ஆற்றுப்படை நூல்களில் சமத்துவம் - சகோதரத்துவம்
முனைவர் மா. பத்மபிரியா
உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,
தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்னம் மகளிர் கல்லூரி, சிவகாசி.
முன்னுரை
பொருளைப் பங்கீடு செய்யும் குணம் ஆதி மனிதனின் சிறப்பு அடையாளமாகும். தனக்குக் கிடைக்கும் எத்தகையப் பொருளாக இருந்தாலும், தத்தமக்குள் பிணைக்கப்பட்ட மாந்தர் தம் தேவைக்கு ஏற்பப் பிரித்துக் கொடுத்தமையை இலக்கியச் சான்றாதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. அவர் தம் குழு ஒருங்கிணைவின் வழி சங்கிலித் தொடராக உணவுப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தமை குறித்து ஆற்றுப்படை இலக்கியங்கள் ஆவணப்படுத்தத் தவறவில்லை. உணவின் தேவைக்கு ஏற்றவாறு குழுவாக இணைவதும், குழுவாகப் பயணப்படுவதுமாக இருந்துள்ளனர். செல்வவளம் உள்ள கொடைவள்ளல் தந்த பரிசிலைப் பெற்ற கூத்தன், பாணன், பொருநன், விறலி என்ற கலைஞர்கள் தன்னை ஒத்த சகக் கலைஞர்களிடம் சகோதர உணர்வுடன் நடந்து கொண்டுள்ளனர். திசைமாறி அலையும் வறுமையுற்ற கலைஞன் மீது பரிசில் பெற்றவன் மிகுந்த பரிவு கொண்டுள்ளான். தன் கலைத்திறனைப் பாராட்டிப் பரிசு வழங்கிய வள்ளலின் இருப்பிட முகவரியை நில வரைபடமிட்டுக் காட்டுகிறான். பொருள் வழங்கும் வள்ளலிடம் சென்றால், வறுமை தீரும் என்று சகோதர உணர்வுடன் நம்பிக்கை ஊட்டுகிறான். அத்தகையத் தலைவனிடம் செல்வதற்கான வழித்தடத்தையும் தன்னை ஒரு பயண வழிகாட்டி போல பாவனை செய்து விரிவாகக் கூறுகிறான். இத்தகைய உணர்வு நிலையானது ஆண் –பெண் இருபாலரிடையே சமத்துவ – சகோதரத்துவ நிலையினைச் சுட்டுவதாக இக்கட்டுரை வழி ஆராயப்படுகின்றது.
ஆற்றுப்படைக் கலைஞர் என்னும் வழிகாட்டுனர்
மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது பயணமாகும். ஆற்றுப்படை என்பது சங்கச் சான்றோர்கள் பாடிய பாட்டு வகைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனைப் பயணப்பாட்டு என்றும் கூறலாம். ஆற்றுப்படையை ஆறு + படை என்று பிரித்தால் ஆறு என்பது வழியாகும். படை என்பது படுத்தலாகும். ஒருவர் மற்றொருவரை வழிப்படுத்தலாகும். தொல்காப்பியர் ஆற்றுப்படைக்கான இலக்கணத்தைப் பின்வருமாறு வரையறுத்துள்ளார்.
