ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில் ஏராளமான கார்கள் தயாரிக்கப்பட்டு ஒரு கிடங்கில் அடுக்கப்பட்டிருந்தன. அதை வெளியே கொண்டுவரும் போது சிக்கல் ஏற்பட்டது.
காரின் உயரத்தை விட வாயிலின் உயரம் ஒரு அங்குலம் சிறிதாக இருந்தது. எப்படி வெளியே கொணர்ந்தாலும் மேற்கூரை இடிக்கும். குறைந்தபட்சம் காரின் மேற்புறம் கீறல் விழக்கூடும்.
“கீறல் விழந்தால் பரவாயில்லை. மறுமுறை பெயிண்ட் அடித்து டபுள் கோட் கொடுத்து விடலாம்” என்றார் மேலாளர்.
“வேண்டாம். வாயிலின் மேற்புறம் ஒரு செங்கல் கனத்துக்கு இடித்து விடுவோம். பிறகு மீண்டும் சிமெண்ட் பூசிவிடலாம்” என்றார் அந்தக் கட்டிடத்தின் பொறியாளர்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த வயதான காவலாளி சொன்னார்,
“அதெல்லாம் வேண்டாம், கார்களின் சக்கரத்தின் காற்றை இறக்கி விடுங்கள் சரியாகப் போய்விடும்” என்றார்.
அதனைக் கேட்டுக் கொண்டிருந்த நிறுவனத்தின் இயக்குநருக்கு நெற்றிப் பொட்டில் அடித்தது போல் நிமிர்ந்தார்.
எப்படி அவருக்குத் தோன்றியது இந்த ஆலோசனை? பொறியாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் அங்கேக் கூடியிருந்த போதும், அவர்கள் எவருக்கும் தோன்றாத, படிப்பறிவு அதிகமில்லாத காவலாளிக்குத் தோன்றிவிட்டது. தொழில் நுட்பத்தில் கரைகண்ட வல்லுநர்கள். பெரிய பிரச்சினைகளையெல்லாம் சமாளிப்பவர்கள். ஆனால், இந்தச் சிறிய பிரச்சினையை அவர்களால் சரியாகக் கையாள முடியவில்லை. அன்றிலிருந்து படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவரிடமும் ஆலோசனை கேட்கும் பழக்கத்தைக் கட்டாயக் கடமையாகவே மாற்றினார்.
தற்போது முன்னணியில் உள்ள பல நிறுவனங்களிலும் இது இயல்பான நடைமுறையாக உள்ளது.