தசைச்சிதைவு நோய்
டாக்டர் க. கார்த்திகேயன்

விண்ணை முட்டும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சியை நோக்கி உலகம் அசுர வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில், அத்தகைய அறிவியலுக்கே சவால் விடும் சில நிகழ்வுகளும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன, உதாரணமாக மருத்துவத்துறையின் வளர்ச்சி என்பது பல கொடிய நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டிருக்கும் போதிலும், சில நோய்களிடம் தோல்வியை சந்திக்க நேரிடுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அப்படிப்பட்ட நோய்களின் வரிசையில் குறிப்பிடும்படியாக தசைச்சிதைவு நோய் இருப்பது ஒருபுறம் வேதனையும், வருத்தமும் அளிக்கக்கூடியதாக உள்ளது.
தசைச்சிதைவு நோய் என்பது குழந்தை கருவில் உருவாகும் பொழுதே மரபணு குறைபாடுகளால் ஏற்படும் ஒரு நோயாகும், தசை நார்கள் (MUSCLE FIBERS ) ஒன்றிணைந்து தசைத்தொகுப்பு உண்டாகிறது. இந்த தசை நார்களில் ஏற்படும் புரதக் குறைபாடே இந்நோய்க்கு முக்கிய காரணமாக அமைகிறது .இதன் காரணமாக தசை தன் கட்டுறுதியை இழந்து இறுகும் நிலையை அடைவதால் உடல் தனது கட்டுக்கோப்பை இழக்கிறது. பொதுவாக, மனித உடலின் தசைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. இயங்கு தசைகள் (நுரையீரல் மற்றும் இதயத்தசைகள் இவை மனிதக் கட்டுப்பாடின்றி தாமாகவே இயங்குபவை)
2. இயக்கு தசைகள் (மனிதனால் இயக்கக்கூடிய உடலிலுள்ள ஏனைய தசைகள்)
தசைச்சிதைவு நோயானது, முதலில் இயக்கு தசைகளையே பாதிக்கிறது. இந்தியாவில் 3000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது எனவும், பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளின் மீதே இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக நமக்குப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன .
இந்நோய் பற்றிய விழிப்புணர்வும், புரிதலும் சமூகத்தில் போதுமான அளவில் இல்லை என்பதே உண்மை. இந்நோயினை மருத்துவ உலகம் ஒன்பது வகையாக வகைப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பெரும் பொருட்ச்செலவில் பல்வேறு ஆராய்ச்ச்சிகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தாலும், இன்னும் குணப்படுத்தக்கூடிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது சோகமான செய்தியே! தற்போதைய நிலையில் மருத்துவர்கள் உயிர்காக்கும் நிலையைக் கைவிரிக்கும் அளவிற்கே இந்நோய்க்கான சிகிச்சை முறை உள்ளது. இந்நோயின் பாதிப்பினை உடலியக்கப் பரிசோதனைகள் மற்றும் திசுச்சோதனைகள் (MUSCLE BIOPSY) மூலம் கண்டறியலாம் .
நோய்க்கான அறிகுறிகள்
நடக்கும் பொழுதே அடிக்கடி கீழே விழுவது, நடப்பதில், ஓடுவதில் சிரமம், தசைகள் தளர்ந்தநிலை, உட்கார்ந்த நிலையிலிருந்தோ, படுத்த நிலையிலிருந்தோ எழ மிகச்சிரமப்படுத்தல், உடல் தோரணையில் மாற்றம், கால் நுனி விரல்களால் நடப்பது, தசைகளில் இறுக்கம் மற்றும் வலி, மூட்டுகளில் இறுக்கம் மற்றும் வலி, கற்றலில் குறைபாடுகள் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும்.
ஆங்கில மருத்துவ முறைகளில் குணப்படுத்தமுடியாதெனினும், வலிகளுக்கு மருந்துகள், மூட்டு இறுக்கத்திற்கு அறுவை சிகிச்சைகள், இதயத்தசைகளில் பாதிப்பு ஏற்பட்டால் இதயத்துடிப்பிற்கு இதய மின்னியக்கி (PACEMAKER ) போன்ற தற்காலிக சிகிச்சை முறைகள் அளிக்கப்படுகின்றன. இந்நோயாளிகளை மருத்துவ உலகம் கைவிட்டால் கூட ஒரு ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தி இயன்முறை மருத்துவம் மூலம் இவர்களின் வாழ்நாளினைத் தள்ளிப்போடும் சிகிச்சைகளை அளிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றது. எனவே இந்நோய்க்கான இயன்முறை சிகிச்சை விவரங்களை சற்றுச் விரிவாகவேப் பார்ப்போம்.
