புதுமைப்பித்தன் சிறுகதைகள்
முனைவர்.துரை. மணிகண்டன்
புதுமைப்பித்தன். இந்தப் பெயர் தமிழ் இலக்கியச் சூழலில் நிலைத்து விட்ட ஒன்று. இந்த நூற்றாண்டில் கவனம் பெறற மிக முக்கியமான தமிழ் இலக்கியப் படைப்பாளர். இவரது படைப்புகளை ஆர்வமுடன் கற்கும் வாசகர்கள் இன்றும் அதிக அளவில் இருக்கின்றனர். சிந்தனை சார்ந்த தளம் பிரிகிற போது அசட்டுக் கற்பனைகள் சார்ந்த தளம் சுருங்கத்தான் செய்கிறது. வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் கூர்மை கொள்ளும் போது வாழ்க்கைத் தளம் அற்று அந்தரத்தில் தொங்கும் ஜோடனைகள் வெளிறிப் போகிறது. சாதாரன விமர்சனைத்தை விட ஆழ்ந்த விமர்சனத்தை உருவாக்குபவை மிகச் சிறந்த படைப்புகள்தான். புதுமைப்பித்தன் சமூக விமர்சனத்தையே தன் உயிராகக் கொண்ட படைப்பாளி. இவரது படைப்புகளில் சமூகம் சார்ந்த பல தன்மைகள் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன.
25-04-1906ல் திருநெல்வேலியில் பிறந்த புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறுகதையின் தூண், சிறுகதை மேதை என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். சிறுகதை என்றதும் முதலில் நம் நினைவிற்கு வருபவர் புதுமைப்பித்தந்தான். இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவர் புனைக்கதை இலக்கியத்தில் புரட்சி செய்த படைப்பாளர்.
மொழி நடை
புதுமைப்பித்தன் படைப்புலகத்துக்குள் முதலில் காலடி எடுத்து வைக்கும் வாசகனைக் கவர்வது அவரது மொழி நடைதான். சுயமானதாகவும் அதே சமயம் தொடர்ந்து படிக்கும் ஆர்வமுடையதாகவும் அவருடைய மொழி நடை அமைக்கப்பட்டிருந்தது. மண்ணில் பிறந்து விழுந்த குழந்தை அதன்பின் கற்றுக் கொள்வதெல்லாம் அதன் வாழ்க்கைச் சூழலிலிருந்துதான் என்ற நியதியை மறந்து நாம் புதுமைப்பித்தனைப் பற்றிப் பேச முடியாது. புதுமைப்பித்தனோ பெரிய ரசவாதி. இருப்பினும் வீராசாமி செட்டியார் (வினோத ரசமஞ்சரி), அ.மாதவய்யா (பத்மாவதி சரித்திரம்) ஆகியோரின் வசன நடையின் பாதிப்பு அவரிடம் நிழலாடுவதை உணர முடிகிறது.
ஆங்கில வாக்கியங்களின் அழகில் ஈர்க்கப்பட்டு மனத்தால் அவர் பல தமிழ் வாக்கியங்களை இதமாக உருவாக்கியிருக்கிறார். மொழியின் மரபில் அவருக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அவ்வாக்கியங்கள் முதலில் சற்று விலகி நிற்கின்றன. இருந்தாலும் பின்பு வித்தியாசம் காட்டாமல் தமிழில் கரைந்து விட்டன. மரபு மீறப்படுவதும், மீறப்பட்ட மரபின் ஒரு பகுதி மரபில் இணைந்து கொண்டு விடுவதும், மற்றொரு பகுதி உதிர்ந்து போய் விடுவதும் சமூக நியதியாகவே இருக்கின்றன. அவரது நடையில் அவருடை ஆளுமை வெளிப்படும் கோலங்கள் நூதனமானவையாகவும் எண்ணற்ற வகை பேதங்கள் கொண்டவையாகவும் வெளிப்படுகின்றன. எழுத்து, மொழியின் பாதிப்பைப் பெற்றிருந்த அளவிற்கு அவர் பேச்சு மொழியின் பாதிப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதன் பொருள் மொழி உருவானதில் அவரது கண் ஆற்றிய பங்கை அவரது செவியும் செய்துருக்கிறது என்பதுதான்.
