பேராசிரியரின் உரைநுட்பங்கள்
முனைவர் இரா. விஜயராணி
மனிதனின் தகவல் பரிமாற்றத்திற்கு இன்றியமையாத கருவியாக விளங்குவது மொழி ஆகும். சைகை மொழியாகத் தொடங்கிய மொழி பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், வேரூன்றி பல மொழிக் குடும்பங்களாகக் கிளைத்து நிற்கின்றது என்று சொன்னால் அது மிகையன்று. அவ்வாறு கிளைத்து நிற்கும் மொழியானது தமக்குள் பல்வேறு இலக்கிய, இலக்கணங்களைக் கொண்டு செழுமை பெற்றுக் காணப்படுகின்றது. இத்தகு மொழிகளுள் ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமை பெற்ற இலக்கிய, இலக்கணச் செழுமையை உடையது நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி. மொழியின் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு, பொருள் வழக்கு என்பது காலத்திற்கு காலம் வளர்ச்சி பெறுவதுண்டு. ஆதலால்தான் தமிழின் தொன்மை இலக்கிய, இலக்கணங்கள் இன்றைய சாமானிய மக்களுக்கு எளிதில் புரிவதில்லை. கற்றறிந்தவரும்கூட அவ்வவ் நூல்களை உரையாசிரியரின் துணை கொண்டே சுவைத்து இன்புறுகின்றனர். அவ்வாறு சுவை பயப்பதாகவும், பொருண்மை பொதிந்ததாகவும் உரைசெய்த சான்றோர் பெருமக்கள் தமிழ்கூறும் நல்லுலகில் மிகுந்து காணப்படுகின்றனர். அவற்றுள் நமக்குக் கிடைத்த முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு உரைசெய்தவர்களுள் ஒருவரான பேராசிரியரின் உரைத்திறனை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
தமிழ்கூறு நல்லுலகில் பேராசிரியர் என்னும் பெயரில் பலர் இருந்துள்ளனர். அவர்களுள் இங்கு நாம் காண இருப்பது தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு உரை செய்தவர் ஆவார். இவர் திருக்கோவைக்கு உரை செய்தவர் அல்லர். ஏனெனில் தம் உரையின் ஓரிடத்தில் கூட கோவையைப் பற்றிச் சுட்டாமை கொண்டு இதனை அறியலாம். எனினும் குறுந்தொகைக்கு உரைஎழுதிய உரையாசிரியர்களுள் ஒருவரான பேராசிரியர் இவரோ என்ற ஐயம் தோன்றினும், அதனை உறுதி செய்யும் அரிதிச் சான்றுகள் ஏதும் நமக்குக் கிடைக்கவில்லை.
இவர்களைப் போலவே தொல்காப்பிய - பொதுப்பாயிரம் பாடிய ஆத்திரையன் பேராசிரியர், மயேச்சுரர் என்னும் பேராசிரியர், பேராசிரியர் நேமிநாதர் முதலானோரும் பேராசிரியர் என்னும் பெயரில் இருந்துள்ளனர்.
பேராசிரியரும் பதிப்பாசிரியர்களும்
ஆரம்ப காலங்களில் தொல்காப்பியத்தைப் பழைய உரையுடன் பதிப்பித்த சிலர் பேராசிரியரின் உரையை நச்சினார்க்கினியரின் உரையென்றே கருதிப் பதிப்பித்தனர். அவ்வாறு செய்தவர்களுள் சி.வை.தாமோதரன் அவர்களும் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். அவர் தம் நச்சினார்க்கினியர் உரை செய்த அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் போன்ற இயல்களில் இத்தகு பதிவுகள் காணப்பட்டன. அவற்றுள் மெய்யபாட்டியியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் ஆகிய நான்கும் பேராசிரியர் செய்த உரையே எனத் துணிந்து கூறியவர் இரா.இராகவ ஐயங்கார் ஆவார். இதனை அவர்தம் நச்சினார்க்கினியரின் செய்யுளியல் உரைப்பதிப்பிலும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பேராசிரியர் உரைசெய்த மெய்ப்பாட்டியல் முதலான நான்கு இயல்களும் இவ்வோத்து என்ன பெயர்த்தோ? எனின்? எனத் தொடங்குவதிலிருந்து இவ்வுரையைச் செய்தவர் நச்சினார்க்கினியர் அல்லர் என்பதும், பேராசிரியரே செய்தார் எனவும் துணிந்து கூறவழிச் செய்கின்றது.