இயன்முறை சிகிச்சையின் நோக்கம்
தசைச்சிதைவைத் தடுத்தல், தசைகளில் ஏற்படும் வலிகளைக் குறைத்தல், தசை இறுக்கத்தைப் போக்குதல், எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலிகளைக் குறைத்தல், உடல் தோரணையை சரிசெய்தல், ஊன நிலையை (DISEBILITY ) தவிர்த்தல், சரியான முறையில் மருத்துவ உபகாரணங்களைக் கொண்டு உட்கார, நிற்க, நடக்க வைத்தல், அன்றாட வழக்கமான நிகழ்வுகளுக்கு ஏதுவாக பாதிக்கப்பட்டவரை தயார் செய்தல்.
இயன்முறை சிகிச்சைகள்
மின் சிகிச்சையின் மூலம் அளிக்கப்படும் மெழுகு ஒத்தடம் (WAX THERAPY ), அல்டராசவுண்ட் சிகிச்சை ,வெப்பச்சிகிச்சைகள் (HEAT THERAPY ) ஆகியவை தசை, மூட்டு, எலும்பு மற்றும் நரம்பு வலிகளைக் குறைக்க உதவும்.
உடலியக்கப் பயிற்சிகள் தசைச்சிதைவு, மூட்டுகளின் இறுக்கம் இவற்றைக் குறைப்பதுடன் தசையின் கட்டுறுதியை நிலை நிறுத்துவதோடு தசைகளுக்கு பலத்தைக் கொடுக்கும். இயன்முறை மருத்துவரின் மேற்பார்வையின் படி நிற்கும் நிலை, உட்காரும் பயிற்சிகள், மண்டியிடுதல், உடல் தோரணையுடன் நடத்தல் மற்றும் தசையை வலுவாக்கும் உடலியக்கப் பயிற்சிகளை மேற்கொண்டால் நல்ல பலனைப் பெறமுடியும். இது மட்டுமின்றி நீரியல் சிகிச்சை (HYDRO THERAPY ), நீச்சல் பயிற்சி, இதய மற்றும் நுரையீரல் தசைகளுக்கான மூச்சுப்பயிற்சி ஆகியவை முக்கியமானதாகும். இயங்கு தசைகளான நுரையீரல் மற்றும் இதையத்தசைகள் பாதிப்படையாமல் இருக்க மூச்சுப் பயிற்சியானது அவசியம். ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் 40 லிருந்து 50 நிமிடங்கள் கட்டாயமாக மூச்சுப்பயிற்சியினை இயன்முறை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ள வேண்டும், இதனால் சுவாசம் எளிதாவதுடன் ,நுரையீரல் பலம் பெறும். உடலியக்கப் பயிற்சிகள் செய்யும் பொழுது அவசியம் இயன்முறை மருத்துவரின் ஆலோசனையும், மேற்பார்வையும் தேவையாகும்.
முகத்தில் ஏற்படும் தசை இறுக்கத்தினால் பேச்சு பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதால் பேச்சுப் பயிற்சியாளரின் (SPEECH THERAPIST ) சிகிச்சை அவசியமாகும். ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் எனப்படும் தொழில்முறை சிகிச்சையாளரின் பங்கும் இத்தகைய நோயாளிகளுக்கு அவசியம். தினசரி வாழ்க்கை முறைகளுக்கு ஏதுவாகவும் தொழில் மற்றும் வீடு சார்ந்த சூழ்நிலைகளில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தொழில்முறை சிகிச்சையாளர் மேற்கொள்ள உதவுவார்.
நிறைந்த மனோதிடமும், நோய்ப் பற்றிய புரிதலும், தொடர் இயன்முறை மருத்துவ சிகிச்சையினையும் மேற்கொண்டால் இந்நோயின் கடுந்தன்மை குறைவதுடன் உயிர் இழப்பிலிருந்தும் நாட்களைத் தள்ளிப் போடலாம்!
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.