பன்னிருதிருமுறை வழி பைந்தமிழ்ச் சமூகம்
முனைவர் கா. இலட்சுமி

தமிழ்ச் சமூகம் உலகிற்கு உயர்ந்த நாகரிக வாழ்வினையே இன்று வரை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. ஏனெனில் தமிழ் நாகரிகத்தின் ஆணி வேர் சங்க இலக்கியத்திலும் செழுமை பக்தி இலக்கியத்திலும் தழைத்தமையே. இலக்கியங்களானது அறிவாலும் ஆற்றலாலும் ஆர்வத்தாலும் அயராத உழைப்பாலும் தோன்றுவன. இவற்றோடு தெய்வத் திருவருளாலும் தோன்றும் இலக்கியங்களாகப் பக்தி இலக்கியங்களைக் கூறுவர். பக்தி இலக்கியங்கள் உள்ளத்தை நேர்வழியில் செல்ல நெறிப்படுத்துவன. உள்ளத்தின் நேர் வழியில் ஊரையும் ஊரின் வழி பாரையும் செம்மைப்படுத்துவன. அத்தகைய பக்தி இலக்கியங்களே தமிழ் இலக்கியங்களுள் மேலோங்கிக் காணப்படுவதால் தமிழைப் பக்தி மொழி என்று பகர்கின்றனர். இதனையே தமிழண்ணல், “தூதின் மொழி பிரெஞ்சு; காதலின் மொழி இத்தாலி; அது போல் பக்தி மொழி தமிழ் மொழியாகும். தமிழ் மொழி பக்தி இயக்கத்தால் கனிந்த மொழியாகும்” என்று கூறுகிறார்.
பக்தி மொழியாகிய தமிழில் பக்தியையும் பண்பாட்டினையும் பரப்பிய சமயங்களாகக் குறிப்பிட்டுக் கூறப்படுவன சைவம், வைணவம், சமணம், பௌத்தமாகும். சமயம் என்பது சமைத்தல் என்ற சொல்லில் உருவாகியது. சமயம் மனிதனை மனிதனாய் வாழச் செய்வதோடு மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவதாகும். இச்சமயங்களுள் தமிழர்களின் ஆதிசமயமாய்ச் சைவம் விளங்குகின்றது. சிவபெருமானை முழுமுதற் கடவுளாய்க் கொண்ட சைவத்தை ஊர்த்த சைவம், அநாதிசைவம், ஆதி சைவம், மகா சைவம், பேத சைவம், அபேத சைவம், அந்நா சைவம், குண சைவம், நிர்க்குண சைவம், அத்துவா சைவம், யோக சைவம், ஞான சைவம், அணு சைவம் என்று பலத்திறப்பட பகுத்துரைப்பர்.
‘அன்பே சிவம்’என்று போற்றும் சைவத்தின் பயனாய்த் தமிழில் முகிழ்த்த அரும்பயன் திருமுறைகளாகும். இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப்பட்ட அடியவர்கள் தாம் பெற்ற இறை இன்பத்தைப் பிறரும் பெறுதல் வேண்டியும் இறைவனைத் தமிழ்ப்பாமாலையால் அணிசெய்தல் வேண்டியும் பாடப்பட்ட உயர் இலக்கியம் திருமுறையாகும். திருமுறைகளின் இன்றியமையா நோக்கம் மானுடத்தை வாழ்வாங்கு வாழ வைப்பதேயாகும். அவ்வகையில் திருமுறையால் விளைந்த நன்மைகளுள் தலையாயப் பயனாய்த் திகழ்வது சமுதாய முன்னேற்றமே. சாதியப் பாகுபாடற்ற சமத்துவம், தனி மனித ஒழுக்கம், மனிதநேயம், பெண்மையின் உயர்வு, தொண்டு மனப்பான்மை முதலியனவற்றைப் பறைசாற்றும் பெட்டகமாய்த் திருமுறைகள் திகழ்கின்றன.
தனிமனித ஒழுக்கம்
தனிமனித ஒழுக்கமே சிறந்த சமுதாயத்தின் அடிப்படை வித்தாகும். சமுதாய அமைப்பு பற்றிய அரிஸ்டாட்டிலின் கொள்கை சிறப்புற விளக்குகின்றது. மனிதன் தனியாக வாழாமல் கூட்டத்தோடு கூடி வாழும் இயல்புடையவன் என்பதால் மனிதனை ஒரு சமூக விலங்கு என்றும், தன்னுடைய தேவை, பாதுகாப்பு, சுகம், நலத்திற்காகவும், வாழ்க்கை வசதிக்காகவும் ஏனைய மனிதர்களோடு சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயம் மனிதனுக்கு இருக்கிறது என்றும் மனிதர்களின் சமுதாய அமைப்பு பற்றிக் குறிப்பிடுகிறார்.