பொருளதிகாரம் - முழுஉரை
நமக்குக் கிடைக்கப் பெற்ற பொருளதிகாரப் பின் நான்கு இயல்களின் உரையைக் கொண்டு நோக்கும்போது,
காரணம் களவியலுள் கூறினாம் (மெய்-18)
அகத்திணை இயலுள் கூறினாம் (மெய்-19)
முன்னர் அகத்திணை இயலுள் கூறி வந்தோம் (செய்-1)
முன்னர் அகத்திணை இயலுள் கூறினாம் (செய்-80)
அவை வெட்சியுள்ளும் ஒழிந்த திணையுள்ளும் காட்டப்பட்டன (செய்-189)
என்று பேராசிரியரே என முன் ஐந்து இயல்களின் பெயர்கள் சுட்டப்படுவதால் இவர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை செய்துள்ளார் என்பதும், அவற்றுள் பின்நான்கு இயல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன என்பதையும் உணர முடிகின்றது.
பேராசிரியரின் தொல்காப்பிய உரைத்திறன் பற்றி முனைவர் வ.சுப.மாணிக்கனார் தொல்காப்பியத்திறன் என்னும் தம்நூலில், ‘இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை வகுத்திருப்பாரேல் அவ்வுரையே திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரைபோல் தலைமை யெய்தியிருக்கும்’ என வியந்து கூறுவார். வ.சுப.மாணிக்கனாரின் இக்கருத்து பேராசிரியரின் உரைத்திறனை நமக்கு உணர்த்துவதோடு நாம் இழந்த அரும்பெரும் உரை குறித்தும் நம்மைச் சிந்திக்கச் செய்கின்றது.
செய்யுளியல் வைப்புமுறை
தற்காலத்தில் பொருளதிகாரத்தின் எட்டாம் இயலாக உள்ள செய்யுளியல் பேராசிரியர் காலத்தில் ஒன்பதாம் இயலாகவும், மரபியல் எட்டாம் இயலாகவும் இருந்த வழக்கை அவர்தம் உரை கொண்டு அறிய முடிகின்றது. நூலின் வகைமை குறித்துக் கூறும்,
மரபுநிலை திரியா மாட்சிய வாகி
யுரைபடு நூல்தாம் இருவகை யியல
முதலும் வழியுமென நுதலிய நெறியின (மரபி.93)
என்னும் மரபியல் நூற்பாவிற்கு “மரபுநிலை திரியாமை தமக்குக் குணனாக உடையவாகி எல்லாராலும் உரைக்கப்படும் நூல் இரண்டிலக்கணத்தவாகும், முதனூலெனவும், வழி நூலெனவுங் கருதிக் கொள்ளும் அடிப்பட்டான் என விளக்கம் கூறத் தொடங்கி,
மற்றும் காலந்தோறும் வழக்கு வேறுபடுதலின் வழக்குநூலும் வேறுபட அமையும்பிற எனின்
வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி யவர்கட்கு ஆக லான (மரபி.92)
என்றமையானும், அங்ஙனம் காலந்தோறும் ஓரோர்நூல் செய்யின் வழக்கல்லது எஞ்ஞான்றும் அவ்விலக்கணத்தாற் பயமின்றாகியே செல்லுமாகலானும் அது பொருந்தாது எனக்கூறி, இந்நூல் இலக்கணத்தினை இவ்வோத்தின் இறுதிக்கண் வைத்தான். ‘வழக்குஞ் செய்யுளு’ மென்று விதந்து புகுந்த இரண்டிலக்கணமும் முடித்தல்லது, அவற்றைக் கூறும் இலக்கணங் கூறலாகாமையினென்பது. இக்கருத்தறியாதார் செய்யுளியலினை ஒன்பதாம் ஓத்தென்ப எனக்கூறி ஏனையோர் செய்த வைப்புமுறைக்குத் தெள்ளியதொரு மறுப்பும் கூறுவார் போராசிரியர்.
