ஒரு கிராமம்.
சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருந்தான்.
அப்போது, “என்னைக் காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல்.
ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக் கதறியது.
“மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். நான் உன்னைக் காப்பாற்ற மாட்டேன்” என மறுத்தான் சிறுவன்.
ஆனால் முதலை, “நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை எப்படியாவது காப்பாற்று” என்று கண்ணீர் விட்டது.
முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பித்தான். அறுத்து முடிப்பதற்குள், அந்த முதலை சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது.
”பாவி முதலையே இது நியாயமா?” என்று சிறுவன் கண்ணீருடன் கேட்டான்.
“அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு அவனை விழுங்கத் தொடங்கியது அந்த முதலை.
சிறுவனுக்கு சாவது பற்றிக் கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், அதன் நன்றி கெட்டத்தனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவன் மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான், “இதுதான் உலகமா?”
அதற்குப் பறவைகள், ”எத்தனையோப் பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளைக் குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று சொல்லின.
அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப் பார்த்துக் கேட்டான்.
”நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகப்படியான சுமைகளைச் சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட முடியாது என்று விரட்டிவிடுகின்றனர். முதலை சொல்வது சரிதான்” என்றன.
அங்கிருந்த ஆடுகளை கேட்டான். ”எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கிக் கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதித்தன.
அப்போது அங்கு வந்த ஒரு முயலைப் பார்த்துக் கேட்டான்.
“இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்குக் கோபம் வந்தது.
”சிறு முயலான உனக்கு என்ன தெரியும்?” என்று முதலை சொல்லவும்,
“நீ பேசுவது எனக்குச் சரியாகப் புரியவில்லை, தெளிவாகப் பேசு” என்றது முயல்.
காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாகச் சிரித்தது.
“உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியுமே” என்றது முயல்.
உன்னால் என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு, இதுதான் உலகம் எனப் பேசத் தொடங்கியது முதலை.
முயல் சிறுவனைப் பார்த்து, “நிற்காதே! ஓடிவிடு” என்றது.
சிறுவன் முதலையின் பிடியிலிருந்து தப்பி ஓடினான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போனது. வலையில் சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனைப் பிடித்தது நினைவுக்கு வந்தது.
கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்றது முயல்.
தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர, அவர்கள் முதலையை கொன்றனர்.
சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலியான முயலை பாய்ந்து பிடித்தது.
அந்தச் சிறுவன் தன்னைக் காப்பாற்றிய முயலைக் காப்பாற்றுவதற்குள், அவனது நாய் முயலைக் கொன்றுவிடுகிறது.
தான் உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், தன் உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அங்கிருந்த கல்லையெலெடுத்து எறிந்து அந்த நாயை விரட்டினான்.
உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும் அவனைக் குழப்பியது.
இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை!.
முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!.
அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம்.
“வாழ்க்கையைப் புரிந்து கொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை) எது நடந்தாலும் ஏற்றுக் கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை”