ஒரு ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர், தன்னிடம் இருக்கும் செல்வத்தை வைத்து எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்று அடிக்கடி பெருமைபடச் சொல்வார். அவரது பெருமை செவி வழியாகக் காற்றில் பறந்து அந்த ஊரில் இருந்த துறவியையும் அடைந்தது.
அந்தத் துறவி செல்வந்தருக்குத் தகுந்த பாடம் கற்பிக்க எண்ணினார். அதற்கான நேரம் வரும் வரை காத்திருந்தார்.
ஒருநாள் செல்வந்தர் வீட்டு வழியாக, துறவி போகும் போது அந்தச் செல்வந்தர் துறவியை வீட்டிற்கு அழைத்தார்.
துறவியும் புன்னகைத்தப்படி வீட்டினுள் சென்றார்.
“வாருங்கள் துறவியாரே. நீங்கள் இங்கு வந்தது நான் செய்த பாக்கியம். தங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள். நான் செய்வதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றான்.
“என்ன கேட்டாலும் செய்வாயா மகனே... அவ்வளவு செல்வாக்கு பெற்றவனா நீ? இறைவனது திருநாமத்தால் மட்டுமேப் பெறுவதற்கரிய பொருளைப் பெறமுடியும் என்று நினைத்தேன். ஆனால், நீ சொல்வதைக் கேட்டதும் மகிழ்ச்சியில் மனம் குதூகலிக்கிறது” என்றார்.
செல்வந்தருக்குப் பெருமை தாங்கவில்லை, இருக்காதா பின்னே... இறைவன் அளவுக்குப் பாராட்டி விட்டாரே...
“மகிழ்ச்சி துறவியாரே, நீங்கள் ஒருவர்தான் என்னை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லுங்கள் தங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்? எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யக் காத்திருக்கிறேன்” என்றார் அந்தச் செல்வந்தர்.
“எனக்கு எதன் மீதும் ஆசையில்லை மகனே, எனக்குத் தேவையெல்லாம் ஒன்றே ஒன்றுதான்” என்று செல்வந்தரைப் பார்த்தார்.
“என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்” செய்கிறேன் என்றார்.
துறவி தன் மடியின் முடிச்சை அவிழ்த்து ஒரு ஊசியை எடுத்தார்.
“என்ன சொல்லுங்கள்... இது போல் தங்க ஊசி வேண்டுமா? அல்லது வைர ஊசியா?” என்று கேட்டார் செல்வந்தர்.
“இரண்டுமே வேண்டாம் மகனே, இதே ஊசி போதும். ஆனால் இங்கு அல்ல. நாம் இருவரும் இறுதிக்காலம் முடிவடைந்ததும் வேறு ஒரு ஊரில் நிச்சயம் சந்திப்போம் அப்போது கொடு... நான் வாங்கிக் கொள்கிறேன்” என்றார் துறவி.
திடுக்கிட்டு நிமிர்ந்தார் செல்வந்தர், “என்ன சொல்கிறீர்கள்? நான் எப்படி இந்த ஊசியை என்னுடன் எடுத்துக் கொண்டு வரமுடியும். நம் உடலையே இந்த உலகில் விட்டு வரும் போது இந்தப் பொருளைக் கொண்டு வரவா முடியும்? இது கூட தெரியாமல் இருக்கிறீர்களே...” என்றார் செல்வந்தர்.
“என்ன இப்படிச் சொல்கிறாய் மகனே, நீதானே என்னால் எல்லாமே முடியும் என்றாய். நாம் செய்யும் நல்லதும் கெட்டதும் மட்டும்தான் இறுதிக்காலத்துக்குப் பிறகும் நம்முடன் வரும். அதைப் புரிய வைக்கத்தான் இந்த ஊசி நாடகம்” என்றார் துறவி.
“பணம் ஒன்றுதான் பெரியது என்று நினைத்திருந்த எனக்கு, நன்றாகவேப் புரிய வைத்துவிட்டீர்கள்...” என்ற செல்வந்தர், அதன் பிறகு தனது செருக்கைத் தொலைத்து தர்மம் செய்வதில் ஈடுபட்டார்.