10 மில்லியன் யூரோ, யு.எஸ்.டாலர் அல்லது உலகின் முக்கிய நாடுகளின் பண மதிப்பில் உங்களுக்கு, உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு லாட்டரி பரிசு விழுந்திருப்பதாக உங்களுக்கு மின்னஞ்சல் வரலாம்.தற்போது மொபைல் போனுக்குக் குறுந்தகவலாகக் கூட வருகிறது.
கீழ்காணும் ஏதாவது ஒரு தகவல் அதில் அவசியமிருக்கும்.
உங்கள் மின்னஞ்சல் முகவரி இணையவழிக் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. உங்களுக்கு 10 மில்லியன் டாலர் அல்லது யூரோ அல்லது வேறு வெளிநாட்டுப் பண மதிப்புக்கான பரிசு கிடைக்கும். (அல்லது)
உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஒருவர் திடீரென்று இறந்து போய் விட்டதால் அவருடைய பணத்தை வங்கியிலிருந்து எடுத்துப் பங்கிட்டுக் கொள்வதென்றோ அல்லது அந்தப் பணத்தை உங்களுக்கோ அல்லது உங்கள் நிறுவனத்திற்கு அன்பளிப்பாக அப்படியே வழங்குவதாகவோ உங்களுக்கு மின்னஞ்சல் வரலாம்.
இல்லை வேறு புதிய ஏமாற்று வழிமுறைகளைக் கொண்ட மின்னஞ்சலாக வரலாம்.
இந்த மின்னஞ்சல்களை நம்பி அதில் தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கும் தொலைபேசிக்கோ, மின்னஞ்சல் முகவரிக்கோ தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்.
அப்படி தாங்கள் தொடர்பு கொண்டால், முதலில் தங்களிடமிருந்து இந்திய மதிப்பில் ரூபாய் நாற்பது ஆயிரம் முதல் பணப்பட்டுவாடா செய்வதற்கான சேவைக் கட்டணம் என்கிற பெயரில் கறக்கப்பட்டு விடும்.
அதிகமாகப் பணம் கிடைக்கிறதே என்கிற ஆசையில் நிறைய பேர், அதுவும் இந்தியாவில் இருப்பவர்கள் இவர்களிடம் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள். எந்தவிதமான போட்டியுமில்லாமல், நம்மைப் பற்றி எதுவுமே தெரியாமல், நமக்கு அதுவும் நமது மின்னஞ்சல் முகவரிக்கு அதிகமான தொகையைக் கொடுக்க அவர்களுக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது.
அதிகமாகப் பணம் கிடைக்கிறதே என்கிற ஆசைப்படுபவர்களுக்குத்தான் பேராசை எனும் கிறுக்குப் பிடித்திருக்கிறது.
ஏமாற்றும் அவர்களை நாம் திருத்த முடியாது. இந்த கிறுக்குத்தனத்திற்கு நாம்தான் ஏமாறாமல் முற்றுப்புள்ளி வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் பற்றி விபரமறிய கீழ்காணும் வலைத்தளத்திற்குச் சென்று பார்க்கலாம்.