மகாபாரத போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகளுக்கு பிறகு காந்தாரியின் சாபத்தால் யாதவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.
அதன் விளைவாக அவர்களது குலம் முற்றிலும் அழிந்து போனது.
கிருஷ்ணர் அதைத் தடுக்கவில்லை.
தன்னுடைய அவதாரத்தின் இறுதிக்காலம் முடிவுக்கு வருவதை உணர்ந்து ஒரு மரத்தின் அடியில் கால்களை நன்றாக நீட்டியபடி படுத்திருந்தார்.
அப்போது வேடன் ஒருவனின் அம்பு கிருஷ்ணனின் பாதத்தில் பாய்ந்து அவரது உயிரைக் குடித்தது.
கிருஷ்ணன் இறந்த செய்தி ஹஸ்தினாபுரத்தில் இருக்கும் பாண்டவர்களை எட்டியது.
தங்களுக்கும் முடிவு காலம் நெருங்கியதை உணர்ந்த தர்மர் துறவற வாழ்க்கைக்கு தயாரனார். தர்மருடன் அவரது சகோதரர்களும், திரெளபதியும் துறவற வாழ்க்கைக்கு தயாரானார்கள்.
கிருஷ்ணனின் மறைவு அனைவரையும் உலகப் பற்றிலிருந்து விடுபட வைத்தது.
அர்ச்சுனனின் பேரனும் அபிமன்யுவின் மகனுமான பரீட்சித்துக்குப் பட்டம் சூட்டிய பாண்டவர்களும், திரெளபதியும் இமயமலையைத் தாண்டி மேரு மலைக்கு மரவுரி தரித்துக்கொண்டு பயணித்தார்கள்.
அந்த மலையைத் தரிசித்துக் கடப்பவர்கள் மனித உடலோடு சொர்க்கலோகத்தை அடைவார்கள்.
அதனால் பாண்டவர்களும் ஆசைகளையும் உலக வாழ்க்கையையும் வெறுத்து மோட்சத்தைத் தேடியே அங்கு பயணித்தார்கள்.
அவர்களது இறுதிக்காலத்தை அவர்களே தீர்மானித்தப்படி மலையைக் கடந்து வந்தார்கள். அவர்களுடன் அவர்கள் வளர்த்து வந்த நாயும் பிரியாமல் சென்றது.
அந்த யாத்திரையில் செல்பவர்கள் பின்னாடி வருபவர்களைத் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பது நியதி. அதனால் முன்னால் தர்மர் செல்ல அவரைப் பின் தொடர்ந்து பீமன், அர்ச்சுனன், நகுலன், சகா தேவன், திரெளபதி என ஒவ்வொருவரும், அவர்கள் பின்னால் இறுதியாக நாயும் சென்றது.
பல நாட்களுக்குப் பிறகு மேருமலையை அடைந்த பாண்டவர்கள் அதைத் தரிசித்து சென்றார்கள்.
அதன் பிறகு திரெளபதி சோர்ந்து கீழே விழுந்து இறந்து விட்டாள்.
திரெளபதி இறந்ததும் அதிர்ச்சி அடைந்த பீமன், அண்ணா திரெளபதி விழுந்துவிட்டாளே ஏன் அண்ணா என்றான்.
“தர்மத்தின் படி அவள், ஐந்து கணவர்களிடமும் பாசத்தை ஒரே மாதிரி காட்டியிருக்க வேண்டும். ஆனால் அவள் அர்ச்சுனனிடம் மட்டும் கூடுதலாக அன்பை வைத்திருந்தாள். அதனாலேயே அவளால் இந்தப் பயணத்தை நம்மோடு தொடரமுடியவில்லை” என்று சொன்னார்.
இன்னும் சிறிது தூரம் சென்றதும் சகாதேவன் கீழே விழுந்தான்.
“மீண்டும் தர்மனிடம், சகாதேவன் நம்மில் ஒருவனாயிற்றே. அவன் ஏன் கீழே விழுந்தான்?” என்று பீமன் கேட்டான்.
“சகாதேவனுக்கு தான் மட்டுமே சாஸ்திர அறிவு படைத்தவன் என்னும் கர்வம் உண்டு. அந்த கர்வம்தான் அவனை கீழே இறக்கியது” என்றார் தர்மர் திரும்பிக் கூடப் பார்க்காமல்.
அடுத்ததாக அர்ச்சுனனும் வீழ்ந்தான்.
“வில் வித்தையில் தன்னை மிஞ்ச யாருமே இல்லை என்றதால் அர்ச்சுனனும் கீழே விழுந்துவிட்டான்” என்றார் தர்மர் திரும்பி பார்க்காமலேயே.
பிறகு தர்மர், பீமன், நகுலன் அவர்களைத் தொடர்ந்து நாயும் சென்றது.
இன்னும் சிறிது தூரம் கடந்ததும் நகுலன் விழுந்தான்.
உடனே பீமன் தர்மரிடம், “ நகுலன் ஏன் விழுந்தான் அண்ணா? அவன் எந்தத் தவறும் செய்யவில்லையே” என்றான்.
“நகுலனிடமும் ஒரு குணம் உண்டே. அவன்தான் அழகில் சிறந்தவன் என்ற கர்வம் இருந்ததே அது போதாதா?” என்றபடி தர்மர் பயணத்தைத் தொடர்ந்தார்.
பேசிக்கொண்டே வந்த பீமன் தனக்கும் தலை சுற்றுவதைப் போல் உணர்ந்தான்.
“என்னாலும் வரமுடியவில்லை அண்ணா. ஆனால் நான் என்ன தவறு செய்தேன்?” என்றபடி விழுந்தான்.
“ஏனெனில் நீதான் பலசாலி என்று நினைத்துக்கொண்டிருக்கிறாயே...” என்றபடி தர்மன் தன் பாதையில் பயணித்தார்.
இப்போது எஞ்சியிருந்தது தருமரும், அவருடைய நாயும் மட்டுமே.
தர்மர் மேருமலையின் உச்சியை நெருங்கிய போது, தேவேந்திரன் இந்திரலோக விமானத்துடன் வந்திருந்தான். தர்மர் எதுவும் சொல்லாமல் ஏறிய போது, அவருடன் பின் தொடர்ந்த அவரது நாயும் ஏற முற்பட்டது.
ஆனால் தேவேந்திரன் நாயைத் தடுத்து, “சொர்க்கத்துக்குள் நாய்க்கு அனுமதி இல்லை” என்றான்.
தர்மர் எதுவும் சொல்லாமல் காலை எடுத்துவிட்டார்.
“ஏன்?” என்ற தேவேந்திரனிடம், “என்னை நம்பி வந்த நாயை விட்டுவிட்டு, நான் மட்டும் எப்படி சொர்க்கத்துக்கு வரமுடியும்? நானும் இங்கேயே இருக்கிறேன்” என்றான்.
தர்மருடன் வந்த நாய் மறைந்து அங்கு தருமதேவனே நின்றார்.
“எத்தகைய சூழ்நிலையிலும் தருமநெறி தவறாத உன்னை, சோதிக்கவே நான் இத்தகைய சோதனையைச் செய்தேன். ஆனால், நீ எப்போதும் தருமவானாகவே இருந்தாய். மகிழ்ச்சியோடு சொர்க்கலோகமே உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது” என்றார்.
சோதனைகள் எவ்வளவு வந்தாலும் தரும நெறி தவறாமல் இருந்தால், இறுதிக்காலத்தில் நற்பேறைப் பெறலாம் என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் என்னவாக இருக்க முடியும்?