பேராசிரியரின் உரைநுட்பங்கள்
முனைவர் இரா. விஜயராணி
படைப்பு ஆளுமை
பேராசிரியர் பிற உரையாசிரியர்களில் இருந்து வேறுபட்டு தனித்து விளங்குவதற்குச் சான்றாக, அவர்தம் படைப்புத்திறனையும் கூறலாம். சான்றாக, மெய்ப்பாட்டியலில் காணப்படும் தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டது முதல் களவு வெளிப்படும் காலம் வரையிலான மெய்ப்பாடுகள் ஆறனுக்கும் செய்த உரையில் ஏனைய நூற்பாக்களுக்குப் போல தேவையான, பொருத்தமான மேற்கோள் பாடல்களைச் சங்க இலக்கியத்தில் இருந்தும், திருக்குறள் முதலான ஏனைய நூல்களில் இருந்தும் காட்டும் பேராசிரியர், இந்நூற்பாக்களின் அருமை கருதியும், தம் உரையின் நுட்பத்தைத் துரிதம் செய்யவும் அந்நூற்பாக்கள் ஒவ்வொன்றிற்கும் தாமே எடுத்துக்காட்டுச் செய்யுள் எழுதியதுடன், அச்செய்யுட்களுக்கு தாமே உரையும் செய்திருப்பது அவர்தம் உரைத்திட்பத்தை மட்டுமே அல்லாமல், பேராசிரியர்தம் பன்முகப்பட்ட இலக்கிய ஆளுமையையும் நமக்கு எளிதில் உணர்த்துவதாக அமைகின்றது.
சான்றாக, முதற்பகுதி மெய்ப்பாடுகளைச் சுட்டும்
புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநய மறைத்தல் சிதைவுபிறர்க் கின்னாமையொடு
தகுமுறை நான்கே யொன்றென மொழிப (மெய்ப்-13)
என்ற நூற்பாவிற்குப் புகுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல், நகுநயம் மறைத்தல், சிதைவு பிறர்க்கின்னாமை என்ற நான்கு மெய்ப்பாடுகளும், தகுமுறை நான்கு என்பது, இங்ஙனம் ஒன்றன்பின் ஒன்று தோன்றுவதற்குத் தகுமெனப்பட்ட முறையானே வந்த அந்நான்கும் என்றவாறு எனக்கூறி, இம்மெய்ப்பாடுகள் நான்கிற்கும் முறையாலே ஒருங்குவந்த செய்யுளாகவும், இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைமகன் தன்னெஞ்சிற்கு சொல்லியதாக,
யான்தற் காண்டொறுந் தான்பெரிது மகிழாள்
வாணுதல் வியர்ப்ப நாணினள் இறைஞ்சி
மிகைவெளிப் படாஅது நகைமுகங் கரந்த
நன்னுதல் அரிவை தன்மனஞ் சிதைந்ததை
நீயறிந் திலையால் நெஞ்சே
யானறிந் தேனது வாயா குதலே
என்ற செய்யுளைத் தாமே இயற்றி, இதனுள் தான் பெரிது மகிழாள் என்புழிச் சிறிது மகிழுமென்றமையான் இது புகுமுகம் புரிதலாயிற்று. ‘வாணுதல் வியர்ப்ப நாணின இறைஞ்சி’ என்பது பொறிநுதல் வியர்த்தல். “நகைமுகங் கரந்த” என்பது நகுநயம் மறைத்தல். ‘மிக வெளிப்படாது’, “தன்மனஞ் சிதைந்ததை நீயறிந் திலையால்” என்பது சிதைவு பிறர்க்கின்மை எனத் தாமே அச்செய்யுட்கு உரை கூறுவது கொண்டு அவர்தம் புலமைத்திறம் விளங்கும்.