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்” (1)
கூத்தர் என்போர் நாடகக் கலைஞர்; பாணர் என்போர் இசைக்கலைஞர்; பொருநர் என்போர் பாடலிலும் நடித்தலிலும் வல்லவர்.போர்க்களத்தைச் சிறப்பித்துப் பாடுபவரும் பொருநர் என்றழைக்கப்படுவர். விறலி என்பவள் ஆடல், பாடல், நடித்தல் கலைகளில் வல்லமை பெற்ற பெண்ணிற்கான சிறப்புப் பெயராகும். இத்தகைய கலைக்குழுவினர் உதவும் மனநிலையில் சகோதரப் பாசத்துடன் தான் பெற்ற வளங்களை அறிவித்து, பிறரை பயனடையச் செய்துள்ளனர். ஆற்றுப்படை என்னும் துறை அறம் போற்றும் பண்பினைக் கொண்டுள்ளது. “ஆற்றுப்படை என்ற இத்துறை அறப்பண்பு மிக்க வறியோர்க்குத் தம்பால் உள்ளனவெல்லாம் உவந்தீயும் வள்ளல்களைப் புகழ்ந்து பாடுதற்கென நல்லிசைப் புலவர்கள் வகுத்துக் கொண்டதொரு புலனெறி வழக்கமாகும். உயரிய மக்கட் பிறப்பெய்தியோர் அப்பிறப்பின் பெருமைக்கேற்ற செயலாக ஈகை தலைசிறந்ததொன்று” (2) என்று அறிஞர் மாணிக்கவாசகர் கூற்று கவனிக்கத்தக்கது.
• பொருநராற்றுப்படை குறிப்பிடும் வள்ளல் - சோழன் கரிகாற்பெருவளத்தான்.
• சிறுபாணாற்றுப்படை குறிப்பிடும் வள்ளல் - ஓய்மாநாட்டு நல்லியங்கோடன்
• பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடும் வள்ளல் - தொண்டைமான் இளந்திரையன்.
• கூத்தராற்றுப்படை குறிப்பிடும் வள்ளல் - நன்னன்சேய் நன்னன்
வறுமையில் அலைந்த மனிதர்களுக்கு உணவு முதல் அடிப்படைத் தேவைகளை வழங்கியவர்கள் இச்சான்றோர்கள் ஆவர்.
ஒரு நாட்டின் தலைவன் என்ற எண்ணம் இல்லாது சமத்துவ உணர்வுடன் இருந்துள்ளனர். வரவேற்பு முதல் பரிசில் தந்து வழி அனுப்பதல் வரை கலைஞர்களுடன் உரையாடிய தன்மை சமத்துவ சிந்தனை கொண்ட அரசர்களையே நமக்குப் பகர்கின்றது. தலைவன் சமத்துவம் காட்டியது போல, கலைஞர்கள் சகோதர உணர்வு காட்டியுள்ளனர். ஒரு கலைக்குழுவினர் மற்றவருக்குச் சகோதர உணர்வுடன் வழிமுறையையும் காட்டியுள்ளனர். ஆற்றுப்படையில் குறிப்பிடப்படும் கலைஞர்கள் ஒருவர் மற்றொருவருக்கு வழிகாட்டுனராக இருந்துள்ளனர். “ஓரிடத்தைப் பற்றியோ ஒரு நிகழ்ச்சியைப் பற்றியோ, முற்றிலும் புதியவர்களுக்குப் புரியும்படியாக அவர்களுக்குத் தெரிந்த மொழியில் எடுத்துரைத்து வழிகாட்டுபவரே வழிகாட்டி எனலாம்” (3) அத்தகையக் கலைஞர்கள் யார்? அவர்களுக்கு எப்பெயர்கள் வழங்கப்பட்டன என்பது ஆராய்ந்து நோக்குங்கால் கலையின் பெயரால் ஒருங்கிணைந்த சமத்துவ – சகோதரத்துவ மானுட உயர்நிலையும் புலனாகும்.
சகோதரக் கலைஞர்கள்
பாணன் என்பவன் பாட்டு இசைப்பவன், பண் இசைப்பவன் ஆவான். பாண் என்ற சொல் “பண் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்து முதல் நீண்டது தான் ‘பாண்’ என்பதாகும். பாணர்களில் ஆடவரைச் “சென்னியர், வயிரியர், செயிரியர், மதங்கர், இன்னிசைகாரர், பாணரென்ப” (4) என்று பிங்கல முனிவர் சுட்டுகின்றார்.
