முதலாளிக்கு அடுத்த ஊரில் நிகழும் தம் உறவினர் திருமணத்துக்கு அவசியம் போக வேண்டியிருந்தது.
வேலைக்காரனிடம் வண்டியைக் கட்டச் சொன்னார்.
இரவு 10 மணிக்கு வண்டியும் புறப்பட்டது. வண்டியோட்டியும் உறங்கிவிட்டான்.
முதலாளியும் வண்டியில் ஏறி அமர்ந்ததும் உறங்கிவிட்டார்.
வண்டி ஓடிக் கொண்டே இருந்தது.
வெகு நேரம் ஆனபின்பு முதலாளி விழித்துக் கொண்டு வண்டி ஓட்டியைப் பார்த்து “ஊர் வந்து விட்டதா?” என்று கேட்டார்.
அதற்கு அவன், “எஜமான்! வண்டி நமது வீட்டைச் சுற்றித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது” என்றான்.
“ஏண்டா இப்படி?” என்றார்.
வருத்தத்தோடு, “சாமி தூக்கத்தில் செக்கு மாட்டைப் பூட்டிவிட்டேன், அது வீட்டிலே சுற்றிச்சுற்றி வருகிறது” என்றான் வண்டியோட்டி.
உடனே முதலாளி கோபமாக, “வேறு மாட்டைப் பூட்டி வண்டியைச் சீக்கிரம் ஒட்டு” என்று சொல்லிவிட்டு மறுபடியும் உறங்கிவிட்டார்.
வண்டியோட்டியும் அதை அவிழ்த்துவிட்டு வேறு மாட்டைக் கொண்டு வந்து பூட்டி விட்டு, அவனும் உறங்கிவிட்டான்.
வண்டியும் ஓடிக் கொண்டிருந்தது.
பொழுது விடியும் நேரத்தில் முதலாளி விழித்து, ‘எங்கே ஊர் வந்துவிட்டதா?’ என்று கேட்டார்.
உடனே வண்டி ஓட்டி விழித்துக் கொண்டு “சாமி வண்டி நமது வீட்டண்டையேதான் ஒடிக்கிட்டிருக்கு, மன்னிக்கணும். நான் தூக்கக் கலக்கத்திலே ஏத்து (ஏற்றம் இறைக்கிற) மாட்டைக் கட்டிவிட்டேன். அது முன்னே போகவும் பின்னே வருவதுமாகவே இருக்கிறது. என்ன செய்வேன்?” என்றான்.
என்ன செய்வான் எசமானன்? முன்பு தூங்கினான்; இப்போது விழிக்கிறான்?
எப்படி? தூங்குமூஞ்சி முதலாளியும், தூங்குமூஞ்சி வேலையாளும்.
இப்படியும் நாட்டில் சிலருடைய வாழ்க்கைகள் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றன.