மகாபாரதத்தில் உடலை விட்டுப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரியதேவனுடன் பரம்பொருள் சிவபெருமானை வணங்கி மகிழ்ந்து சுவர்க்கப் பேறு பெற்றது.
சூரிய தேவனுக்கோ, மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகப் பதில் கூறுவார்கள்? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெப்பம் அதிகரித்தது.
அதை உணர்ந்த சிவபெருமான், அவர் முன் எழுந்தருளினார்.
“சூரியனே, என்ன தடுமாற்றம் உன் மனதில்?” என்று கேட்டார் சிவபெருமான்.
“பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனைப் போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன். ஆனால், எல்லாப் புண்ணியங்களையும் கிருஷ்ணருக்குத் தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? இது அநீதி அல்லவா?” எனக் கேட்டார் சூரியன்.
இறைவன் சிவபெருமான் சிரித்துக் கொண்டே, “சூரியனே... நிறைய மனிதர்களுக்கு ஏற்படும் சலனமே, உன்னையும் இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது” என்றார்.
சூரியன், “புரியவில்லையே” என்றான்.
“தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை அறிந்த பின்னோத் தருவது. இதுதான் தானம். இந்தத் தானமெல்லாம் புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில், இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்ட பின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட... ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல், அவரே அறியாமல், அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்ட பின், ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம். கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை. எல்லாப் புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு, கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. இப்போது புரிந்ததா?” என்றார் சிவபெருமான்.
சிவபெருமானை வணங்கிய சூரியன், “இப்போது புரிந்தது இறைவா! தானமும் தர்மமும், பாவமும் புண்ணியமும், எல்லாமும் நீயே என்பதும் புரிந்தது” என்றார்.
கேட்டுக் கொடுப்பது தானம்! கேட்காமல் கொடுப்பது தர்மம்!