பாணர்களில் பெண்டிரை, “பாடினி, விறலி, பாட்டி, மதங்கி, பாடல் மகடூஉ பாண்மகளாகும்” (5) என்று திவாகர நிகண்டு சுட்டுகின்றது. இசையும் கூத்தும் முழுதுறத் தழுவி வாழ்ந்த ஒரு பழங்குடியினர் பாணர் ஆவர். இவர்கள் பாடுவார் என்ற அளவில் பொருள் சொல்லக் கூடிய சுருங்கிய கலை வல்லார் அல்லர். “பாடுவாரும், ஆடுவாரும், கருவியிசைப்போரும், கருவி செய்வாரும் அவர்தம் பெண்டிரும் கூடிய ஒரு பெருந்தொகுதியினர்” (6) என்று இரா. இளங்குமரன் சுட்டுகின்றார்.
“இடனுடைப்பேரி யாழ் முறையுளிக் கழிப்பிக்” (பெரும்பாணாற்றுப்படை.462)
“இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ” (சிறுபாணாற்றுப்படை.35)
பாண்மரபினர் சிறுபாணர், பெரும்பாணர் என இரு பிரிவினராயிருந்தனர். அவர்களை இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என மூன்று வகைப்படுத்துவர். வாய்ப்பாட்டு இசைப்போர் இசைப்பாணர் என்றும் நரம்புக்கருவி இசைப்போர் அதாவது யாழை இசைத்துப் பாடுவோர் யாழ்ப்பாணர் என்றும் அழைக்கப்பட்டனர்.
“பழுமரந் தேடும் பறவை போலக்
புல்லென் சுற்றமொடு கால்கிளந்து திரிதரும்” (பெரும்பாணாற்றுப்படை.20-21)
வறுமையுடைய பாணன் தன்னுடைய சுற்றத்துடன் சகோதர உணர்வுடன் இருந்த தன்மையால், தனக்குப் பொருள் வழங்கும் வள்ளலைக் காணச் செல்லும் போது கூடக் குழுவாக பயணித்துளள்னர்.
சங்கப்பாடல்களில் பொருநன் என்ற சொல் வீரன், அரசன், இசைக்கூத்து நிகழ்த்தும் கலைஞன் எனப் பல பொருண்மைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இசைக்கலையில் தேர்ச்சி பெற்றவர்கள். இவர்கள் குழுக்களாக சென்று ஆடல், பாடல் ஆகிய திறன்களை வெளிப்படுத்திப் பரிசில் பெற்றுள்ளனர். பொருநர் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் எனப் பல வகைப்படுவர். பொருநர் இசைப்பாடலோடு ஆடலிலும் வல்லவர். யாழொடு, தடாரி, கிணை போன்ற இசைக்கருவிகளை இயக்கி ஏர்க்களத்தும் போர்க்களத்தும் உழவரும் வீரரும் செய்யும் செயல்களை பொருநர்கள் நடித்துக் காட்டுவர்.
கூத்தர் என்போர் ஆடவும், பாடவும் இசைக்கருவி இயக்கவும் திறன் வாய்ந்த நிகழ்த்துக் கலைஞர் ஆவர். “கூ, கூடு, கூட்டு, கூட்டுவித்தல், கூத்தல், கூத்து எனக் கொள்ளலாம். கூத்தினை நடிப்போர் கூத்தர் எனப்பட்டனர்” (7) இக்கூத்தர்களுக்குச் சுற்றமாகப் பாணரும், விறலியரும் விளங்கியுள்ளனர்.
“கனிபொழி கானம் கிளையோடு உணீஇய
துணைபறை நிவக்கும் புள்ளினம் மான” (மலைபடுகடாம்.54-55)
என்னும் அடிகளில் கனிகளை நாடிச் செல்லும் பறவைக் கூட்டம் போல ஒன்றுபட்டு பொருள் தேடியுள்ளனர்.
வறுமையும் கலைஞர்களின் ஒற்றுமையுணர்வும்
சிறுபாணனின் உடல் கடும் பசியால் மிகவும் வாடியது என்பதை “அறிபசி வருத்தம்”என்று சிறுபாணாற்றுப்படை பதிவு செய்துள்ளது.
