீ இனிமேல் எந்தவிதத் துன்பமும் அடையத் தேவையில்லை நீ நீண்ட காலம் வாழ்க” என்று இராவணனிடம் கூறி இந்திரஜித் புறப்பட்டான்.
சங்க இலக்கியங்களில் மன்னர்களைப் புலவர்கள் வாழ்த்திப் பாடல்கள் பாடினர். நீண்ட ஆயுளோடும், நீண்ட புகழோடும் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார். சங்க இலக்கியங்கள் மட்டுமல்லாமல் பரவலாக அனைத்து இலக்கியங்களிலும் வாழ்த்தும் மரபைக் காணமுடிகிறது. கம்பராமாயணத்தில் சீதை, அனுமனை வாழ்த்துதல், இராமன், வீடணனை வாழ்த்துதல், இராமன், அனுமனை வாழ்த்துதல், இராமனை, மக்கள் வாழ்த்துதல் , தாரை வார்த்துக் கொடுத்து வாழ்த்துதல் , பரசுராமர், இராமனை வாழ்த்துதல், அவையோர் பரதனை வாழ்த்துதல், இராவணனை, தேவமாதர்கள் வாழ்த்துதல், நரசிங்க பெருமாள், பிரகலாதனை வாழ்த்துதல், அனுமன், சீதையை வாழ்த்துதல், தேவர்கள், இராமனை வாழ்த்துதல்,, இந்திரஜித், இராவணனை வாழ்த்துதல் என்று பலர் வாழ்த்துக்களைக் கூறினர் என்பதைக் கம்பராமாயணத்தின் வழி நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
1. கமலக்கண்ணன். இரா.வ,நாலாயிர திவ்வியப் பிரபந்தம் மூலமும் விளக்கவுரையும் தொகுதிI,II தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை-1963.
2. கருப்பையா பழ., எல்லைகள் நீத்த இராமகாதை, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.
3. கருத்திருமன். பி,சி.கம்பர் கவியும் கருத்தும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2018.
4. காசி. ஆ, கம்பரும் திருத்தக்கதேவரும்,தமிழ்ச்சோலைப் பதிப்பகம்,சென்னை, 2010.
5. காலமும், கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம் புதுச்சேரி, சென்னை,
6. சக்தி நடராசன்.க, கம்பரின் கை வண்ணம், சரசுவதி பதிப்பகம், ஆர்க்காடு, 2017,
7. சாரதாம்பாள்.செ., இலக்கியமும் உளப்பகுப்பாய்வும், ஹரிஹரன் பதிப்பகம், தென்றல் நகர், மதுரை, 2004.
8. ஞானசம்பந்தன் அ.ச, இராமன் பன்முகநோக்கில் சாரு பதிப்பகம், சென்னை, 2016.
9. ஞானசந்தரத்தரசு அ. அ,கம்பன் புதிய தேடல் ,தமிழ்ச்சோலைப்பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
10 தமிழ்நேசன் கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, வள்ளி பதிப்பகம், சென்னை,2 019.
11. பழனிவேலு. தா, காலத்தை வென்ற கம்பன், பல்லவி பதிப்பகம், ஈரோடு. 2021.
12. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.