கலீஃபா ஹாருன் அல் ரசீத் தன் ஆட்சிக்காலத்தில் மாபெரும் மாளிகையொன்றை கட்டத் திட்டமிட்டார்.
பெரும் செல்வந்தரான கலீஃபா மாளிகையை நிர்மானிப்பதில் பெரும் தொகையை செலவழித்தார்.
ஆடம்பரமான அம்மாளிகை அழகே உருவாக காட்சியளித்தது.
தனது மாளிகை பற்றி பூரிப்படைந்த கலீஃபா எல்லோரிடமும் அது பற்றிப் பேசிப் பெருமைப்பட்டார்.
மாளிகையை மக்களனைவரும் கண்டுகளித்தனர்.
இந்த அற்புத மாளிகையை கலீஃபாவின் தம்பி இறைநேசச் செல்வர் ஹஸரத் பஹ்ருல் (ரஹ்) என்பவரும் வந்து பார்வையிட்டு, சுவரில் ஏதோ எழுதிவிட்டுச் சென்று விட்டார். மாளிகைக்கு வந்த மாமன்னருக்கு சுவரில் எழுதியிருந்த வாசகங்கள் நெஞ்சில் ஈட்டி போல் குத்தியது.
ஹாரூன்! நீ மண்ணை உயர்த்தி, மார்க்கத்தை தாழ்த்தி விட்டாய். நீ இப்படி வீண் விரயம் செய்தது உனது சொந்த பணமானால் அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்க மாட்டான் எனும் இறைவாக்கை நினைவில் கொள். நீ செலவு செய்தது பொதுச் சொத்தாக இருப்பின் நிச்சயமாக நீ அக்கிரமம் செய்தவனாவாய். அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான் என்ற மறை மொழியை நினைவுபடுத்திக் கொள்!”
இந்த வாசகங்களைப் பார்த்த கலீஃபாவின் கண்கள் கலங்கின. நெஞ்சம் உருகிற்று, மறுமை வாழ்வு பற்றிய சிந்தனை அவரை ஊமையாக்கியது.