“புல்லென யாக்கைப் புலவு வாய்ப்பாண”
(பெரும்பாணாற்றுப்படை.21)
பாணனின் வருந்திய உடலை “இலம்படு புலவர்”
(மலைபடுகடாம்.576) குறிப்பிடுகின்றது.
வறுமையுள்ள கலைஞர் நைந்த உடையை அணிந்திருந்தனர் என்பதைப் பெரும்பாணாற்றுப் படையிலும் காணமுடிகிறது.
(பெரும்பாணாற்றுப்படை.80-81,153-154)
பாணன் வீட்டு அடுக்களைச் சுவர் சிதல் அரித்தும், காளான் பூத்தும் காணப்படுவதாக ஆற்றுப்படையில் காட்சிப்படுத்தியுள்ளது. அவர்களின் அடுக்களையில் பசியால் நாய் குட்டிகளும் படுத்துக் கிடந்தன. பசியால் இளைத்த உடலையுடைய கிணைமகள் குப்பையில் பூத்திருந்த வேளைக்கீரையை கொண்டு வந்து உப்பு கூட இல்லாமல் வேக வைத்து உணவுண்டுள்ளாள். இத்தகைய உணவைப் பிறர் காணாதவாறு தலைவாயிலை அடைத்துக் கொண்டு தன் சுற்றத்தோடு பாணன் உண்பான் என்று சிறுபாணாற்றுப்படை எடுத்துரைக்கிறது. பெரும்பாணாற்றுப்படை பசியின் கொடுமையை பழம்பசி என்ற சொல்லாடலால் சுட்டுகின்றது.
“பழம்பசி கூர்ந்தவெம் இரும்பே ரொக்கல்”
(பெரும்பாணாற்றுப்படை.25)
தங்களின் வறுமையைப் பெரும் செல்வந்தர்கள் மாற்றியதைப் போல, பிற கலைஞர்களின் வறுமையும் மாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் உடையவராக இருந்துள்ளனர். அவ்வழிமுறையே ஆற்றுப்படுத்தலாக மாறியுள்ளது.
“… … … … … நீயிரும்
இவணயந் திருந்த இரும்பேர் ஓக்கல்
செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின்”
(சிறுபாணாற்றுப்படை.143-145)
என்றும்,
“நல்லியக் கோடனை நயந்தனிர் செலினே”
(சிறுபாணாற்றுப்படை.269)
என்று ஆற்றுப்படுத்துகிறான்.
“பல்வேல் திரையன் படர்குவிர் ஆயின்”
(பெருபாணாற்றுப்படை.37)
கொல்லுகின்ற பசி மாற நின்னுடைய பெரிய சுற்றத்துடன் காலம் நீட்டிக்காமல் எழுந்திருப்பாயாக என்று பெரும்பாணன் ஆற்றுப்படுத்துகிறான்.
“ஆடுபசி உழந்தநின் இரும்பேர் ஒக்கலொடு
நீடுபசி ஓராஅல் வேண்டின் நீடுஇன்று
எழுமதி வாழி ஏழின்கிழவ”
(பொருநராற்றுப்படை.61-63)
இவ்வாறே, கூத்தர்களின் தலைவனே வருக! என்று பரிசில் பெற்ற கூத்தன் பெறாத பாணனை நோக்கி அழைக்கிறான். வறுமை நிலையில் உள்ள பாணனைப் பார்த்து, நீ செய்த நல்வினைப் பயனால் என்னை எதிரில் கண்டுள்ளாய் என்று பரிசு பெற்ற வந்த பாணர், கூத்தர் கூறியுள்ளதை அறியும் போது பிறருக்குத் தீங்கு செய்யாமல் நல்லதை மட்டுமேச் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு கலைஞர்கள் சகோதர உணர்வுடன் வாழ்ந்து வந்துள்ளமை புலனாகின்றது.