நெல்லைப் பேச்சில் புரண்டு வலுவேற்றிக் கொண்ட சொற்கள் அவர் நடையில் விரவி வருகின்றன. பேச்சுத் தமிழுக்கு முற்றிலும் மாறுபட்டு நிற்கும் பண்டைத் தமிழ்ச் சொற்களையும் சில சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழியை வலிமைப்படுத்துகிறார். இது உண்மையில் ஒரு குழு சமூகத்துக்குப் படைப்பில் இடம் தந்து அவர்களது இருப்பை மண்ணில் உறுதிப்படுத்துவதாகும். படைப்பு சென்னைத் தமிழிலோ அல்லது தஞ்சைத் தமிழிலோதான் சாத்தியம் என்று அன்றிருந்த மயக்கத்தை உடைத்த தமிழ் இது.
வெவ்வேறு காலங்களுக்குரிய செய்திகளை ஒரே வாக்கியத்தில் இணைப்பதும் பழமையான செய்தியை ஒட்டி ஒரு புத்தம் புதிய செய்தியை இணைப்பதும் இவருக்கு கைவந்த கலை. அவரது எழுத்தில் வெகு தீவிரமான சிந்தனகளும் தெறிப்புகளும் சாதாரனமாக வெளிப்படுவது படிப்பவர்களைக் கவர்கிறது. அறுபது வருடங்களுக்கு முன்னால் உருவாக்கிய தமிழ் இன்றும் பெரும்பாலும் அலுப்பின்றிப் ப்டிக்கக் கூடியதாகவே இருக்கிறது. நேற்றையத் தமிழ் என்ற அனுதாபத்தை நாம் அதற்கு வழங்க வேண்டியதில்லை. படைப்பு சார்ந்த தன் நம்பிக்கைகளை, விளைவுகளைப் பற்றிய அச்சம் சிறிதுமின்றி முன் வைக்கும் போது அச்சொற்கள் கொள்ளும் உணர்ச்சியில் அவை உச்சாடத்திற்குரிய மந்திரம் போல் மாறிவிடுகின்றன.
கதை சொல்லும் பாங்கு
புதுமைப்பித்தன் கதை சொல்லும் பாங்கில் பொருள் சார்ந்த மீறலுக்கான ஒரு வாய்ப்பை வாசக மனம் எதிர் நோக்கிக் கொண்டே இருக்கிறது. பல சமயங்களில் இந்த மீறல் நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது. அதிர்ச்சி ஆர்வத்தை ஊட்டுகிறது. "உணர்ச்சியின் அடிமைகள்" என்ற கதையில் கதா நாயகனுக்குத் திருமணமாகி இன்னும் மூன்று நாட்கள் கூட ஆகவில்லை. அவனது மனநிலை பற்றிய ஒரு வருணனை. "ஏடுகள் அவன் கையில் புரண்டு கொண்டிருக்கின்றன. கண்கள் கனவு கண்டு கொண்டிருக்கின்றன. மனம் உருவகத் தொழிலைக் கைக்கொண்டால் பிறகு எவ்விதம் இருக்கும்?." கண்கள் கனவு கொண்டிருக்கையில் பச்சையாக ஒரு வாக்கியம் தொப்பென்று வந்து விடுகிறது. இது அன்றைய எழுத்தில் இச்சுதந்திரம் அபூர்வமானது.
