இராமன் கடவுளாகக் காட்சிப்படுதல்
முனைவர் செ. ரவிசங்கர்
முன்னுரை
தமிழ் இலக்கியங்களில் கம்பராமாயணம் மிகவும் போற்றத்தக்க நூல் ஆகும். அறத்தைப் பற்றி மிகத் தெளிவாகக் கருத்துரைக்கும் நூல். குறிப்பாக, பெண்களினால் அழிந்தவர்களைப்பற்றி இராமாயணம் போல் வேறு நூல் குறிப்பிட்டதில்லை. அந்த வகையில் இராமாயணத்தில் ஆரணிய காண்டத்தில் உள்ள விராதன் வதைப்படலம் மிக முக்கியமானது. இராமனைத் திருமாலின் அவதாரம் என்று காட்டும் பகுதியாக இந்தப் படலம் அமைந்துள்ளது. மேலும் காப்பியத்தின் இரண்டாவது திருப்பு முனையாக இக்காண்டம் அமைந்துள்ளது. காப்பிய வளர்ச்சிக்கு இரண்டாவது திருப்புமுனை இக்காண்டத்தின் நடுநாயகமாக அமைந்துள்ளதைக் காணலாம். அயோத்தியா காண்டத்தில் கைகேயி செயல் காப்பிய நோக்கத்திற்கு முதல் திருப்பு முனையாகும். ஆதன் விளைவாகத்தான் திருமால் இராமனாக அவதாரம் எடுத்த நோக்கம் நிறைவேறியது. மேலும் காட்டடிற்குச் சென்ற இராமன் பதினான்கு ஆண்டுகள் கழித்து நாட்டிற்கு வந்திருந்தால் என்ன பயன்? அதனால் தான் இராமன் கடவுள் (திருமால்) என்பதை வெளிப்படுத்துவதாக ஆரணிய காண்டம் அமைந்துள்ளது. அந்த நிலையை வெளிப்படுத்தும் படலமாகத்தான் விராதன் வதைப்படலம் அமைந்துள்ளது. அந்த வகையில் இக்கட்டுரை விராதன் படலத்தின் மூலம் இராமன் கடவுளாகக் காட்சிப்படுவதை ஆராய்கிறது.
விராதன் தோற்றம்
கம்பர் தமது கவித் திறத்தினால் விராதனை அறிமுகம் செய்யும்போதே மிகக் கொடிய பசியுடைய அரக்க குணம் கொண்டவன் என்று கூறியுள்ளார். அதாவது,
"எட்டோடு எட்டுமத மா கரி
இரட்டி அரிமா
வட்ட வெங்கண் வரை யாளி
பதினாறு வகையின்
கிட்ட இட்டு இடை கிடந்தன
செறிந்தது ஒருகைத்
தொட்ட முத்தலை அயில் தொகை
மிடல் கழுவொடே" (ஆரண்ய: பாடல் - 5)
என்று பாடலில் விராதன் பண்பினை உருவகப்படுத்துகிறார்.
விராதன் கோரப் பசியில் இருக்கிறான் என்பதைக் கம்பர் "பதினாறு மதங் கொண்ட பெரிய யானைகள்; முப்பத்தி ரெண்டு சிங்கங்கள்; 16 யாளிகள் போன்றவற்றையெல்லாம் சூலாயுதத்தில் வரிசையாகக் கோர்த்துள்ளான். இவையெல்லாம் விராதன் சாப்பிடுவதற்கான உணவு" என்கிறார் கம்பர்.
மேலும் விராதனின் உடலின் தோற்றத்தில் குறிப்பிடும் போது, "நச்சுபோல் கொடுமையும் மலைபோல் வலிய தோற்றமும் கொண்டவன்" என்று கூறலாம். அவனின் உடல் உறுப்புக்களைப் பற்றிக் குறிப்பிடும் போது;
"புக்க வாள் அரி முழுங்கு செவியின் பொறிஉற
பக்கம் மின்னும் மணிமேரு சிகரம் குழைபட
செக்கர் வான் மழை நிகர்க்க எதிர் உற்ற செருவத்து
உக்க வீரர் உதிரத்தின் ஒளிர் செச்சையி னொடே" (பா - 8)
என்கிறார் கம்பர்.
