வள்ளுவரும் வள்ளலாரும்
முனைவர் ச.மகாதேவன்
மனிதவாழ்வின் பொருள்,பொருளோடு வாழ்வதேயன்றி பொருளை ஈட்டுவதன்று என்று வாழ்ந்த அருளாளர்கள் வள்ளுவரும் வள்ளலாரும். இவர்கள் இருவரும் தனிமனித ஒழுக்கமும் புலனடக்கமும் வீடுபேற்றுக்கு இட்டுச்செல்லும் என்று நம்பியவர்கள். எல்லா உயிர்களிடமும் இரக்கமும் ஆன்மநேய ஒருமைப்பாடும் வள்ளலார் வலியுறுத்திய உயர்அறங்கள். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வாழ்ந்த இருவரின் வாழ்வியல் இலக்கியங்கள் உயரிய நெறியை உணர்த்துவன.
கொல்லாமை எனும் அறம்
கொல்லாமை எனும் தலையாய அறத்தைப் போற்றி முன்மொழிந்தவர்களாக வள்ளுவரும் வள்ளலாரும் திகழ்கிறார்கள். கொல்லாமை எனும் அதிகாரத்திற்கு விளக்கம் தரும் பரிமேலழகர், “ஐயறிவுடையன முதல் ஓரறிவுடையன ஈறாய உயிர்களைச் சோர்ந்தும் கொல்லுதலைச் செய்யாமை.” என்று கூறுகிறார். “ஒன்றாக நல்ல துயிரோம்பல்” என்று ( அறநெறி, 62) எனும் இலக்கியம் உயிர்களைக் காப்பதை உயர்ந்த அறம் என்கிறது.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார், “அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல்வேண்டும் ஆருயிர்க்கெலாம் நான் அன்பு செயல்வேண்டும்” என்று பாடினார். மனுமுறைகண்ட வாசகம், சீவகாருண்யஒழுக்கம், மகாதேவமாலை போன்ற இலக்கியங்களில் அன்பையே அவர் வலியுறுத்துகிறார். “பரம்பொருள் ஒருவரே,அதில் வேறுபாடு கொள்ளற்க, வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே என்று கூறுகிறார்.
கொல்லாமை எனும் கோட்பாட்டினைத் தம் வாழ்நாள் முழுக்கப் பின்பற்றியவர் வள்ளலார். வள்ளுவர் கொல்லாமையை உயர்ந்த வாழ்வியியல் அறமாக வலியுறுத்துகிறார்.
“தன்உயிர் நீப்பினும் செய்யற்க, தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.”
(குறள்-327)
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிப் போவதாக நேர்ந்தாலும், அதைத் தடுப்பதற்காக தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது என்றுரைக்கும் வள்ளுவரின் குறளுக்கு விளக்கம் தந்த பரிமேலழகர், “தன்னை அது கொல்லினும் தான் அதனைக் கொல்லற்க” என்று விளக்கமளித்ததைக் காணமுடிகிறது.
வாழ்க்கைக் கடலைக் கடக்க உதவும் தோணியாக வள்ளுவர் அறநெறியைக் கருதினார். சகஉயிர்களைக் கொல்லாமல் அன்பு செய்யவேண்டும் என்ற நெறியின் விளக்கமாகக் கொல்லாமை எனும் அதிகாரத்தைக் காணமுடிகிறது. “அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்” என்று விளக்கிய வள்ளுவர், அடுத்த குறட்பாவில் “பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதலை”த் தலையாய அறமாகக் கருதுகிறார்.
“மேற்கதி வீடுபேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின், யாதோர் உயிரையும் கொல்லாமையாகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி” என்று பரிமேலழகர் விளக்கும்.
“நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி”
(குறள்-324)
புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
(குறள்- 260)
எனும் குறள் வள்ளலாரின் குரலுக்கு நெருக்கமாகத் திகழக்கூடியதாய் அமைகிறது.
வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார். “பசி, கொலை, பிணி, தாகம், எளிமை, பயம், இச்சை என்பவைகளால் வரும் அபாயங்களை நிவர்த்தி செய்விப்பது விதியாகவிருக்கவும், இவ்விடத்துப் பசியினால் கொலையினாலும் வரும் அபாயங்களை மாத்திரம் நிவர்த்தி செய்விப்பது விசேஷமென்று குறித்தது என்னென்றறிய வேண்டில்:- சீவகாருணிய ஒழுக்கத்தில் அபரசீவகாருணிய மென்றும் பரசீவகாருணியமென்றும் இருவகையாம். அவற்றில் பசிநீக்கலும் கொலைநீக்கலும் பரசீவகாருணிய மாதலால் விசேஷமாகக் குறிக்கப்பட்டதென்றறிய வேண்டும்.” என்று ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் முதற்பகுதியில் வள்ளலார் விளக்குகிறார்.