“அறியா மையின் நெறிதிரிந்து ஓராஅது
ஆற்றுஎதிரப் படுதலும் நோற்றதன் பயனே”
(பொருநராற்றுப்படை.58-59)
“உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுதுஎதிர்ந்த
புள்ளினர் மன்ற, என்தாக்கு உறுதலின்”
(மலைபடுகடாம்.65-66)
இவ்வாறு வறுமை தீர்க்கும் வள்ளலைத் தேடிச் செல்லும் நீங்கள் என்னை எதிரில் கண்டதால் நன்னிமித்தம் பெற்றவர்களானீர் என்று பரிசில் பெற்ற பாணர் கூறுகிறார். இதன்மூலம் பாணர்களின் உயர்ந்த பண்பும் ஆற்றுப்படுத்தும் தன்மையும் வெளிப்படுகிறது.
ஆற்றுப்படையில் பரிசில் பெற்ற கலைஞன், பரிசில் பெறாத கலைஞனை ஆற்றுப்படுத்துவதேத் தனி சிறப்பாக அமைகிறது. அதாவது, வழிகாட்டுதல் என்பது தேவையான ஒன்றாகும். வாழ்க்கையின் வெற்றி, வாழ்க்கையின் முழுநிறைவு அனைத்துமேச் சிறந்த வழிகாட்டுவதன் மூலமேச் சாத்தியமாகிறது. அந்த வகையில், ஆற்றுப்படைக் கலைஞர்கள் சிறந்த வழிகாட்டியாக தோழமை உணர்வுடன் இருந்துள்ளனர். பொருள் பெற்று வந்த கலைஞன் இன்னின்ன வழியாகச் செல்லுங்கள் என்று மட்டும் கூறாமல், எந்தெந்த இடங்களில் தங்கிச் சென்றால் நலம் விளையும் என்பதனையும் கூறி ஆற்றுப்படுத்துகிறான். புரவலன் என்னும் கொடை வழங்கும் வள்ளல் தலைமைத்துவம் கொண்ட ஆளுமையாக இருந்தாலும் கூத்தன், பாணன், பொருநன், விறலி என்று அனைத்துக் கலைஞர்களுடன் சமத்துவத் தன்மையுடன் இருந்துள்ளான். புலவன் என்னும் கலைஞன், தமக்குள் சகோதரத் தன்மையுடன் இருந்தள்ளனர்.
1. இளம்பூரணனார் (உ.ஆ), தொல்காப்பியம், பொருளாதிகாரம், புறத்திணையியல், நூ..30
2. மாணிக்கவாசகர். ஞா., பத்துப்பாட்டு மூலமும் விளக்க உரையும், ப.13
3. ஈஸ்வரன். ச., சுற்றுலாவியல், ப.87
4. பிங்கல முனிவர், பிங்கல நிகண்டு, ப.815
5. சண்முகம் பிள்ளை,மூ. (பதி.ஆ), திவாகர நிகண்டு, ப.21
6. இளங்குமரன். இரா., பாணர், பக்.120-121
7. தமிழ்ப்பேரகராதி, தொகுதி,2., ப.1071
1. சோமசுந்தரனார். பொ. வே (உ.ஆ), பெரும்பாணாற்றுப்படை, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (லி), சென்னை, 2007.
2. சோமசுந்தரனார். பொ. வே (உ.ஆ), சிறுபாணாற்றுப்படை, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (லி), சென்னை, 2007.
3. சோமசுந்தரனார். பொ. வே (உ.ஆ), பொருநராற்றுப்படை, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (லி),சென்னை, 2007.
4. சோமசுந்தரனார். பொ. வே (உ.ஆ), மலைபடுகடாம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (லி), சென்னை, 2008.
5. இளங்குமரன். இரா., பாணர், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.
6. இளம்பூரணனார் (உ.ஆ), தொல்காப்பியம் பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை, 2005.
7. சண்முகம் பிள்ளை மூ. (பதி.ஆ), திவாகர முனிவர், சேந்தன் திவாகர நிகண்டு, சென்னை பல்கலைக் கழகம், சென்னை.1993.
8. பிங்கல முனிவர், பிங்கல நிகண்டு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1978.