பழையன பேணல்
தொன்மை நெறியைப் பெரிதும் போற்றும் இயல்பினராக விளங்கும் பேராசிரியர், புதிய நூல் வழக்கையும், அவற்றின் கோட்பாடுகளையும் உரிய காரணம் கொண்டு மறுத்துக் கூறுவது இவர்தம் உரையின் மற்றொரு தனிச்சிறப்பு எனலாம். சான்றாக,
ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம் (செய்-8)
என்ற நூற்பாவிற்கு, மேற்கூறிய எழுத்திலக்கண வகையானும் ஈண்டோதும் அசைக்குறுப்பான மாற்றானும் எல்லாங் குற்றியலிகரம் ஒற்றெழுத்தியற்றேயாம் என உரைகூறும் பேராசிரியர்,
முந்தியாய் பெய்த வளைகழலும் (யா.வி.மேற்-43)
என யாப்பருங்கல விருத்தி மேற்கோளைக்காட்டி
நினக்கியான் சொல்லிய தின்ன தின்று
எனவும் இவை ஒற்றியற்றாகாது எழுத்தியற்றாயினவென்று காட்டுவாறுமுளர். முந்தியாய் என்பது இகரவீறுமாமாகலின் அது காட்டல் நிரம்பாது. அல்லதூஉம் அவை சான்றோர் செய்யுளல்லவென மறுக்க. இனி, ஒற்றும் எழுத்துமென உம்மையோடெண்ணலுமாகாது: இவ்வோத்தினுள்,
உயிரில் எழுத்து மெண்ணப் படாஅ (தொல்.செய்-44)
என ஒற்றினையும் எழுத்தென்றானாகலின்
வருமொழியைச் சிதைத்து இருவகை உகரமும் கோடல் ஆகாது என்கிறார். மேலும் அவர்,
அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே (செய்-17)
என்ற நூற்பாவிற்கு இஃது எய்தியதின்மேற் சிறப்பு விதி: மேல் எழுத்ததிகாரத்து ஓதப்பட்ட அளபெடையை ஆண்டு மொழியெனக் கூறினான். அவ்வற்றானே அவை பெரும்பான்மையும் ஈண்டும் ஈரசைச்சீராகலின் ஈண்டுச் சீர் கூறியவற்றான் எய்தி நின்றவனவற்றை எடுத்து நிலைமைப்படுத்து அசைநிலையும் வேண்டினமையின், எனக்கூறி அளபெடை மேற்கூறிய இயற்சீர் நிலைமையேயன்றி ஓரசையாய் நிற்றலும் உரித்து,
நிலம்பாஅய்ப் பாஅய்ப் பட்டன்று நீலமா மென்றோட்
கலம்போஒய்ப்போஒய்க் கௌவை தரும் (யா.வி.மேற்)
என யாப்பருங்கல விருத்தி மேற்கோளைக் காட்டி, போஓய்ப் போஓயெனச் சேய்மைக்குறிப்புப்படச் செய்யுள் செய்த வழியும் அளபெடை அசைநிலையாயிற்று. இனி, இவற்றை விளியும் பண்ட மாற்றும் நாவல் கூற்றும் முதலானவற்றுள் வருமென்பாருமுளர். அங்ஙனம் வந்தது பிற்காலத்துச் செய்யுளென்ப எனக்கூறி பழமை போற்றுகின்றார்.
புதியன கடிதல்
பண்டுதொட்டு வரும் பழைய இலக்கண மரபைப் பெரிதும் போற்றும் இயல்பினராகிய பேராசிரியர், புதிய நூற்கொள்கைகளை மறுக்கும் பாங்கும் காணப்படுகின்றது. சான்றாக, உவமவியலுள் கூறப்படும் உவமைகள் சிலவற்றையும், சொல்லதிகாரத்துள்ளும், செய்யுளியலிலும் சொல்லுகின்ற கருத்துக்களைக் கொண்டு அவர் காலத்தில் செய்த நூலாகிய அணி நூலைப் பின்வரும் காரணங்களைச்சுட்டி மறுக்கின்றார்.
* அவை ஒருதலையாகச் செய்யுட்கு அணி என்று இலக்கணம் கூறப்படா: என்னை? வல்லார் செய்யின் அணியாகியும், அல்லார் செயின் அணியன்றாகியும் வரும், தாம் காட்டிய இலக்கணத்தில் சிதையா வழியும்.
* எல்லாம் தொகுத்து அணி எனக் கூறாது, வேறு சிலவற்றை வரைந்து அணி எனக் கூறுதல் பயமில் கூற்றாம்.
* வரையறுத்துக் கூறல் அமையாது.
* அவற்றைப் பொருள்உறுப்பு என்பது அல்லது அணி என்பவாயின், சாத்தனையும் சாத்தனால் அணியப்பட்ட முடியும் தொடையும் முதலானவற்றையும் வேறுகண்டாற்போல அவ்வணியும் செய்யுளின் வேறாதல் வேண்டும்.
* செய்யுட்கு அணி செய்யும் பொருட்படை எல்லாம் கூறாது சிலவே கூறி ஒழியின் அது குன்றக் கூறலாம்.
இக்காரணங்களைக் காட்டி, அணி இலக்கணத்தை மறுக்கின்றார் பேராசிரியர். இவ்வாறு அணிநூலை மறுத்துக்கூறும் பேராசிரியரின் இக்கருத்துக்கள் ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணை செய்வனவாக உள்ளன.