அருளைப் பெறுவதற்குச் ஜீவகாருண்யமே வழியென்று வள்ளலார் கருதினார். ஜீவகாருண்யமே புண்ணியம் என்று கருதிய வள்ளலார், உயிர்களைத் துன்புறுத்துவது பாவத்தின் அடையாளம் என்று கருதினார். பசி, தாகம், கொலை, பிணி, இச்சை ஆகியன சீவகாருண்யத்திற்கு எதிராக அமைகிறது. வள்ளுவரும் வள்ளலாரும் கொல்லாமையை முன்நிறுத்துகின்றனர். வாழும் உயிர்களைத் துன்புறுத்துதல் மனிதர்களுக்கு ஏற்புடைய செயலன்று என்று இருவரும் கருதினர். வீடுபேற்றுக்குரிய வழியாகக் கொல்லாமையை வள்ளுவர் கூறவில்லை. ஆனால் ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடவுளை நெருங்கும் முக்கியச் சாதனமாக வள்ளலார் கருதினார்.
பசி என்னும் பிணி
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவர் ஆற்றலின் பின்
(குறள் -225)
இக்குறளுக்கு விளக்கம் தரும் மணக்குடவர், பெரியாரது பெருமை பசியைப் பொறுத்தல் என்கிறார். பரிமேலழகர், “தாமும் பசித்துப் பிறரையும் அது தீர்க்கமாட்டாதார் ஆற்றலின், தாமும் பசியாது பிறரையும் அது தீர்ப்பார் ஆற்றல் நன்று என்பதாம்” என்று விளக்கம் தருகிறார். “உண்ணாது நோற்பார் பெரியர்” (குறள்-160) என்று பெரியாரின் உயர்பண்பாக, உண்ணாமையை வள்ளுவர் விளக்குகிறார். பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது என்ற பொருளில்
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
(குறள் -656)
என்ற குறளில் வள்ளுவர் அறத்தைப் பசியைவிட உயர்வானதாய் காட்டுகிறார். உடலையும் மனதையும் அடக்கும் ஆயுதமாக உண்ணாநோன்பினைக் கருதிய சமணக்கோட்பாட்டின் குரலாகத் திருவள்ளுவரின் பசி குறித்த குறட்பாக்களைக் கருதஇடமிருக்கிறது.பசி வந்தால் தன்மானம் பறந்துவிடும், தனது குலம் என்ற நினைப்பு போய்விடும், கல்வி கரைந்துவிடும், வாக்குறுதிகள் வலிமை இழந்துவிடும், அறிவுடைமை பெறுமதி அற்றதாகிவிடும், தானம் எண்ணம் தலைக்குள் எட்டாது, இறையன்பின் தேடுதலுக்கு இடமளிக்காது,
திருவினையாக்கும் முயற்சி கூட பின்னளிக்கப்படும், அன்பு, பண்பு, அரவணைப்பு அனைத்தும் காற்றோடு காற்றாகிவிடும்
இனிய வார்த்தைகள் எங்கோ தொலைந்து விடும்.
பசி வள்ளலார் பார்வையில் சாதாரணமானதன்று. அதைப் போக்க வடலூரில் அவர் அன்னதான சத்திரம் அமைத்தார். பசியில்லாவிட்டால் மக்கள் ஒருவரையொருவர் எதிர்பார்க்கமாட்டார்கள், அப்படியில்லாதபோது மக்கள் ஒருவருக்கொருவர் உதவமாட்டார்கள், அப்படி இல்லையென்றால் மனிதநேயம் இல்லாமல் போய்விடும் என்று வள்ளலார் கருதினார்.
“பசி ஏழைகளின் உடலில் பற்றிஎரியும் தீ, பசி ஏழைகளின் அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று, பசி ஏழைகளின் உடலின் மீது பாய்ந்து தாக்கிக் கொல்லப்பாயும் கொடியபுலி, பசி உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து உயிரெடுக்கும் கொடியவிடம்.பசி என்னும் நோய் கொடியது, அதன் வெம்மை தாங்காதவர்கள் எந்தப் பாவத்தையும் செய்யத் துணிவர்” என்று வள்ளலார் கருதினார்.