காதலுக்கு அடிப்படையாக மனத்தை மட்டும் கண்டு அழுத்தும் எழுத்து முறைக்கு எதிரான மனோபாவம் இது. கணவன் இருக்க காதலனிடம், "இங்கேயே இருந்து விடுங்கள்" என்கிறாள் கல்யாணி (கல்யாணி). கவுதம புத்தர் இந்திரனுடன் உடல் உறவு கொள்ள நேர்ந்து விட்ட அகல்யையை, மனத் தூய்மைத்தான் கறபு; சந்தார்ப்பத்தால் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்? என்கிறார் (அகல்யை). அம்மாளு தன் கணவனுக்குப் பால் கஞ்சி வார்ப்பதற்காக சோரம் போகிறாள் (பொன்னகரம்). ராமு என்ற எட்டு வயது சிறுவன் தான் காணும் கனவில் தன் கையிலிருக்கும் தடிக்கம்பால் பூகோள வாத்தியாரைத் தாக்குகிறான் (மோட்சம்) இவ்வாறு பழம் பெருமைகளைத் தாக்கும் பார்வைகளும் கதையில் அதிகம். "முன்னே திரிபுரத்தை எரித்தாரே இந்தச் சிவன், இப்போ அவராலே அந்தக் குருவிக் கூட்டைக்கூட எரிக்க முடியலேயே" என்கிறது. இதுபோல் பழமையைச் சொடுக்கும் வாக்கியங்கள் பல கதைகளில் வருகின்றன.
கதாபாத்திரங்கள்
கதை கூறும் பாங்கில் வெற்றி பெற்ற புதுமைப்பித்தன் கதாப்பாத்திரங்களிலும் தன் முத்திரையைப் பதித்துள்ளார். கணவர்கள், மனைவிகள், மாணவர்கள், குழந்தைகள், உழைத்து ஓடாகிப் போனவர்கள், துன்பத்திலும் துயரத்திலும் அழுந்திப் போனவர்கள், வேசிகள், பிச்சைக்காரர்கள்,எழுத்தாளர்கள், வாழ்க்கைச் சோதனைகளைத் தாங்க முடியாத அபலைகள், கிராமவாசிகள், நகரவாசிகள், சாமியார்கள், முதியோர்கள், பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள், சீர்த்திருத்தவாதிகள், புரட்சிவாதிகள் என்று பலர் வருகிறார்கள். புராணக் கதாப்பாத்திரங்களும் அதீத கற்பனை உலகங்களில் வாழ்பவர்களும் கடவுள்களும் வருகிறார்கள். பதுமைகள், முயல், நரி, நாய் இவற்றை எல்லாம் கதாப்பாத்திரங்களாக்கிக் கதைகளில் உலவவிட்டிருக்கிறார்.
மண் சார்ந்த பார்வை
பல்வேறுபட்ட கதாபாத்திரங்களைப் படைத்து நடமாடவிட்ட புதுமைப்பித்தனிடம் அவரது சுய அனுபவம் சார்ந்த இரண்டு உலகங்கள் தெள்ளத் தெளிவாக மேலெழுந்து வருவதை நம்மால் உணர முடிகிறது. ஒன்று நெல்லை மண். மற்றொன்று சென்னை நகரம். இவ்விரு உலகங்கள் சார்ந்த அனுபவங்கள் கதைகளில் பிரதிபலிக்கும் போது அவை கதைகளில் அழுத்தம் பெறுகிறது. அவரது உணர்வுகள் சார்ந்த இந்த உலகங்கள் எதிரும் புதிருமாக இருக்கின்றன. நெல்லையில் காலம் மனிதனுக்குச் சேவகம் செய்கிறது. சென்னையில் காலம் அவனை முடக்கி ஓரிடத்தில் நிற்கவிடாமல் விரட்டிய வண்ணம் இருக்கிறது. நெல்லை மண்ணுக்குரிய சாலைகளில் இரட்டைக்காளை வண்டிகள் ஜல்ஜல் என்று ஓடும் போது சென்னையில் டிராமின் கணகணப்பு; மோட்டார் ஓலம்; பேருந்தின் இரைச்சல். நெல்லையில் தாமிரபரணி; சென்னையில் கூவம். இந்த இரு ஊர்களைத்தான் தான் எழுதிய சிறுகதைகளில் அதிகமாகப் பதிவு செய்துள்ளார்.