அதாவது, “விராதனின் காது என்பது மலைக்குகை போல இருந்தது. அவனின் கரிய பூசிய சிவந்த இரத்தப் பூச்சு செவ்வான மேகம் போன்று இருந்தது. இவ்வாறான தோற்றம் கொண்டவன் விராதன்” என்று கம்பர் கூறியுள்ளார்.
விராதனின் ஆடை
விராதனின் ஆடைகளைப் பற்றி கம்பர் கூறும் போது;
“செற்ற வாள் உழுவ வன் செறி
அதள் திருகுறச்
சுற்றி வாரள உரித் தொகுதி
நீவி தொடர
கொற்றம் மேவு திசை யானையின்
மணிக் குலலுடைக்
கற்றை மாசுணம் விரித்து வரி
கச்சு ஒளிரவே” (பா - 13)
என்று கூறுகிறார்.
விராதன் தான் கொன்ற புலியின் தோலையும், பல யானைகளின் தோற்கூட்டத்தை அரையில் ஆடையாகவும், யானைகளின் மணிகளைக் கோர்த்த மலைப்பாம்பைக் கச்சாகவும் கட்டியிருந்தான். இத்தோற்றம் விராதனின் அரக்கக் குணத்தைக் காட்டுகிறது.
இவ்வாறாக விராதனின் உருவத்தை கம்பர் வருணித்துள்ளார். இது போன்ற தோற்ற வருணனை புராணக் கதைகளில் அரக்கர்களுக்குரியதாக அறிய முடிகிறது. எதார்த்த மனிதனின் நடவடிக்கை, பழக்க வழக்கங்களில் இருந்து மாறுபட்ட கோணத்தில் ஒரு பாத்திரத்தைப் படைக்கும்போது அது எதிர் நிலைப் பண்பினைப் பெற்றப் பாத்திரம் என முடிகிறது. அந்த வகையில் விராதன் பாத்திரமும் எதிர் நிலை பாத்திரம் என்பது அறிந்து கொள்ள முடிகிறது.
சீதையைக் கவர்தல்
விராதன் தலைமைப் பாத்திரத்திற்கு எதிர்நிலைப் பாத்திரம் என்பதைத் தோற்றத்தைக் கொண்டு உணர முடிந்தது, அது போலவே விராதன் காட்டிடையே இராமன் இலக்குவனுடன் சென்ற சீதையைக் கவர்ந்து வானுலகில் சென்று விட்டான், என்பதை
“நில்லும் நில்லும் என வந்து, நிணம்
உண்ட நெடு வெண்
பல்லும் வல் எயிறும், மின்னு பகு
வாய் முழை திறந்து
அல்லி புல்லும் அலர் அன்னம்
அனையாளை ஒரு கை
சொல்லும் எல்லையில் முகந்து உயர்
விசும்பு தொடர” (பா.19)
என்று கம்பர் புனைந்துள்ளார்.
அரக்கர்களின் கதையில் பெண்களைக் கவர்ந்து செல்வது போலவே பல கதைகள் உள்ளன. அது போலவே விராதன் சீதையைக் கவர்ந்து போவது தெரிகிறது. இது போன்றதொரு கதை அமைப்பு கம்பராமாயணத்தில் இடம் பெறுவது ஏதோ ஒரு கருத்தைக் கூற உள்ளதாகத் தெரிகிறது.
இராமன் தாக்குதல்
சீதையை விராதன் தூக்கிச்செல்வதைக் கண்ட இராம, இலக்குவன் சினம் கொண்டனர். இரண்டு பேரும் விராதனை விரட்டிச் சென்று போர் செய்தனர். அக்காட்சியை கம்பர் பின்வருமாறு கூறுகிறார்.