ஆசிரியரைப் போற்றல்
செவிலி கூற்றிலமைந்த பாடல்கள் காணப்பட்டில எனினும் நம்பிக்கை காரணமாக இவர் (பேராசிரியர்) “இலக்கணம் உண்மையின் அவையும் உள என்பது கருத்து” என்பார் (உவ-31). மேலும் அவர்,
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
யிரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே (மரபு-27)
நண்டுந் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (மரபு-31)
எனத் தொல்காப்பியர் நண்டினை நான்கறிவுடைய உயிராக நூற்பா செய்துள்ளமையின், அதனைக்கண்ட பேராசிரியர், இதற்கு (நண்டிற்கு) மூக்கு என்ற பொறி இலதே” எனச் சற்றுத் திகைக்கின்றார்.
‘ஆசிரியனை மறுப்பதா? ஏற்பதா?’ என்ற சிக்கல் வந்து நிற்கிறது. அதனை விடுவித்துப் பேராசிரியர் எழுதுகின்றார்: ‘நண்டிற்கு மூக்கு உண்டோ எனில், அஃது ஆசிரியன் (தொல்காப்பியர்) கூறலால் உண்டு என்பது பெற்றாம். பழமொழி போல் எடுத்துக்கூறக் கூடிய சிறப்புடன் திகழும் இத்தொடர் பேராசிரியரின் ஆசான் பக்தியைப் புலப்படுத்துகின்றது.
உரையாசிரியரை மறுத்தல்
பேராசிரியர் தமக்கு முன்பிருந்த உரையாசிரியர்களின் கருத்துக்களை ஆங்காங்கே மறுத்து, தம் கருத்தை வலியுறுத்திக் கூறுவதுண்டு. அவ்வாறு வலியுறுத்திக் கூறினும் அவற்றுள் ஓரிடத்திலும் உரையாசிரியர்களின் பெயர்களையோ, நூலாசிரியர்களின் பெயர்களையோ வெளிப்படையாகக் கூறவில்லை. இருந்தபோதும் பேராசிரியரின் இத்தகு மறுப்புரையானது பெரும்பாலும் இளம்பூரணரின் கருத்தை மறுத்ததாகவே அமைந்துள்ளது என்பது நுணுகிப் படிப்பபோர்க்கு எளிதில் விளங்கும்.
இளம்பூரணர் சுருக்கமாக உரைசெய்த பெரும்பாலான இடங்களுக்குப் பேராசிரியர் விரிவான விளக்கத்தைத் தெளிவாகக் கூறுகின்றார். சான்றாக மெய்ப்பாட்டியல் தலைச்சூத்திரமான,
பண்யைத் தோன்றிய எண்ணான்கு பொருளுங்
கண்ணிய புறனே நானான் கென்ப (மெய்ப்-1)
என்பதற்கு, “விளையாட்டு ஆயத்தின்கண் தோன்றிய” எனச் சுருக்கமாகவே விளக்கம் தருகின்றார் இளம்பூரணர். ஆனால் பேராசிரியரோ, “முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் முதலாயினார் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமம் நுகரும் இன்ப விளையாட்டினுள் தோன்றிய என்னும் நெடியதொரு விளக்கத்தை மிக எளிமையாகச் சுட்டுவதைக் கூறலாம்.
