ஒரு முறை தன் முன்னோர் சிராத்தத்துக்கு (திவசம்) தன் குடிலுக்குச் சாப்பிட வருமாறு விசுவாமித்ரரை வசிஷ்டர் அழைத்தார்.
விசுவாமித்திரரும், “சரி வருகிறேன். எனக்கு அன்று 1008 வகை காய்கறியுடன் உணவு படைக்க வேண்டும்” என்றார்.
உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா? அப்படியே இருந்தாலும் அத்தனை கறிகாய்களைச் சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா? அப்படியேச் சமைத்துப் போட்டாலும் அதைச் சாப்பிட யாரால் முடியும்? விஸ்வாமித்திரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டி வைக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ இப்படிச் செய்கிறார் என்பது வசிஷ்டருக்குத் தெரியாதா என்ன?. இருந்த போதிலும் விட்டுக் கொடுக்காமல், “தங்களுக்கு 1008 வகை காய்கறியுடன் உணவு படைப்பதற்கு அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன்” என்றார்.
வசிஷ்டரின் மனைவியான அருந்ததி கற்பின் சின்னம். ஒவ்வொரு இந்துவும் திருமணமான முதலிரவில் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்க வேண்டும். வசிஷ்டரும் அருந்ததியும் இணைபிரியாமல் இருப்பதுபோல நீங்கள் இருவரும் இணைபிரியாமல் வாழுங்கள் என்று புரோகிதர்களும் வாழ்த்துவர்.
சிராத்தச் சாப்பாடு நாளும் வந்தது.
விசுவாமித்திரர் இலையில் அமர்ந்தார். பாகற்காய் கறி, பலாப்பழம், பிரண்டைத் துவையல் இவைகளோடு, ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவு மட்டுந்தான் இலையில் இருந்தன.1008 காய்கறிகள் இல்லை.
விசுவாமித்திரர் கோபத்துடன் “என்ன இது? 1008 வகை காய்கள் எங்கே?” என்று வசிஷ்டரை வினவினார்.
அவரோ “நான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே! அவளையேக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.
அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த உலகம் போற்றும் உத்தமி அருந்ததி, தானே முன்வந்து ஒரு சுலோகத்தை கூறிவிட்டு, “இதுதானே சிராத்தகால விதி உங்களுக்குத் தெரிந்திருக்குமே!” என்றாள்.
விஸ்வாமித்திரர் வாயடைத்துப்போனார். பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்திவிட்டுப் போனார்.
அருந்ததி கூறிய அந்த சுலோகம்:
“காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம்
பனஸம் ஷட் ஸதம்சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே”
“ஒரு ஸ்ராத்தத்திதியன்று சமைக்கப்படும் சமையலில், பாகற்காய்கறி 100 காய்களுக்குச் சமம், பிரண்டைத் துவையல் 300 காய்களுக்குச் சமம், பலாப்பழம் 600 காய்களுக்குச் சமம் என்று பாடல் கூறுகிறது. ஆயிரம் காய்கள் ஆயிற்றா?
மீதி இலையில் எண்ணிப்பாருங்கள், எட்டுகாய் கறிகள் வைத்திருக்கிறேன். ஆக மொத்தம் 1008 காய்கள்” என்றாள். சாத்திரப்படி விளக்கம் சொன்ன அருந்ததியின் பதில் சரிதானே? சமயோசிதப் புத்தியும், இல்லற தர்மமும் அறிந்தவர்களாக, நம் பாரதத்தில் அன்றையப் பெண்கள் இருந்திருக்கிறார்கள்.