“இலை கொள' வேல் அடல் இராமன் எழுமேக உருவன்
சிலை கொள் நாண் நெடிய கோதை
ஒலி ஏறு திரை நீர்
மலைகள் நீடு தலம் நாகர் பிலம்
வானம் முதல் ஆம்
உலகம் ஏழும் உரும்ஏறு ஒலித்தது உரறவே” (பா.23)
அதாவது, இராமன் விராதன் மீது எய்த அம்பு அதன் ஒலி ஏழு உலகங்களிலும் இடி ஏறு போல ஒலித்தது என்பது இப்பாடலால் பெறப்படுகிறது. அதன் விளைவாக விராதன் சீதையை விட்டுவிட்டான். அதற்குப் பதிலாக இராமனை எதிர்த்துப் போர் புரிந்தான். அதாவது, தனது கையில் வைத்துள்ள சூலப்படையை இராமன் மீது எரிந்தான், ஆனால் அது இராமனின் வில்லினால் இரண்டு துண்டாக உடைந்து கீழே விழுந்தது. அதனைக் கண்டதும் கோபப்பட்ட விராதன்
“பார் ஒடுங்குறு கரம் கொடு
பருப்பதம் எல்லாம்
வேரொடும் கடிது எடுத்து எதிர்
விசைத்து விடவும்” (பா.28)
அதாவது மலைகளை எல்லாம் வேரோடு பிடுங்கி, அதனை இராமன் மீது எறிந்தான். இராமன் தனது வில்லினால் எய்யப்பட்ட அம்பு அந்த மலைகளை திருப்பி அனுப்பியது, அம்மலைகள் எல்லாம் விராதன் மேல் பட்டு கானத்தை உண்டு பண்ணியது. இறுதியாக இராமன் நெருப்பு போன்ற அம்புகளை எறிந்து விராதனின் வலிமையைக் குறைத்தான்.
விராதன் மீது இராமன் திருவடிபடுதல்
இறுதியாக விராதன் மீது இராமன் இலக்குவன் கொண்ட கோபத்தின் விளைவாக அவனின் தோள்களை இரண்டு பேரும் தமது வாளினால் வெட்டி சாய்த்தனர். மேலும் விராதனை மண்ணைத் தோண்டிப் புதைக்கத் திட்டமிட்டனர். அப்போது இராமன் விராதனைத் தன் காலால் எட்டி உதைத்தான். அப்போது அவன் உண்மையான உருவம் பெற்றான். தற்போது விராதன் தன் வரலாற்றை இராமனிடம் விளக்குகிறான்
“இம்பர் உற்று இது எய்தினேன்
வெம்பு விற்கை வீர பேர்
தும்புரு தனதன் சூழ்
அம்பரத்து உருளன் அரோ” (பா.62)
காக்க வந்த காம நோய்
துரக்க வந்த தோமினால்
இரக்கம் இன்றி ஏவினான்
அரக்கன் மைந்தன் ஆயினேன் (பா.64)
அன்ன சாபம் மேவி நான்
இன்னல் தீர்வது ஏது எனா
நின்ன தாளின் நீங்கும் என்று
உன்னும் எற்கு உணர்த்தினான் (பா.65)
என்று கம்பர் விராதனின் சாப வரலாற்றைக் கூறுகிறார்.
அதாவது என் பெயர் தும்புரு. குபேரன் ஆட்சிக்குட்பட்ட வானுலகில் வீணை மீட்டுபவனாக இருந்தேன். எனக்கு ஏற்பட்ட காம நோய் காரணமாகக் குபேரனால் அரக்கனாகும் படி சபிக்கப்பட்டேன் நான். எனக்கு எப்போது இச்சாபம் நீங்கும் எனக் கேட்டேன். அதற்கு இராமன் காலடி பட்டதும் தீரும் என்று விராதன் கூறினான். இக்கதை இராமனை இப்பிறவியில் கடவுளாகக் காட்டுகிறது.