இவ்வாறு அவர் செய்யும் மறுப்புரை காரணமாக மெய்ப்பாட்டியலும், உவமவியலும் பெரிதும் விளக்கம் பெறுகின்றன எனச் சொன்னால் அது மிகையன்று.
இளம்பூரணரின் கருத்தைவிடக் கூடுதல் விளக்கம் தரும் பேராசிரியர் அருமை கருதி சிற்சில இடங்களில் அவர்தம் கருத்தை நயமுடன் மறுப்பதும் உண்டு.
சான்றாக, செய்யுளியலில் இளம்பூரணரின் சில கருத்துக்களைச் பேராசிரியர் மறுத்துக் கூறுவதைச் சுட்டலாம்.
ஈரசை கொண்டும் மூவசை புணர்ந்துஞ்
சீரியைந்து இற்றது சீரெனப் படுமே (செய்-12)
என்ற நூற்பாவிற்கு இரண்டசையிலும், மூன்றசையிலும் ஓரொருசொற்கள் சீரியைந்திறுவன சீரென்று சொல்லப்படும் எனக் கூறும் பேராசிரியர், வஞ்சிப்பாவினுள் வந்த ஆசிரிய அடியினை நாலசைச்சீர் காட்டல் வேண்டுவார் இருசீரடியாக உரைப்பினும் அவை தூங்கலோசை யிலவாகலானும் அவை சீரியைந்திறுத லின்மையானுங் கொள்ளானென்பது. ஈண்டு எனப்படு மென்பதே பற்றி நாலசைச்சீர் கொண்டாரும் உளர். ஐயசைச்சீர் கொண்டாரைக் கண்டிலமென்க எனக் கூறுமிடமும், கலிப்பாவின் வகையைக்கூறும்
ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே
கொச்சகம் உறழொடு கலிநால் வகைத்தே (செய்-130)
என்னும் நூற்பாவிற்கு ஒத்தாழிசை - ஒத்தாழிசையென்னும் உறுப்புடைச் செய்யுள். ஒத்து ஆழ் இசையை ஒத்தாழிசையென்றான்: அது வினைத்தொகையாகலின் மருவிய வகையான் முடியுமென்பது. தாழிசை யென்பது தானுடைய துள்ளலோசைத்தாம். இது முறைமையிற் பெற்ற பெயர். எனவே, தரவு வேறுபடினும் வேறுபடா தென்பதூஉங், கொச்சகக்கலி போல்வனவற்றுள் வரும் இடைநிலைப்பாட்டுக்கள் அவ்வாறு தாழ முடையவன்றியும் வருமென்பதூஉங் கொள்க. இது பன்மைபற்றிப் பெற்ற பெயர், தாழிசையின்றியும் ஒத்தாழிசை சிறுபான்மை வருதலின். இனி ஒழிந்த உறுப்புநோக்கத் தாழிசை சிறந்தமையின் தலைமையாற் பெற்ற பெயரெனவும் அமையும் எனக் கூறி, இனிப், பரிபாடலுங் கலிப்பாவினுள் அடங்குமென்பாரும் உளர். கலியும் பரிபாடலுமென எட்டுத்தொகையுள் இரண்டு தொகை தம்மின் வேறாதலின் அவ்வாறு கூறுவார் செய்யுள் அறியாதாரென்பது. அல்லதூஉம், அராகவுறுப்பில்லாத முடுகியலடியுங் கொச்சகக்கலியல்லாத கலிப்பாவினுள் உண்டாவதாகலுங் கொச்சகக்கலி யுறழ்ந்து வருதலும் உடையவாம், அவ்வாறு கூறினால் என மறுக்க எனக் கூறுவது கொண்டும் இளம்பூரணரின் கருத்தை இவர் மறுப்பதை அறிய முடிகின்றது.