சமுதாயத்தில் கூடி வாழும் மனிதன் ஒழுக்கத்தைப் பேணாவிடில் சமுதாயமும் ஒழுக்கமற்றதாய் மாறும். மனிதன் ஒழுக்கம் மிகுந்தவனாய் வாழ்ந்தால் அச்சமுதாயமும் ஒழுக்கமானதாய் விளங்கும். எனவே சமுதாயம் ஒழுக்கமானதாய்த் திகழ தனிமனித ஒழுக்கமே அடிப்படையாகும். இக்கருத்தினை நிலைநிறுத்தும்; வகையிலேயே அடியவர்கள் தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தியதோடு வாழ்ந்து காட்டவும் செய்தனர். உயர்குலத்தவராய்ச் சுட்டப்படும் திருஞானசம்பந்தர், தாழ்குலத்தவராய்ச் சுட்டப்படும் திருநீலகண்ட யாழ்ப்பாணரை ஐயர் என்று அழைக்கும் உயரிய பண்பினை உடையவர்கள் நாயன்மார்கள் என்பதை இந்நிகழ்வின் மூலம் உணரலாம்.
மனிதன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களுள் ஒன்றான பிறன்மனை நோக்காமை பற்றித் திருமூலர்,
“பொருத்தம் இலாத புளிமாங்கொம்பு ஏறி
கருத்து அறியாதவர் கால் அற்ற வாறே”
(திருமந்திரம்)
என்று குறிப்பிடுகிறார்.
பிறன்மனை நோக்குவோரின் நிலையானது பொருந்தாத புளியங்கொம்பில் ஏறியோர் கால் தவறி விழுவது போன்றது என்று விளக்குகிறார். அதே போன்று கள்ளுண்ணுவோரையும் சாடுகிறார். கள்ளுண்ணுவோர் தன்னிலை மறந்து நிற்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் கிடப்பதோடு கீழான செயலில் ஈடுபடுவர். இந்நிலையானது உயிர்களுள் உயர்வுடையதாய்ப் போற்றப்படும் மனிதனுக்குக் கேட்டினையே விளைவிக்கக் கூடிய இத்தீய பழக்கத்தை அறவே ஒழித்தல் நன்று என்று திருமூலர் கூறுகிறார்.
ஐம்புலனையும் அடக்கி வாழக்கூடியவனே மெய்ஞானம் பெற முடியும் என்றும் ஐம்புலனை நாம் அடக்கத் தவறினால், புலனைந்தும் நம்மை அடக்கி ஆளும் என்றும் ஐம்புலனடக்கம் குறித்துத் திருமூலர் விளக்குகிறார்.
“பார்ப்பா னகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுவைந்தும் பாலாய்ச் சொரியுமே”
(திருமந்திரம்)
சைவ அடியார்கள் பின்பற்றிய ஒழுக்கங்களாகிய உயர்வு தாழ்வாற்ற நிலை, பிற உயிரையும் தன்னுயிரைப் போல் கருதும் திறம், அன்பையே யாவருக்கும் சமமாய்ப் பகரும் பாங்கு, அர்ப்பணிப்பு உணர்வு, பணிவு, பொறுமை முதலியன தனிமனித ஒழுக்கத்தின் தலையாய வித்துக்களாகும்.
சமயப்பொறை
“சாதி இரண்டொழிய வேறில்லை” என்று பாரதியின் வழி நின்று இன்று சமயப்பொறை பற்றி உரக்க உரைக்கிறோம். தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று திராவிட இயக்கத்தின் வழியில் தமிழ்ச் சமுதாயம் சாதி ஒழிப்பினை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. இச்சாதி ஒழிப்பினைத் திருமுறைகள் கடிந்து உரைக்கின்றன.
“அங்கமெலாம் குழைந்து அழுகு கொழுகுநோயாய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில”
(நாவுக்கரசர் 6-95-10)
என்று நாவுக்கரசர் தேவாரம் சாதிய ஒழிப்பைச் சாடுகின்றது. ஆண்டவன் முன்பு அனைவரும் சமமே என்னும் உயரிய கோட்பாட்டைத் திருமுறைகள் வலியுறுத்துகின்றன.
சமயப்பொறை பற்றி குலச்சிறையார் செய்கையாக,
“குறியின் நான்கு குலத்தினராயினும்
நெறியின் அக்குலம் நீங்கினராயினும்
அறிவு சங்கர்க் கன்பர் எனப் பெறில்
செறிவறப் பணித்தேத்திய செய்கையார்”
(12இகுலச்சிறை நாயனார் புராணம், 4)
என்று குறிப்பிடுவது, சைவர்களின் சாதி சமயப் பாகுபாடற்ற சமத்துவத்தைப் பறைசாற்றும். நாயன்மார்களாக உயர் சாதியினர் தான் இருத்தல் வேண்டும் என்னும் நிலையில்லாது உயர் சாதி, தாழ்ந்த சாதி என்னும் பாகுபாடற்றவர்களாய் இருந்தனர்.