பெண்களின் தாக்கம்
பெண்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். பெண்களுடன் புதுமைப்பித்தன் கொண்டிருக்கும் உறவு அவர்களை இக்கட்டில் மாட்டிக் கொண்டிருக்கும் ஜீவன்களாகப் பார்க்க வைக்கிறது. இந்தப் பார்வை அவரது வழக்கமான, கறாரான பரிசீலனைகளிருந்து அவர்களுக்கு விலக்களிக்கிறது. அவர் பல சமயங்களில் அவர்களின் நிலையை எண்ணித் தார்மீகக் கோபத்தில் சம நிலையை இழ்ந்து விடுவதையும் அவர் கதைகளில் காணமுடிகிறது. அலுமுவின் மார்பிலிருந்து கொட்டுகிறது இரத்தம். இந்த ரத்தத்தை அந்தப் பிரம்மாவின் மூஞ்சியில் பூசிடுங்கோ! என்கிறாள் அவள் (வழி) பெண்களின் தத்தளிப்பையும் உணர்வுகளையும் முழுமையாக ஏற்று அவற்றுக்கு அழுத்தம் தருகிறார்.
கலியாணி (கலியாணி), மருதி (துன்பக்கேணி) அம்மாளு (பொன்னகரம்), அகல்யை (சாப விமோசனம்), செல்லம்மாள் (செல்லம்மாள்) சங்கரிப்பாட்டி (பாட்டியின் தீபாவளி), லட்சுமி (கோபாலபுரம்), ராஜம் (இரண்டு உலகங்கள்), மீனாட்சி (கோபாலய்யங்காரின் மனைவி), ருக்குமணி (ஆண்மை), முருக்குப்பாட்டி முத்தாச்சி (சங்கி தேவனின் தர்மம்), மருதாயி (காலனும் கிழவியும்) ஜேயா (புதிய கூண்டு) போன்றவர்கள் பல கதைகளில் வரும் நடுத்தர வர்க்க மனைவிகள்; இவர்களும் இவர்களைப் போன்ற பிற பெண் கதாப்பாத்திரங்களும் பொதுவாக ஆண் துணையின் ஆதரவு தரும் நம்பிக்கையைப் பெறாமல் தனிமையில் பரிதவிப்பது போன்ற சித்திரமே நம் மனத்தில் உருவாகிறது.
இவ்வாறாகப் புதுமைப்பித்தனின் ஆளுமைப் பண்புகள் விரிந்தாலும் அவரின் நோக்கமும் புரிதலும் ஒரே பாதையில்தான் சென்றுள்ளது என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
எந்த ஒரு படைப்பாளனும் தான் கண்ட, கேட்ட, உணர்ந்த நிகழ்வுகளைதான் எழுதுவார்கள். இவர் சற்று அதிகமாகச் சென்று கடவுளையும், திருடர்களையும் தம் படைப்பில் பதிவு செய்துள்ளது. இவரின் ஆளுமைப் பண்பை மேலும் மெருகேற்றியுள்ளது.
*****
கட்டுரைக்கு உதவிய நூல்கள்
1.புதுமைப்பித்தன் சிறுகதைதொகுதி, காலச்சுவடு வெளியீடு, 1990.
2. சி.சு.செல்லப்பா, தமிழ் இலக்கிய விமர்சனம், எழுத்துப் பிரசுரம், சென்னை.1974.
3.சு.பாலச்சந்திரன்,இலக்கியத் திறனாய்வு, அணியகம் பதிப்பகம்,
4.மு.வரதராசனார்,இலக்கிய வரலாறு,சாகித்திய அகதெமி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.