உரைச்செறிவு
பிற உரையாசிரியர்களின் கூர்ந்த உரையைப் பரந்துபட்டுக்கூறும் தெளிந்த போக்கு பேராசிரியரிடம் காணப்படுகின்றது. உவமவியலுக்கு இவர் செய்த உரைத்திறன் இதற்குப் பெறும் சான்றாக அமைவதைக் காணமுடிகின்றது. அவைதாம்
அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப
என்ன மான என்றவை யெனாவு
ஒன்ற ஒடுங்க ஒட்ட ஆங்க
என்ற வியப்ப என்றவை யெனாஅ
என்ன விழைய விறப்ப நிகர்ப்பக்
கள்ளக் கடுப்ப ஆங்கவை யெனாஅக்
காய்ப்ப மதிப்பத் தகைய மருள
மாற்ற மறுப்ப ஆங்கவை யெனா அப்
புல்லப் பொருவப் பொற்பப் போல
வெல்ல வீழ ஆங்கவை யெனாஅ
நாட நளிய நடுங்க நந்த
வோடப் புரைய என்றவை யெனாஅ
ஆறாறு அவையு மன்ன பிறவுங்
கூறல் சாலைப் பல்குரிப் பினவே
(உவம.10)
என்ற நூற்பாவிற்கு இஃது, உவமத்திணையும் பொருளினையும் ஒப்பிக்குங்கால் இடைவருஞ்சொல் இனைய என்கின்றது. ‘அவைதா’ மென்பது, வினை பயன் மெய்யுரு வென்னும் நான்கு உவமமுமென்றவாறு.
‘பிறவும்’ என்பதனான் எடுத்தோதினவேயன்றி, நேர, நோக்க, துணைப்ப, மலைய, ஆர, அமர, அனைய, ஏர, ஏர்ப்ப, செத்து, அற்று, கெழுவ, என்றற் றொடக்கத்தன பலவும், ஐந்தாம் வேற்றுமைப் பொருள் பற்றி வருவனவும், எனவென் எச்சங்கள் பற்றி வருவனவும், பிறவுமெல்லாங் கொள்க. ஈண்டு எடுத்தோதியவற்றுள் வரையறை வகையவென மேற்கூறப்படுவன பொதுவகையான் வருமாற்றுக்கும் உதாரணம் அவற்றை உரிமை வகையான் உதாரணங் காட்டும்வழிக் காட்டுதும். ஆண்டு எடுத்தோதாதன ஆறெனப்படும். அவை ஒன்ற, என்ற, மாற்ற, பொற்ப, நாட, நடுங்க, என்பன. அஃதேல் ஆண்டு வரையறை கூறப்பட்டன எண்ணான்கு முப்பத்திரண்டாயினவா றென்னை? முப்பதேயாகல் வேண்டுமால் அவையெனின், அவற்றொடு புறனடையாற் கொண்டவற்றுள்ளும் நேர நோக்க என்னும் இரண்டு கூட்டி ஓதினான்.
இவை எண்ணப்பட்ட முப்பத்தாறு சொல்லும் இவையே போல்வன பிறவும் வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் வேறுபடு குறிப்பினவாகி வரும் எனக் கூறுவதும் கொண்டும், இவ்வியலின் தலைச்சூத்திரமான
வினைபயன் மெய்வரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமத் தோற்றம்
(உவம-1)
என்ற சூத்திரத்திற், தொழிலும், பயனும், வடிவமும், வண்ணமும் என்னும் நான்கெனப்படும் கூறுபட வரும் உவமத்தோற்றம் எனக்கூறி, அவற்றுள் வடிவமும் வண்ணமும் பண்பினுல் அடங்கும் என்றபோதும் அவ்வாறு ஆசிரியர் (தொல்காப்பியர்) கூறாது, வேறுவேறாகக் கூறியதன் காரணமாக,
இரவுக் குறிக்கண் கூற்று நிகழ்த்தும் தலைவன் கண்ணால் காணும் நிறம்பற்றிய உவமை கூறமுடியாது. கையாலும் மெய்யாலும் தொட்டு அறிந்து வடிவம் பற்றிய உவமை மட்டுமே கூற முடியும். பகல்வேளையில் நிகழும் கூற்றுகளில் நிறம் பற்றிய உவமைகள் இடம் பெறுவது இயல்பே. நுட்பமாக இதனை உணர்ந்த தொல்காப்பியர், மெய், உரு என்ற இரண்டினையும் பண்பு எனற ஒன்றினுள் அடக்கிவிடாமல் வேறுபடுத்திக் கூறினார் என்பது பேராசிரியர் கருத்தாகும். இக்கருத்து மிகவும் சிறப்பாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து, “இந் நான்கு பகுதியே யன்றி அளவும் சுவையும் தண்மையும் வெம்மையும் தீமையும் சிறுமையும் பெருமையும் முதலாயின பற்றியும் உவமப் பகுதி கூறாரோ எனின் அவை எல்லாம் இந்நான்கினுள் அடங்கும் என்று விளக்கம் கூறும் திறம் அவரது புலமைத் திறத்தைக் காட்டுவதாகவே அமைகின்றது.