பெண்ணின் பெருமை
உயிர்கள் அனைத்திற்கும் அன்பினைப் பொதுவாக்கிய சமயமான சைவம் ஆண் பெண் பாகுபாட்டினை எவ்வாறு நோக்கும்? பெண்கள் இறை வழிபாட்டிற்கும் முக்தி பெறுவதற்கும் தகுதியற்றவர்களாய்க் கருதி ஒதுக்கப்பட்டு வந்த மடமையை சைவம் தகர்த்தது. ஆணுக்குப் பெண் சரிநிகர் என்பதை பக்தி இயக்கம் பெரிதும் வலியுறுத்தியது. சைவ அடியவர்களாய் ஆண்கள் மட்டும் இல்லாது பெண்களும் அடியவர்களாய்ப் போற்றப்பட்டனர். காரைக்கால் அம்மையார், திலகவதியார், மங்கையர்க்கரசி முதலானோர் சைவம் தழைக்க வாழ்ந்த தகைசான்ற மங்கையர் ஆவர்.
பக்தியின் பயனே முக்தி. அம்முக்தியினை அடைவதற்குப் பெண்களை ஏற்புடையர்களாய்க் கொள்ளாது சமணர் விலக்கினர். சைவமானது இக்கருத்தை மறுத்துப் பெண்களை முக்திக்கு உரியவர்களாக்கியது. நாயன்மார்களில் ஒருவராய் அனைவருக்கும் அம்மையாய்க் காரைக்காலம்மையார் விளங்குகிறார். திருவாலங்காட்டில் தலையால் நடந்து இறைவனை நாடிச் சென்றவரை நோக்கி கடுந்தவத்தவராய் இங்கே வருபவர் யாரென வினவிய உமைக்கு, இவரே எனது அம்மை என்று கூறி, அடிமுடி அறியவியலா சோதி சொரூபமான அப்பன் அம்மையே என்று அழைத்த அரும்பெருமையைக்குரியவர் காரைக்காலம்மையார். அரும்பேற்றினைப் பெறுவதற்கு உரியவராய்ப் பெண்களை உலகிற்கு உணர்த்திய சமயம் சைவமாகும்.
தொண்டு மனப்பான்மை
“மக்கள் தொண்டே மகேசன் தொண்டு” என்பதற்கிணங்க சைவ சமய அடியவர்கள் சமயத்தோடு மனிதத்தையும் மனித சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படையான தொண்டு மனப்பான்மையையும் வளர்த்தெடுத்தனர். திருநாவுக்கரசர் தம்முடைய இறை வாழ்வில் தலையாயப் பணியாய்ப் போற்றியது உழவாரப் பணியே. இறைவன் வீற்றிருக்கும் திருத்தலங்களைத் தூய்மைப்படுத்தித் தொண்டு மனப்பான்மை மேம்படுதற்கு வழிகாட்டியாய் வாழ்ந்தார். “என்கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் உயரிய கொள்கையினை வளர்த்தெடுத்தார். இறை உணர்வில் கலந்து இருப்பது மற்றும் பக்தி கிடையாது இறைவன் பெயரால் செய்யும் உண்மையான சேவையே இறைவன் சேவடியை அடைவதற்கான வழி என்பதை உணர்த்திய இலக்கியம் திருமுறையாகும்.
உண்ணும் உணவில் ஒரு பிடியை எடுத்து வைத்து விட்டு உணவு உண்ணும் முறையானது சைவர்களின் மனித நேயத்திற்குச் சிறந்த சான்றாகும். பகிர்ந்துண்டு வாழும் பண்பாட்டினையும் சமுதாயத்தில் பசியால் வாடும் உயிரினைக் காக்கும் பொருட்டு அன்னதானம் வழங்கும் உயர்ந்த பழக்கத்தினையும் சைவம் வலியுறுத்துகிறது. அர்ப்பணிப்பு உணர்வையும் வளர்த்தெடுத்தது.
தொகுப்புரை
மனிதம் மரமாய் வீணே வாழாமல் இறைநிலை இன்பத்தை எய்துதல் வேண்டி இறையருளால் ஆக்கப்பட்ட இலக்கியம் பன்னிரு திருமுறையாகும். திருமுறை சமுதாய முன்னேற்றத்தை முதன்மையாய்ப் போற்றியது. சமய வளர்ச்சியோடு சமுதாய வளர்ச்சியினையும் பேணியது. நல்லின்பம் எய்தவும் மனித நேயத்தைப் பெருக்கவும், அர்ப்பணிப்பு உணர்வினை ஊட்டவும், பசிப்பிணியைக் போக்கவும் பொறுமை, ஐம்புலனடக்கம், மனத்தூய்மை முதலான ஒழுக்கங்களை கடைபிடிக்கவும், சைவ அடியார்கள் வலியுறுத்தியதோடு வாழ்ந்து காட்டினர். மேலும் இறைமையோடு கூடி பைந்தமிழையும் வளர்த்தனர். பண்பட்ட வாழ்க்கை நெறியை உலகிற்கு படைத்தளித்த பெருமை திருமுறையைச் சாரும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.