மனித உடல் கட்டமைப்பிற்கும், மிடுக்கான தோற்றத்திற்கும், உறுதிக்கும் அடிப்படையாக அமையும் எலும்புகள் மனித உடலில் மொத்தம் 206 உள்ளன. இப்படிப்பட்ட எலும்பில் குறைபாடுகளோ அல்லது நோய்த்தாக்கமோ ஏற்பட்டால், உடலின் தன்மையும் ,தோற்றமும் மாறிவிடும். அந்த வகையில் எலும்புகளைப் பாதிக்கும் முக்கிய நோய்களில் ஒன்றாக எலும்புச்சிதைவு நோய் (Oestioporosis) உலகம் முழுவதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றது.
எலும்புச்சிதைவுக் குறைபாடு முக்கியமாக வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படுகிறது. கால்சியம் சத்தினை உடல் ஏற்றுக்கொள்வதற்கு வைட்டமின் டி பயன்படுகிறது. போதுமான அளவு கால்சியம் உடலுக்குக் கிடைக்காத போது, கால்சியம் மிகுதியாக அடங்கியுள்ள எலும்புகளிலிருந்து உடலானது கால்சியத்தைப் பெற்றுக் கொள்கிறது. இதனால் எலும்பானது வலுவிழக்கிறது. ஆண்களுக்கு டெஸ்ட்ரோஸ்ட்ரான், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஆகிய பாலினச் சுரப்பிகளில் ஏற்படும் குறைபாடுகளினால் எலும்புச்சிதைவு ஏற்படுகிறது.
எலும்புச்சிதைவினால் எலும்பின் கட்டுறுதியும், அடர்த்தி மற்றும் பருமனும் குறையும். எளிதில் நொறுங்கக்கூடிய அல்லது முறிவு ஏற்படக்கூடிய நிலையில், எலும்புகளில் மாற்றம் ஏற்படும். இந்நோய் ஆண்களை விடப் பெண்களையே அதிகம் தாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முப்பத்தைந்து வயதுக்கு அதிமான பெண்களுக்கும், மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் எலும்புச்சிதைவு நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருக்கிறது. தைராய்டு மற்றும் பாரா தைராய்டு குறைபாடும் ஒரு காரணமாக அமையலாம். புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ள ஆண்களும் இந்நோயின் பாதிப்பிற்கு உள்ளாக வாய்ப்புகள் அதிகம். வருடத்திற்கு ஒரு முறை பெண்கள் எலும்பின் அடர்த்தியை அறியும் சோதனையான டெக்ஸா (DEXA ) செய்து கொள்வது அவசியமானது.
பாதிப்பின் நிலையைப்பொறுத்து, இந்நோயானது இரண்டு வகைகளாக அறியப்படுகிறது.
நிலை 1 - ஆஸ்டியோ பீனியா (மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர் சிகிச்சை, மருந்துகளால் குணப்படுத்தலாம் )
நிலை 2 - ஆஸ்டியோ போரோசிஸ் (மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை, இயன்முறை மருத்துவரின் ஆலோசனைப்படி மென்மையான உடற்பயிற்சிகள் கொண்ட சிகிச்சை)
இந்நோய்த் தாக்கத்திற்கு முதலில் ஆட்படுவது தண்டுவட எலும்புகள்தான். பின்னர், இடுப்பு மற்றும் மூட்டு எலும்புகள் படிப்படியாக பாதிப்பிற்கு உள்ளாகும். பாதிப்பின் அறிகுறிகளாக உடற்சோர்வு, களைப்பு, எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலி, தசைவலி, உடல்தோரணையில் மாற்றம் ஆகியன உண்டாகும்.
இந்நோய் பாதித்தவர்கள் அதிகக் கடுமையான உடல் இயக்கம் சார்ந்த பணிகள், அதிக எடை தூக்குதல், குதித்தல், துள்ளுதல், வேகமாக ஓடுதல் ஆகிய செயல்பாடுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கால்சியம் அதிக அளவில் அடங்கிய உணவுப்பொருட்களான கேழ்வரகு, பால், ஓட்ஸ், காலிபிளவர், பீன்ஸ், தயிர், பாதாம், கீரைவகைகள், முள்ளங்கி, மக்காச்சோளம் போன்றவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சூரிய ஒளியில் வைட்டமின் டி மிகுதியாக இருப்பதால் குறைந்தது ஒரு நாளைக்குப் பதினைந்து நிமிடங்களாவது உடலில் சூரிய ஒளி படும்படி பார்த்துக் கொள்வது சிறந்த பலனைத்தரும்.
அதிக நோய்ப் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு இயன்மருத்துவத்தில் செய்யப்படும் சிகிச்சை மிகுந்த பலன் தரும். தண்டுவடப் பாதிப்பு மற்றும் வளைந்து கூன் விழுவதைத் தடுக்கவும், உடல் தோரணையை மேம்படுத்தவும், எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெறவும் சில எளிய உடற்பயிற்சிகளையும், வலிபோக்கும் சிகிச்சைகளையும் இயன்முறை மருத்துவர் அளிப்பார்.
போதிய நோய் பற்றிய விழிப்புணர்வும், சத்தான உணவுவகைகளும், முழுமையான தொடர் மருத்துவ, இயன்முறைச் சிகிச்சைகளையும் மேற்கொண்டால் இந்நோய்த் தாக்கத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடன் வாழலாம்.