சொல் நுணுக்கம்
எந்தவொரு கலைச்சொல்லிற்கும் நுட்பமான பொருளைக் கூறும்போது அச்சொல் வளம் பெறுவதுடன், அந்நுட்பம் கூறிய சான்றோரும் தனித்துவமாக விளங்குவர் என்பது உலகியல் ஆகும். அத்தகு நுட்பம் பேராசிரியரின் உரையில் பல இடங்களிலும் காணக்கிடைக்கின்றது. அவற்றுள் சிலவற்றை இங்குக் காண்போம்.
மெய்ப்பாட்டியல்
அரற்று - அழுகையன்றிப் பலவும் சொல்லித் தன்குறை கூறுதல். அது காடுகெழு செல்விக்குப் பேய் கூறும் அல்லல் போல வழக்கினுள்ளோர் கூறுவன (மெய்-12).
கனவு - வாய்வெருவுதல், அதனானும் அவன் உள்ளத்து நகழ்கின்றது. ஒன்று உண்டு என்று அறியப்படும் (மெய்-12).
வெரூவுதல் - வெரூஉதலென்பது விலங்கும் புள்ளும்போல வெருவி நிகழும் உள்ள நிகழ்ச்சி. அஃது, அஞ்ச வேண்டாதன கண்டவழியும் கடிதிற் பிறந்து மாறுவதொருவெறி.
வியர்த்தல் - வியர்த்தலென்பது, பொறாமை முதலாயின பற்றி மனம்புழுங்குதல்.
நடுங்குதல் - நடுக்கமென்பது, அன்பும் அச்சமும் முதலாயின உடம்பிற் புலப்படுமாற்றான் உள்ளம் நடுங்குதல். புதல்வர்க்குப் பிணி இல்வழியும் எவனாங்கொலென்று நடுங்குதல் அன்பான் நடுங்குதலாம். அச்சமென்னுஞ்சுவை பிறந்ததன் பின்னர் அதன்வழித் தோன்றிய நடுக்கம்.
கொலை - கொலையென்பது, அறவும் புகழும் முதலாயினவற்றைக் கொன்றுரைத்தல்.
மரபியல்
தத்தை - பெருங்கிளி (மர-98).
கிளி - சிறுகிளி (மர-98).
மொழிபெயர்ப்பு - பிறபாடையாற் செய்யப்பட்ட பொருளைத் தமிழ் நூலாகச் செய்வது (மர-97). என்பவற்றைக் கூறலாம்.
நிறைவாக
தற்காலத்தார் கூறும் இலக்கியக் கொள்கை, இலக்கியத் திறனாய்வு, கவியாளுமை முதலியன பற்றிப் பேராசிரியர் தம் உரையில் வெளிப்பட கூறவில்லை என்ற போதும் அவற்றின் மூலம் குறித்த பதிவுகள் இவர்தம் உரையில் மலிந்தே கிடக்கின்றன. முந்தைய உரையாசிரியரை ஏற்க வேண்டிய இடத்தில் ஏற்றும் மறுக்க வேண்டிய இடத்து மறுத்துக் கூறுமிடத்தும். பிந்தைய உரையாசிரியர்க்கு வேண்டிய விகற்பம் அமைத்துக் கூறுமிடத்தும் பேராசிரியர் நடுவுநிலை பிறழாத திறனாய்வாளராகவே விளங்குகின்றார்.
மெய்ப்பாட்டியல் கூறுகளை நுண்ணுதின் விளக்க முற்படும் இடங்களில் அம்மெய்ப்பாடுகளுக்குரிய எடுத்துக்காட்டுச் செய்யுள்களை தாமே கூறும்போது அவரின் படைப்பு ஆளுமை வெளிபட்டு நிற்கின்றது. மூலநூல் ஆசானாகிய தொல்காப்பியரின் கோட்பாடுகளையும் பண்டைய மரபுகளையும் பேணும் இடங்களிலும், அணிநூல் போன்றவற்றை உரிய காரணம் கூறி தவிர்க்கும் இடங்களிலும் பேராசிரியரின் பன்முக ஆளுமை வெளிப்படுகின்றது.
பயன்பட்ட நூல்கள்
1. அரவிந்தன்.மு.வை., - உரையாசிரியர்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2012, நான்காம் பதிப்பு.
2. கோபாலையர்.தி.வே., - தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் அரணமுறுவல்.ந., (முதல்பகுதி), தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003, முதற்பதிப்பு.
3. கோபாலையர்.தி.வே., - தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் அரணமுறுவல்.ந., (இரண்டாம்பகுதி), தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003, முதற்பதிப்பு
முற்றும்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.