இராமனின் மகிமை
கம்ப இராமாயணத்தில் இராமன் திருமாலின் அவதாரம் என்பதைக் காட்டும் பகுதியாக 'விராதன்' படலமும் அமைந்துள்ளது. எனவே தான் விராதன் இராமனின் மகிமையைக் கண்டு, துதிப்பதாக கம்பர் பாடலைப் புனைந்துள்ளார்.
“வேதங்கள் அறைகின்ற உலகு
எங்கும் விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னின்
படிவங்கள் எப்படியும்!
ஓதம் கொள் கடல் அன்றி, ஒன்றினோடு
ஒன்று ஒவ்வாப்
பூதங்கள் தோறும் உறைந்தால், அவை
உன்னைப் பொறுக்குமோ! (பா.47)
என்று விராதன் இராமனின் பெருமைகளைப் பேசுகிறான். வேதங்கள் சொல்கின்ற எல்லா உலகங்களிலும் பரந்துள்ளன உன்னுடைய திருவடிகள். இது தாம் என்றால் உன்திரு அடிகளின் மற்ற உறுப்புகள் எவ்வாறு அமைந்துள்ளனவோ என்று இராமனைப் பார்த்துக் கடவுள் பக்தியோடு விராதன் பேசுகிறான்.
இராமனைக் கடவுளாகக் காட்டுதல்
கம்ப இராமாயணத்தின் தொடக்கத்தில் இராமன் தசரதனின் மகன், என்று சாதாரண மனிதனாகக் காட்டிய கம்பன் ஆரணிய காண்டத்தில் தான் கடவுளாக இராமனைக் காட்டுகிறார்.
“ஓயாத மலர் அயனே முதல் ஆக
உளர் ஆகி
மாயாத வானவர்க்கும் மற்று
ஓழிந்த மன்னுயிர்க்கும்
நீ ஆதிமுதல் தாதை நெறி முறையில்
ஈன்று எடுத்த
தாய் ஆவார் யாவரோ? தருமத்தின்
தனி மூர்த்தி” (பா.52)
இங்கு இராமனை மிக உயர்வாக அறத்தின் ஒப்பற்ற வடிவாக இராமனே என்றும் பிரமன், மற்றும் தேவர்களுக்கும் நீயே முதன்முதலில் தோன்றிய தந்தை என்றும் விராதன் பக்தி முறையின் வணங்குகிறான். மேலும் இராமன் திருமாலின் அவதாரம் என்பதை மிகத் தெளிவாக
“நீ ஆதி பரம்பரமும்
நின்னவே உலகங்கள்
ஆயாத சமயமும் நின் அடியவே
அயல் இல்லை
தீயாரின் ஒளித்தியலால் வெளி
நின்றால் தீங்கு உண்டோ?
வியாத பெரு மாய
விளையாட்டும் வேண்டுமோ? ” (பா.53)
என்று கூறுகிறான் விராதன்.
அவன் இராமனை நீ முதன்மையான மேலாம் கடவுளும் ஆவாய் எல்லா உலகங்களும் உனக்குரியனவே என்று கூறுகிறான்.
முடிவுரை
இவ்வாறாக கடவுளின் தன்மையில் விராதன் இராமனின் கால் பட்டதால் தான் மாற்றம் அடைந்துள்ளான் என்பதை ஒரு படலமாக வைத்துக் கம்பர் இராமாணயத்தை எழுதியுள்ளார். கம்ப இராமாயணம் இது போன்ற படலத்தை கொண்டிருக்க வில்லை என்றால் இராமன் கடவுள் என்பது தெரியப்படுத்த வேறுவழி இல்லை எனவே கம்பர் இப்படலத்தைப் படைத்துள்ளார். இராமனின் கடவுள் நிலையை விளக்க விராதனின் கதையும் பயன்பட்டுள்ளது. இக்கதையின் வாயிலாக இராமன் திருமாலின் அவதாரம் என்பது புலனாகிறது அந்த வகையில் இப்படலம் மிக முக்கியமானது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.