“மற்றவர் பசியை ஆற்றமுயல்பவர் புண்ணியர்கள், அவர்கள் எல்லாத் தெய்வங்களுக்கும் மேலானவர்கள்” என்று கூறிய வள்ளலார், வடலூரில் அன்னதானச் சத்திரத்தை அமைத்தார், ஆயிரமாயிரம் மக்கள் உணவுஉண்ண வழிசெய்தார். சன்மார்க்கம் எனும் மரணமிலாப் பெருவாழ்வு வாழ வழிசொன்னார். பசி, பிணி, கொலை எனும் மூன்றினையும் அறுத்து வாழ்வதனால் கிடைப்பது இம்மைஇன்பஇலாபம் என்று கருதினார். அவர்களுக்கே இறைத்தயவு எனும் அருள் கிடைக்கும் என்றார். ஜீவகாருண்ய ஒழுக்கம் இரண்டாம் பிரிவில் வள்ளலார், “பசி என்பது, ஆகாரம் பொறாமையால் வயிற்றினுட் பற்றிநின்று தேகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள கருவி கரணங்களின் தன்மைகளைச் சுடுதல் செய்து அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்துவித்தற்கு முதற்காரணமாகிய விகற்ப மாயாகாரியப் பிண்டப்பகுதி நெருப்பு. கொலை என்பது, தேகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள கருவி கரணங்களைப் பல்வேறு கருவி கரணப் புடைபெயர்ச்சிகளால் பதைப்புண்டாகக் கலக்கஞ்செய்து அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்துவித்தற்கு நிமித்தமாகிய விகற்ப பூதகாரியக் கொடுந்தொழில், பிணி என்பது, வாத பித்த சிலேட்டும விகற்பங்களால் மாறுபட்டு, தேகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள கருவி கரணங்களை நலிவுசெய்து அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்துவித்தற்கு நிமித்தமாக நின்ற விகற்ப மாயாகாரியப் பிண்டப் பகுதி வேற்றுமை விளைவு. ஆபத்து என்பது, அகங்காரத்தாலும் மறதியாலும் கரும வேறுபாட்டாலும் தேகபோக அனுபவங்களைத் தடுக்கின்ற விக்கினங்கள். பயம் என்பது, தேக முதலிய கருவிகளுக்கு நட்டஞ் செய்வதாகிய விடயங்கள் நேரிட்டபோது கரணங்களுக்கும் அறிவுக்கும் உண்டாகின்ற நடுக்கம். இன்மை என்பது, கல்வி செல்வம் முதலிய கருவிகளைத் தற்சுதந்திரத்திற் பெறாமை. இச்சை என்பது அடையக் கருதிய விடயங்களில் அருமை குறித்து அவற்றை மேன்மேலும் கருதச் செய்கின்ற சித்தவிருத்தி என்று அறியவேண்டும்.” என்று விளக்கியுள்ளார்.
பசி என்ற கருத்தாக்கத்தை வள்ளுவரும் வள்ளலாரும் வெவ்வேறு முறைகளில் விளக்கினாலும் இருவரும் பசி கொடுமையானது என்ற கருத்தில் ஒன்றுபடுகின்றனர்.உண்ணா நோன்பிருத்தல் பெரியோர் பண்பு என்று வள்ளுவர் கூற, பசியிருந்தால் பாவம் செய்யச்சொல்லும் என்று வள்ளலார் கூறுகிறார். இருவரின் நோக்கமும் பசியைக் கடத்தல் என்பதாக அமைகிறது.மற்றவர் பசியைப் போக்குதல் மகத்தானது என்றே அமைகிறது.
இருவரும் வலியுறுத்திய அன்பு
வள்ளுவரும் வள்ளலாரும் அன்பைப் போதித்தவர்கள். “அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்?” என்று கேட்டவர் வள்ளுவர். “எந்த உயிரையும் துன்புறுத்தாதே, எந்த உயிரையும் கொல்லாதே” என்று வாழ்நாளெல்லாம் அறிவுறித்தியவர் இராமலிங்க அருட்பிரகாச வள்ளலார். அன்பின் வடிவில் உலக உயிர்களைக் கண்டார்.
“அன்பெனும் பிடியுள் அகப்படு மலையே அன்பெனுங் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடுங் கடலே அன்பெனும் உயிரொளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே.” (பாடல்-3)
வள்ளலார் அன்பின் வடிவில் இறைவனைக் கண்டார். அன்பு எனும் பிடிக்குள் அகப்படு மலையாகவும் அன்பெனும் குடில்புகும் அரசாகவும் அன்பெனும் வலைக்குட்படும் பரம்பொருளாகவும் இறைவனை அவரால் காணமுடிந்தது.வள்ளுவர் அன்பை உயரிய வாழ்வியல் நெறியாகக் கண்டார்.
“அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.” (குறள்- 72)
அன்புஇல்லாதவர்கள் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்; அன்பு உடையார் அவற்றானேயன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர் என்று பரிமேலழகர் இக்குறளுக்கு விளக்கம் தருகிறார். உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பே அன்புக்கும் ஆருயிர்க்கும் உள்ள தொடர்பு.
“அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.” (குறள் - 73)
அன்பு பற்றிய திருவள்ளுவரின் கருத்து ஆழமானது. அன்பு மனிதவாழ்வில் மாற்றம் உண்டாக்குகிறது. அன்பு உயர்வானது, அன்பு உயர்த்துவது. அன்பு தன்னலமற்றது, அன்பு எதையும் எதிர்பார்க்காதது.
அன்பை வள்ளலார் இறைவனின் வடிவமாகக் காண்கிறார். திருவள்ளுவர் அன்பை “நாடாச் சிறப்பு தரும்” அற்புதமாகக் காண்கிறார். அன்பை உடலோடு உயிரைப் பிணைத்துவைக்கும் பிணைப்பாக வள்ளுவர் கருதுகிறார். அன்பு ஆர்வமென்று சொல்லப்பட்ட ஞானநேயத்தைக் கொடுக்கும் என்று பரிதியார் விளக்குகிறார். வள்ளுவரின் பார்வையில் அறத்திற்கு அன்பு சார்பாக அமைகிறது என்பதாகும். அன்பாக இருத்தலே இறைவனை நெருங்கும் வழியாக வள்ளலார் கருதினார்.
மனிதத்தைப் புனிதமாக்க முயன்றவர்கள்
இருவரின் கருத்தியல் வெவ்வேறாக இருந்தாலும் இருவரும் மனிதத்தைப் புனிதமாக்க இலக்கியம் படைத்தவர்கள். பொய்யற்ற முப்பாலைத் தந்த திருவள்ளுவர் மனத்தூய்மையே எல்லாவற்றிற்கும் அடிப்படை என்று உரைத்தார்.
·
ஜீவகாருண்ய ஒழுக்கம், திருவருட்பா, மனு முறைகண்டவாசகம், அருள்நெறி, பேருபதேசம், நித்தியகருமவிதி, தொண்டமண்டல சதகம், உபதேசக் குறிப்புகள், வழிபடு வணக்கப் பாட்டுரை போன்ற நூல்களின் மூலம் சமரசசுத்த சன்மார்க்கத்தையும், ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும் வள்ளலார் போதித்தார்.
காலம், இடம், சமயம் கடந்த தமிழ்மறையாகத் திருக்குறள் திகழ்கிறது. திருக்குறள் கருத்துகள் யாராலும் கருத்துரீதியாக எதிர்க்கப்படவில்லை. ஆனால் வள்ளலாரின் திருவருட்பா, யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலரால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட அளவு எதிர்ப்பை எதிர்கொண்டு வென்றது.
அறம், பொருள், இன்பம் பேசிய வள்ளுவர், வீடுபேற்றுக்கென்று தனியே பால் அமைத்து குறட்பாக்கள் இயற்றவில்லை. ஆனால் வள்ளலார் தாம் இயற்றிய அனைத்து நூல்களிலும் ஆன்மஈடேற்றம் குறித்து பல செய்திகளைத் தந்துள்ளார். இருவரும் தனிமனித ஒழுக்கத்தோடு சமுதாய ஒழுக்கத்தைப் பேண வழிசொன்னவர்கள்.
·
“தனக்குவமை யில்லா தான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”
என்று சொன்ன வள்ளுவரும், “அருளென்பது கடவுள் தயவு” என்று சொன்ன வள்ளலாரும் ஒரேகருத்தியலை முன்வைக்கிறார்கள்.
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.”
மனம் தூய்மையாக இருப்பதே அறம், மற்றவை ஆராவரமன்றி வேறில்லை என்ற திருவள்ளுவரின் நெறி முன்னுதாரணமற்றது.
நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே, தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே, ஏழைகள் வயிறு எரியச்செய்யாதே, இரப்போர்க்கு இல்லை என்று கூறாதே, விருட்சத்தை அழிக்காதே என்று சமுதாயநலம் பேணும் அறிவுரைகளைத் தந்தார் வள்ளலார்.
