வீட்டில் பூனை வளர்த்தார் ஒருவர்.
ஒரு நாள் வீட்டையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த ஒரு பெரிய எலியை அது பிடித்துக் கொன்றது.
ஆனந்தக் கூத்தாடினார் அவர்.
அடுத்த நாள் அதே பூனை அவர் ஆசையாய் வளர்த்த கிளியைக் கவ்விக் கொன்றது.
கழியை எடுத்துக் கொண்டு பூனையைத் துரத்தினார் அவர்.
மூன்றாம் நாள், பூனை எங்கிருந்தோ வந்த ஒரு குருவியைப் பிடித்துக் கொன்றது.
வேடிக்கை பார்த்தபடி இருந்தார் அவர்.
ஆனந்தமும் இல்லை; ஆத்திரமும் இல்லை.
வேண்டாத எலியைக் கொன்ற போது மகிழ்ச்சி.
வேண்டிய கிளியைக் கொன்ற போது ஆத்திரம், துக்கம்.
வேண்டும், வேண்டாம் என்ற எல்லைக்குள் வராத குருவியைக் கொன்ற போது, மகிழ்ச்சியும் இல்லை; துக்கமும் இல்லை. அது மட்டுமல்ல... பசிக்கு, தனக்கு வாய்த்த இரை எதுவாயினும் அதைப் பிடித்துத் தின்பது பூனையின் இயல்பு என்ற ஞானம் வந்து விட்டது அவருக்கு.
இந்த மன நிலைதான் யோகியின் சமநிலை.