தம் உரையின் பல இடங்களிலும் தமக்கு முன்பிருந்த நூலாசிரியர்களின் பெயரையோ, உரையாசிரியர்களின் பெயரையோ கூறாமல் அவர்தம் கருத்துக்களை மட்டுமே மறுத்துக் கூறும் போக்கு பேராசிரியரின் பண்பட்ட போக்கினைப் பறைசாற்றுவதாக அமைகின்றது.
பின்னோர்க்கு வழிகாட்டல்
தனக்கு முந்தைய உரையாசிரியரான இளம்பூரணரின் உரையை ஒத்தும், வேண்டிய இடங்களில் நயம்பட மறுத்தும் உரைகூறும் பண்பினராகிய பேராசிரியர், பிந்தைய உரையாசிரியரான நச்சினார்க்கினியர்க்குப் பல இடங்களிலும் புதிய வழியைக் காட்டுகின்றார். உரை எழுதும் முறை, சொல்லும் வகை, சொற்பொருள் உரைக்கும் திறன், மேற்கோள் ஆட்சி, உரைநடைப்போக்கு ஆகிய எல்லாவற்றிற்கும் பேராசிரியரையே நச்சினார்க்கினியர் பின்பற்றி உரை செய்துள்ளார் என்றால் அது மிகையன்று. செய்யுளியலில் இவ்விருவர் தம் உரையையும் திட்பமுடன் ஒப்பிட்டு ஆராய்வோர்க்கு இவ்வுண்மை எளிதில் விளங்கும்.
தொடர்பு கூறல்
பேராசிரியர் உரையில் நமக்குக் கிடைத்த நான்கு இயல்களிலும் அரியதோர் ஒற்றுமை காணக் கிடைக்கின்றது. ஒவ்வொரு இயலின் தலைச்சூத்திரத்திற்கும் உரை சொல்லும் முன்பும் இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின் எனத் தொடங்கி அவ்வியல் உணர்த்தும் பொருண்மை யாதெனத் தெளிவானதொரு இரத்தினச் சுருக்க விளக்கத்தைத் தருகின்றார். மேலும் முதல் இயலுக்கும் அடுத்த இயலுக்கும் இடையேயான தொடர்பு, ஒரே நூற்பாவில் வரும் செய்திகளின் வைப்புமுறை, முதல் ஓத்தோடு அடுத்த ஓத்திற்கு உள்ள தொடர்பு முதலான யாவும் பேராசிரியரின் உரையின் எல்லா இடங்களிலும் உள்ளதைக் காண முடிகின்றது.
பேராசிரியரின் இத்தகு தொடர்பு கூறும் முறையை அடியொற்றியே பின்னாளில் திருக்குறளுக்கு உரை எடுதியவர்களுள் ஒருவரான பரிமேலழகரும், யாப்பருங்கலக் காரிகைக்கு உரைசெய்த குணசாகரரும், பிற நூல்களுக்கு உரை செய்த ஏனைய உரையாசிரியர்களும் தத்தம் உரைகளில் இத்தகு நெறியைச் செவ்வனே மேற்கொண்டனர் என்பது ஐயம் திரிபறத் தெள்ளிதின் உணர வழிகோலுகின்றது.
நிரல்படுத்திக் கூறல்
எண்வகை மெய்ப்பாடுகள் குறித்த,
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்
றப்பால் எட்டே மெய்ப்பா டென்ப (மெய்ப-3)
என்ற நூற்பாவிற்குப் பேராசிரியர் தரும் விளக்கம் பிற உரையாசிரியர்கள் யாவரினும் மாறுபட்டது. சான்றாக, தொல்காப்பியர் நகைக்குரிய களன்கள் என எள்ளல், இளமை, பேதமை, மடமை என்னும் நான்கினைச் சுட்டி நிற்க, பேராசிரியர் நகை செய்தலின் தன்மை மற்றும் கால அளவைக் கொண்டு, நகை என்பது சிரிப்பு, அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலுமென மூன்றென்ப என வகைப்படுத்துவார்.
தொடரும்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.