அருள்நெறியில் பாவபுண்ணியங்கள் எவ்வாறு நம்மை வந்தடைகின்றன என்று வள்ளலார் பட்டியலிடுகிறார். “புண்ணிய பாவங்கள் நம்மை எவ்வாறடைகின்றன? மனம் வாக்கு காயம் என்னும் மூன்றினாலும் அடையும். மேலும், மனத்தினிடத்தில் நால்வகையும், வாக்கினிடத்தில் நால்வகையும், சரீரத்தினிடத்தில் நால்வகையும், ஆகப் பன்னிரண்டு வகையாய் நம்மை யடையும். அவையாவன:
மனத்தினால் பரதாரகமனம் பண்ண நினைத்தல்,
அன்னியருடைய சொத்தைக் கிரகிக்க நினைத்தல்,
அன்னியருக்குத் தீங்குசெய்ய நினைத்தல்,
முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமையடைதல்
- இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள்.
வாக்கினால் பொய்சொல்லல்,
கோட்சொல்லல்,
புறங்கூறல்,
வீணுக்கழுதல்
- இவை நான்கும் வாக்கினால் உண்டாகும் பாவங்கள்.
தேகத்தினால் பிறர் மனைவியைத் தழுவுதல்,
புசிக்கத்தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல்,
அன்னியர்களை இம்சை செய்தல்,
தீங்குசெய்கிறவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரஞ் செய்தல்
- இந்நான்கும் தேகத்தாலுண்டாகும் பாவங்கள்.
இவை போன்றவைகளைத் தவிர்த்து,
அன்னியர்களுக்கு நன்மையுண்டாக நினைத்தல்,
பொறாமையடையாதிருத்தல்,
அன்னியர் சொத்தைத் தனதாக்க எண்ணாதிருத்தல்,
தனது மனைவி தவிர அன்னியமான பெண்களைத் தாய் சகோதரி முதலியவர்களாகச் சிந்தித்தல்
- இவை மனத்தால் வரும் புண்ணியங்கள்.
பொய் சொல்லாமை,
கோட்சொல்லாமை,
இன்சொல்லாடல்,
தோத்திரம் செய்தல்
- இவை நான்கும் வாக்கினாலுண்டாகும் புண்ணியங்கள்.
அன்னியர்களுக்குத் தீங்குண்டாகுங்கால் விலக்கல் முதலான நன்மையான கிருத்தியங்களெல்லாம் தேகத்தாலுண்டாகும் புண்ணியங்கள்.
முடிவுரை
திருவள்ளுவரும் வள்ளலார் சுவாமிகளும் காலத்தால் வேறுபட்டவர்கள், ஆனாலும் சொல்ல வந்த உயரிய மனிதநேயக் கருத்துக்களால் ஒன்றுபட்டவர்கள். சமய அடையாளமின்றி வள்ளுவர் சொன்ன முப்பால் உலகப்பொதுமறை என்று புகழப்படுகிறது. இருவரும் மனம் குறித்துத் தெளிவாகப் பேசியவர்கள். இருவரின் கவிநடையும் அழகானது, எளிமையானது, மனிதநேயம் சார்ந்தது. அறத்தின் வலிமையை இருவரும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர். இறைவன் எல்லாவற்றிற்கும் முதன்மையானவன் என்ற கருத்தாக்கம் இருவருக்கும் பொதுவானது. இம்மை வாழ்வை முறையாக வாழ இருவரும் எளிமையாக வழிசொன்னவர்கள். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் இந்த நான்கினையும் இருவரும் விலக்கச் சொன்னவர்கள். இருவரும் கொல்லாமையையும், புலால் உண்ணாமையையும் நெறியாகக் கொள்ள அறிவுறுத்தியவர்கள். ஈகையை இருவரும் உயர்வாகப் பேசியவர்கள். தவறான உணவுப்பழக்க வழக்கமே நோய் வருவதற்கான காரணிகள் என்று மீளவழிசொன்னவர்கள். ஐம்புலனடக்கம் நல்வாழ்வின் அடிப்படை என்று இருவரும் அறிவுறுத்தியவர்கள்.
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார்
இறைவனடி சேரா தார்”
என்ற வள்ளுவர் கருத்தில் வள்ளலாரும் ஒன்றுபடுகிறார்.
இருவரின் நோக்கமும் பிறப்பறுத்தல் என்பதாகும்.
“பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”
என்ற கருத்தை வள்ளலாரின் நூற்கருத்துகளிலிருந்து அறியமுடிகிறது.
வள்ளுவரும் வள்ளலாரும் மனிதநேயக் கருத்துகளால் ஒன்றாக உயர்ந்து நிற்கிறார்கள்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.